பாலியல் குற்றவாளிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் கலாநித்திகளும் கல்லாநித்திகளும்! சிறுவயதில் பாலியல் கொடுமையை எதிர்கொண்டவர்களின் பகிர்வு!!

பதின்மூன்று வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளி பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 42 பேர் நற்சான்றிதழ் வழங்கி குற்றவாளிக்கு கிடைக்க இருந்த அதிகபட்ச தண்டணையை குறைக்க அல்லது குற்றவாளியை தண்டணையில் இருந்து விடுவிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளமை தேசம்நெற் க்கு தெரியவந்துள்ளது. பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கும் முயற்சியில் முன்னின்றவர்களில் கலாநிதி இரத்தினம் நித்தியானந்தன் மிக முக்கியமானவர். சமூகத்தில் தன்னை மதிப்புக்குரியவராக கட்டமைத்து வைத்துள்ள கலாநிதி நித்தியானந்தன் டொக்டர் நித்தி என்றும் அறியப்பட்டவர். ரட்ணம் பவுண்டேசன் ஸ்தாபகர் மட்டுமல்ல மேற்கு லண்டன் தமிழ் பள்ளியை நிறுவி நீண்டகாலம் அதன் அதிபராகவும் செயற்பட்டவர். நித்தி, தன் பள்ளியில் கற்ற மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டுகொளாமல் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டு ஒரு பாலியல் குற்றவாளிக்காக நற்சான்றிதழ் வழங்கி உள்ளார். இந்த நற்சான்றிதழ்களைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளையும் முடுக்கி விட்டிருந்தார். இது சமூகச்செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும் கடுமையான ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றவாளி பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்ட பெப்ரவரி 2ம் திகதி குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கிய 42 பெயரின் விபரங்களும் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அதில் நித்தி மிக முக்கியமானவர். இவரும் இவரது சகபாடிகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எதிராக வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. “இவையள் காரில் கொண்டு திரிந்து ஏற்றி இறக்க கேட்க்கிறது… இவை ஒழுக்கா இருக்கவில்லை…” என்றெல்லாம் பொருள்படும் வகையில் கதைத்து நித்தி, பாலியல் குற்றவாளிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

பாதிக்கப்பட்டவரையும் அவருடைய தாயாரையும் கொச்சைப்படுத்தும் கதையாடல்கள் கலாநித்திகளாலும் கல்லாநித்திகளாலும் பரப்பப்பட்டுள்ளது. “அவவுக்கு பரீட்சையை எதிர்கொள்ளத் தைரியமில்லாமல் இப்படிச் செய்திருக்கிறா?”, “காரில் ஏத்தி இறக்க கேட்கிறவைக்கு ஒரு பாடம் படிப்பிக்கத் தான் நான் கரக்டர் சேட்டிபிக்கற் குடுத்தனான்”, என்றொல்லாம் வாந்தி பரப்பினதோடு நில்லாமல் ஒரு இணையத்தில் “கள்ளக் காதலியின் 13 வயது மகளோடு உறவு” என்ற அளவுக்கு கதைகள் பரப்பப்பட்டு செய்திக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. பிரான்ஸில் இருந்து இச்செய்தியை வெளியிட்டவர்களின் தொடர்பு இலக்கம்: 0033753627270 இவ்விலக்கத்துக்கு உரியவர்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.

மேலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்தில் குற்றவாளியான பிரேமகுமாரை விடுவிக்க வேண்டும் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் விசேட பூசைகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் பாலியல் குற்றவாளியான பிரேமகுமாருக்கு நற்சான்றிதழ் வழங்கியபட்டியலிலலும் ஆச்சுவே உயர்வாசற்குன்று முருகன் ஆலயத்துடன் தொடர்பானவர்கள் சிலர் உள்ளனர். இப்பட்டியலில் சில மருத்துவர்களும் பெண்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடங்குகின்றனர். இவர்களின் முழமையான பதிவு விரைவில் தேசம்நெற்றில் வெளியிடப்படும்.

தனக்கு ஜேர்மனியில் இழைக்கப்பட்ட பாலியல் துஸ்பிரயோகத்தை பகிர்ந்து கொள்ளும் தமிழ் பெண் ஜென்னி ஸ்ரேக், “எனக்கு நிகழ்ந்த கொடுமையை அறிந்தும் தமிழ் சமூகம் என்னோடு நிக்கவில்லை. அது என்னை மிகவும் வருத்தியது. நான் கைவிடப்பட்டது போலவும் உணர்ந்தேன்” எனத் தெரிவித்தார். “ஐந்து வயதில் தொடங்கியது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. பின்னிரவில் யாருக்கும் சத்தம் கேட்டுவிடாமல் என்னை காப்பற் (carpet) போடப்பட்ட மாடிப்படிகளால் தூக்கிக் கொண்டு வந்த வரவேற்பறையில் உள்ள சொகுசு இருக்கையில் படுப்பார் தன் மீது என்னை படுக்கவைப்பார். நீண்ட ரஸ்க்கை உமிந்ததைவிட எதுவும் தெரியாத அந்த வயதில் தன்னுடையதை என்னுடைய தொண்டைக்குள் திணித்தது இன்னமும் மங்கலாக ஞபகம் இருக்கின்றது” என்று தனக்கு இளம் வயதில் நடந்ததை விபரித்தார் ஜென்னி.

ஜென்னி மேலும் குறிப்பிடுகையில் “அந்த வயதில் இருந்து குழப்பம், கோபம், அவமானம், மறுதலிப்பு. என்னுடைய குழந்தைப் பருவம் எங்கே?” என்று கேள்வி எழுப்பினார். “அவரை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும் அல்லது நினைக்கும் போதும் என்னுடைய உணர்வுகள் காட்டுத்தனமாகப் அலைமோதும்” என்றவர் “எனக்கு 17 வயதிருக்கும் போது அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினார்கள். அடிக்கும் போது பயத்தில் கதைக்கவே வராது. கதைத்தால் அதற்கும் அடிவிழும் என்ற பயம். ஒரு கனப்பொழுதில் ஒரு தைரியம் வந்து அவரை நிறுத்தச் சொன்னேன். அவருக்கு என்னில் கை வைக்க உரிமையில்லை என்றேன். எனது அம்மாவின் முகத்தில் அதிர்ச்சியைப் பார்த்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. நான் சொன்னால் அதிலிருந்து எதிர்பாராத ஆபத்துக்கள் வந்துவிடும் என்று பயம். என்னுடைய சகோதரன் என்னை இன்னுமொரு அறைக்கு அழைத்துச் சென்றான். அவனிடம் சொன்னேன். எனக்கு நடந்ததை விபரிக்க தமிழில் எனக்கு வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. என்னுடைய சகோதரனின் கண்ணில் கண்ணீர். அது அவனுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்றார் ஜென்னி.

“நான் படுக்கையில் கிடந்தேன் துவாயையும் கடந்து இரத்தம் வடிந்தோடியது. அம்மா வந்தார். அவரால் நம்ப முடியவில்லை. சிரித்தார். கண்ணீர் எனது முகத்தை நனைத்தது. இதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும். இரவு அம்மா அவரோடு முரண்பட்டார். என்னை தங்கள் படுக்கையறைக்கு அழைத்தார். என்னை வைத்துக்கொண்டு அம்மா கேட்டார். எல்லாவற்றையும் அவர் மறுத்தார். நாட்கள் ஓடியது. ஏன் தனக்கு முதலிலேயே சொல்லவில்லை என்று அம்மா அடிக்கடி கேட்பார். சொல்லி இருந்தால் தன்னால் காப்பாற்றியிருக்க முடியும் என்றார். இதனை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நான் ஒரு குழந்தை என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.

ஆண்டுகள் ஓடி இரண்டு ஆண்டுகளில் எதுவுமே நடக்காதது போல் அவர்கள் நடந்துகொண்டனர். அவர் இப்போதெல்லாம் முன்னர் எனக்குக் காட்டிய கொடுமைக்காரன் அல்ல. எங்களின் அப்பா, அம்மாவின் கணவர், எங்களின் குடும்பத்தில் ஒருவர். ஓற்றுமையான குடும்பத்தைத்தானே நானும் எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை. எனது இதயத்தில் கத்தியைச் செருகி திருப்பியது போல் இருக்கும். 19 வயதில் வீட்டைவிட்டு வெளியேறினான்” என்று தனக்கு 13 ஆண்டுகள் இழைக்கப்பட்ட வார்த்தைகளால் விபரிக்க முடியாத பாலியல் கொடுமையை பகிர்ந்துகொண்டார் ஜென்னி ஸ்ரேக். பின் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் தன் குடும்பப் பெயரை நீக்கிவிட்டு ‘ஸ்ரேக்’ என்ற ஜேர்மன் பெயரை சுவீகரித்துக்கொண்டார். உளவியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து தற்போது சமூகசேவகியாக பணியாற்றுகின்றார்.

ஜென்னி போன்ற பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட்டவர்களின் கொடூர அனுபவங்கள் இப்படியிருக்க இந்த நவீன சிதைகளையும் அவர்கள் பெற்ற பெண் குழந்தைகளையும் தீக்குளிக்கும் படி கேட்கின்றது தமிழ் சமூகம். குற்றவாளிக்காக நற்சான்றிதழ் கையெழுத்து வேட்டையை முன்னின்று நடாத்திய இந்தக் கலாநித்திகளும் கல்லாநித்திகளும் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்கிறார் லண்டனில் வாழும் சமூக அரசியல் ஆர்வலரும் ஊடகவியலாளருமான பா நடேசன்.

குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்ட விடயம் தொடர்பாக பிரேமகுமாருக்கு தண்டனை வழங்கப்பட்டு சில மணிநேரங்களில் தேசம்நெற் நித்தியோடு தொடர்புகொள்ள முயற்சித்தது முடியவில்லை. மறுநாள் அவரோடு தொடர்பு கொண்டு “நீங்கள் பாலியல் குற்றவாளியான பிரோமகுமாருக்கு கரக்ரர் சேட்டிபிகற் (நற்சான்றிதழ்) கொடுத்தனீங்களா?” என்று கேட்ட போது, “ஓம் நான் கொடுத்தனான் தான்” என்றார். “ஒரு பாலியல் குற்றவாளிக்கு நீங்கள் எந்த அடிப்படையில் கரக்டர் சேட்டிபிக்கற் கொடுதீங்கள்?” என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. “அதையெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. அது பிரைவேட் மற்றர் (தனிப்பட்ட விடயம்)” என்றார் நித்தி. “14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஸ்பிரயோம் செய்த குற்றவாளிக்கு கரக்டர் சேற்றிபிக்கற் குடுப்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ப்ரைவேட் மர்ரராக இருக்கலாம் ஆனால் இதுவொரு சமூகப் பிரச்சினை. நீங்கள் சமூகத்திற்கு பதிலளிக்க வேண்டும்” என்று தேசம்நெற் வலியுறுத்திக் கேட்ட போதும் “ இது பிரைவேட் மற்றர்” என்று சர்வசாதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமிமீது எவ்வித கரிசனையும் இல்லாமல் பதிலளித்தார் நித்தி. “நீங்கள் இந்த கரக்டர் சேர்டிபிக்கற்றை, பிரேமகுமாரது பாலியல் தண்டணை நிரூபிக்கப்பட முதல் கொடுத்தீங்களா அல்லது பிரேமகுமார் பாலியல் குற்றவாளி என்று தெரிந்துகொண்டும் கொடுத்தீங்களா?” என்று தேசம்நெற் வினவியபோது, அதுவும் “ப்ரைவேட் மர்ரர்” என்று கூறி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி நித்தியின் பேத்தியின் வயதையொத்தவர். நித்திக்கும் ஒரு பெண்பிள்ளை இருக்கின்றார். அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுமி டொக்டர் நித்தியின் தமிழ் பள்ளியில் தமிழ் படித்தவர். தன்னையொரு சிறந்த நிர்வாகியாக தக்க வைத்த நித்தி “நெஞ்சினில் ஈரமும் இதயமுமற்ற மனிதாபிமானமற்ற ஆணவம்பிடித்தவொருவர்” என்கிறார் ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளர். நித்தி ஈரோஸ் (Eelam Revolutionary Organization of Students) உடன் தொடர்புடையவர் என்று சொல்வதே எமக்கு அவமானம் என அவர் தெரிவித்தார்.

