இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது.
நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ஓட்டங்களும், சஞ்சு சாம்சன் 46ஓட்டங்களும் , சூர்யகுமார் யாதவ் 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜயவிக்கிரம 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் 227 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக ஆடி 76 ஓட்டங்களுடன் அணியை பலப்படுத்தி ஆட்டமிழந்தார். பானுகா ராஜபக்ச 65ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் வைத்து இந்தியாவை வெற்றிகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தியா சார்பில் ராகுல் சாஹர் 3 விக்கெட்டும், சகாரியா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கிருஷ்ணப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இலங்கை அணிக்கு உதிரியாக மட்டுமே 30 ஓட்டங்கள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என தொடரைக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.