முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆரம்பமான அகழ்வுப் பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை ஆண் பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வுப் பணி இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வருகின்ற வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் பொலிசார் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டடதுடன் , ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன.