“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும்.” – வே. இராதாகிருஷ்ணன்

“13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.” என  வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 18ஆம், 19ஆம், 20ஆம் திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படும்போது பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறேன். ஆனால் 20இக்கு எதிராகவே வாக்களித்திருந்தேன். இரட்டைக் குடியுரிமைகள் பாராளுமன்றத்துக்கு வருவதற்கு தடை, சுயாதீன ஆணைக்குழுக்களை மீள ஸ்தாபித்தல் உள்ளிட்ட நல்ல விடயங்கள் 22ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளதால் அதற்கு ஆதரவளிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அத்துடன் 22ஆம் திருத்தத்தில் உள்வாங்குவதற்கு எமது யோசனைகளையும் முன்வைத்திருக்கின்றோம். குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பின் போது விகிதாசா முறையும் பின்பற்றப்படவேண்டும். அதேபோன்று நிறைவேறறு ஜனாதிபதி முறையை இருந்தாலும்கூட, 13ஆம் திருத்தம் அமுலாக்கப்பட்டு, அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் அமையும்.

கடந்த அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. எனவே 22 இன் ஊடாக ஸ்தாபிக்கப்படும் அரசியலமைப்புப் பேரவையில் மலையகத்தைச் சேர்ந்தவர்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதேவேளை, மக்கள் பெருளாதார ரீதியில் கஷ்டப்படும் நிலையில் இன்று ஒருஇலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்கள் 6வீதம் வரி செலுத்தவேண்டி இருக்கின்றது.

ஒருஇலட்சம் ரூபா என்பது இன்று 30ஆயிரம் ரூபா பெறுமதியாகும். அதனால்  30ஆயிரம் ரூபாவுக்கு 6வீதம் வரி செலுத்துவது கஷ்டமான நிலையாகும். அரசாங்கத்தின் பிழையான தீர்மானமே இதற்கு காரணமாகும்.

அத்துடன் இந்த அரசாங்கம் செய்த நல்ல செயல்தான் 8அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாகும். அதற்காக நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஏனையவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *