காலி மாவட்டம், நியாகமை பகுதியில் தந்தையை கொடூரமாக கொலை செய்த 22 வயது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பதிவாகியுள்ளது.
45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நியாகமை பிரதேசத்திலுள்ள யுவதி ஒருவரை உயிரிழந்தவரின் மூத்த மகன் காதலித்து வந்துள்ளார். இதற்குத் தந்தை கடும் எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினமான நேற்றைய தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மதுபோதையில் வந்த தந்தை, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த மகன் தந்தை மீது கத்தியால் குத்திப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தை அங்கு உயிரிழந்துள்ளார்.
கொலையாளியான மகனைக் கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.