அமெரிக்கா

அமெரிக்கா

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

கரு்கலைப்பு உரிமை பிறக்காத மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.” – மைக் பென்ஸ்

அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கிய 1973 ஆம் ஆண்டு ரோ வி வேட் வழக்கை இரத்து செய்யுமாறு முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த தீர்ப்பு மில்லியன் கணக்கான பிறக்காத குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான முடிவு என்றும் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 15 வாரங்களுக்குப் பின்னர் கருக்கலைப்பைத் தடைசெய்யும் மிசிசிப்பி சட்டத்தின் மீதான வாதங்கள் இன்று புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

இதனை அடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு அடுத்த கோடையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1973 ஆம் ஆண்டு தீர்ப்பு அமெரிக்காவில் பெண்களுக்கு கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமையையும், இரண்டாவது மூன்று மாதங்களில் வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் வழங்கியது.

டொனால்ட் ட்ரம் வெற்றி பெற்றால் உலக அமைதிக்கு நல்லது! ஜோபைடன் பெற்றி பெற்றால் அமிரிக்கா மீண்டும் எழுச்சி கொள்ளும்!! அமெரிக்க ஜனநாயகத்தின் எதிர்காலம் உசலாடுகின்றது!!!

அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கின்றிது. தேர்தல் முடிவுகள் மிகவும் இறுக்கமான போட்டியயை காட்டிக் கொண்டிருக்கையில் அமெரிக்க ஜனநாயகம் உசாலாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரேயே அமெரிக்க ஜனாதிபதி தனது வெற்றியயை அறிவித்துக் கொண்டிருக்கின்றார். தேர்தல்களில் குளறுபடிகள் நடந்ததாகவும் வாக்கு எண்ணிக்கையயை நிறுத்தவும் கோரியுள்ளார். போட்டியாளர்கள் இருவரது தரப்பிலும் ஆயிரக்கணக்கான சட்டத்தரணிகள் கடுமையான போட்டி நடைபெறும் மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி சட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகின்றனர். மேலும் சில கடுமையான போட்டி நிலவுகின்ற மாநிலங்களில் தபால் மூலமான வாக்குகள் தேர்தல் முடிவின் பின்னரே எண்ணப்படுவது வழமை. அதனாலும் சில மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். அதனால் தேர்தல் முடிவடைந்த சில நாட்களிற்கு பின் வரையும் இறுதியான் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வழமையாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளிலேயே தேர்தல் மோசடிகள் பற்றியும் தேர்தலைத் தொடர்ந்து ஏற்படும் கலவரங்கள் பற்றியும் அச்சமும் அசம்பாவிதங்களையும் கேள்விப்பட்டு இருந்தோம். ஆனால் இம்முறை உலக ஜனநாயகத்தின் காவலனாக சுதந்திர உலகின் பொலீஸ்காரனாக தன்னைக் காட்டி வந்த அமெரிக்காவில் ஜனநாயகம் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் சுறாவளி போன்ற அழிவுகளில் இருந்து தங்களைக் காப்பதற்காக வர்த்தக நிறுவனங்கள் பலகைகளைக்கொண்டு தங்கள் வினாபார நிறுவனங்களைச் சுற்றி மேலதிக பாதுகாப்புக்காக பொருத்தி வருகின்றனர். துப்பாக்கிகள் விற்கின்ற வியாபார நிலையங்களில் துப்பாக்கிகளும் அதற்கான சன்னங்களும் விற்றுத் தீர்ந்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக சங்கிலித் தொடர் வியாபார நிறுவனமான Walmart துப்பாக்கிகள் அதற்கான சன்னங்களின் விற்பனையயை சில நாட்களுக்கு முன்னரேயே நிறுத்திவிட்டது. தேர்தல் முடிவுகள் வருகின்ற போது கலவரம் ஏற்படும் என்பது பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி ட்ரம் தனக்கு ஆதரவான வெள்ளையின தீவிர போக்காளர்களைத் தயார் நிலையில் இருக்குமாறு அழைப்பு விடுத்திருந்தார். ட்ரம் – பைடன் முதல் சுற்று தொலைக்காட்சி விவாதத்தின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்தார். தன்னிடம் இருந்து வெற்றி பறிக்கப்படும் என்ற போலியான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியதன் மூலம் தான் தோற்றுப் போனால் மோசடியே காரணம் என்பதை அவர் தனது தீவிர ஆதரவாளர்களுக்கு தெரிவித்ததுடன் அதற்கு எதிராக சண்டையிடவும் ஆயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளார். அதன்படி டொனால்ட் ட்ரம் தோல்வியடைந்தால் அமெரிக்காவில் பாரிய குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமையலாம்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 1865க்களின் பின் இன்று அமெரிக்க மக்கள் மிகவும் பிளவுபட்டுள்ளனர். தீவிர வெள்ளைத்துவ வாதம் மிகவும் தளைத்து ஓங்கியுள்ளது. அதன் பிரதிபலிப்பாக சட்டம் ஒழுங்கு என்பதை டொனால்ட் ட்ரம் முன்கொண்டு செல்கின்றார். அதே சமயம் அங்குள்ள சிறுபான்மைச் சமூகங்கள்: கறுப்பினத்தவர், ஸ்பானியர், மாநிறத்தோர் அங்குள்ள சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய நிறுவனங்களால் வஞ்சிக்கப்படுகின்றனர். அடிப்படையில் சட்டம் ஒழுங்கு என்பது மிக முக்கிய அம்சமாக இருந்த போதும், அது வெவ்வேறு சமூகங்களால் முற்றிலும் முரண்பட்ட நிலையிலேயே நோக்கப்படுகின்றது.

முரண்பாடு என்பது சட்டம் ஒழுங்கு மற்றும் கொள்கைகளில் மட்டடுமல்ல மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும் இந்த மிகமோசமான முரண்பாடு வெளிப்படுகின்றது. அமெரிக்க செல்வத்தில் 40 வீதத்தை ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்கள் வைத்துள்ளன. கால்பங்கு செல்வத்தை 90 வீதமான கீழ்நிலையில் உள்ள குடும்பங்கள் பங்கு போடுகின்றன. அதன்படி பார்த்தால் இக்குடும்பங்களிடம் பத்தாயிரம் டொலர்களுக்குக் குறைவான செல்வமே உள்ளது. இக்குடும்பங்கள் வாழ்வதற்கு சொந்தமான கூரை கூட அற்றவர்களாகவே, பெரும்பாலும் வாடகைக் கூரையின் கீழ் வாழ்கின்றனர். ‘அமெரிக்க கனவு’ என்பது மிகப் போலியான ஒரு மாயயை. ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்கின்ற போது ஒரு வீதமான செல்வந்தக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் அதகரித்துச் செல்கின்ற போது; 90 வீதமான கீழ்நிலைக் குடும்பங்களின் சொத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால் அமெரிக்காவின் வீடுகளில் கட்டுப்பட்டுக் கிடக்கின்ற $113 ரில்லியன் சொத்துக்களை அமெரிக்காவில் உள்ள 329 மில்லியன் மக்களுக்கு சரியாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் $ 343,000 சொத்துக்களை வைத்திருப்பார்கள். மூவரைக் கொண்ட குடும்பத்தில் அண்ணளவாக ஒரு மில்லியன் டொலர் சொத்துக்கள் இருக்கும். ஆனால் கடைக்கோடியில் வாழும் 90வீதமான குடும்பங்களிடம் உடு துணிகள், படுக்கைத் தளபாடங்கள் ஒரு சில மின் உபகரணங்களைத் தவிர, அவர்களிடம் வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளே மட்டுமட்டாகவே இருந்துள்ளது.

