75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு பங்காளர்களாவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், 25 வருட கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர் சமூகத்தை பொறுப்பான பங்காளர்களாக ஈடுபடுத்துவதற்காகவும் தேசிய இளைஞர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

2048 ஆம் ஆண்டளவில், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பெரியவர்களாக வளர்ந்து நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதன்படி, எதிர்கால அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் பற்றி குறை கூறாமல் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்னின்று செயற்பட வேண்டும் என்பதும், அதற்கான சிறந்த வாய்ப்பாக தேசிய இளைஞர் தளம் அமையும் என்பதே ஜனாதிபதியின் கருத்தாகும்.

சட்டம் மற்றும் பொருளாதாரம்/ கல்வி, தொழில் பயிற்சி, எதிர்காலத்திற்கான திறன்கள்/ நிலைபேரான அபிவிருத்தி மற்றும் காலநிலை நடவடிக்கை/ சுகாதாரம், பாதுகாப்பான உணவு மற்றும் நீர் தரநிலைகள்/ தேசிய பாதுகாப்பு/ இராஜதந்திரம் மற்றும் சர்வதேச உறவுகள்/ விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு/ விளையாட்டு/ அழகியற்கலை, சித்திரம்,இசை , நாடகம், திரைப்படம், கட்டடக்கலை போன்றவை/ கைத்தொழில், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு/ நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்/ நீர், காற்று, நிலம் மற்றும் விலங்கு பாதுகாப்பு/ நிர்வாகத்திற்கான தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் ஒழிப்பு/ தேசிய அபிவிருத்திக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயக்கவியல் கற்றல்/ நியாயமான சமூகம் ஆகிய துறைகள் தொடர்பில் தேசிய இளைஞர் தளத்தின் கவனம் செலுத்தப்படும்.

உறுப்பினர், இளைஞர் அமைப்பு மற்றும் ஆலோசகர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் தேசிய இளைஞர் தளத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

உறுப்பினராக விண்ணப்பிப்பதற்கான வயது எல்லை 16 – 35 ஆகும். இளைஞர் அமைப்புக்கு 40 வயதிற்குட்பட்டவரகள் விண்ணப்பிக்கலாம். ஆலோசகர் பதவிக்கு வயதெல்லை கிடையாது.

தேசிய இளைஞர் தளத்தில் உறுப்பினராவதற்கு எதிர்பார்ப்பவர்கள் தாம் நீண்டகாலம் மேற்கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தேசிய இளைஞர் தளம் கவனம் செலுத்தும் பகுதிகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு விண்ணப்பிக்கவும் அல்லது இத்திட்டத்தில் ஆலோசகர்களாக நியமிக்கப்பட முடியும். நேர்முகப்பரீட்சை செயன்முறைக்குப் பின்னர் தெரிவுகள் இடம்பெறும்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தாங்கள் பணிபுரிய விரும்பும் ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து, 31 ஜனவரி 2023 அன்று அல்லது அதற்கு முன்பாக தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தை dir.ysd@presidentsoffice.lk அல்லது “பணிப்பாளர், இளைஞர் மற்றும் நிலைபேரான அபிவிருத்தி, ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

நிர்வாகம், உள்ளடக்க உருவாக்கம், தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல்,விநியோகம் மற்றும் நிதி ஆகிய துறைகளில் தமது சேவைகளை தொண்டர் அடிப்படையில் வழங்க ஆர்வமுள்ள எவரும் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி பணிப்பாளருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *