கொரோனா

கொரோனா

வேகம் எடுக்கும் J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு – மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்!

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

 

J N 1 OMICRON உப பிறழ்வான புதிய கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவி வருகின்றமையே இதற்கு காரணமென அவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் விளைவாக இலங்கையில் சளி போன்ற நிலைமை ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.​

 

எவ்வாறாயினும் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாமெனவும் பேராசிரியர் ச்சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

 

காய்ச்சல், இருமல், மணமின்மை மற்றும் சுவையின்மை, அதிக வெப்பம், சுவாசக் கோளாறு, உணவு தவிர்ப்பு மற்றும் வாந்தி என்பன J N 1 OMICRON கொவிட் பிறழ்வின் நோய் அறிகுறிகளாக காணப்படுகின்றன.

 

ஆகவே, இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுமாறும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடணம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

லக்ஸம்பேர்க் இராச்சியத்தில் கண்டறியப்பட்ட இந்த J N 1 OMICRON உப பிறழ்வு தற்போது இந்தியாவில் பரவி வருகின்றது.

 

இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2660 ஐ கடந்துள்ளது.

 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவிய இந்த உப பிறழ்வு தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொவிட் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு இந்திய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் J N 1 கொரோனா பிறழ்வு கவனம் செலுத்தப்பட வேண்டிய வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

மீண்டும் வேகமாக பரவிவரும் கொரோனா – எச்சரிக்கிறது உலக சுகாதார ஸ்தாபனம் !

புதிய ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியா, சீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் JN.1 பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், மக்களுக்கான ஆபத்து தற்போது குறைவாக உள்ளதாகவும் தற்போதைய தடுப்பூசிகள் தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

 

எனினும், குளிர்காலத்தில் கொரோனா மற்றும் பிற நோய் தொற்றுகள் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்து உலக சுகாதார மையம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.

“எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்,” என்று உலக சுகாதார மையம் டுவிட் செய்துள்ளது.

சீனாவில் மக்கள் போரைாட்டத்தை அடுத்து தளர்த்தப்பட்டது கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் !

உலக நாடுகளில் இரண்டரை ஆண்டுகளாக தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முறையாக சீனாவில் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகளில் பல்வேறு அலைகளாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனினும், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட, பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது.

இந்நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வியாழ கிழமையன்று ஜின்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி நகரில் குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படுத்தியது என இதுபற்றி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இவர்களில் குவாங்ஜவ் மாகாணத்தில் தெருக்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே (மிளகு தூள்) தூவி அவர்களை கலைந்து போக செய்ய ஷாங்காய் போலீசார் முயற்சி செய்தனர். ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து, புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சம் அடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டம் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

இதனால், கிழக்கு பீஜிங் நகரில், லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். இதன்படி, மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு ஏற்ற வகையில், கொரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளை கவனித்து வரும் துணை பிரதமர் சன் சுன்லான் கூறும்போது, கொரோனாவின் தொற்று நோய் ஏற்படுத்தும் வீரியம் குறைந்து வருகிறது என கூறியுள்ளார். ஒரு புது சூழலை நாடு எதிர்கொண்டு வருகிறது. தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஒமைக்ரான் பலவீனமடைந்து வருகிறது. அதிகளவில் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டு, வைரசின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று சன் கூறியுள்ளார். எனினும் மக்கள், பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.

சீனாவில் ஒரே நாளில் 31,000 பேருக்கு கொரோனா தொற்று – அச்சத்தில் உலகம் !

சீனாவின் வூகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது.

 

நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.

பல இடங்களில் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் கூட சீனாவில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றுமுன்தினம் அங்கு கொரோனா புதிய எழுச்சி பெற்றது. ஒரே நாளில் 31 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்தது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதம் உச்சம் தொட்டபோது ஏற்பட்ட பாதிப்பை விட (28 ஆயிரம்) அதிகம் என்பது கோடிட்டுக்காட்டத்தக்கது. சீனாவில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரவேண்டும் என்பது கொள்கை. இதன் காரணமாக அங்கு 140 கோடி மக்களின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு கொரோனா கட்டுப்பாடுகளை சற்றே தளர்த்தினர். குறிப்பாக தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அரசு மையத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்பது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்துவது 3 நாட்களாக குறைக்கப்பட்டது. இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை பதிவு செய்வதை விட்டு விட்டனர். பொத்தாம்பொதுவாக ஊரடங்குகளை பிறப்பிப்பது தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் வசிக்கிற ஜெங்சூவ் நகரில் நேற்று (வியாழக்கிழமை) முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு வாங்கவும், சிகிச்சை பெறவும் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. வைரசுக்கு எதிரான அழிப்புப்போர் என்று அந்த நகர நிர்வாகம் அழைக்கிறது. மேலும் தினமும் பெருந்திரளான மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது.

 

முடிவுக்கு வருகிறது கொரோனாவின் ஆட்டம் – ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் வெளியிட்டுள்ள மகிழ்வான தகவல் !

“மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.” என ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லாவ் ஸெம்சுகோவ் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘மனிதர்கள் மீது கொரோனா வைரஸ் தாக்கம் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ், இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகிறது. தன்னைக் கொல்லாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டால் அதன் உடம்புக்குள் சென்று தங்கியிருக்கும். அங்கிருந்து புதிய தொற்று இலக்கை எதிர்நோக்கி இருக்கும். மனித சமூகத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள் எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும்போது, கொரோனா வைரஸ் இயற்கையில் ஏதாவது ஒரு விலங்கை புதிய புகலிடமாக அடையும். எனவே அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உலக சுகாதார நிறுவனம் கவனம் செலுத்த வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் – அறிகுறிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் !

ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் நோய் அறிகுறிகள் உலக நாடுகள் சிலவற்றில் தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரோன்   நோய் அறிகுறிகள் சம்பந்தமாக தென் ஆபிரிக்காவின் மருத்துவ பேரவை அடிப்படையாக ஆய்வுகளை நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது.

தசைவலி, லேசான இருமல், உடல் சோர்வு என்பன இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றிய நோயாளிகளிடம் காணப்பட்ட வாசணையை நுகர முடியாத தன்மையை இந்த புதிய வைரஸ் திரிபிடம் காண முடியவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவப் பேரவையின் மருத்துவர் எஞ்சலிக் கோழுடிசி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸ் திரிபு பரவுகிறது என்ற எச்சரிக்கையை இந்த மருத்துவரே முதலில் விடுத்திருந்தார்.

கடந்த 18 ஆம் திகதி தன்னிடம் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொரோனா தொற்றாளிகள் என அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்திருந்தார்.

தொற்றாளர்களிடம் நடத்தப்பட்ட மரபணு ரீதியிலான ஆக்கிரமிப்பு சம்பந்தமான பரிசோதனைகளில் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும் ஒமிக்ரோன் என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபு தென் ஆபிரிக்காவில் முதலில் பரவியது என்பதற்கான சாட்சியங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதே நேரம் புதிய வகை கொரோனா இலங்கைக்குள் நுழைவதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்

ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா – 7 இலட்சம் பேர் வரை இறக்க வாய்ப்பு !

கொரோனா அதிகரிப்பால் ஐரோப்பாவில் மேலும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், வயோதிபர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் டெல்டா துணைபிறழ்வு – தமிழர் பகுதிகளுக்கு ரெட் அலேர்ட் !

இலங்கைக்கே சொந்தமான கொவிட் டெல்டா துணை பிறழ்வொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே இந்த புதிய துணை பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். B. 1.617.2.28 என்ற புறழ்வு இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அதன் துணை புறழ்வாக B. 1.617.2.104 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு புறழ்வுகளும் ஒரே சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், B. 1.617.2.28 என்ற வைரஸ் புறழ்வானது, மேல் மாகாணத்திலேயே அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.104 என்ற வைரஸ் புறழ்வானது வடக்கு, வடமத்திய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே அதிகளவில் பரவியுள்ளது.

இலங்கையில் B. 1.617.2.104 வைரஸ் புறழ்வினால் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், B. 1.617.2.28 வைரஸ் புறழ்வினால் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். இவை தமது ஆய்வு கூடத்திற்கு கிடைக்கின்ற மாதிரிகளின் ஊடாக மாத்திரமே நடத்தப்பட்ட பரிசோதனை பெறுபேறுகள் என அவர் கூறுகின்றார்.

டெல்டா பிறழ்வை விடவும், மாறுப்பட்ட தாக்கத்தை இந்த வைரஸ் துணை பிறழ்வுகள் செலுத்தும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். துணை புறழ்வுகள் பரவுகின்றமையினால், தடுப்பூசியின் செயற்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது எனவும், தடுப்பூசிகள் சரியான பெறுபேறுகளை வழங்கும் எனவும் அவர் கூறுகின்றார்.

இலங்கையர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துகின்றமையினால், இந்த புறழ்வுகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு, மூலக்கூறுகள் பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

பொறுப்பின்றிச் செயற்பட்டால் மீண்டும் முடக்கம் – எச்சரிக்கிறார் ஹேமந்த ஹேரத்

நாட்டில் தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமண வைபங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.

எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும். இவ்வார இறுதி நீண்ட விடுமுறை காலமாகும். இதன் போது அநாவசிய பயணங்களை தடுக்க முடியுமெனில் அதுவே முக்கியத்துவமுடையதாகும்.
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட சமயம் சார் நிகழ்வுகளில் அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் இவற்றில் பங்குபற்ற வேண்டும். இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றோம். அத்தோடு ஏதேனுமொரு வகையில் தொற்று அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைவு காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.