தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில் சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என சீனா நம்புகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
IMF , பிற சர்வதேச பொருளாதார மற்றும் நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ளது என்று மாவோ தெரிவித்தார்.
இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில், இலங்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மாவோ குறிப்பிட்டார்.
“பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதற்கு நிதி நிறுவனங்களை இலங்கையுடன் இணைந்து செயற்பட நாங்கள் ஆதரிக்கிறோம்.
தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படுவதோடு, இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிப்பதற்கும். அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் தொடரும் என நாங்கள் நம்புகிறோம் என மாவோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.