இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற மற்றுமொரு இலங்கை மீனவர்கள் குழு ஒன்றை இந்திய கரை யோர பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் (24) இரவு கைது செய்துள்ள தாக மீன்பிடித்திணைக்கள உதவிப் பணிப் பாளர் லால் பெரேரா தெரிவித்தார். 7 படகுகளில் சென்ற சுமார் 30 மீனவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.
கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 75 மீனவர்கள் இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் 15 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 200 மீனவர்களும் 37 படகுகளும் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, சென்னை மற்றும் நிகோபார், அந்தமான் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லால் பெரேரா கூறினார்.
இதேவேளை விடுதலை செய்யப்பட்ட 27 இலங்கை மீனவர்கள் நேற்று (25) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்களின் 4 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வெள்ளிக்கிழமை இலங்கை வந்தடைவரென எதிர்பார்க்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக சென்னை பிரதி உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் லால் பெரேரா தெரிவித்தார்.