“தமிழ் தெரியாத ஊடகவியலாளர்களே கிழக்கின் பிரச்சினைகளை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.” – பிள்ளையான் கவலை !

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 ஏக்கர் வரையிலான அரச காணிகள் அதிகாரிகளினால் மோசடியான வகையில் விற்கப்பட்டுள்ளது, இது தொடர்பான விடயங்கள் தமிழ் ஊடகங்களில் வெளிவராமைக்கு காரணம், அங்குள்ள ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் 10 பேர்சர்ஸ் காணிகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளமையாகும் என  இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் உட்பட 5 திருத்தச் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு ஊடாக 7000 அல்லது 9000 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அந்தக் காணிகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 16 ஆம் திகதி தென்பகுதி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்ளையடித்த விற்றுள்ளனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை ஏன் தமிழ் ஊடகங்கள் வெளியிடவில்லை என்று தேடிப்பார்த்தபோது, அங்குள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக இருப்பவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் 10 பேர்சர்ஸ் காணிகளை வழங்கி அவர்களின் வாயை அடைத்துள்ளார். இதன் காரணத்தினால் கொழும்பில் உள்ள தமிழ் தெரியாத ஊடகவியலாளர்களே மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஏராவூர் பற்று, அதாவது செங்கலடி பிரதேசத்தில்தான் அதிகளவில் காணிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணி பதிவில் சிக்கல் வந்தால் அந்தக் காணி தனியாருக்கு சொந்தமானதா? அரச காணியா என்று ஆராயும் போது அதனை தனியார் காணி என்று எழுதுவதற்காக பல கோடி கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். 2000 ஏக்கர் வரையிலான காணிகள் மோசடியான வகையில் துண்டு துண்டுகளாக விற்கப்பட்டுள்ளன.

இதில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்துள்ளனர். அந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக நான் கவலையடைகின்றேன். தொழில் முயற்சியாளர்கள், ஏழைகளுக்கு சிறிய அரச காணியை எடுப்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஊடகங்கள் கூறினாலும் பாராளுமன்றத்தில் பேசினாலும் தீர்க்கப்படாது உள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலும்  இந்த விடயம் கோடிட்டு காட்டப்படுகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தி மோசடியான காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *