முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *