15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தம்பி !

மட்டக்களப்பு வந்தாறு மூலை பகுதியிலுள்ள காணி ஒன்றின் அனுமதியை பெறுவதற்கு அதன் உரிமையாளரிடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியதாக தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சகோதரர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட இருவரை இன்று செவ்வாய்க்கிழமை (21) ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

வந்தாறு மூலை பிரதேசத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரின் காணியை பிரித்து விற்பனை செய்யப்பட்டு அதில் மக்கள் குடியேறியுள்ளனர். இந்த காணியை வாங்கிய மக்கள் பிரதேச சபையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறுவதற்கு சென்றால் அங்கு கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் அவர்களிடம் இந்த காணி போலி என கூறி அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்;.

இந்த நிலையில் காணி விற்பனை செய்த காத்தான்குடியை சேர்ந்தவரிடம் காணியை வாங்கிய மக்கள் சென்று இந்த காணி உறுதி போலியானது என அனுமதிவழங்க முடியாது என குறித்த நபர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து காணியை விற்பனை செய்தவர் அமைச்சரின் சகோதரரிடம் குறித்த காணியை சட்டரீதியாக நாங்கள் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி எமது பதிவு செய்யப்பட்ட கம்பனி ஊடாக இதனை சிறு சிறு பகுதிகளாக விற்பனை செய்துவருவதாக தெரிவித்த நிலையில் அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து பிரதேச சபையில் அனுமதி வழங்க 20 இலட்சம் ரூபா இலஞ்சமாக வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த காணியை விற்பனை செய்த காத்தான்குடியைச் சேர்ந் நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவுடன் தொடர்பு கொண்டு அறிவித்ததன் பிரகாரம் அவர்களின் ஆலோசனையின்படி சம்பவதினமான இன்று மாலை 6.30 மணிக்கு இலஞ்சம் கோரியவர்களிடம் கோரிய 15 இலச்சம் ரூபா பணத்தை தருவதாக தெரிவித்து மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வருமாறு தெரிவித்ததையடுத்து அவர்கள் குறித்த ஹொட்டலில் சென்று கோரிய 15 இலட்சம் ரூபா பணத்தை அமைச்சரின் சகோதரரும் அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து காணி உரிமையாளரிடம் பெற்று அதனை சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

இதன் போது அங்கு மாறுவேடத்தில் இருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் சுற்றிவழைத்து இருவரையும் கைது செய்ததுடன் இலஞ்சமாக பெற்ற பணத்தை மீட்டு மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *