::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல்

 sandanaya.pngஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம்பெறுகின்றவ்களின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பின் செயலாளர்  நாயகம் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தோதல்கள் ஆணையாளர் நாயகத்திடம் இன்று (26) கையளித்தார்.
பட்டியலில் இடம்பெறுகின்றவர்கள்.

ரத்னசிறி விக்கிரமநாயக்க
டி. எம். ஜயரட்ன
டலஸ் அழகப்பெரும
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
டியூ குணசேகர
பேராசிரியர் விஸ்வா வர்ணபால
பேராசிரியர் திஸ்ஸ விதாரன
அச்சல ஜாகொட
எம். எச். முஹம்மட்
கீதாஞ்சன குணவர்தன
விநாயகமூர்த்தி முரளிதரன்
வி. ஜே. மு. லொக்கு பண்டார
சங்கைக்குரிய எல்லாவள மேதானந்த தேரர் சங்கைக்குரிய ஒமல்பே சோபித தேரர்
முத்துசிவலிங்கம்
சண்முகம் ஜெகதீஸ்வரன்
மொகமட் முசம்மில்
அனுருத்த ரத்வத்த
ஏ. ஆர். பீ. சூரியபெரும
ஜானக பிரியந்த பண்டார
பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க
லெஸ்லி தேவேந்திர
சந்திரசேகரன் சண்முகநாதன்
ஏ.எச். எம். அஸ்வர்
டொக்டர் ஹரிச்சந்திர விஜேதுங்க
யூ. எல். சாஹுல் ஹமீத்
கமலா ரணதுங்க
சரத் கோங்காகே
மாலினி பொன்சேகா

தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 5 மாவட்டங்களில் வேட்புமனுத் தாக்கல் – பல புதுமுகங்கள் களத்தில்

Sambanthan_R_TNAவடக்கு, கிழக்கில் ஐந்து மாவட்டங்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (24) தாக்கல் செய்தது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கான வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தேர்தலில் முன்னாள் உறுப்பினர்கள் ஒன்பது பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். போட்டியிட்டுத் தெரிவான பதினொரு பேருக்குப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வன்னி மாவட்டத்தில் முன்னாள் உறுப்பினரான செல்வம் அடைக்கல நாதன் முதன்மை வேட்பாளராகவும் மற்றும் நடேசு சிவசக்தி(ஆனந்தன்), சு. வினோ நோகராலிங்கம் ஆகியோரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக மாவை சேனாதிராசாவும் மற்றும் சுரேஷ் பிரேமச் சந்திரனும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக தோமஸ் விலியம் போட்டியிட சந்திரநேரு சந்திரகாந்தனும் இடம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டியலில் பா. அரியனேத்திரன் இடம் பெற்றுள்ளார்.

திருகோணமலையில் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ரெலோ உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், அவருக்கு ஆதரவளித்த என். ஸ்ரீகாந்தா ஆகியோர் உட்பட 11 பேருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய தகவல்களை வழங்கியதாகக் கூறப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்படவில்லை.

அதேபோன்று சிவநாதன் கிஷோர், க. தங்கேஸ்வரி, ச. கனகரட்னம் ஆகியோருக்குக் கூட்டமைப்பு சந்தர்ப்பம் வழங்காததால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியில் இணைந்து போட்டி யிடுகின்றனர்.

சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வருவதுடன் இம்முறை புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.

பத்மினி சிதம்பரநாதன், கஜன் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சொலமன் சிறில், இமாம், எஸ். ஜெயானந்தமூர்த்தி, உள்ளிட்ட 11 பேர் நிரா கரிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் உறுப்பினர் ரி. கனகசபை அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, சிறில், கஜேந்திரன் ஆகியோர் போட்டியிட விண்ணப்பித்திருந்தும் அவர்கள் போட்டியிட அனுமதிக் கப்படவில்லை.

புதிய முகங்களாக உதயன், சுடரொளி பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன், பேராசிரியர் இரா. சிவச்சந்திரன், சட்டத்தரணி ரெமீடியஸ், முன்னாள் டிறிபேர்க் கல்லூரி அதிபர் அருந்தவச்செல்வம், மாவை சேனாதி ராஜாவின் செயலாளர் குலநாயகம், ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடம்பெறுகின்றனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய போதும் அதன் தலைவர் அ. விநாயகமூர்த்தியும் முன்னாள் யாழ். மாநகர சபை ஆணையாளர் சி. வி. கே. சிவஞானமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டு. மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியும் மேலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் நேற்று காலை நியமனப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான சுந்தரம் அருமைநாயகத் திடம் இந்த நியமனப் பத்திரங்கள் கையளிக்கப்பட்டன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார் பில் பொ. செல்வராசா, பா. அரியநேத் திரன், இ. நித்தியானந்தம், கு. செளந்தர ராசா, க. ஆறுமுகன், சீ. யோகேஸ்வரன், த. சிவநாதன், சு. சத்தியநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இவர்களில் பொ. செல்வராசா, பா. அரியநேத்திரன், கு. செளந்தரராசா ஆகிய மூவரும் முன்னாள் எம்.பிக்களாவர்.

வன்னி மாவட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பட்டியலில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும் ஏனைய வேட்பாளர்களாக நடேசு சிவசக்தி, சு. நோகராதலிங்கம், எஸ். சூசைதாசன், பெ. பழனியாண்டி, து. ஜெயகுலராசா, சி. செல்வராசா, எஸ். பீ. எஸ். பீ. சிராய்வா, கு. லோக செளந்தரலிங்கம் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

அம்பாறை மாவட்டம்

தோமஸ் விலியம் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட கே. மனோகரன், சந்திரநேரு சந்திரகாந்தன், செ. இராசையா, எச். வி. விஜேசேன, ரோமியோ குமாரி சிவலிங்கம், வே. தங்கதுரை, எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. வடிவேல், எஸ். பகீரதன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத்தில்..

sarath.jpgஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிட வருமாறு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

நேற்று முன்தினம் (23) திருமதி அனோமா பொன்சேகாவைச் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடுமாறு முன்னாள் ஜெனரல் பொன்சேகாவுக்குக் கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஜே. வி. பி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே ரணில் விக்கிரமசிங்க அவசர அவசரமாக திருமதி பொன்சேகாவைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும், ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை சரத் பொன்சேகா நேற்று நிராகரித்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக மேடையேறிய சரத் பொன்சேகாவும், ரணில் விக்கிரமசிங்கவும் வெவ்வேறு கட்சிகளில் ஒரே மாவட்டத்தில் களமிறங்குவதால் ஐ. தே. க. வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பதென்று தீர்மானிப்பதில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள்.

17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

srilanka_parliament_02.jpgபாராளு மன்றத் தேர்தல்களுக்காக நேற்று 17 கட்சிகளும் 28 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேநேரம், 56 சுயேச்சைகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று அறிவித்தது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசு கட்சி யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, திகாமடுல்ல மாவட்டங்களில் நேற்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது.

