ஆசிரியருடன் வாக்குவாதம் – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6வயது சிறுவன் !

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டான். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

 

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. இப்பள்ளியில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

போலீஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *