உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும். இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 19 இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இதே நேரம் உக்ரைனுடனான போரை அமெரிக்க உள்ளிட்ட நாடுகளே ஆயுத உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பூதாகரமாக்கி வருகின்றன என ரஷ்யா குற்றஞ்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.