சமூகத்துவ சமத்துவ கட்சி காலி, கொழும்பு, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும், ஒக்கம வெசியோ ஒக்கம ரஜயோ கட்சி காலி, குருணாகல் மாவட்டங்களிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் இலங்கை தேசிய முன்னணி பொலன்னறுவை, புத்தளம், கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் ஜாதிக்க ஜனசத்த கட்சி பொலன்னறுவையிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி குருணாகலையிலும் தேசப் பிரேமி தேசிய முன்னணி புத்தளம், இரத்தினபுரி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் சிங்களயி மஹா சம்மத பூமி புத்ர கட்சி புத்தளம் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

ஐக்கிய தேசிய மாற்று முன்னணி இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் கட்சி இரத்தினபுரி, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் ஜனசத்த முன்னணி கண்டியிலும் ஐக்கிய இலங்கை மகா சபை மாத்தளை, களுத்துறை மாவட்டங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி களுத்துறையிலும் ஐக்கிய சமத்துவ கட்சி களுத்துறையிலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வன்னியிலும் மலையக மக்கள் முன்னணி பதுளையிலும் நேற்று தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணம், கம்பஹா, காலி, அநுராதபுரம், கேகாலை, கண்டி, கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா ஆகிய ஒன்பது மாவட்டங்களிலிருந்தும் ஒவ்வொரு சுயேச்சைக் குழு வீதம் ஒன்பது சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின. திருகோணமலை, புத்தளம், மாத்தளை, வன்னி ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா இரண்டு சுயேச்சைக் குழுக்கள் வீதம் 08 சுயேச்சைக் குழுக்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 03 சுயேச்சைக் குழுக்களும் பொலன்னறுவையிலிருந்து 04 சுயேச்சைகளும், இரத்தினபுரியிலிருந்து 04 சுயேச்சைக்களுமாக மொத்தம் 28 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இதுவரை 226 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று மாத்திரம் 56 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் நாளை (26) நண்பகல் 12.00 மணிக்கு பூர்த்தியடைய உள்ளன. இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று (25) பல மாவட்டங்களுக்கு சுப நேரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதோடு ஐ. தே. க.வும் ஜனநாயக தேசியமுன்னணி (ஜே.வி .பி. தலைமையிலான) ஆகிய கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளன.

வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பணிகள் கடந்த 19ஆம் திகதி ஆரம்பமானது. ஐ.ம.சு. முன்னணி ஏற்கனவே கம்பஹா, ஹம்பாந்தோ ட்டை காலி ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதோடு நேற்று மாத்தளை மாவட்ட ஐ.ம.சு.மு. வேட்பாளர் பட் டியல் முதன்மை வேட்பாளர் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலில் மாத்தளை மாநகர மேயர் ஹில்மி கரீம், செந்தில் சிவஞானம் (இ.தொ.கா.), முன்னாள் அமைச்சர்களான ரோஹன திஸாநாயக்க, நந்தி மித்ர ஏக்கநாயக்க ஆகியோரும் அடங் குவர். சுயேச்சைக் குழுவொன்றும் நேற்று (24) மாத்தளை மாவட்டத்துக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதேவேளை ஐ.ம.சு. முன்னணி இன்று மட்டக்களப்பு, வன்னி, அம்பாறை, மாத்தறை உட்பட பல மாவட்டங்களுக்கு வேட்பு மனுக்களை கையளிக்க உள்ளதோடு நாளை (26) பதுளை, கொழும்பு உட்பட எஞ்சிய மாவட்டங்களுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி தெரிவித்தது.

இதேவேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நேற்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்தது. திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட புளொட் கட்சியும் நேற்று வேட்பு மனுக்களை கையளித்தன. வன்னியில் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் அந்தக் கட்சியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சத்தியசீலனை முதன்மை வேட்பாளராகக் கொண்ட த.ம.வி. புலிகள் கட்சியின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மெளலானா கூறினார். தமது கட்சி ஏற்கனவே வன்னி, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு த.ம.வி. புலிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் மட்டு மாவட்டத்துக்கு நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். இதே வேளை முன்னாள் எம்.பி. இராஜகுகனேஸ்வரன் தலைமையிலான சுயேச்சைக்குழு நேற்று (24) வன்னி மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது.

இதே வேளை, புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக நேற்று (24) ஜனசெத்த முன்னணியும் 3 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தன.

‘கருணா அம்மானுக்கு கோவிந்தா?’ அரசு தேசியப் பட்டியலில் இடம்கொடுக்க மறுப்பு?

Karuna_Presidential_Election_Campaignகருணா அம்மானுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் கொடுக்க மறுக்கப்பட்டு உள்ளதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய நல்லிணக்க, ஒருமைப்பாட்டு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் இடம் கொடுப்பது தொடர்பாக நேற்று இரவு சர்ச்கை ஏற்பட்டதாக தேசம்நெற்க்கு தெரியவந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து இலங்கை அரசுடன் முழுவதுமாக தன்னை இணைத்துக் கொண்ட அமைச்சர் முரளீதரன் தற்போது அரசுக்கு சுமையாகி உள்ளதாக ஆளும் கட்சிக்குள் உணரப்படுகின்றது. மேலும் முரளீதரனுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளும் அரசுக்கு ஊறுவிளைவிப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்களில் உணரப்பட்டுள்ளதாலேயே அவருக்கு தேசியப்பட்டியலிலும் இடம்கொடுக்க மறுக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

தனக்கு தேசியப் பட்டியலில் இடம்தர மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி முரளீதரன் ஆத்திரப்பட்டு தகாத வார்த்தைகளையும் வெளியிட்டதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. விநாயகமூர்த்தி முரளிதரனின் தனிப்பட்ட நடவடிக்கைகளான மதுவுக்கு அடிமையானவை, பெண்களுடனான தொடர்புகள் என்பன விநாயகமூர்த்தி முரளீதரனின் அரசியல் அந்தஸ்தைப் பாதித்துள்ளது. பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள விநாயகமூர்த்தி முரளீதரனின் மனைவியும் கருணா மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலத்தில் சிங்கள முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் சரணடைந்த பாதுகாப்புப் படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் என்பன சிங்கள ஊடகங்களில் தலைதுக்கும் நிலைகாணப்படுகின்றது. இதனை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கும் நிலை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்பட்டது. இதுவும் முரளிதரனுக்கு எதிராக அமைந்துள்ளது.

விநாயகமூர்த்தி முரளீதரன் தனக்கு ஆசனம் வேண்டுமானால் போட்டியிட்டு தனது ஆசனத்தை தக்க வைக்கட்டும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு விநாயகமூர்த்தி முரளீதரன் போட்டியிட்டால் அவர் மட்டு வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவார் என்ற நிலையே உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் விநாயகமூரத்தி முரளிதரனுடைய பெண்களுடனான உறவுகள் புகைப்படப் பதிவுகளாக உள்ளதால் விநாயகமூர்த்தி முரளீதரன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு எதிராகத் திரும்பினால் அப்புகைப்படங்கள் இணையங்களில் பரப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள இப்பாராளுமன்றத் தேர்தல் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியின் அரசியல் அஸ்தமனமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்ச சொச்சமாக விநாயகமூர்த்தி முரளீதரனின் உதவியாளராக வந்து அரசியலில் தனக்கென ஒரு ஸ்தானத்தை தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தவைரான முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே தற்போது வரை தக்க வைத்துள்ளார்.

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

Viyoogam_Toronto_20Feb10பெப்ருவரி மாதம் 20 ம் திகதி கனடாவிலுள்ள ஸ்காபுரோ நகரில் ‘மே 18 இயக்கம்’ ஒழுங்கு செய்த கூட்டத்தில் ரகுமான் ஜான் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இடம் பெறுகிறது.

அன்பார்ந்த தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். இலங்கையில் தேர்தல் காய்ச்சல் தீவிரமாக வீசிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் சந்திக்கின்றோம். இந்த காலகட்டத்தில் நடைபெறும் இந்த தேர்தல்களுக்கும். தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கான தீர்வுக்கும் உள்ள உறவு குறித்து நாம் கேள்வி எழுப்புவது நியாயமானதே. அதுவே எனது இன்றைய உரையின் தலைப்புமாகும். ஒரு இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் நாம் நிறைய விடயங்களை மனம் திறந்து பேசியாக வேண்டியுள்ளது. அந்த நோக்கில் நான் உரையாற்றுவது என்பதைவிட ஒரு விரிவான உரையாடலின் தொடக்க புள்ளியாக அமைவதாக கருதப்படுவதே சரியானதாக இருக்கும். ஒரு விரிவான உரையாடலை நாம் நிகழ்த்த முடியுமாயின் அதுவே எனது செயற்பாட்டிற்கு முக்கியமான பலனாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடயத்திற்கு வருகிறேன்.

ஜனாதிபதி தேர்தலும், தமிழர் தேசிய பிரச்சனையும்.

கடந்த மே மாதம் நடந்த இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகள் காயும் முன்பே ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் நடந்து முடிந்த பேரழிவின் அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்கவில்லை. தமது நெருங்கிய உறவினர்களை யுத்தத்தில் இழந்தவர்கள் ஒரு புறம்: முள்வேலிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டவர்கள் பல இலட்சங்கள்: உயர் பாதுகாப்பு வலையங்கள் என்ற பெயரில் தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களில் வாழ்பவர்கள் இன்னும் பலர்: பல்லாயிரக் கணக்கானோர் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்: இராணுவ முகாம்களும், உயர் பாதுகாப்பு வலையங்களும் அகற்றப்படாமல், துணைப்படைக் குழுக்கள் ஆயுதபாணிகளாக வலம் வந்து மாற்று கருத்துள்ளவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் முறைப்படி நிறைவு பெற இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைமையின் கீழ் ஜனாதிபதி தேர்தலை அவசர அவசரமாக ஏற்பாடு செய்தாக வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது.

யுத்தத்தை அரசு என்னவோ பயங்கரவாதத்திற்கு எதிரானது, தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்று கூறிக் கொண்டாலும், சிங்கள மக்கள் மத்தியில் அது தமிழ் மக்கள் மீதான யுத்தமாகவே புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. இதனால் புலிகள் மீதான சிறீலங்கா இராணுவத்தின் வெற்றியானது தமிழ் தேசத்தின் மீது சிங்கள தேசம் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்ட நிகழ்வாகவே புரிந்து கொள்ளப்பட்டது. அந்த அர்த்தத்திலேயே பெரிய விழாவாகவும் கொண்டாடப்பட்டது.

இப்படியாக சிங்கள தேசம் ஒரு வெற்றிப் பூரிப்பில் மிதந்து கொண்டிருக்கையில் அதனை தனது அடுத்த தேர்தலுக்கு பயன் படுத்திக் கொள்வதுதான் அரசின் நோக்கமாக இருந்தது. யுத்தத்தின் வெற்றியை அடுத்த இந்த மகிழ்ச்சி, பூரிப்பு, சிங்கள பெருமித உணர்வு போன்றவை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பதை யாராலுமே எதிர்வு கூற முடியாத நிலையில்: தீர்க்கப்பட்டாக தேசிய பிரச்சனை, தெற்கின் பொருளாதார நெருக்கடிகள், மற்றும் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனைகள் இந்த நிலைமையை வெகு விரைவில் மாற்றியமைத்துவிடலாம் என்ற நிலையில், அப்படிப்பட்ட ஒரு ஆபத்தை எதிர்கொள்வதை (Risk Taking) தவிர்க்கும் நோக்குடனேயே தேர்தலை விரைவு படுத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

யுத்தத்தின் முடிவை அடுத்து, யுத்த காலத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கான கோரிக்கைகள் சர்வதேச அளவில் தீவிரம் அடைந்தன. இப்படிப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலமாக சர்வதேசத்தின் கவனமானது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பப் பட்டது. இந்த பிரச்சனையை தீவிரமாக எழுப்ப வேண்டிய தமிழ் குழுக்களே இரண்டு அணியாக பிரிந்து இரண்டு போர்க்கால குற்றவாளிகளுக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்க நேர்ந்தமை சிறீலங்கா அரசுக்கு கிடைத்த மேலதிக வெற்றியாகவும் அமைந்தது.

யுத்தத்தின் வெற்றி என்பது பிரதான விடயமாக ஆனபின்பு அதற்கு யார் உரிமை பாராட்டுவது என்பதில் மகிந்தவுக்கும் சரத்திற்கும் ஏற்பட்ட போட்டியில் சரத் ஓரம் கட்டப்பட்டார். இந்த யுத்த ஆரவாரங்களின் மத்தியில் தாம் மகிந்தவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியானது சரத்தை தனது பொது வேட்பாளராக நியமிப்பதன் மூலமாக இந்த போர் வெற்றி தொடர்பான ஆரவாரங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றது.

இப்படிப்பட்ட ஒரு தேர்தலை தமிழ் மக்கள் முகம் கொடுக்க நேர்கையில் தமிழ் தலைமைகள் என்ன செய்திருக்க வேண்டும். முதலாவதாக, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பான கோரிக்கைகள் இப்படியாக திசை திருப்பப்படுவதை அனுமதித்திருக்க முடியாது. அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து இதற்கு எதிராக தீவிரமான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். இனப்படுகொலை தொடர்பான விசாரணைகள், தமிழர் தேசிய பிரச்சனைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது: இராணுவ முகாம்களையும், உயர் பாதுகாப்பு வலையங்களையும் உடனடியாக அகற்றி இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்வதற்காக உரிமைகளை வலியுறுத்துவது: முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் மக்களையும், விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது: போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீவிரமாக போராடியிருக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி, இயல்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளாமல் தேர்தலில் கலந்து கொள்வதற்கு சம்மதித்திருக்க கூடாது. இந்த போராட்டத்தில் தேவைப்பட்டால் தமிழ் மக்கள் இந்த தேர்தலை முற்றாக பகிஸ்கரிக்க நேர்ந்திருந்தாலும் அது ஒரு அரசியல் வெற்றியாகவே அமைந்திருக்கும். ஏனெனில் எதிர்த்து போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தமிழர்களது குருதியில் கைகளை நனைத்தவர்களேயாவர். அப்படியாக பகிஸ்கரித்து இருந்தால் அது ஒரு திட்டவட்டமான அரசியல் நடவடிக்கையின் பாற்பட்டதாகவே அமைந்திருக்கும்.

