உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையிலிருந்து ஜனாதிபதி ரணில் விடுதலை – மைத்திரிபாலவின் மனு நிராகரிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்ததுடன், தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தற்போது வழக்குத் தொடர முடியாது என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்து, பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய  இருவரடங்கிய நீதிபதிகள்  குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *