::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வெற்றிக்கு களங்கம் ஏற்படுத்துவோர் மீது ஒழுக்காற்று விசாரணைக்கு – ஜனாதிபதி மஹிந்த பணிப்பு

dalas_alahapperuma.jpgவிருப்பு வாக்கிற்காக மோதிக்கொள்ளும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறு சுதந்திரக் கட்சி செயலாளருக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். ஐ. ம. சு. முன்னணிக்கு கிடைக்க உள்ள வெற்றிக்குக் களங்கம் ஏற்படும் வகை யில் செயற்படும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டளஸ் அழஹப்பெரும, இரு மாகாணங்களிலும் எமக்குக் கிடைக்கவுள்ள பாரிய தேர்தல் வெற்றிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படாதிருக்குமாறு கட்சி ஆதரவாளர்களை கோருகிறோம். கெளரவமான வெற்றி யையே நாம் விரும்புகிறோம். கெளரவமற்ற முறையில் அதிகாரம் கிடைப்பதை நாம் விரும்பவில்லை என்றார்.

மக்களின் வாக்கு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்! – ஜனாதிபதி

mahinda20-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றதொன்றாக அமையுமெனவும் நாட்டில் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் எந்த நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்டி கெட்டம்பே பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து தெரிவித்ததாவது:

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கும் நோக்கில் அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியினை ஒதுக்கியுள்ளது. குறிப்பாக வரலாற்றுப் புகழ் மிக்க கண்டி மாநகரை நவீன நகராக்கவும் திட்டமிட்டுள்ளது.
தலதா மாளிகை, ஸ்ரீமஹாபோதி போன்று புனிதத் தலங்களைத் தாக்கிய சாபத்திற்குப் பிரபாகரன் நட்டஈடு செலுத்தும்; காலம் நெருங்கியுள்ளது. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் புலிகள் இதற்கான தண்டனையை அனுபவித்தே தீருவர். இது நாட்டுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பெருவெற்றிபெறுவது உறுதி. இப்பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கும் ஆதரவு இதனை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்துள்ளது. இது எமது படையினர் நாட்டுக்கு வழங்கிய வெற்றிக்குப் பிரதி பலனாக மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கும் வெற்றியாகும். மத்திய மாகாண சபைத் தேர்தலில் நாம் தோல்வியுற்றால் நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக இல்லை என வெளியுலகுக்கு காட்ட பல சக்திகள் முயற்சிக்கின்றன. பல்வேறு சுழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.

மரணத்தின் விளிம்பில் இருக்கும் புலிகளைப் பலப்படுத்துவதே இதன் நோக்கமாகிறது. இத்தகைய தருணத்தில் மக்கள் வழங்கும் வாக்குகள் நாட்டினதும் எதிர்காலச் சந்ததியினரினதும் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அதிமுக்கியமான வாக்குகளாகும் என்பதை சகலரும் உணர வேண்டும். துர்ப்பாக்கிய யுகமொன்றைத் தவிர்த்து புதிய நவீன யுகமொன்றை உருவாக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் எதிர்வரும் 14ம் திகதி நீங்கள் வழங்கும் தீர்ப்பு மிக முக்கியமானதொன்றாக அமையும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

வடமேல், மத்தி தேர்தல்: பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு; 18000 பொலிஸார் கடமையில்

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ள அதே வேளை சகல தேர்தல் பிரசாரப் பணிகளும் இன்று  நள்ளிரவு (11) 12.00 மணியுடன் முடிவடைவதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

18 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் பாதுகாப்புக் கடமைகளில் 18 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு அவர்கள் நேற்று (10) முதல் தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தவிர இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி அண்டிய மாவட்டங்களில் இருந்தும் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். இவர்கள் வாக்களிப்பு நிலையங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் என்பவற்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் 15 ஆம் திகதி வரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அரச ஊழியர்கள்

தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் 12ஆம் திகதி முதல் கடமையைப் பொறுப்பேற்க உள்ளனர். இவர்கள் 13ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் பாடசாலைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பு

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் பெப்ரல், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் அடங்கலான ஐந்து கண்காணிப்பு அமைப்புகள் ஈடுபடவுள்ளன. பெப்ரல் அமைப்பு 12ஆம் திகதி முதல் அப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதாக பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரொட்ரிகோ தெரிவித்தார். இம்முறை 3 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளதோடு இதில் 600 பேர் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

2247 பேர் போட்டி

இம்முறை தேர்தலில் மத்திய மாகாணத்தில் இருந்து 56 பேரும், வடமேல் மாகாணத்தில் இருந்து 50 பேருமாக 106 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர். 17 கட்சிகளும் 43 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட உள்ளன. 2247 பேர் களத்தில் குதித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் 15 கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு இம்மாகாணத்தில் 17 இலட்சத்து 46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1389 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்தில் 15 கட்சிகளும் 17 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. இங்கு 16 இலட்சத்து 61 ஆயிரத்து 733 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 1209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ஜனாதிபதிக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான இறுக்கமான உறவினால் இலங்கையும் செல்வந்த நாடாகும் – அமைச்சர் பௌஸி

ahm-fawze.jpgபல வருடங்களாக மன்னாரில் தேங்கிக் கிடந்த பெற்றோலிய வள ஆராய்ச்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக வெகு விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளை ஆண்டியா கடவத்தை என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எமது ஜனாதிபதிக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆட்சியில் உள்ள அரசு முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்கிறது. காரணம் அதிகளவு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். கிழக்கைப் போன்றே ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக சேவைகள் இடம்பெறுகின்றன. இதே அடிப்படையில் மத்திய மாகாணத்திற்கும் பாரிய சேவை நடைபெற ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதில் ஒரு அங்கமாகவே மன்னார் பகுதியில் பெற்றோலிய அகழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வந்துள்ளன. இதன் காரணமாக நாமும் செல்வந்த நாடாக முடியும்.  பல வருடங்களாக மன்னார் பெற்றோலிய ஆராய்ச்சி தேங்கிக் கிடந்தன. ஜனாதிபதியின் முயற்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பும் இன்று எமக்கு சாதகமாகியுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

ஐ.தே.க.வுக்கு எதிரான பிரசாரங்களை அரச ஊடகங்கள் நிறுத்தவேண்டும்- கருஜயசூரியா

karu_jayasuriya.jpgஅரச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும் எம்.பி.யுமான கருஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். கம்பளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய இவர் மேலும் கூறியதாவது;

ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை துண்டாட ஒரு போதும் துணைபோகாது. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திரமாகக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தின் பிரதான அடையாளம். மக்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாக்களிப்பர். மக்களில் 51 சதவீதமானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போது அம்மக்களை மட்டுமன்றி, எஞ்சிய 49 சதவீத மக்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.

நாட்டில் இனிமேல் தேர்தல்கள் அவசியமில்லை. தலைவர்கள் தேவையில்லை என்று சில அரசியல்வாதிகள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஜனநாயக நாட்டில் எவரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். எனினும் மேற்படி கருத்து வேதனையளிக்கின்றது. நாடு 99 சதவீதம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியும் மீட்கப்படவேண்டும். நாடு யுத்தத்தில் பல உயிரிழப்புகளைக் கண்டுள்ளது. ஐக்கியதேசியக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்புகளை அரசு ஊடகங்கள் வழங்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவும் அரசதுறைக்கு தகுதியானவர்கள் நியமனம் பெறவும் அரசியலமைப்பு சட்டத்தின் 17 ஆம் பிரிவு அமுல் செய்யப்படவேண்டும்.

சிறுபான்மையினருக்கு எதிராக அநியாயங்களை கட்டவிழ்த்துள்ள அரசை நீடிக்க விடமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauf_hakeem.jpgசிறு பான்மை மக்களுக்கெதிராக அநியாயங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசை நீடிக்க விட மாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சூளுரைத்தார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு நியு எல்பிடியவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; சிறுபான்மை சமூகங்கள் நிம்மதியாக வாழும் ஆட்சியொன்றை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே ஏற்படுத்த முடியும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அநியாயம் புரியும் ஆட்சியைத் தொடர விடமாட்டோம். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது. நாட்டில் இரு வாரங்களுக்கான இறக்குமதியை மேற்கொள்வதற்கான வெளிநாட்டுச் சொத்துகள் மட்டுமேயுள்ளன.

நாடு 61 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை சமூகங்கள் அச்சம், பீதியுடன் வாழ்கின்றனர். நாட்டில் தேசப்பற்று என்பது அரசியல்வாதிகளின் மலிவான விற்பனைப் பொருளாகியுள்ளது. இதனை மூலதனமாக வைத்து அரசியல் புரியும் நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் அச்சமின்றி சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகின்றது. இதற்குக் காரணம் இத் தலைமைத்துவம் ஓர் இயக்கத்தின் தலைமைத்துவமாக இருப்பதாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் மாகாண சபைத் தேர்தலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எந்தக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்த இடமளிக்க மாட்டோம

வடமேல், மத்திய மாகாணங்களில் 79 வன்முறைச் சம்பவங்கள் பதிவு

election_.jpgவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்கள் 79 இடம் பெற்றுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.  இதில் மத்திய மாகாணத்திலேயே அதிகளவாக 52 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாணத்தில் 27 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அவ் இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; இரு மாகாணங்களின் கீழ் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 49 பாரிய தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் 17 சம்பவங்களும் மத்திய மாகாணத்தில் 32 சம்பவங்களும் இந்தப் பாரிய தாக்குதல் சம்பவத்தில் அடங்குகின்றன. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் முறையே 11 சம்பவங்களும் கண்டியில் 10 ம் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் 8 ம் 9 ம் இடம் பெற்றுள்ளன.