உலக செல்வந்தர்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள அமெரிக்காவில் உள்ள 788 பில்லியனெயர்கள் $ 3,000,000,000,000,000 ($ 3 ரில்லியன்) செல்வத்தை தங்களிடம் குவித்து வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு செல்வந்தாரன டொனாலட் ட்ரம் மக்கள் பற்றிய எவ்வித கரிசனையும் உடைய மனிதரல்ல. ஒவ்வொருவரும் எப்படியும் செல்வத்தை சேர்த்துக் குவிப்பது, அவரவர் திறமை என்று கருதுகின்ற ஒரு கொழுத்த செல்வந்தன் தான் டொனால்ட் ட்ரம். அதனால் வரி செலுத்தாமல் ஏமாற்றுவது, நிறுவனங்களை திவாலடையச் செய்து கொள்ளை இலபமீட்டுவது எல்லாமே ஒரு வியாபாரத்தின் திறமை எனக் கருதுபவர். அதனை நடைமுறையிலும் செய்து காட்டியுள்ளார். டொனால்ட் ட்ரம் தனது சொத்துக்கள் மற்றும் வரி போன்ற விடயங்களை வெளியிடவில்லை. கொழுத்த செல்வந்தரான டொனால்ட் ட்ரம் செலுத்திய வருமானவரி; ஒரு சாதாரண ஆசிரியர் செலுத்திய வருமான வரியிலும் குறைவானதாக உள்ளது. மேலும் இவர் 13 தடவைகள் தன்னை திவாலடைய வைத்துள்ளது மட்டுமல்ல, அதனை தனது திறமையாகவும் பறை சாற்றுகின்றார். ஆனால் அவருக்குத் தான் வெள்ளையின அடித்தட்டு மக்களில் பலரும் ஆதரவளிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள 8 செல்வந்தர்கள் உலகின் எழைகளான 50 வீதத்தினரின் ஒட்டுமொத்தச் சொத்துக்ககுக்குச் சமனானன சொத்துக்களை வைத்துள்ளனர். இந்தப் பின்னணியில் தான் அமெரிக்க தேர்தல் நடைபெறுகின்றது.

டொனால்ட் ட்ரம்மின் நான்கு ஆண்டுகள் என்பது எப்போதும் மோசமானதாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதில்லை. உலக சமாதானத்தின் அடிப்படையில் நோக்கினால் அமெரிக்காலில் வந்த அண்மைய ஜனாதிபதிகளில் டொனால்ட் ட்ரம் மட்டுமே யுத்தத்தை உருவாக்கவில்லை என்பது மட்டுமல்ல ஏற்கனவே யுத்த பிராந்தியங்களுக்கு அனுப்பட்ட இராணுவத்தையும் திருப்பி அழைத்து வருகின்றார். நாடுகளின் பாதுகாப்பை அந்தந்த நாடுகளே பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நேட்டோவிற்கான நிதிப்பங்களிப்பையும் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கைகள் ஒரு வகையில் உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா தன்னை கட்டமைத்ததை கட்டுடைக்கின்ற நடிவடிக்கையின் முதற்படியாக உள்ளது.

சர்வதேச இராணுவத் தலையீடுகளைக் குறைப்பது, ரஸ்யாவுடனான நல்லுறவு வடகோரியாவுடனா உறவு என்பன ஓரளவு உலகில் இராணுவப் பதட்டத்தை ஒப்பீட்டளவில் குறைத்தே வருகின்றது. இருந்தாலும் சவுதிய அரேபியா யேர்மன் நாட்டில் யுத்தத்தைத் தொடுத்திருந்த நிலையில் அந்நாட்டுடன் பல பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்களை வெறும் வியாபார ரீதியில் மேற்கொண்டிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கது. டொனால்ட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபமீட்டுவதை மட்டுமே நோக்காகக் கொண்ட வியாபாரி; என்ற வகையில் வேறுநாடுகளின் விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தலையிட்டு பொருளாதாரச் செலவை ஏற்படுத்த விரும்பவில்லை; என்பது அவரிடம் உள்ள முக்கிய வரவேற்கத் தக்க குணாதிசயம். சீனாவோடு உள்ள வர்த்தகப் போட்டியும் கூட, ஒரு வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு செல்லும் போக்கே அல்லாமல் யுத்தத்தை நோக்கி நகரும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. டொனால்ட் ட்ரம் இற்கு அமெரிக்காவை உலக பொலிஸ்காரனாக உருவாக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் தன்னுடைய நேட்டோ நட்பு நாடுகளுடனேயே பகைத்துக் கொண்டு ரஸ்யாவோடு உறவாடவும் தயாராக இருப்பதால், டொனால்ட் ட்ரம்மின் காலம் உலகில் ஒப்பீட்டளவில் அமைதியேற்படும் எணக் கொள்ளலாம்.