கடந்த கால தமிழ் தலைமைகளது நடவடிக்கைகளை அறிந்த எவருக்குமே இதன் சாத்தியப்பாட்டின்மை பற்றி தெரிந்தே இருக்கும். இந்த ‘தலைமை’ என்று சொல்லப்பட்ட எவருமே கடந்த காலத்தில் தாம் சரியென உறுதியாக நம்பும் கொள்கைகளின் அடிப்படையில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்கள் கிடையாது. ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து பாதுகாப்பு தேடுவதாக கூறிக் கொண்டு அரசுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இப்போது புலிகள் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னரும் கூட, அரசுடன் சேர்ந்து செயற்படுவதற்கான பாதுகாப்பு காரணங்கள் எதுவுமே இல்லாத போதிலும் இந்த இடைக்காலத்தில் பெற்றுக் கொண்டு பதவி, மற்றும் சலுகைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அரசுடன் தொடர்ந்தும் ஒட்டிக்கொண்டு செயற்பட்டு தமிழ் மக்களது நலன்களை காட்டிக் கொடுப்பவர்கள். இவர்கள் அரசின் கூலிப்படைகளாகவே செயற்படுகிறார்கள். தாம் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பிவிட்டதாக கூறிக் கொண்டாலும் இன்னமும் ஆயுதம் ஏந்தியவாறு மாற்றுக் கருத்து கொண்டவர்களை வேட்டையாடித் திரிபவர்கள். இவர்களால் புலி வேட்டை என்ற பெயரில் கொன்றொழிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் பெரியது. இந்த விதத்தில் இவர்கள் புலிகளை விமர்சிப்பதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள். ஈபிடிபி டக்லசும், கிழக்கில் கருணாவும், பிள்ளையானும் இத்தகையவர்களே. முதல் சுற்றில் இந்த வாய்ப்பை இழந்த புளொட், பிள்ளையான், ஈபிஆர்எல்எப் இன் நாபா அணி போன்றவை இந்த தடவை தம்மையும் இந்த ‘கைங்கரியத்தில்’ இணைத்துக் கொண்டன. இப்படியாக இணைத்துக் கொண்டதற்கு காரணம் தாம் இப்போது கொண்டுள்ள நிலைமைகளை தக்க வைப்பதும், அடுத்த தேர்தலில் அதனை தக்க வைப்பது, முடிந்தால் அதனை பெருக்கிக் கொள்வது என்பதற்கு மேல் தமிழ் மக்களது தேசிய பிரச்சனைக்கும் இவர்களது குத்துக் கரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழர் தேசிய கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால், இவர்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட தற்காலிக ஒரு சேர்க்கை மட்டுமேயாகும். இவர்களில் பெரும்பான்மையினர், புலிகளது அரசியலுக்கு கூட விசுவாசமாக இருக்காத பிழைப்புவாதிகள். புலிகள் உயிருடன் இருக்கும் வரையில் அவர்களது ஏவலை செய்து தமது பதவிகளை காத்துக் கொண்டார்கள். அத்துடன் தமது வருவாய்களை பெருக்கிக் கொள்வதில் கவனமாக இருந்தார்கள். இப்போது புலிகளின் மறைவின் பின்பு கலைந்து போகாமல் தமது தற்காலிக கூட்டை பேணுவதன் மூலமாக அதிக நன்மையை பெற முடியும் என்ற அபிலாசையில் காத்திருக்கும் அசலான பிழைப்புவாதிகள். முன்பு முக்கிய முடிவுகளை புலிகளின் கட்டளைகளின் படி மேற்கொண்டவர்கள், இப்போது தமது புரவளர்களை மாற்றிக் கொண்டுள்ளார்கள். இப்போது கட்டளைத் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப் பட்டுள்ளது. இவர்கள் எப்போதுமே ஏதாவது ஒரு சக்தியின் ஏஜென்டுகளாகத்தான் செயற்பட்டார்களே ஒழிய தமிழ் மக்களது நலனுக்காக எதுவுமே செய்தது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபோது பலர் சொந்த ஊருக்கு போகாதது மட்டுமல்ல இலங்கையிலேயே நிற்காமல் விட்டவர்கள். தமிழ் மக்களது நலன்கள் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி தமது சொந்த வாழ்க்கையை, வருவாய்களை பெருக்கிக் கொண்டிருந்தவர்கள். இவர்கள் தமது முன்னால் புரவலரது அழிவுக்கு வஞ்சம் தீர்ப்பதாக கூறிக் கொண்டு தமது வழமையான வலதுசாரி கூட்டாளிகளான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியுடன் அணி சேர்ந்து கொண்டார்கள். இவர்களது கவனமும் தமது எதிர்கால் பாராளுமன்ற ஆசனங்கள் குறித்து இருக்கிறதே அன்றி வேறு தமிழ் மக்கள் நலன்கள் தொடர்பானவையாக இல்லை என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் இருவருமே தமிழரது தேசிய பிரச்சனைக்கு திட்டவட்டமான அரசியல் தீர்வு முன்மொழிவுகள் எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால் இவர்களுடன் இணைந்திருந்த தமிழ் தலைமைகள் தத்தமது ஆதரவைப் பெற்ற வேட்பாளர்கள் தேசிய பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்து வைப்பார்கள் என தாம் நம்புவதாக கூறிக் கொண்டார்கள். இந்த நம்பிக்கையை நாம் வெளியிடுவதற்கான ஆதாரங்கள் எதனையும் இவர்கள் முன்வைக்கவில்லை. இப்படியாக அரசியல் ரீதியான திட்டவட்டமான முன்மொழிவுகள் எதனையும் முன்மொழியாத, வெறும் நம்பிக்கைகள் என்றால் அதன் அர்த்தம் என்ன? அதாவது இலங்கையின் தேசிய பிரச்சனைக்கான தீர்வு இந்த தனிநபர்களின் விருப்பு – வெறுப்பு சார்ந்ததொன்றாகத்தானே காட்டப்படுகிறது. இவர்கள் ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொண்டே பொய் சொல்கிறார்கள். அதாவது இலங்கையின் தேசிய பிரச்சனை என்பது வெறுமனே தனிநபர்களது விருப்பு –வெறுப்பு சார்ந்த ஒன்றல்ல. அதற்கான குறிப்பான சமூக, பொருளாதார, அரசியல், சித்தாந்த, இராணுவ காரணிகள் இருக்கின்றன. இந்த காரணிகளில் அடிப்படையான மாற்றங்கள் ஏற்படாமல், தனிநபர்கள் எவ்வளவுதான் நல்லெண்ணத்துடன் விரும்பினாலும், இதனை தீர்த்து வைக்க முடியாது என்பதுதான். கடந்த எண்பது வருடங்களாக சிங்கள – தமிழ் தலைமைகள் மேற்கொண்ட தீர்வு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததை நாம் இப்படியாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

