“வைரசுடன் இணைந்து அரசை அழிக்க சஜித் தரப்பு முயற்சி.” – சரத் வீரசேகர

“எதிரக்கட்சியினர் வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.”என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பிரதான எதிர்க்கட்சியினர் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) ஏற்பாடு செய்த பல கூட்டங்களை அரசாங்கம் தடுத்து நிறுத்த காவல்துறையினரை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்திய வேளையில் அதற்கு பதில் தெரிவித்த போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சிக்கு துளியளவேனும் நாட்டின் மீது பற்று இருக்குமென்றால் எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் எதிர்கட்சிகள் செய்ய வேண்டியது என்னவென்றால், அரசாங்கத்துடன் இணைந்து வைரஸை அழிக்க வேண்டுமே தவிர, வைரசுடன் இணைந்து அரசாங்கத்தை அழிக்கக்கூடாது.

ஆனால் எதிர்க்கட்சி அரசாங்கத்தை அழிக்கவே முயற்சிக்கின்றது. நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே காவல்துறையினர் உள்ளனர். ஆர்ப்பாட்டங்கள் அல்லது மக்கள் கூட்டங்களினால் வைரஸ் பரவுகின்றது என சுகாதார தரப்பினர் ஏதேனும் ஆலோசனைகளை வழங்கினால் அதனையும் காவல்துறையினரே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எனவே சட்டத்தை காப்பாற்றும் பணியையே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

அதேபோல் தேசிய பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். எதிர்கட்சியின் தரப்பில் ஒருவரது தந்தை, நாட்டில் குண்டு வெடிக்கப்போவதாக கூறியும் அது குறித்து கவனத்தில் கொள்ளாது உறங்கிவிட்டு மக்களின் உயிரை பறிகொடுக்க வேடிக்கை பார்த்த நபர்கள் எதிர்க்கட்சி தரப்பிலே உள்ளனர்.

எமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அதில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஆனால் சுகாதார தரப்பின் வலியுறுத்தலுக்கு அமைய காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *