இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை பதிவு செய்யும் வகையில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணித்தியாலங்கள் பகுதி நேர வேலை வாய்ப்பை வழங்க பல்கலைக்கழக நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகளை வழங்குவதற்கும், இணையம் மூலம் அறிவு தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும், மாணவர்களுக்கு இந்த தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் எம். டி. லமாவங்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அத்துடன், இந்த புதிய வேலைத்திட்டம் குறித்து மாணவர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை சுமார் 170 மாணவர்கள் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது.