கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்று ஏன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடாது..? – கஜேந்திரகுமாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

உங்கள் பாட்டனாரை போன்று நீங்களும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெறுகிறது என்றும் தடுப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ” நான் பலமுறை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ்நாடு சென்று தமிழக தலைவர்களுடன் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் பேசுவோம் என அழைப்பு விடுத்தேன். சிலர் அதனை மறுக்கின்றனர்.” என்றார்

இதன் போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், ”நீங்கள் துறைசார்ந்த அமைச்சராக இருக்கிறீர்கள். உங்களால் பிரச்சினை தீர்க்க முடியாது என்றால் எங்களை ஏன் அழைக்கிறார்கள். உங்களால் கையாள முடியாது என்றால் ஏன் அமைச்சராக இருக்கிறீர்கள் பதவியை துறவுங்கள்” என்றார்.

இதன் போது பதில் அளித்த டக்ளஸ் , ”இந்த பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல இந்தப் பிரச்சினையை ஒருவர் கையாள முடியாது. இராஜதந்திர ரீதியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கையாள வேண்டும்.

நான் பதவி விலகுவதால் குறித்த பிரச்சினை தீரப்போவதாக எனக்கு தெரியவில்லை. உங்கள் பாட்டனர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நினைக்கிறேன்.” என்றார்.

இந்திய முதலீட்டுக்கள் மூலமாக அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் மாவட்ட செயலாளர் ஶ்ரீபிரசாத் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் முடக்கம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் எனும் போர்வையில் இலங்கை அரசானது அடக்குமுறைச் சட்டங்களை படிப்படியாக கட்டவிழ்த்து விடுகிறது.

அடுத்தபடியாக ஒட்டுமொத்த இலங்கையில் பரவலாக மூன்றில் இரண்டு பகுதி வருமானத்தினை ஈட்டும் கடற்றொழிலில் அரசு கைவைக்கப்போகிறது. கடற்றொழில் எல்லைகள் குறித்த புதியதொரு சட்டத்தினை நடைமுறையாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்துகிறது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் இருக்கும் எமக்கே போதிய தெளிவில்லாது காணப்படுகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிக்கும் செயற்திட்டத்தினை அரசு முன்னெடுக்கிறது.

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினையும் இந்திய தமிழர் உறவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் ஏற்படுத்த முனைகிறது.

இதன் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களை வெளியேற்றி அதன் மூலமாக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன. இதற்கு பின்னணியில் இந்தியா நின்று செயற்படுவதாக பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளை சந்தித்து தாம் கலந்துரையாடியதாகவும் அதன்போது பொதுமக்களைக் குறிவைத்து அவர்களது காணிகளை அபகரிப்பது இந்தியாவின் திட்டமல்ல.

இருப்பினும் இலங்கை அரசு பொதுமக்கள் தற்போது வசிக்கும் காணிகளை அபகரித்து அதிலிருக்கும் பொதுமக்களை நிர்கதியாக்குமாயின் அது குறித்து இந்திய அரசுக்கு தெரிய வர வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் அது தொடர்பில் இந்தியா கருத்து தெரிவிக்க மறுக்கின்றது” என அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் !

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரியே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதால், அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பில் அவர்களுடைய தரப்பு நிலைப்பாட்டினை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ முன்வைப்பதற்கு இன்றைய தினம்(3) அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன்.” – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவேண்டுமென நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். இருப்பினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். இதுபற்றிய உங்களது கருத்து என்ன?’ என்று எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எப்போதும்போல் இதிலும் அவரது கருத்து நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. விடுதலைப்புலிகள் இருந்தபோது தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை அவர்களால் உறுதிசெய்யமுடிந்தது. ஆனால் வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் பகிஷ்கரிப்பு வெற்றியடைவதை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் எவ்வாறு உறுதிசெய்யமுடியும்?

அதேபோன்று சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான ஏனைய உள்ளகத்தரப்பினர் வாக்களிப்பதைத் தடுக்கமுடியாது. எனவே தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு கோருவதன் மூலம் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கான தனது ஆதரவினை கஜேந்திரகுமார் உறுதிப்படுத்த விரும்புகின்றாரா?

ஏற்கனவே கடந்த பொதுத்தேர்தலின்போது யாழ்மாவட்டத்துக்கான வாக்கு எண்ணும் பணிகளில் பல்வேறு குழறுபடிகள், தவறுகள் இடம்பெற்றதாகக் கூறுப்படுகின்றது.

இந்நிலையில் தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றால், வேறு எதனைத்தான் செய்யமுடியாது? வாக்களார்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் மாத்திரம் பயன்படுத்தப்படும்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தமுடியாது. அநேகமான பத்திரிகைகள் குறிப்பிடத்தக்களவிலான வாக்குப்பதிவு இடம்பெறவில்லை என்றே செய்தி வெளியிடும். அல்லது அரசியல் கட்சிகள் அவற்றின் இராணுவத்தின் துணையுடன் போதிய நடவடிக்கைகளை எடுத்தால், தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்து வீட்டில் இருந்தாலும் போதிய வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகவே செய்திப்பத்திரிகைகள் கூறும்.

அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் போன்று மும்மொழிகளையும் அறிந்த ஒரு பொதுவேட்பாளரால் தமிழ்மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றமுடியும். வாக்காளர்கள் மத்தியில் இடம்பெறக்கூடிய ஆள்மாறாட்டத்தையும் குறைக்கமுடியும். போதியளவான வாக்குப்பதிவு இடம்பெறுவதை உறுதிசெய்யமுடியும்.

மேலும் மும்மொழிகளையும் அறிந்த பொதுவேட்பாளரொருவரைக் களமிறக்குவதன் மூலம் தொலைக்காட்சிகளில் வேட்பாளர் ஒருவருக்காக ஒதுக்கப்படக்கூடிய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும். இன்றளவிலே சிங்களமொழி மூலமான எந்தவொரு ஊடகமும் குறிப்பாக வட, கிழக்கு தமிழர் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை.

ஆங்கில ஊடகங்கள்கூட எமது பிரச்சினைகளை வெளியிடுவதில் பின்நிற்கின்றன. ஆகவே தமிழர்கள் சார்பில் களமிறங்கும் பொதுவேட்பாளர் எமது பிரச்சினைகள் குறித்து சிங்களமக்களுக்குத் தெளிவுபடுத்தக்கூடியவகையில் தமக்குரிய தொலைக்காட்சி நேரத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேபோன்று தமிழ் பொதுவேட்பாளர் மூலம் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறுவதைத் தடுக்கமுடியும். அத்தோடு சிங்களமக்கள் பலர் தமது இரண்டாம் விருப்புவாக்கை தமிழ் வேட்பாளருக்கு அளிக்கக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

ஆகவே எமது பிரச்சினைகளைப் பரந்த அடிப்படையில் உலகுக்குத் தெரியப்படுத்துவதற்கு தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவர் நிச்சயமாகக் களமிறக்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுவேட்பாளராகக் களமிறங்கினால், நான் அவருக்கே வாக்களிப்பேன். ஆனால் அதற்கு அவர் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்களமக்களை அறிவூட்டக்கூடிய விதத்தில் தொலைக்காட்சியில் சிங்களமொழியில் உரையொன்றை நிகழ்த்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” – இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

 

“தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

 

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

 

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயரைத் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

 

முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பின் தலைவர் மற்றும் இன்னுமொரு அணி மனோ கணேசன் ஆகியோரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

 

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்களத் தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

 

அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.

 

ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.

 

அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம்.

 

இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழீழ விடுதலைப் புலிகள் அன்று ரணில் விக்கிரமசிங்கவை நம்ப வேண்டாம் என்று கூறிய விடயம் இன்று நிதர்சனமாகியுள்ளது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார்? ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் என்பதை அவர் சரியாக கண்டுபிடித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

 

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவே சர்வதேச சமூகத்திற்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்தது.  இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக தெளிவாக சொன்னது இவை அனைத்தும் ஒரு நாடகம், இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படடுள்ள நிலையில் பிச்சை கேட்கும் நாடாக மாறியிருக்கின்ற நிலையில் இந்த நிலைமை உருவாகுவதற்கான அடிப்படை காரணமே இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் அதுவொரு யுத்ததிற்கு இட்டுச் சென்று இறுதியில் அந்த யுத்திற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தான் கடனுக்குள் இலங்கை மூழ்குவதற்கு முக்கிய காரணியென்றும் இன்று வரவு செலவிட்டத்தில் சுமார் 15 வீதம் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகின்றது. என்றால் நாடு முன்னேற முடியாது, இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்ட சூழலில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தான் திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக காட்டுவதற்கு எடுக்கப்படுகின்ற நாடகமே தவிர ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் இந்த பிரச்சினையை தீர்க்கமாட்டார் என்று கூறி நாங்கள் சவால் விட்டோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்வதாகயிருந்தால் சிங்கள மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழர் தேசத்தினை அங்கீகரிக்கின்ற இறைமையினை அங்கீகரிக்கின்ற ஒரு சமஸ்டி தீர்வு, பேச்சுவார்த்தைகள் ஒற்றையாட்சியை தாண்டி இந்த பிரச்சினை சமஸ்டியின் அடிப்படையில் தீர்க்கப்படுவதாக அமையும் என்ற உண்மையினை ரணில் விக்ரமசிங்க சிங்கள மக்களுக்கு வெளிப்படையாகவே கூறினால் இந்த பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை கொள்ள முடியும்.

 

அதனை செய்யாமல் வெறுமனே தீர்வுக்கு வாருங்கள் பேசுவோம்,பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வினை கொடுப்போம் என்பதெல்லாம் பம்மாத்து, அப்பட்டமான பொய்கள், சர்வதேச நெருக்கடிகளை சமாளித்தப்பது மட்டுமேயாகும். அதனாலேயே பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு மறுத்தோம். நாங்கள் ஏமாறுவதற்கும் தயாரில்லை, ஏமாற்றப்படுவதற்கும் தயாரில்லை.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமிழினத்தை ஏமாற்றி தமிழ் அரசியல்வாதிகளை பாவித்து தன்னுடைய அடுத்ததேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்வதற்காக மட்டும் செல்லும் இந்த பாதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. எங்களை ஏமாற்ற முடியாது என்பதற்காக எங்களுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை.

 

அதற்காக ஜனாதிபதியை பாராட்டவேண்டும் ஏனென்றால் சரியான தரப்புகள் யார், ஏமாற்றக்கூடிய தரப்புகள் யார் ஏமாற தயாரில்லாத தரப்புகள் யார் சரியா கண்டுபிடித்துள்ளார்.

 

ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஆரம்பித்த காலம் தொடக்கம் கூறிவந்த பொய்யை நேற்றைய சந்திப்பில் வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

அடுத்த தேர்தலின் பின்னர் ஒரு வருடத்திற்குள் தீர்வு வழங்குவேன் என்று கூறியிருக்கின்றார். கடந்த ஒன்றரை வருடமாக சொன்ன பொய்யை நம்பி ஏமாந்தவர்கள் தற்போது கூறும் புதிய பொய்யையும் நம்பி ஏமாறப்போகின்றார்களா? என்ற கேள்வியிருக்க இவ்வாறான ஒரு தெளிவான நிலைப்பாட்டை அறிவித்த பிறகாவது தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயல்பாடுகளிலே ஏனைய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களிடம் பகிரங்கமாக கேட்டுக் கொள்கின்றோம்.

 

தற்போது இனப்பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை, தேர்தலின் பிறகுதான் பேசலாம் என்று ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தெளிவான செய்தியை வழங்கிய பின்னரும் தமிழர் தரப்பு அவருக்கு முன்டுகொடுக்குமானால் வெறுமனே ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு மட்டுமே அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று நிரூபிக்கப்படும்.

 

தயவுசெய்து நீங்கள் எடுக்கும் தமிழ் வாக்குகளுக்கு நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ஸ தரப்பையும் தொடர்ந்து காப்பாற்ற வேண்டாம்.

இந்த 13 ஆவது திருத்தம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கின்ற விடயம் அதில் உச்ச நீதிமன்றம் ஆழமான ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாகவும் கிட்டத்தட்ட முப்பது தீர்ப்புகள் இந்த 13 ஆம் திருத்தத்திற்குள் அதிகாரம் பகிரப்பட முடியாது ஒற்றையாட்சி இருக்கும் வரைக்கும் அதிகார பகிர்வு நடக்கவே நடக்காது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்ற சூழ்நிலையில் அந்த உண்மை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பலப்படுத்தி இன்று மக்களும் அதை உணரத் தொடங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ தாங்கள் சரியானதற்காக தான் தொடர்ந்தும் இருப்பதாக காட்டிக் கொல்வதற்காக இப்போது 13 ஆவது திருத்தம் என்பதனை பெரிய அளவில் வலியுறுத்தாமல் அவர்கள் ஒரு புது உபாயத்தை இன்று நமது மக்கள் மத்தியில் காட்டப் போகின்றார்கள்.

 

அது என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்கின்ற புதிய கோஷத்தை கதைப்பதன் ஊடாக 13 ஆம் திருத்தத்தை மெல்ல அமைதியாக வலியுறுத்துவதை மூடி மறைக்கலாம் என்று நினைக்கின்றார்கள்.

 

அனைவருக்கும் தெரியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர்ந்த மற்றைய அனைத்து தரப்பினர்களும் 13 ஆவது திருத்தையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றனர். நாங்கள்தான் அதனை பிரித்து பார்க்கின்றோம். நாங்கள் தான் கூறுகின்றோம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லை அதில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை.

 

ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற பெயரிலே கொண்டு வந்திருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை தான் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

 

அந்த வேறுபாட்டை நாங்கள் தெளிவுபடுத்தி இந்தியாவிடமும் எமது மக்களிடமும் தெளிவாக கூறியிருக்கின்றோம். இலங்கை அரசிடமும் 13 ஆவது திருத்தத்தை நாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதில் ஆரம்பப் புள்ளி கூட இல்லை. இந்த யதார்த்தம் மக்கள் மத்தியில் இன்றைக்கு தெளிவாகிக் கொண்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் அதே நேரம் இந்த தமிழ் தரப்புகள் தொடர்ந்து 13 வலியுறுத்த விரும்புகின்ற ஆனால் வெளிக்காட்ட முடியாது தேர்தலும் வருகின்றது தேர்தலில் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தி சென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்கின்ற பயம் இருக்கின்றது இதனால் அவர்கள் நினைக்கின்றார்கள் தாங்கள் கெட்டித்தனமாக 13 பெரிதாக கதைக்காமல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னால் அதிலிருந்து தப்பலாம் என நினைக்கின்றார்கள்.

 

தமிழருக்கு நன்றாக தெரியும் இந்த ரணில் விக்ரமசிங்க எதுவுமே செய்யப் போவதில்லை என்று அவருக்கு ஒரு எண்ணம் இருந்தாலும் கூட ஒன்றும் செய்ய மாட்டார்.

 

ஏனென்றால் தேர்தல் வரப்போகின்றது தேர்தலில் வெள்ளம் வேண்டும் என்பதனை தான் சிந்திக்கப் போகின்றார். ஆகவே கடைசி வரைக்கும் அவருக்கு எண்ணம் இருந்தாலும் அவர் செய்யப் போவதில்லை. உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட எண்ணமே கிடையாது.

 

இதனை தெளிவாக விளங்கிக் கொண்டுதான் நாங்கள் தொடர்ச்சியாக இவருடைய ஆட்சியை நம்பாதீர்கள் இவருடைய வார்த்தைகளை நம்பாதீர்கள் என மக்களுக்கு தொடர்ச்சியாக கூறிக் கொண்டு வருகின்றோம்.

 

இந்த ரணில் விக்கிரமசிங்க நம்பாதீர்கள் என தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் கூட 2005 ஆம் ஆண்டு எமது மக்களிடம் சொன்னார்கள்.

அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உண்மையை மக்களிடையே சொல்ல மக்கள் குழம்பி விட்டனர். தமிழ் ஆய்வாளர்கள் குழம்பினர். ஏதோ புலிகள் வந்து பிழையாக இந்த விடயங்களை கணக்குப்போகின்றார்கள் என்று. எந்த அளவு தூரத்திற்கு ஒரு தீர்க்கதரிசனம் என்பது இன்று இந்த ரணில் விக்ரமசிங்கவின் செயல்பாடுகளினால் நிரூபித்து இருக்கின்றார். அதுதான் உண்மை.

 

ஆகவே இந்த ரணில் விக்கிரமசிங்கமிடம் வந்து உண்மையைக் கூறினால் எதையும் எதிர்பார்க்க முடியாது ராஜபக்ஷர்களிடம் எதிர்பார்ப்பதை போன்று ரணில் விக்கிரமசிங்கமிடம் இருந்து எதிர்பார்ப்பது. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏதோ உள் மனதிலே செய்ய வேண்டும் என நினைத்தால் அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என நினைத்தால் ஆக குறைந்தது இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே ஆண்டாண்டாக எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாமல் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இல்லாத போலியான பொய்யான வாக்குமூலம் பெற்று சிறையில் இன்று வாடிக் கொண்டிருக்கின்ற நம்முடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்.

 

அதை செய்து இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீங்களே வந்து மிக கொடூரமான ஒரு சட்டம் என்று சொல்கின்ற நிலையில் அதற்காவது மதிப்பு கொடுங்கள். 2015 இல் உங்களுடைய அரசாங்கம் உலகத்துக்கு சென்று கூறியது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதை நாங்கள் நிறுத்துவோம் என்று அந்த சட்டத்தை அமல்படுத்துவது யாவது அந்த சட்டத்தை பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் கிட்டத்தட்ட 11 பேரை கைது செய்தீர்கள். சர்வதேச மட்டத்திலேயே வருகின்ற கடும் அழுத்தத்தினால் ஒரு சிலரை பிணையில் விடுவித்து இருக்கின்றீர்கள்.

 

அந்த விடயத்திலாவது ஒரு மனசாட்சியை தொட்டு இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கைகளை வாபஸ் பெறுங்கள் என்பதை நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ஆக குறைந்தது வேறு ஒன்றும் வேண்டாம். எனில் எமக்குத் தெரியும் நீங்கள் ஒன்றும் செய்யப் போவது இல்லை என்று. எங்களது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் நமது மக்களும் ஏமாறக்கூடாது எதையும் எதிர்பார்க்க வேண்டாம் செய்யப் போவதில்லை இதையாவது செய்யுங்கள்.

 

நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்றீர்கள் இது ஒரு மிக மோசமான கொடூரமான ஜனநாயக விரோதமான சட்ட ஒழுங்குக்கு மாறான ஒரு சட்ட வரைவு என்பதனை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கின்ற வகையில் ஆகக் குறைந்தது நடந்த அநியாயம் கடந்த மாதம் நீங்களே அனுமதித்த நீங்களே கூறினீர்கள் நினைவு கூறலாம் என்று அப்படிப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் தொடர்ந்து நீங்கள் பிடிக்கிற தன்மையை நிறுத்துங்கள் பிடித்திருப்பவர்களை விடுதலை செய்யுங்கள் என தெரிவித்தார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். – அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றச்சாட்டு !

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கெவிலியாமடு கிராமத்தை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வருகைதந்ததாகவும் அதற்கு தாமும் மக்களும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

திவ்லபொத்தானை கிராமத்தில் சிங்கள மக்கள் பல வருடங்களாக விவசாயம் செய்துவருகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் இந்த விவசாய செய்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். குறித்த விவசாய நிலங்களை தமிழ் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்தை கால்நடைகளுக்காக வழங்கினால் சிங்கள மக்கள் எவ்வாறு வாழ்வார்கள். அதற்கு எதிராகவே நான் குரல் கொடுத்து வருகின்றேன்.

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம் | Pillaiyan Support Sinhalese Mayilathamaadu Affair

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகைதந்து இனவாதத்தை உருவாக்குகின்றார். மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் யுத்த காலத்திலும் தம்மை பாதுகாத்தார்கள். அன்று முதல் தமிழ் மக்களுடன் நான் இருந்துள்ளேன். எனினும் தற்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  இது மிகவும் தவறானது. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் எமது பங்காளிகள். இந்த ஒற்றுமையை சீர்குலைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கே நான் எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். தேசிய ஒருமைப்பாடு சிதைந்துவருவதால் தற்போதைய ஆட்சியாளர்கள் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பிள்ளையான், வியாழேந்திரன் மற்றும் ஏனைய முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதிலும் அவர்கள் இனவாதம் பேசவில்லை. நாடு நெருக்கடியில் இருக்கும் தருணத்தில் இதுபோன்ற செயற்பாடுகளை அனுமதிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்  மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுக்கும் செயற்பாட்டை பொலிஸார் செய்கின்றனர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு!

இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழர்களின் உரிமையினை மறுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதை நேற்றைய சம்பவம் நிரூபித்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மயிலத்தமடுவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் சென்ற நிலையில் பொலிஸாரினால் உட்செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

 

இதன்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிர் தலைமையிலான குழுவினர் வருகைதந்து விளைவித்த குழப்பத்தினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

 

இந்த நிலையில் ஜனாதிபதி செயலாளரின் அறிவுறுத்தலையும் மீறிய வகையில் பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்பட்டதாகவும் இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில் உலக தமிழர் பேரவை அரசாங்கத்துக்கு வெள்ளையடிக்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவையை சந்திக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்த பேரவையின் உறுப்பினர்கள், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

பேரவையினரின் குறித்த நடவடிக்கை, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்க வேண்டுமென பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கோரியுள்ளார்.

இதனை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேரவையின் உறுப்பினர்களுடன் தமக்கு பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நிறைவுக்கு வந்ததிலிருந்து, நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கடந்த 27 ஆம் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்களின் போது தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் நினைவூட்டியுள்ளார்.

இந்த பின்னணியில், குறித்த விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு உலக தமிழர் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டுமான போதிலும், இதனை விடுத்து அவர்கள் அரசாங்கத்துக்கு வெள்ளையடிப்பதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தாயகத்தில் எவருடனும் பேரவையின் உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு !

வடக்கு கிழக்கில் முப்படைகள் ஊடாகவே திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்தல்கள் அமைச்சு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது மிக முக்கியமானது வடக்கு கிழக்கில் போதைக்கு அடிமையாதல் என்பது, மிகப் பெரும் பிரச்சனையாக உருவாகிவருகின்றது.

ஏனென்றால் – சிறிலங்கா அரசானது இன்னும் ஆயுதக் கிளர்ச்சியை தோற்கடிக்கும் மனோநிலையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் முப்படைகள் ஊடாகவே இந்த போதைப்பொருள் பாவனை ஊக்குவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் மற்றும் இராணுவத்தினரது முழு ஒத்துழைப்புடனேயே இவை நடைபெறுகின்றன. இராணுவம் தான் நோரடியாகவே அந்த செயற்பாட்டை செய்துவருகின்றது. இப்படியான ஒரு சூழலில் வடக்கு கிழக்கில் மிகப்பெரும் அளவிலான இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு மோசமான நிலமைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

எனவே பாடசாலைகளில் உளவள செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும். பாதிக்கப்படுபவர்களை ஏதோ ஒரு வழியில் அதிலிருந்து மீட்க வேண்டுமாயின் இத்தகைய உளவள செயற்பாடுகள் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்குரிய மனோநிலையை உருவாக்கி, அவர்களை நற்பிரஜைகளாக்குவதை விடுத்து, மாறாக அவர்களை குற்றவாளிகளாக்கி சமூகத்திலிருந்து அவர்களை ஒதுக்கும் நிலைமையையே உருவாக்கியிருக்கிறது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.