மேலும் டொனால்ட் ட்ரம் ஒரு இறுக்கமான அரசியல் தலைவரல்ல என்பதும் அவருக்கு ஒரு இறுக்கமான அரசியல் கொள்கை இல்லாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு எதிரான வல்லரசுகளான சீனா, ரஸ்யா போன்ற நாடுகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதானால் டொனாலட் ட்ரம் மீண்டும் ஜனாதிபதியாவதை இந்நாடுகள் விரும்புகின்றன. ஆனால் நேட்டோ நேச நாடுகளுக்கு டொனால்ட் ட்ரம் வெற்றி பெறுவதில் எவ்வித விருப்பும் கிடையாது. சர்வதேசத்தில் அமெரிக்காவின் தலைமைக்குக் கீழ் குட்டிச் சண்டியர்களாக திரிந்தவர்களை டொனால்ட் ட்ரம் ஓரம்கட்டிவிட்டு ரஸ்யா, சீனா, வடகொரியா என புதிய உறவுகளை ட்ரம் தலைமையிலான அமெரிக்கா ஏற்படுத்தி வருவது அவர்களுக்கு அதிருப்தியயை ஏற்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கில் கூட அரபு நாடுகளுக்கு இஸ்ரேலுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உறவு ட்ரம்மின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல். இவ்வெளியுறவுக் கொள்கை பலஸ்தீனியர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பலமான அடி. டொனாலட் ட்ரம் எவ்வித உள்ளுணவும் அற்ற லாபத்தை மட்டுமே நோக்காக் கொண்டவர் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியர்களிடம் தங்கள் நிலத்தை மட்டுமல்ல எதிர்காலத்தையும் இழந்து வருகின்றனர். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்குமான உறவானது, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ஒரு நகர்வே. ஈரானை சர்வதேசத்தில் இருந்து ஓரம்கட்டவே அமெரிக்கா முயற்சிக்கின்றது. ஆனால் இந்த முரண்பாடு ஒரு யுத்தமாக அண்மைக்காலத்தில் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அவ்வளவிற்கு இல்லை.

டொனால்ட் ட்ரமின் தலைமை உலக சமாதானத்திற்கு சாதகமாக இருப்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அமெரிக்காவிற்கு அது சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க மக்கள் டொனால்ட் ட்ரம் அமெரிக்காவை தலைசிறந்தது ஆக்குவார் என்பதற்காக வாக்களிக்கின்றனர். ஆனால் டொனால்ட் ட்ரம்மின் தலைமை அமெரிக்காவை பெரும்பாலும் தலைகுனியச் செய்தே வருகின்றது. டொனாலட் ட்ரம்மின்: கதையாடல்கள், வாய்கூசாமல் சொல்கின்ற பொய்கள், கொரொனாவை கட்டுப்படுத்த முடியாமை, சுற்றுச்சூழல் பற்றிய கொள்கைகள், விஞ்ஞாபூர்வமான உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது, செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள், சிறுபான்மையினங்களுக்கு எதிரான துவேசத்தை வளர்த்துவிடுவது, மக்களைக் கூறுபோடுவது என்பன அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது அமெரிக்காவின் எதிர்காலத்தை பெரும்பாலும் பாதிக்கும்.

மேலும் நாட்டின் குடிவரவைக் கட்டுப்படுத்தவது என்ற பெயரில் சட்ட விரோதக் குடியேற்றக்கரர்களுக்கு எதிராக எடுக்கின்ற நடவடிக்கைகள் மனிதாபிமானத்துக்கு முரணானவை. இனக்குரோதமாகவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அமெரிக்கா இதுவரை தலைமை தாங்கிய சுயாதீன கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாறாக, தற்பாதுகாப்பு பொருளாதாரக் கொள்கையயை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவதை இப்பொருளாதாரக் கொள்கை ஊக்குவிக்கின்றது. இதுவும் அமெரிக்காவை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தவே வழிவகுக்கும். உலகமயமாதல் தற்போது வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலையின்மையயை ஏற்படுத்துவதால், உலகமயமாதலுக்கு எதிர்நிலையயை டொனால்ட் ட்ரம் எடுத்து வருகின்றார். இது அமெரிக்காவில் தொழில் வாய்ப்பை உடனடியாக உருவாக்க உதவுகின்றது. அத்துடன் சர்வதேச நாடுகளில் அமெரிக்காவின் சுரண்டலை இது தடுப்பதற்கும் உதவும். ஆனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நாடுகளில் வேலையின்மை ஒரு பிரச்சினையாகும். இந்நாடுகள் சுயசார்புப் பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி தள்ளப்படுவார்கள். ஒருவகையில் சர்வதேசத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை தளர்த்துவதாகவே டொனாலட் ட்ரம்மின் பொருளாதாரக் கொள்கைகள் அமைகிறது. இது இன்று தனது பொருளாதார ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் சீனாவிற்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

