இலங்கையில் அமைதி நிலவ வேண்டும்; தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் : ஏ.ஆர். ரஹ்மான்

ar-ragman.jpg“இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் எவரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்” என ஒஸ்கார் புகழ் இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு தேவையான பின்னணி ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ‘ஸ்லம்டொக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை ஏர்.ஆர்.ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில், “இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ரஹ்மான், “இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளைப் பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு தமிழ் மக்கள் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன். ‘ஒஸ்கார்’ விருது வழங்கும் விழாவோ அல்லது இந்த மேடையோ அரசியல் விடயங்களுக்கான இடமல்ல. இருந்த போதும், எந்த உயிரினத்திற்கும் துன்பம் ஏற்படக்கூடாது என்றே நான் விரும்புவது உண்டு.

இலங்கையில் அமைதியான சூழலில் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நான் விரும்புகின்றேன்; நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *