திசைமாறிய 40 குடும்ப உறவுகள் ஒன்றிணைவு. வவுனியா நிவாரண கிராமத்தில் நிகழ்வு.

Wanni_Warபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வெவ்வேறு இடங்களில் பிரிந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.பல்வேறு வழிகள் ஊடாகத் தப்பிவந்தபோது, வெவ்வேறான நலன்புரி நிலையங்களில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த இந்த 40 குடும்பங்களும் தற்போது வவுனியா- செட்டிக்குளம் மனிக் பாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 13 நலன்புரி நிலையங்களிலிருந்த போது, இந்தக் குடும்ப அங்கத்தவர்கள் கண்டறியப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுள் மனிக்பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 2825 பேரும், அருவித்தோட்டம் வித்தியாலயத்தில் 582 பேரும் செட்டிக்குளம் வித்தியாலயத்தில் 1965 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம், பம்மைமடு, காமினி வித்தியாலயம், பூந்தோட்டம், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கோவில் குளம் இந்து வித்தியாலயம், வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச பாட சாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் 26809 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் 13 நலன்புரி நிலையங்களில் 32, 181 பேர் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவர்கள் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும், விரைவில் அவர்களின் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *