இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இத்தாலியின் பிரதமராக மரியோ ட்ராகி பதவியேற்றார்.
அதன் பின்னர் அந்நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வருகின்றன. இதனால் கடும் நெருக்கடிக்கு ட்ராகி உள்ளானார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. அப்போது பதவி விலக தயார் என ட்ராகி அறிவித்தார்.
அவர் அறிவித்த ஒரு வாரம் கழித்து, தற்போது ஜனாதிபதி மாளிகையில் தனது ராஜினாமாவை அளித்துள்ளார். அதனை இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி என தனது ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில் மரியோ ட்ராகி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போதைய விவகாரங்களைக் கையாள்வதற்காக தனது அரசாங்கம் பதவியில் இருக்கும் என்று ஜனாதிபதி மேட்டரெல்லா கூறியுள்ளார். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்று சரியாக அவர் கூறவில்லை.
2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல்கள் நடைபெறவிருந்தன, ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் செப்டம்பர் நடுப்பகுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.