கடந்த 1997ஆம் ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட தலைவர்களில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் அந்த நெருக்கடியை எதிர்கொண்டு மிகச்சிறப்பான வகையில் நாட்டை மீட்டு எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று மலேசியா அடைந்திருக்கும் அபிவிருத்தியின் பின்னணியில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது.
1997 ஆம் ஆண்டளவில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பல நாடுகளும் சரிவதேசநாணயநிதியத்தின் உதவியையும், உலக வங்கியின் உதவிகளையும் எதிர்பார்த்த போது தைரியமாக அவற்றை புறக்கணித்து மலேசியாவுக்கு என தனியான பொருளாதார கொள்கைகளை உருவாக்கினார் மகாதீர் மொஹம்மத்.
இந்த நிலையில், இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டன. அப்போது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு திடீரெனச் சரிந்தது. நாடு பொருளாதார ரீதியில் ஆட்டம் கண்ட நிலையில், சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் மகாதீர். அவை பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பின.
எனினும் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் எடுத்த முடிவுகளும் நல்ல பலன்களை அளித்தது.
அந்நியச் செலாவணி அறவே இல்லாத நிலையில், தவிப்புக்கு ஆளாகி உள்ள இலங்கை, தனது வெளிநாட்டு கடன்களுக்கான தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளது. இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடனை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த நிதியத்தின் பிடியில் சிக்கிவிட வேண்டாம்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியை அணுகும்போது அவை இரண்டும் ஒரு நாடு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துகிறதா என்பதை மட்டுமே கவனம் செலுத்தும். மற்றபடி, உங்கள் நாட்டுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக என்ன நேர்ந்தாலும் அவை கண்டுகொள்ளாது.
நாட்டை வழிநடத்தும் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். மேலும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளையும் தாங்களே வகுக்க நினைப்பார்கள். அப்படியெனில், நாம் அவர்களிடம் சரணடைய வேண்டும் என்று அர்த்தம்.
கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பிச் செலுத்தும் அளவுக்கு போதுமான நிதி இருப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான் இலங்கைக்குள்ள பெரிய பிரச்சினை. மிக மோசமான முதலீட்டுக் கொள்கையும், மோசமான நாணய, நிதி மேலாண்மையும்தான் இதற்குக் காரணம். இலங்கை சென்ற பாதையில் நாமும் செல்வதற்கான வாய்ப்புள்ளது என்று அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது அனைவருக்குமான பாடம்.
ஆசியாவில் பொருளாதார சிறந்த நிலையில் உள்ளதாக கருதப்படும் சீனாவிடம் நிதி நெருக்கடிகளைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளது. ஆசிய வட்டாரத்தில் உள்ள வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும். மூலதனக் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது மிக வலுவாக உள்ளது. இதே வேளையில், ஆசிய நாடுகளின் நாணய மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதன் எதிரொலியாக, பணவீக்கம் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரில் செலுத்தப்பட வேண்டிய கடன் சுமையும் உயர்ந்துள்ளது.
ஒரு நாட்டின் நாணய மதிப்பானது, ஐந்து விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கவோ, குறையவோ செய்தால் பிரச்னை இல்லை என்று குறிப்பிட்டுள்ள மகாதீர், ஐம்பது விழுக்காடு அளவுக்கு மதிப்பு குறையும்போது, மக்கள் ஏழைகளாகிவிடுவர். இதுபோன்ற நிலை ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.