ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமே சமாளிக்க முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (26) காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதில் இலங்கை முன்னணியில் இருக்கிறது. மேலும் சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் உள்ளது.
சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் காணப்படுகிற நிலையில் , இந்த நிலைமையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
எனவே, இந்த நேரத்தில் சரியான கொள்கைகளுடன் முன்னோக்கிச் செல்வதன் மூலம் நாட்டில் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தணிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட மத்திய வங்கியை பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.