முல்லைத் தீவிலிருந்து இதுவரை திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலம் 2,396 பேர் கூட்டி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் இடம்பெறும் தாக்குதல்களில் படுகாயமடைந்தோரும் அவசர நோயாளிகளும் இவர்களுக்கான உதவியாளர்களுமே இவ்வாறு கப்பல் மூலம் திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டுள்ளனர்.
திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் “கிறீன் ஓசன்’ கப்பலில் 282 பேர் புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஆறாவது தொகுதியாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக திருமலை சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் திகதியிலிருந்து ஐந்து தடவைகளாக இதுவரை நோயாளர்கள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த உதவியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 இற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயமடைந்தவர்களும் திருமலை, வைத்தியசாலை தவிர மேலதிகமாக கந்தளாய், பொலநறுவை, மன்னார், வவுனியா வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.