Viyoogam_Toronto_20Feb10அடுத்ததாக இந்த தீர்வு முயற்சிகள் எதுவுமே பகிரங்கமாகவும், சம்பந்தப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரும் கலந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கும் விதத்திலுமே நடைபெற முடியும் என்பதாகும். குறிப்பிட்ட மக்கள் பிரிவினர் போதியளவு தெளிவும், சம்மதமும் தெரிவிக்காத எந்தவொரு தீர்வு முயற்சியும், அந்தந்த சமூகத்தில் மேலாண்மை செலுத்தும் சித்தாந்தத்தை கையில் எடுப்பவர்களினால் இலகுவாக குழப்பியடிக்கப்படக் கூடியவையாகும். ஆதலால் தமிழர் தேசிய பிரச்சனையானது திரைமறைவில் அல்லாமல் பகிரங்கமாகவும், இலங்கையில் உள்ள பல்தேச சமூகத்தவரது பங்கு பற்றலுடனும், கருத்தாடல்கள் மற்றும் கருத்திணக்கம் என்பவற்றின் மூலமாகவே தீர்க்கப்பட முடியும். அப்படிப்பட்ட தொரு கருத்தொற்றுமை காணப்பட முடியாதவிடத்து ஒடுக்கப்பட்ட தேசங்கள் தத்தமது தலைவிதியை தாமே கையில் எடுத்துக் கொள்வதை விட வேறு வழியிருக்க முடியாது. இதனை விடுத்து தனிநபர்களை நம்புவதாக கூறுவதும், குறிப்பிட்ட தனிநபர்கள் தேசிய பிரச்சனையை தீர்த்து வைப்பதான நம்பிக்கையை எந்தவிதமான அரசியல் முகாந்திரமும் இன்றி கூறுவதும் சுத்த ஏமாற்றே அன்றி வேறல்ல. இதன் மூலமாக குறிப்பிட்ட தமிழ் அரசியல் தலைமையானது தனது நலன்களை மாத்திரம்தான் காத்துக் கொள்ள முனைகிறதேயன்றி, தமிழ் மக்களது அரசியல் நலன்களை அல்ல என்பது திட்டவட்டமாக தெரிந்து கொள்ளப்பட வேண்டும். 

இப்போது இந்த தலைமைகளை திட்டவட்டமாக பரிசீலிப்போம். யுத்தத்தை அடுத்து நடைபெற்ற மிகவும் கேவலமான, தமிழ் மக்களது உணர்வுகளை சிறுமைப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா நகரசபை தேர்தலில் இவர்கள் போட்டியிட்டார்கள். இந்த தேர்தலில் தமது சொந்த சின்னங்களில் போட்டியிடக்கூட வக்கில்லாதவர்கள் இவர்கள். இது பற்றி பிரஸ்தாபித்த தமது ஆதரவாளர்களிடம், தமது சொந்த உயிர் பாதுகாப்பே உத்தரவாதமற்ற நிலைமையினாலேயே தாம் அவ்வாறு செய்வதாக குறிப்பிட்டவர்கள் இவர்கள். இவர்கள் எப்படி ஒரு தேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தக் கூடும். கிழக்கில் மாகாண சபைகள் மூலமாக தமிழ் மக்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றுவதாக கூறிக் கொள்பவருக்கு அவரது சொந்த பாதுகாப்பே உத்தரவாதமற்றதாக இருக்கிறது. தனது அதிகாரங்களில் ஆளுநர் அத்துமீறி தலையீடு செய்வதாக நாள்தோறும் முறைப்படு செய்யும் இவர் எப்படி தமிழரது தேசிய பிரச்சினைக்கு குறிப்பிட்ட தனிநபர்கள் தீர்வை தரப்போவதாக உத்தரவாதமளிக்க முடியும். இப்போது தமிழ் மக்களது உடனடியான பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பவர்களே இவர்கள் தானே. பிரச்சனைகளுக்கு காரணமானவர்களே எப்படி அவற்றிற்கான தீர்வாக அமைய முடியும்.

தமிழர் தேசிய கூட்டமைப்பானது நேற்று வரையில் புலிகள் காலால் இட்ட பணிகளை தலையால் செய்தவர்கள். வன்னியில் இனப்படுகொலைகள் நடைபெற்றபோது கூட அந்த மக்கள் சொந்த விருப்பதின் பேரிலேயே அந்கு நிற்பதாக அப்பட்டமாக பொய் சொன்னவர்கள். புலிகள் மறைந்தவுடனேயே குத்துக்கரணம் அடித்து புதிய எஜமானர்களை தேடிக் கொண்டுள்ளார்கள். இன்று இன்னொரு எஜமானை மாற்றிக் கொண்டதும் பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன? இன்று தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கென நிலையான கொள்கைகளோ,  மக்கள் ஆதரவோ, அமைப்பு வடிவமோ கிடையாது. புலிகள் ஏற்படுத்திய தற்காலிக ஏற்பாட்டை மாத்திரம் தமது சொந்த இலாபத்திற்காக விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை விட ‘வடக்கில் வசந்தம்’, ‘கிழக்கில் உதயம்’ என்று அரசாங்கம் ஏற்படுத்தும் வெற்று ஆரவாரங்களை இவர்கள் இரவல் வாங்கி தமிழ் மக்களுக்கு படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அபிவிருத்தி மூலமாக தேசிய பிரச்சனைக்கு தீர்வு காணப்போகிறார்களாம். ‘சோறா சுதந்திரமா?’ என்று எழுபதுகளில் கேட்டபோது ‘சுதந்திரமே’ உயிர் மூச்சென்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்கள் இப்போது மீண்டும் ‘சோறு’ பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அப்படியாக ‘அபிவிருத்தி’ மூலமாக தேசிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமானால் அதனை எப்போதோ செய்து இருக்கலாமே? இத்தனை யுத்தமும் அழிவுகளும் ஏற்படுத்திய பின்புதான் இந்த இலகுவான வழிமுறையை இவர்கள் கண்டு கொண்டார்களா? உண்மையில் அபிவிருத்தி என்பது இது தேசிய வளங்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றிய பிரச்சனை என்ற விதத்தில் தேசிய பிரச்சனையை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பாத்திரம் வகித்த ஒரு அம்சமும் ஆகும். ஆரம்பத்திலிருந்தே தேசிய வளங்களை பலவேறு சமூகங்களிடையும் நியாயமான முறையில் பங்கிட்டிருந்தால் தேசிய பிரச்சனை என்ற ஒன்றை உருவாக்குவதையே தவிர்த்திருக்கலாமே. இந்த விடயங்களையெல்லாம் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை மிகவும் சிறிதாக இருக்கும் போது திமிராக ஒதுக்கித் தள்ளியவர்கள், இப்போது பிரச்சனை பூதாகரமாக வளர்ந்து ‘ஒடு வைத்த பின்னர்’ இந்த புணுகு தடவ முயல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒட்டு  வேலைகள் சரிவர மாட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

அதுசரி, இந்த அபிவிருத்திக்கான நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன? வானத்தில் இருந்தா, அல்லது மகிந்தா ஏதாவது தங்கச் சுரங்கம், அல்லது நோட்டு அடிக்கும் இயந்திரத்தை புதிதாக கண்டு பிடித்திருக்கிறாரா? எல்லாம் மக்களது – தமிழ் மக்களதும் தான் – பணம். நாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டிய வரிகள் தாம் அரசாங்கத்தின் கைகளில் உள்ள முக்கிய நிதியாதாரமாகும். அத்தோடு அந்தந்த பிரதேசங்களது மூலவளங்களை அந்நிய கொம்பனிகள் பயன்படுத்தும் போது கொடுக்கும் அரசாங்கத்திற்கு வழங்கும் தொகைகள் (Royalty) கள் மற்றொரு மூலமாகும். அந்தந்த பிரதேச மக்களே இதன் உண்மையான உரிமையாளர்கள் ஆவர். (இதனைவிட அந்திய கடன்கள் ஓரளவிற்கு நிதியாதாரத்தை வழங்க தற்காலிகமாக பயன்படலாம். ஆனால் இவற்றை நாமும், எமது அடுத்தடுத்த தலைமுறைகளும் வட்டியுடன் செலுத்த வேண்டியிருக்கும்). ஆக ஒட்டு மொத்தத்தில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது தனிச்சொத்துக்கள் போலக் கருதி தமிழ் மக்களுக்கு சலுகைகளாக வழங்குவதாக பாசாங்கு பண்ணும் அத்தனை வளங்களதும் உண்மையான உரிமையாளர்கள் தமிழ் மக்களேயாவர். இந்த நிதியாதாரங்களை முறைப்படி அனைத்து மக்கள் பிரிவினரிடையும் பகிர்ந்து கொள்ள மறுத்தமையே தேசிய பிரச்சனையின் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்தது. எப்படி, எந்த விதத்தில் வரிகளை விரிப்பது: அதனை எவ்வாறு செலவிடுவது என்பது ஒவ்வொரு மக்கள் பிரிவினருக்கும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமையாகும். இதனாலேயே ‘பிரதிநிதித்துவம் இல்லாத வரிவிதிப்பு என்பது கொடுங்கோண்மையாகும்’ என்ற சுலோகம் அமெரிக்க சுதந்திர போராட்டத்தை உந்தித் தள்ளும் அளவிற்கு பலமானதாக இருந்தது.

