ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் இன்று 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்ளாமை சர்வதேச ரீதியில் உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசூலா ஆகிய 7 நாடுகளும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தன.

அத்துடன், பிரான்ஸ், ஜேர்மன், நெதர்லாந்து, கொரியா, உக்ரைன், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த வாக்களிப்பில், இந்தியா, ஜப்பான், பிரேசில், கட்டார் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தீர்மானத்தை தயாரித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இன்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னரான நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் கருத்துவெளியிட்டிருந்தார்.

அதில் இலங்கை மீதான போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டு பொறியின் கீழ் தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இறையாண்மை கொண்டதொரு நாட்டில் சர்வதேச தலையீடுகள் அவசியமற்றது எனவும், சிறிலங்கா மீதான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் தீர்வுகாண்பதே பொருத்தமானது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *