“மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்தின் அமைச்சு பதவியை ஏற்க போவதில்லை.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டி நகரில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை தைரியப்படுத்தும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஈடுப்பட்டுள்ளார்.இவரது தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எரிபொருள்,எரிவாயு,மருந்து உட்பட அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்கு இன்றும் நெருக்கடி நிலை காணப்படுகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையை பஷில் ராஜபக்ஷவே தோற்றுவித்தார்.
நாட்டு மக்கள் தமக்கு மீண்டும் ஆட்சியதிகாரத்தை வழங்கமாட்டார்கள் என்பதை நன்கு அறிந்து கொண்டு ஒரு முயற்சியில் பஷில் ராஜபக்ஷ ஈடுப்பட்டுள்ளார். பஷில் ராஜபக்ஷ அமெரிக்க பிரஜை அவர் நினைத்த வேளையில் அமெரிக்காவுக்கு செல்லலாம்,ஆகவே பொதுஜன பெரமுனவினர் அவரை நம்பியிருப்பது பயனற்றது.
முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. நாட்டு மக்கள் இனியொரு போதும் ராஜபக்ஷர்களிடம் தவறுதலாக கூட ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்கும் அளவிற்கு நான் கீழ் நிலையாகவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி ஆகவே அவர் அவர்களின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுவார் என்றார்.