கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் வெள்ளிக்கிழமை இரவு விடுதலைப்புலிகள் நடத்திய விமானத்தாக்குதல் தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். புலிகளின் இருவிமானங்களும் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடங்களுக்கு சென்று விமானங்களின் சிதைவுகளை பாதுகாப்பமைச்சின் செயலாளர் பார்வையிட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
புலிகளின் முதலாவது விமானம் மோதிய உள்நாட்டு இறைவரிக் கட்டிடத்தொகுதிக்கு கோதாபய முதலில் சென்று பார்வையிட்டார். இது இவ்வாறிருக்க, நாட்டின் வருமானம் தொடர்பான சகல விபரங்களும் திரட்டி வைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு இறைவரித்திணைக்கள கணனி வலைப்பின்னல் அமைப்புக்கு விமானத்தாக்குதலால் எந்தவிதமான பாதிப்பும் இல்லையென்று நிதி அமுலாக்கல் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்திருக்கிறார்.
நேற்றுக்காலை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சென்று பார்வையிட்ட பின்பே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். திணைக்களப் பணிகளை சாத்தியமான அளவுக்கு துரிதமாக ஆரம்பிக்க அரசு திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திணைக்களத்தின் 15 மாடிக்கட்டிடங்களையும் உயரதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டதாக கூறிய அமைச்சர், தாக்குதல் சேதம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.