பரிஸில் வாழும் பெண்ணியச் செயற்பாட்டாளரான ஜெயந்தி தளையசிங்கம் பூரணி, சூரியா ஆகிய பெண்கள் அமைப்புகளில் பணியாற்றியவர், இது தொடர்பாக தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “ஒரு சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் மனநிலையை என்னவென்று சொல்வது?” என்று கேள்வி எழுப்பியதோடு “இந்தக் கீழான மனநிலைகொண்ட மனிதர்களை சமூகம் ஓரம்கட்டி ஒதுக்கி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

“மோரலி பாங்கிரப்ற் (morally bankrupt) ஆன நித்தி ஒரு பக்கத்தில் சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு துணைபோய்க்கொண்டு மறுபக்கத்தில் தந்தையின் பெயரில் ரட்ணம் பவுண்டேஸனை வைத்துக்கொண்டு சிறார்களுக்கு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்ட் (smart board) கொடுத்து சமூகத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றார்” என்கிறார் எட்ச்வெயரைச் சேர்ந்த நித்தியின் நண்பர்.

“என்னுடைய சாமத்திய வீட்டுக்கு புகைப்படக்காரராக வந்தவர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்னை தன்னுடைய ஆதிக்கத்தைப்பயன்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்தார். இப்போது இந்த விசாரணைகள் நடந்துகொண்டிருப்பதால் இதற்குமேல் இது பற்றி கதைக்க முடியாது” என்கிறார் குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்ட தர்சிகா இளம்கீரன். அவர் மேலும் குறிப்பிடுகையில் இளம்வயதில் நடந்த இந்த பாலியல் துஸ்பிரயோகம் என் அடையாளத்தை கேள்விக்கு உட்படுத்திவிட்டது. நிகழ்காலம் உறைந்துவிட்டது. எதையும் எல்லாவற்றையும் எல்லோரையும் கேள்விக்கு உட்படுத்த ஆரம்பித்தேன். வலி, தடுமாற்றம், நிலையின்மை, குழப்பம், வெட்கம், கோபம் இந்த உணர்வுகளே என்னை உலுப்பியது. இதைச் சொல்வதற்கான மொழி எனக்குத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக நான் இதை யாருக்கும் சொல்லவில்லை. பகலில் எதுவுமே நடக்காதது மாதிரி நடந்துகொள்வேன். இரவில் எல்லோரும் தூங்கும்போது அழுவேன்” என்று தன்மீது நடத்தப்பட்ட அநீதியை விபரித்தார் தர்சிகா இளங்கீரன். தற்போது தர்சிகா இளன்கீரன் உளவியல் நலன்பேணுபவராக பணிபுரிகின்றார்.

