தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31வது அமர்வு இன்று காலை 10 மணிக்கு கொழும்பு – கொன்ரினன்ரல் ஹோட்டலில் ஆரம்பமாகின்றது.
ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லா கமவின் தலைமையில் நடைபெறும் ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் இம்முறை ஏழு நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதில் பிரதமராகவும் கடமையாற்றுவதால் இந்த மாநாட்டில் இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இ. அஹமட் கலந்து கொள்கின்றார்.
மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஏற்கனவே ‘சார்க்’ வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்துள்ளனர். இவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்தனி சந்திப்புகளை நடத்தி இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.