அச்சுறுத்தல் தொடர்பில் 9 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் அதிகளவான சம்பவங்களாக கண்டி மாவட்டத்தில் நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டத்தில் இதற்கு அடுத்த படியாக முறையே இரு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இதேவேளை, அரச வளங்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதேபோல் தேர்தல் சட்ட விதிகளை மீறிய சம்பவங்கள் 12 ஐயும் பதிவு செய்துள்ளோம். ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் கண்டி மாவட்டத்திலே அதிகூடிய சம்பவமாக 23 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஓர் இனத்தை அழித்துவிட்டு இன்னொரு இனம் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை – அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு

election_.jpgஅரசாங்கம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டை மீட்க யுத்தத்தை முன்னெடுக்கின்றதே தவிர, தமிழ் மக்களை அழிப்பதற்கல்ல என்று பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். கம்பளை, தெல்பிடியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

ஓர் இனத்தை அழித்து விட்டு மற்றுமோர் இனம் நிம்மதியுடன் வாழ்ந்ததாக சரித்திரத்தில் கிடையாது. அரசு தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரியவில்லை. நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவே யுத்தம் செய்கின்றது. மாகாண சபைத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் வழங்கும் ஆதரவு அரசின் சக்தியை உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பலப்படுத்தும். எனவே சிறுபான்மை மக்கள் அரசை பலப்படுத்த முன்வர வேண்டும்.  இலங்கை சகல இன மக்களும் வாழும் நாடாகும். எனவே சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதம் இன்றி இந்நாடு சகல இனங்களுக்கும் சொந்தமானதாகும்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் சுசந்திகாவும் களத்தில் குதிக்கிறார்

susanthika.jpgமுன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் வேட்பாளராகவே இவர் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சுசந்திகா தடகள விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய அரசியல் கட்சியொன்றிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற குழுவினரே இப்புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். இக்கட்சியின் தலைவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுசந்திகா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அணுகியுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாத்தளை மாவட்டத்தில் தற்காலிக அடையாள அட்டையை பெற “பவ்ரல்’ கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

paffre.jpgமாத்தளை மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இல 261/6 பிரதான வீதி, மாத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலிற்கான மக்கள் அமைப்பான “பவ்ரலின்’ மாத்தளை கிளைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டால் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலை வழங்க முடியுமென மேற்படி அமைப்பின் மாத்தளை கிளை இணைப்பாளர்களான காமினி ஜயதிஸ்ஸ, பெ.வடிவேலன் ஆகியோர் தெரிவித்தனர். அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் முன் இதனைத் தெரிவித்த அவர்கள் மேலும் கூறியதாவது;

வேட்பு மனுத் தாக்கல் செய்த தினம்முதல் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலப் பகுதிக்குள் மாத்தளை மாவட்டத்தில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 2 தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாரதூரமான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை மிகக் குறைவான தேர்தல் வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. ஆகிய 3 கட்சிகளினதும் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறை மொத்தமாக 8 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் இவை தொடர்பான எந்தவித முறைப்பாடும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் வன்முறைகளும் சம்பவங்களும் குறைந்துள்ள போதும் தேர்தல் சட்டத்திட்டதிற்கு முரணான செயற்பாடுகள் நாளாந்தம் அதுகரித்து வருகிறது. ஆளுங் கட்சியினரே பெருமளவில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அரச அதிகாரமும் அரச பௌதிக வளங்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

நாம் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதற்கென 200 இளைஞர், யுவதிகளை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளோம். இவர்கள் 295 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களைத் தவிர, இவர்களின் கடமைகளை மேற்பார்வை செய்ய தொகுதி மட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் நிற தொப்பியும், கைப்பட்டியும், சீருடையும் அணிந்த வண்ணம் சேவையில் ஈடுபடுவர். அன்றைய தினம் மாத்தளை மாவட்டத்தின் முழுமையான நடவடிக்கைகளை கண்காணிக்க 4 வாகனங்களிலும் 7 மோட்டார் சைக்கிள்களிலும் எமது ஊழியர்கள் கடமையில் ஈடுபட உள்ளனர். சென்ற தேர்தல்களில் போன்று இம்முறையும் வாக்குப் பெட்டிகளை களவாடுதல், வாக்களிப்பை தடைசெய்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. நாம் இயன்றளவு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் அதேசமயம், எமது சக்தியையும் மீறி தேர்தல் முறைகேடான சம்பவங்களும் இடம்பெறலாம்.

அவ்வாறு நடந்தால் உடனுக்குடன் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் மாத்தளை மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் முறையாக பயன்படுத்தப்படுவதையும், அவர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என தெரிவித்தார். இவர்கள் தமது அமைப்பின் செயற்பாடுகளை நீதியாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் தமக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.