அடுத்தடுத்து வந்த பல்வேறு முதலாளித்துவ புரட்சிகளின் போதும் இதே பிரச்சனை முன்னுக்கு வந்தது. ஆகவே எமது நிதியை கடந்த காலத்தில் முறையாக பயன்படுத்தாதது மட்டுமன்றி, இப்போது அதில் சில பருக்கைகளை வீசியெறிந்துவிட்டு ‘பெருந்தன்மை’ காட்டுவதும் அப்பட்டமான அரசியல் மோசடியாகும். அடுத்தடுத்து தொடர்ச்சியாக வந்த புறக்கணிப்புக்கள், மற்றும் சகிப்புணர்வின்மை என்பவற்றில் தொடங்கி நேரடியான ஒடுக்குமுறை எனத் தொடர்ந்து ஒரு மாபெரும் யுத்தமே நடந்து முடிந்துள்ள நிலையில் மீண்டும் அபிவிருத்தி பற்றி பேசுவது அப்பட்டமான அயோக்கியத்தனத்தையே காட்டுகிறது. தேசிய ஒடுக்குமுறையின் அரசியலை அறவே புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு அப்பாவியின் அல்லது அயோக்கியவாதியின் வாதங்கள் இவை. இப்படிப்பட்ட இருவருமே தமிழ் மக்களுக்கு தலைவர்களாக இருப்பதற்கான தகுதியற்றவர்கள். ஒரு தேசத்தின் மீது கொடுமையான அடக்கு முறைகளை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விட்டிருந்தவர்கள், இப்போது அதனை தற்காலிகமாக குறைத்து கொண்டு, அதனையே அந்த தேசத்தின் விடுதலையாக சித்தரிக்க முனைகிறார்கள். ஆனால் இப்போதும் கூட எந்தளவிற்கு ஒடுக்குவது? அதனை எப்போது செய்வது? என்பதை தீர்மானிக்கும் உரிமையை தமது கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதனைக் கூறுகிறார்கள். தேசிய ஒடுக்குமுறையும். அதற்கெதிரான போராட்டங்களும் படிப்படியாக வளர்ந்து சென்று. ஒரு இனஒழிப்பு யுத்தமாக நடந்து முடிந்துள்ளது. ஒரு தேசம் இராணுவரீதியாக முற்றாக தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தவிதமான அற்பத்தனமான கருத்துக்களை துணிந்து முன்வைப்பது வெறும் திமிரே அன்றி வேறல்ல.

கடந்த பல பத்தாண்டுகளாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் கணிசமான அளவிற்கு முன்னேறி போய்விட்டுள்ளார்கள். இந்த அபிவிருத்தி, சலுகைகள் போன்ற கோரிக்கைகளையெல்லாம் கடந்துபோய் கணிசமான காலம் ஆகிவிட்டது. இப்போது ஒரு தற்காலிகமான பின்னடைவை புலிகளின் தோல்வியின் மூலமான அடைந்ததுள்ளது என்பது உண்மைதான். போரினால் களைப்படைந்து போயுள்ள ஒரு சமூகம் ஒரு ஓய்வை நாடியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆதாலால் இந்த அன்றாட நெருக்கடி நிலைமைகளில் ஒரு தளர்வை தேசம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் இந்த தற்காலிக பின்னடைவை வைத்து இந்த போராட்டத்தை நிரந்தரமாக ஒடுக்கிவிட்டதாக கனவு காண்பது நிலைக்கமாட்டாது. அடிப்படையான தேசிய முரண்பாடுகள் தீர்க்கப்படாத வரையில் எதிர்ப்பியக்கங்கள் படிப்படியாக தொடங்கப்படுவதும், அதன் அடுத்த கட்டங்களாக போராட்டம் வேறுபட்ட வடிவங்களை நோக்கி நகர்ந்து செல்வதும் தவிர்க்கப்பட முடியாததேயாகும். வெறுமனே அடக்குமுறைகள் மூலமாக விழிப்புணர்வு பெற்றுவிட்ட மக்களை அடக்கிவிட முடியுமானால் பலஸ்தீனமும், வட அயர்லாந்தும், கிழக்கு தீமோரும் எப்போதோ உலக வரைபடத்தில் இருந்து காணாமற் போயிருக்கும்.

சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது என்ற தமிழ் மக்கள் முடிவு செய்ததன் மூலமாக அவர்கள் தமது தலைவிதியை தமது சொந்த கரங்களில் எடுப்பதற்கு என்றோ தீர்மானித்து விட்டார்கள். இதில் வரிவிதிப்பு மற்றும் அதனை எவ்வாறு செலவிடுவது போன்றவையும் சாதாரண சில்லறைத்தனமான விடயங்களாகும். சொந்த அரசியல் அதிகாரத்தை வேண்டி நிற்கும் தமிழ் மக்களிடம் வந்து அபிவிருத்தி பற்றி பாலபாடம் நடத்துவது வேடிக்கையானதாகும். தமிழ் மக்கள், சிங்கள மக்களுக்கு சமமாக விருந்து மேசையில் அமர்வது குறித்து தீர்மானித்து நீண்ட காலங்கள் ஆகின்றன. அவர்களுக்கு முன்பு சில பருக்கைகளையும், எலும்புத் துண்டுகளையும் விட்டெறிவதானது அந்த மக்களது சுயமரியாதையை அவமதிப்பதற்கு சமமானதாகும். இந்த பாடத்தை கற்றுக் கொள்ள மறுக்கும் எவரையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் தமிழ் மக்களை பாதுகாப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். முடியுமானால் இவர்கள் தமிழ் மக்களது கோபங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முயலட்டும்.

தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து…

தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பம் தொடக்கம் இரண்டு பிரதான வேட்பாளர்களுமே தேசிய பிரச்சனை திட்டவட்டமான நிலைப்பாடுகளை முன்வைப்பதை தவிர்த்தே வந்தார்கள். முன்னாள் இயக்க தலைமைகள் அப்படியே மகிந்தாவின் கால்களில் சரணடைந்தன. தமிழர் தேசிய கூட்டமைப்பானது நீண்ட இழுத்தடிப்பிற்கு பின்னர் ஐதேக கூட்டணியுடன் சேர்ந்து கொண்டது. அதற்கான முடிவை அவர்கள் எடுத்த விதமே அலாதியானது. பலவித திருகுதாளங்களைச் செய்து ‘ஜனநாயகபூர்வமாக’ முடிவை எட்டியதாக காட்டிக் கொண்டார்கள். இப்போது இந்த கூட்டமைப்பை கட்டுப்படுத்தும் சம்பந்தன்-சுரேஸ் பிரேமச்சந்திரன் கோஷ்டியினர் அமைப்பினுள் கடுமையான எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொண்டதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறுபுறுப்பதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. திட்டவட்டமான அமைப்பு வடிவமோ, அல்லது கொள்கை நிலைப்பாடுகளோ இன்று வெறுமனே புலிகளால் பொறுக்கி எடுக்கப்பட்ட தனிநபர்களைக் கொண்ட இந்த அமைப்பானது புலிகளின் மறைவை அடுத்து அதன் இருப்பிற்கான காரணங்களை ஏற்கனவே இழந்து விட்டது. ஆயினும் அடுத்த தேர்தல்கள் தமது ஆசனங்களை கைப்பற்றுவது எனும் ஒரே காரணம் மட்டுமே இவர்களை இணைத்து வைக்க மட்டுமல்லாது, அவர்களை கட்டுப்படுத்தவும் போதியதாக இருப்பது வேடிக்கையானதுதான்.

ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு – கிழக்கில் பிரதான வேட்பாளர்களது பினாமிகள் இவர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இவற்றில் மனித உரிமைகளின் காவலராக மகிந்தவை புகழ்ந்தது உச்ச கட்டமாக அமைந்தது. தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சாரங்களின் போது ஆரம்பத்தில் மகிந்த பின்னடைவதாகத் தோன்றியது. ஆனால் ததேகூ அமைப்பானது, சரத்திற்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து நிலைமைகள் சரத்திற்கு எதிராக தென்னிலங்கையி;ல் மாறத் தொடங்கின. சரத்திற்கும் சம்பந்தருக்கும் இடையில் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டதாக கடுமையான பிரச்சாரம் கட்டவழித்து விடப்பட்டது. சிங்கள அரசியல் தலைமையை தமிழர்கள் தீர்மானிக்க – கவனிக்க அதாவது இலங்கையின் தலைமையை அல்ல!-  முனைவதான பயப்பிராந்தியை கிளப்பும் வகையிலானதாக இந்த பிரச்சாரம் அமைந்தது. இந்த வாதமே சிங்கள மக்களது முடிவுகளை தீர்மானிக்கும் அம்சமாக அமைந்தது. இதனை அடுத்து அலை மகிந்தவுக்கு சார்பாக மாறியது. இதனை தடுத்து நிறுத்த ஐதேக கூட்டமைப்பு எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. ஏற்கனவே தமிழ் மக்கள் மீதான வெற்றியின் பெருமிதத்தில் தொடங்கிய இந்த தேர்தலானது, கடைசியில் சிங்கள இனவாதத்தை முழுமையாக பயன்படுத்தியவருக்கு சாதகமாக அமைந்தது. சிங்கள மக்கள் தம்மை தனியான ஒரு தேசமாக கருதி, தமது தேசத்தின் தலைவரை தீர்மானிக்கும் தேர்தலாகத்தான் இந்த ஜனாதிபதி தேர்தலை புரிந்து கொண்டமை மீண்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.

தமிழர் தாயகங்களில் விடயங்கள் வேறு விதமாக அமைந்தன. மக்களது தீர்ப்பு தமக்கு பாதகமாக அமையப் போவதை உணர்ந்த ‘ஜனநாயக வழிக்கு திரும்பிய’ முன்னாள் இயக்க தலைமைகள், அந்த வேடத்தை களைந்தெறிந்து விட்டு வன்முறை மூலமாக தேர்தலை முகம் கொடுக்க தயாரானார்கள். மாற்று கருத்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பயமுறுத்தல்கள் தாராளமாக இடம் பெற்றன. இறுதியில் தேர்தல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் பல குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் பெருமளவிலான மக்கள் தமது சொந்த பாதுகாப்பு கருதி வாக்களிக்க செல்லாமல் விட்டார்கள். தெற்கில் சராசிரி வாக்களிப்பு 68 சதவீதமாக இருக்க, வடக்கிலோ வெறுமனே இருபது சதவீத்த்தினர் மாத்திரமே வாக்களித்தனர். தமிழர் தாயக வாக்குகள் சரத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தன. கிழக்கில் கருணாவுடன், பிள்ளையானுமாக சேர்ந்து தமது விசுவாசத்தை நிரூபிப்பதற்கு பகீரத பிரயத்தனத்தில் இற்ங்கியிருந்தனர். இந்த முயற்சியில் இவர்கள் கடுமையான வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இதே வேளை புலிகளை வைத்து தேர்தலில் குழறுபடிகள் செய்ய அரசு முயல்வதாக பட்டது. தேர்தல் தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட புலிகளது தலைவர் ராம் மோகன் இன்னமுமம் கைது செய்யப்படவில்லை என்பதாக பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிக்கைகள் இதனை கட்டியம் கூறுவதாக கருதப்பட்டது. ஆயினும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்கள் இந்த பிராந்தியத்தில் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரம் செய்வதை இந்த விதமான நடவடிக்கைகள் கட்டுப்படுத்துவதாக அமைந்தன.