ஜென்னி ஸ்ரேக் உம் தர்சிகா இளன்கீரனும் தங்களுக்கு நிகழ்ந்ததையிட்டு துவண்டுவிடவில்லை. அவர்கள் இருவரும் இணைந்து தங்களைப் போன்ற இளம்வயதில் பாலியல் துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலொசனைகளும் ஆறதலும் வழங்கி வருகின்றனர். அன்பு – Abuse Never Becomes Us – ANBU என்ற இந்த அமைப்பு பாலியல் துஸ்பிரயோகங்களில் இருந்து மீண்டெழுந்த இவ்விரு பெண்களாலும் உருவாக்கப்பட்டு 2016 முதல் கனடாவிலும் தற்போது பிரித்தானியாவிலும் இயங்கி வருகின்றது.

இவ்வாறு எல்லோராலும் மீண்டெழுந்துவர முடிவதில்லை. அவர்களும் மீண்டெழுந்துவர சமூகத்தில் மாற்றம் வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகின்ற, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழி போடுகின்ற கலாநித்திகளும் கல்லாநித்திகளும் சமூகத்தில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டும். பெண்களை இழிவு செய்யும் மடமையை கொழுத்த வேண்டும்.

லண்டனில் தன் இளம் வயதில் தன் வீட்டில் இலங்கையில் இருந்து வந்து தங்கியிருந்த தூரத்து உறவினரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானவர் தர்ஷனா நவேந்திரன். சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளான மற்றைய சிறுமிகளைப் போலவே இவரும் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே தன் பெற்றோருக்கும் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் அந்த வலி அவரை மன உளைச்சலின் எல்லைக்கே இட்டுச்சென்றது. தன் வலியை தனிக்க அவர் கலையையும் ஆக்கப்படைப்பையும் நாடினார். தர்ஷனா தன் வலியோடு பிரசவித்தது தான் Bags of Pain என்ற அவருடைய கவிதை நூல். தன்னுடைய வாழ்வின் வெவ்வேறு காலகட்டத்தில் புனைந்த அக்கவிதைகளை பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழுந்த வெவ்வேறு நிலைகளில் இருந்த இருவர் உரையாடும் பாணியில் அக்கவித்தைகள் தொகுக்கப்பட்டு உள்ளது. தன்னுடைய சினேகிதி பற்றி குறிப்பிடும் மயுரி திரவியநாதன், தன்னுடைய வாழ்க்கையில் மோசமான நிலைகளைக் கடந்துவந்த தர்ஷனா மிகவும் அறிவுபூர்வமான பெண் என்றும் பாலியல் குற்றங்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு உதவுவதையே அவர் தன்னுடைய இலக்காகக் கொண்டிருப்பதும் மிகவும் முக்கியமானதொரு அம்சம் எனத் தெரிவிக்கின்றார். தர்ஷனா தனது சமூகவலைத்தளங்களை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மீண்டெழுந்து வருபவர்களுக்கு குரல்கொடுக்க பயன்படுத்துகின்றார்.

லண்டன் தமிழ் நிலையத்தினால் நடத்தப்படும் தமிழ் பள்ளியின் அதிபராக பணியாற்றும் திருமதி மாதவி சிவலீலன் தேசம்நெற்கு அனுப்பிவ வைத்த குறிப்பில் , “இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் பல நடைபெற்ற போதும் இதற்கு நியாயம் கேட்டுப் பெற்றோரோ பிள்ளைகளோ வெளியில் வருவதில்லை. எம் சமூகம் அவர்களையே குற்றவாளிகளென முத்திரை குற்றிவிடுகின்றது. இத்தகைய சமூகத்தில் இருந்து பெண்குழந்தைகளாயினும் ஆண்குழந்தைகளாயினும் இவர்களை எவ்வாறு காப்பாற்றி வளர்த்தெடுப்பதென்பது வேதனைக்கும் ஆபத்துக்குரியதாக இருக்கின்றது.

எங்கள் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் போன்போர் கருத்தரங்குகள், விவாதங்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆலோசனைகள் வழங்கியும் சிறு மாற்றத்தியேனும் ஏற்படுத்த முடியவில்லையெனும் போது, கவலையாக இருக்கின்றது” எனத் தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் “நீண்டகாலமாகச் சமூகம் சார்ந்து கருத்துச் சொல்லும் நான் ஒரு பாடசாலை தலைமையாசிரியராக, பெண்ணியச் செயற்பாட்டளாராக இத்தகைய இழி செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். பெற்றோர் மட்டுமல்ல, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க வேண்டும். ’மனதுக்கண் மாசிலன் ஆதல்’. எனத் திருக்குறளில் ஒரு வரி வரும். உன் மனச்சாட்சிக்கு குற்றமில்லாமல் இரு அதுவே அறம் ஆகுமென்று. இது ஒவ்வொருவரும் தான் செய்யும் தவறை உணர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தருவதுடன் திருந்தி வாழவும் உதவக் கூடும்.

இத்தகைய ஈனச்செயலை அந்நியர்கள் வீட்டிற்குள்ளோ பொது இடங்களிலோ செய்வதில்லை. குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் உறவுகளாலேயே பெரும்பாலும் நடைபெறுகின்றது. அந்தவகையில் பெற்றோர் மிக மிக அவதானமாகப் பிள்ளைகளைக் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது பிழையென்று தெரிந்தும் அதனை எதிர்க்கும் வல்லமையற்றவர்களாகப் பெற்றோருக்குச் சொல்லப் பயந்தவர்களாக இருந்து விடுகின்றனர். பின்னர் விபரம் அறிந்த வயதில் அவர்கள் இது பற்றிக் கூற முற்படுகையில் இந்தச் சமூகம் அதனை ஜீரணிக்க முடியாமல் அவர்கள் மீதே அவப் பெயரைச் சுமத்துகின்றது.

உங்கள் குடும்ப உறுப்பினர் மீது இத்தகைய அநியாயம் நடைபெற்றால் உங்கள் எதிர்வினை எவ்வாறு அமையும்? சிந்தித்துப் பாருங்கள். ஒரு தாயின் தந்தையின் மனவலியை, ஒரு பாதிக்கப்பட்ட பிள்ளையின் வாழ்நாட் மன உழைச்சலைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் துணிந்து, தன்னைப் போல் பிற பிள்ளைகளும் பாதிக்கப்படக் கூடாதென நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்டுப் போராடிய அந்தப் பிள்ளையையும் அந்தப் பெற்றோரையும் போற்றி வணங்குகின்றேன்” என்று குறிப்பிட்ட மாதவி சிவலீலன், “ஒருவர் குற்றவாளியென நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னர் அவரைக் காப்பாற்றத் துணைபோகும் அனைவரையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். எங்கள் குழந்தைகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையைக் கையளியுங்கள்” என்ற கோரிக்கையையும் மாதவி சிவலீலன் இங்கு பதிவு செய்துள்ளார்.

அன்று சிறுமியாக பிரேமகுமாரினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனது கல்வி பயிற்சிக்காலத்தை முடித்துக்கொண்டு மருத்துவராக பணியாற்ற ஆரம்பித்து விட்டார். இந்த உணர்வுரீதியான அலைகள் ஓய்ந்ததும் தன்னைப்போல் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளானவர்களை வெளியே கொண்டுவந்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாதுகாப்பளிக்கும் செயற்பாடுகளை தான் முன்னெடுக்க விரும்புவதாக பாதிக்கப்பட்ட அன்றைய சிறுமி இன்று மருத்துவராகக் கடமையாற்றுபவர் தன்னுடைய சினேகிதிக்கு தெரிவித்தள்ளார். ஜென்னி ஸ்ரேக், தர்சிகா இளன்கீரன், தர்ஷனா நவேந்திரன் ஆகியோரின் வழியில் இவ்விளம் பெண்ணும் பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டெழும் பெண்களுக்கு நம்பிக்கையழிக்க முன்வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *