தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(23/09/2022) வெளியிட்டுள்ளார்.
இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபரின் அனுமதியின்றி,
அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோ, பொதுக் கூட்டமோ நடத்த முடியாது.
பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,
-
- நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி,
- அதிபர் செயலகம்,
- அதிபர் மாளிகை,
- பிரதமர் அலுவலகம்,
- அலரி மாளிகை,
- உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம்,
- கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம்,
- சட்டமா அதிபர் திணைக்களம்,
- இராணுவத் தலைமையகம்,
- விமானப்படைத் தலைமையகம்,
- கடற்படைத் தலைமையகம்,
இந்தநிலையில் உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.