நீருக்கடியில் ஓடக்கூடிய புலிகளின் மூன்று ஸ்கூட்டர்களை (அண்டர் வோட்டர் ஸ்கூட்டர்கள்) படையினர் நேற்று வன்னியிலிருந்து மீட்டிருப்பதாக 58 ஆம் படையணியின் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
புதுக்குடியிருப்புக்கு வடக்கே தமது நிலைகளைப் பலப்படுத்திவரும் படையினர் அம்பலவன் பொக்கணை என்ற கிராமத்திலிருந்தே நீருக்கடியில் ஓடக் கூடிய மூன்று ஸ்கூட்டர்களுடன் பல பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த ஸ்கூட்டரில் ஒன்று ஒருவர் பயணிக்கக் கூடியது. இன்னுமொன்று இருவர் பயணிக்கக் கூடியது. மற்றையது தேவைக்கேற்ப விரித்து ஒடுக்கக் கூடியது. அதில் மூவரும் பயணிக்கலாம். ஒருவரும் பயணிக்கலாமெனவும் பிரிகேடியர் சவேந் திர சில்வா தெரிவித்தார். புலிகளின் மறைவிடமொன்றிலிருந்து இந்த ஸ்கூட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 58 ஆம் படையினர் இவற்றுடன் 25 ஒட்சிசன் தாங்கிகள், நீருக்கடியில் உபயோகிக்கக் கூடிய இரண்டு தொலைநோக்கி, ஆயுதங்களை வைக்கக்கூடிய ஜக்கற்றுக்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் 20 அங்கிகள், கடற்புலிகளின் சீருடைகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்றுக் காலை இடம் பெற்ற மோதல்களில் புலிகளின் முக்கியத் தலைவர்களான அன்பு, சுரேஷ் ஆகியோர் உயிரிழந்திருப்பது தெரியவந்திருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார கூறினார். இவர்கள் புலிகள் இயக்கத்தில் விசேட தேர்ச்சி பெற்றவர்களெனவும் அவர் தெரிவித்தார்.