“வடக்கு கிழக்கு நிர்வாக மொழி தமிழ் என அரசியலமைப்பில் இருந்தாலும் தற்போதும் சிங்கள மொழியின் பயன்பாடே காணப்படுகின்றது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழிக் கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
இந்தியாவில் தற்போது அரச மொழிகளாக 16 மொழிக்ள உள்ளன. அதில் தமிழும் ஒன்று, மிகவும் சிறிய நாடான சிங்கப்பூரில் நான்கு அரச மொழிகள் உள்ளன. அதில் ஒன்று தமிழ்.
எனினும் எமது நாட்டில் இருப்பது இரண்டு மொழிகள். எனினும் அதில் ஒன்றை மாத்திரம் முன்னிறுத்தி அது மாத்திரமே அரச மொழி என நாம் சட்டத்தை உருவாக்கினோம். அதுவே இந்தப் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது என நான் எண்ணுகின்றேன்.
31 வருடங்கள் சென்ற பின்னர் அது சரிசெய்யப்பட்டது. 87 ஆம் ஆண்டு தமிழும் அரச கரும மொழியாக அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு 30 ஆண்டுகள் எடுத்தன. இன்னும் 30 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தற்போது அது சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போதும் காவல்துறை அதிகாரிகளை கேட்டுப்பாருங்கள். நீதிமன்றங்களில் சிங்கள மொழியிலேயே அவர்கள் வழக்குகளை முன்வைக்கின்றனர்.
வடக்கு கிழக்கு நிர்வாக மொழி தமிழ் என அரசியலமைப்பில் இருந்தாலும் தற்போதும் சிங்கள மொழியின் பயன்பாடே காணப்படுகின்றது. எழுத்து வடிவில் ஒன்று காணப்படுகின்றது. நடைமுறைப்படுத்தப்படுவது வேறு ஒன்றாக உள்ளது” என்றார்.