அமெரிக்க டொலரில் பணம் செலுத்தக்கூடிய எந்தவொரு நிறுவனமும் அல்லது தொழிற்துறையும் வாராந்த உத்தரவாத எரிபொருள் ஒதுக்கீட்டை பெற முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நுகர்வோர் கணக்கை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன கணக்கின் ஊடாக ஒரு மாதத்திற்கு முன்னர் பணம் செலுத்துவோருக்கு ஜூலை 12 முதல் நாளாந்தம் அல்லது வாராந்திர அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் 12 ஆம் திகதி முதல் தமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவார்கள்” என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள எரிபொருள் கையிருப்பு விபரங்களையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், 92 ஒக்ரோன் பெற்றோல் ஆயிரத்து 414 மெட்ரிக் தொன்னும், 95 ஒக்ரேன் பெற்றோல் 02 ஆயிரத்து 677 மெட்ரிக் தொன்னும் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதனைத் தவிர ஓட்டோ டீசல் 12 ஆயிரத்து 774 மெட்ரிக் தொன்னும், சுப்பர் டீசல் 233 மெட்ரிக் தொன்னும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பலும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அதன் வருகையும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
அத்துடன் பெற்றோலை இறக்குமதி செய்வது தொடர்பில் பல்வேறுபட்ட பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மேலும் கூறியுள்ளார்.