ஆகையால் டொனால்ட் ட்ரமின் அமெரிக்கா உலக நாடுகளின் சமாதானத்திற்கு சாதகமாகவும் அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமையும். மாறாக டெமோகிரட் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி கட்சிபேத மற்று அமரிக்காவின் வல்லாதிக்கத்தை தொடர்ந்தும் நிலைநாட்டுவதாகவும் நேட்டோ நேச நாடுகளின் அணியயை வலுப்படுத்தி, உலக பொலிஸ்காரனா தன்னைக் கட்டமைப்பதுமாகவே அமையும். இது அமெரிக்காவில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலுமே அமெரிக்க அரச இயந்திரம் அவ்வாறு தான் செயற்படுத்தும். ஜோ பைடன் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பின் படைப்பே. டொனால்ட் ட்ரம் அவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்படாததால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அதனால் ஜோபைடன் அமெரிக்காவின் எழுச்சியயை மீளக் கட்டமைப்பதற்கான முயற்சிகளில் இறங்குவார். அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்துவது, அங்குள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் சற்று குறைப்பதன் மூலம் பதட்டத்தை தணிப்பது, இனங்களிடையே சுமூக உறவை ஏற்படுத்தி ‘நாங்கள் அமெரிக்கர்’ என்ற உணர்வை ஊட்டுவது, இதன் மூலம் சமூகப் பதட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் இறங்குவார். மேலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற விடயங்களை முன்நிறுத்துவதன் மூலம், சர்வதேச சமூகத்தில் அமெரிக்காவின் தலை நிமிரச் செய்ய முயற்சிப்பார்.

இந்தப் பின்னயிலேயே எதிர்கால அமெரிக்க – சர்வதேச நிலைமைகள் அமையும்.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு!

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை தேர்வு செய்வதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து  விலகினார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடனே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான நெருக்கடிகள், அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஆப்பிரிக்கவைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது கறுப்பின மக்களின் வாக்குகளைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும், சான் பிரான்ஸிக்கோவின் மாவட்ட அட்டர்னி ஜெனரலாக இருந்தபோதும் கமலா ஹாரிஸின் பணி வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக இனவெறித்தாக்குதல், போலீஸாரின் அடக்கு முறைக்கு எதிராக கமலா ஹாரிஸ் கடுமையாக குரல் கொடுத்தார்.

இது நாள்வரை அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாகவோ அல்லது துணை ஜனாதிபதியாகவோ எந்த அமெரிக்கப் பெண்ணும் இருந்ததில்லை. அதிலும் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றதில்லை. கடந்த 1984-ம் ஆண்டில் குடியரசுக் கட்சியின் சார்பில் ஜெரால்டைன் பெராரோ, 2008-ல் சாரா பாலின் இருவரும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

 

அமெரிக்காவின் ஒக்லாந்தின் ஜமைக்காவைச் சேர்ந்த தந்தைக்கும், இந்தியப் பெண் அதிலும் குறிப்பாக தமிழரான ஷியாமளா கோபாலுக்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ். கமலா ஹாரிஸ் கடந்த 2003-ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்ஜெனரல் தேர்தலில் போட்டியி்ட்டு வென்றார்.

அதன்பின் 2010-ம் ஆண்டில் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு கலிபோர்னியா செனட்டராக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டு அவரின் பேச்சும், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் குறித்த கேள்விகளும் அவரின் பக்கம் கவனத்தை ஈர்த்தன.

கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பூர்வீகத்தில் ஒரு தமிழ் பெண். கமலா ஹாரிஸின் தாய்வழித் தாத்தா பி.வி.கோபலன் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த ஜாம்பியாவுக்கு நிர்வாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்.

பி.வி. கோபாலின் மகள் ஷியாமளா கோபாலன். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஷியாமளா கோபாலன், நியூட்ரிசியன் பிரிவில் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணியாற்றினார்.

 

இல்லிநாய்ஸ், வி்ஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் மார்க்கப்புற்று நோய் ஆய்வாளராக ஷியாமளா கோபாலன் இருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு ஷியாமளா கோபாலன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.