இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு பேசிய அவர்,
சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கும் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.
அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது.
சபாநாயகர் அவர்களே, நானும் நீங்களும் 1973 ஆம் ஆண்டு எமது அரசியல் பயணத்தை ஒன்றாக ஆரம்பித்தோம், எனக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான ஒரு நாள்.
நீங்கள் பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி. நான் 45 வருடங்கள் இந்த பாராளுமன்றத்தோடு பயணித்துள்ளோன்.
எனது வாழ்க்கை இந்த பாராளுமன்றம் தான் இருக்கின்றது. அதனால் இந்த பாராளுமன்றம் ஊடாக எனக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.