நாட்டில் கடுமையான வரட்சிக்குப் பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ள இதே வேளை இடி, மின்னல் அபாயம் மிக மோசமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இடி, மின்னல் அபாயத்திலிருந்து பாது காப்புபெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வரட்சியின் பின்னர் நாடெங்கிலும் மழை பெய்யக் கூடிய காலநிலை ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலைய அதிகாரியான சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இதே நேரம் தென் கிழக்கு கடலில் உருவான தாழமுக்கம் இன்று வட கிழக்கு கடல் பரப்பின் ஊடாக இந்நாட்டின் கடற்பரப்பை விட்டு தூரமாகிச் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தாழ முக்கம் காரணமாகவே யாழ்ப்பாணம், திருமலை, மட்டக்களப்பு உட்பட நாடெங்கிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தாழமுக்க நிலை இன்று இந்நாட்டை விட்டு அகன்று விடும் என்றாலும் மாலை வேளையிலும், இரவிலும் அடுத்து சில தினங்களுக்கு இடி மின்னலுடன் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இந்த நாட்களில் இடி, மின்னல் ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளவென மக்கள் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வது மிக அவசியம்.
இதேநேரம் இந்நாட்டின் கடற்பரப்பிலும் இடியுடன் கூடிய மழை அடிக்கடி பெய்ய முடியும். வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் வடகிழக்காகவும், ஏனைய கடற்பரப்பில் வட மேற்காகவும் காற்று வீசும், இப்பகுதியில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்கும். ஆனால் வட பகுதி கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வரை இருக்கும். கடலில் சாதாரண கொந்தளிப்பு நிலை காணப்படும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர த்தில் திருமலையில் 65.5 மி.மீ. மட்டக்களப்பில் 42.7 மி.மீ, மிஹிந்தலையில் 63.5 மி.மீ, களுத்துறையில் 58.5 மி.மீ, நீரேந்து பிரதேசங்களான போவத்தனவில்35.3 மி.மீ, லக்ஷபானவில் 13.8 மி.மீ, சமனலவெவவில் 12.6 ம.மி.மீ. உட் பட நாடு பூராவும் மழை பெய்துள்ளது என்றார்.