கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, அங்கு திரைச்சீலைகளை தொங்கவிடுவதற்காக சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட 40 பித்தளை உருண்டைகளை திருடி விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேகநபர்கள் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்று (24) பிற்பகல் வெலிக்கடை ஒபேசேகரபுர பிரதேசத்தில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றுக்கு இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்றுள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28, 34 மற்றும் 37 வயதுடைய நபர்கள் எனவும் அவர்கள் இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் கொழும்பு (வடக்கு) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.