யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகள் தொடர்ச்சியாக அபகரிக்கப்பட்டு வருவதாக வலிகாமம் மீள் குடியேற்றச் சங்க தலைவர் சண்முகநாதன் சஜீபன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ். நில அளவைத் திணைக்களத்திற்கு தெரியாமல் கொழும்பிலிருந்து அதிகாரிகள் வருகை தந்து அளவீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனால் யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சண்முகநாதன் சஜீபன் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலும் நாளையதினம்(6) காலை 9 மணிக்கு எழுவைதீவு பகுதியில் 4 பரப்புக் காணி கடற்படையினரின் தேவைக்காக அளவீடு செய்யப்பட இருக்கிறது.
இலங்கை மக்கள் பொருளாதாரத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், குறிப்பாக வடகிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சூழலில் வாழும்போதும் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு காணி உரிமையாளர் எதிர்ப்பை தெரிவித்து இருப்பதால், அவருடன் சேர்ந்து பொது அமைப்புகள் அரசியல் பிரமுகர்கள் நாளை காலை 9 மணிக்கு நில அளவை தடுப்பதற்காக ஒன்றுகூட வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் நாம் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.