புதுக் குடியிருப்பில் அம்பலவன் பொக்கணை, மற்றும் முள்ளியவளை, சாலை ஆகிய பகுதிகளில் தேடுதல் நடத்தி வரும் படையினர் பெருந்தொகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தி வந்த பங்கர்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.
இதேவேளை, படையினர் நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பயணித்த வாகனம் படைகளின் தாக்குதலுக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
விடுதலைப் புலிகள் தற்போது பெரும் ஆயுதப் பற்றாக்குறைக்கும் ஆட்பற்றாக்குறைக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் பெருமளவான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதுடன், இராணுவத்தினர் புலிகளின் பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட தலைவர்கள் மட்டத்திலுள்ள சகலரும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னேறிச் செல்லும் படையினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.