“கனடா இப்போது உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடங்களில் ஒன்றாக உள்ளது.” என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம்.
நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது.
கனடா இப்போது உலகின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் புகலிடங்களில் ஒன்றாக உள்ளது. கனடாவை இன்று வலுவான, துடிப்பான மற்றும் பல்கலாசார நாடாக மாற்றுவதற்கு பெருமளவில் பங்களித்ததற்காக தமிழ் கனேடியர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவ கனடா தயாராக உள்ளது.
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் சட்டத்தின் ஆட்சியை பேணுவதற்கும் இலங்கை அரசாங்கத்தையும் இலங்கை நாடாளுமன்றத்தால் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் கனடா வலுவாக ஊக்குவிக்கிறது.
இந்த இக்கட்டான காலங்களில் போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கனடா மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.