மாத்தறை, அக்குரஸ்ஸவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் ஆணைக் குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
அக்குரஸ்ஸ, கொடபிட்டிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட மீலாத் விழா வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பாக விசாரணைகளை நடத்தி, குற்றச்சாட்டுக்கள் ஏதுமிருப்பின் அவற்றை உடனடியாகத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் ஆணைக் குழு பொலிஸ்மா அதிபரைப் பணித்துள்ளது. இந்த வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வைபவத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொண்டார்களா என்பது குறித்தும் பொலிஸ் திணைக்களம் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இது வரை 99 பேர் கைது செய்யப்பட்டு விசாரணகளுக்குட் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.