Viyoogam_Toronto_20Feb10தேர்தல் முடிவுகளைப் பொறுத்த வரையில் எதிர்த்தரப்பு கூறுவது போல முற்று முழுதான மோசடிகள் நடைபெற்றனவா என்று கூறுவதற்கில்லை என்றே படுகிறது. இதனை தவிர்த்து விட்டுப் பார்த்தால், சிங்கள தேசமும், ஏனைய தேசங்களும் மாறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களை வெளியிட்டிருப்பதாக நாம் முடிவு செய்யலாம். அத்துடன் சிங்கள இனவாதம் என்பது சில கூற முனைவது போல ஒன்றும் மறைந்துவிடவில்லை என்பதையும், அதுவே சிங்கள் மக்களது முடிவுகளை தீர்மானிக்கும் அம்சமாக இருப்பதையும் காண முடிகிறது. தமிழர் தாயகங்களில் அமைதி திரும்பியதாகவும், முன்னாள் போராளி அமைப்புக்கள் ஜனநாயக வழிமுறைக்கு திரும்பி விட்டதாக கூறப்படுவதன் முகத்திரை கிழித்ததையும் காண முடிகிறது. ஏற்கனவே தமிழர் தாயகங்களில் இருந்த பத்திரிகையாளர்களும், அங்கிருந்து வெளிவரும் பத்திரிகைகளும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியாத நிலைமையே நிலவி வந்தது. அது தேர்தல் காலத்தில் இன்னமும் வெளிப்படையானதாக தெரியலாயிற்று. தாம் ஏற்கனவே சலுகைகள் வழங்கி உருவாக்கியிருக்கும் வியாபாரிகளதும், விசுவாசிகளதும் ஆதரவைக்கடந்தும், மக்கள் தமது சொந்த கருத்துக்களை வெளியிட முனையும் போது வன்முறையின் மூலமாக நசுக்கப்பட்டார்கள். இந்த இலட்சணத்தில்தான் தமிழர் தாயகத்தில்; ஜனநாயகம் நடப்பில் இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் அடைந்துள்ள மகிந்த பாராளுமன்ற தேர்தல்களை உடனடியாக நடத்துவதன் மூலமாக அதன் பெரும்பான்மையை தக்க வைக்க முனைகிறார். அந்த தேர்தலிலும் தமிழர் பிரதேசங்களில் இதே சக்திகளே தேர்தலில் கலந்து கொள்ளப் போகின்றன. பாராளுமன்ற ஆசனங்கள் மற்றும் அதில் கிடைக்கும் சுகங்கள், சலுகைகள், மற்றும் அதனை தொடர்ந்தும் காப்பாற்றிக் கொள்வது என்பதைத் தவிர கொள்கை ரீதியில் எந்தவிதமான பற்றுதலும் அற்றவர்கள் இவர்கள். தமிழ் மக்களது அடிப்படையான உரிமைகள், வாழ்வாதார தேவைகள், அவர்களது ஜனநாயக உரிமைகள் பற்றி அறவே கவலைப்படாத சந்தர்ப்பவாதிகள் இவர்கள். அத்தோடு பின்தள்ளப்பட்ட தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை, மாறிப் போய்விட்ட சூழலில் வேறு வடிவில் தொடர்ந்தும் முன்னெடுப்பது பற்றிய அக்கறை ஏதுமற்ற இவர்கள் இந்த  தேர்தலிலும் தமிழ் மக்களது தேசிய தலைமைகள் என்ற கூறிக் கொண்டு கடைவிரிக்கப் போகிறார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இந்த தலைமைகள் பற்றி மிகவும் தெளிவாகவே உள்ளார்கள். ஆனால் மாற்றும் தலைமைகள் அரங்கில் இல்லாதவரையில் மாறி மாறி இதே சக்திகள் அரங்கிற்கு வருவதும், அதில் மிகவும் மோசமானவை மோசடிகள் மூலமாக வெற்றி பெறுவதும் நடந்தேறப் போகின்றன. அப்படிப்பட்ட நிலையில் நாம் இந்த பாராளுமன்ற தேர்தல் வழிமுறைகளை அப்படியே இந்த தேசவிரோத, சந்தர்ப்பவாத, கூலிப்படைகளான சக்திகளது கரங்களில் ஒப்படைத்துவிட்டு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர சக்திகள் செயலற்று இருப்பதா, அல்லது இந்த சக்திகளை அவற்றின் ஒரே ஆதாரமான தளத்தில் முறியடிப்பதற்கு ஏதாவது செய்தாவதா? என்பது நாம் உடனடியாக தீர்வு கண்டாக ஒரு பிரச்சனையாக முன்னுக்கு வருகிறது.

பாராளுமன்றவாதம் குறித்து…

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ‘மே 18 இயக்கத்தை’ சேர்ந்த நாம், மரபார்ந்த தமிழ் தலைமையின் இந்த சந்தர்ப்பவாத நடைமுறைகளுடன் முறித்துக் கொள்வதன் அவசியம் குறித்து யோசித்தோம். பிரதான வேட்பாளர்கள் இருவருமே நடந்து முடிந்த இனஒழிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால் இவர்களை தமிழ் மக்கள் நிராகரிப்பதே சரியான செயலாக அமையும் எனக் கருதினோம். அத்தோடு தந்திரோபாயம் என்ற பெயரில் சந்தர்ப்பவாத அடிப்படையில் தமிழ் வலதுசாரி தலைமைகள் ஏதாவது ஒரு சிங்கள பேரினவாத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து தமிழர்களது வாக்கு வங்கியின் முகாமையாளர்கள் போன்ற செயற்படுவதை முடிவுக்கு கொண்டு வர விரும்பினோம். இதனால் தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை முரணின்று ஆதரித்து வந்த NSSP கட்சியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களை ஆதரிப்பதாக முடிவெடுத்து, அதனை பகிரங்கப்படுத்தி, ஆரம்ப நிலையில் உள்ள ஒரு சிறிய அமைப்பு என்ற வகையில் எம்மால் ஆனவற்றை அவருக்கு ஆதரவாக செய்தோம். இந்த முயற்சிக்கு பெரியளவில் தாக்கம் நிகழ்த்தும் என்று நாம் நம்பாவிட்டாலும், எந்த சரியான நிலைப்பாடும் ஆரம்பத்தில் ஒரு சிறிய புள்ளியில் இருந்தே தொடங்க வேண்டும் என்ற முடிவுடன் எமது செயற்பாடுகளின் தாக்கத்தின் வீச்சம் பற்றிய அதீத எதிர்பார்ப்புகள் இன்றே நாம் செயற்பட்டோம். தேர்தல் முடிவுகள் ஒன்றும் எமக்கு ஆச்சரியத்திற்குரியனவாக இருக்கவில்லை.

ஆனால் இந்த முயற்சியின் போது எழும்பிய விவாதங்களுள் ஒன்று கவனிக்கப்பட வேண்டியது என்பதனால் அது தொடர்பாக நாம் விரிவாக பேசியாக வேண்டியுள்ளது. விக்கிரமபாகுவை ‘மே 18 இயக்கம்’ ஆதரிப்பதன் வாயிலாக நாம் பாராளுமன்றவாதத்தில் மூழ்கிவிட்டதாகவும், பன்றித்தொழுவத்தினுள் நுழைந்து விட்டதாகவும் விமர்சிக்கப் பட்டோம். சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இது ஒருவித பாராளுமன்ற எதிர்ப்பாளர்களது கருத்தேயாகும். பாராளுமன்ற எதிர்ப்புவாதம் என்பது ஒன்றும் வரலாற்றில் புதியது அல்ல. வரலாற்றில் எப்போது முதலாளித்துவ ஜனநாயத்தை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்ற முறைமை செயல் வடிவம் பெற்றதோ, அப்போதிருந்தே, இது தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் எழும்பியே வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ மன்னர் ஆட்சி முறையின் வரம்பற்ற அதிகாரத்தை மறுத்து மக்களது இறைமையை என்ற தார்ப்பரியத்துடன் முதலாளித்துவ அரசு தோன்றிய காலம் முதலாக தேர்தல்கள் என்பவை மிகவும் வரையறுக்கப்பட்டவர்களது உரிமையாகவே இருந்தது. முதலில் சொத்துடைய ஆண்களுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்பட்டது. பின்பு கல்வி கற்றவர்களுக்காகவும் இது விஸ்தரிக்கப்பட்டது. ஆனால் இந்த உரிமை வழங்கப்படாக ஏனைய பிரிவினரான தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பெண்கள், கறுப்பினத்தவர்கள், பூர்வகுடிகள் போன்றோர் மிகுந்த போராட்டத்தின் மூலமாகவே இந்த உரிமைகளை வென்றெடுத்தனர். இந்த போராட்டங்களுக்காக இந்த பிரிவுகள் ஒவ்வொன்றும் அளப்பெரிய தியாகங்களை செய்தாக வேண்டியிருந்தது. கைதுகள், தாக்குதல்கள், சிறைத் தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளையும் மீறித்தான் இதனை வென்றெடுத்தனர். அந்தந்த கால கட்டத்தில் வாழ்ந்த புரட்சியாளர்கள் இந்த போராட்டங்களுக்கு மிகுந்த ஆதரவு வழங்கியதுடன், கருத்தியல் வழி காட்டுதல் உட்பட, தமது நேரடி பங்களிப்புக்களையும் வழங்கி இந்த போராட்டங்கள் வெற்றிபெற அயராது போரிட்டார்கள். இந்த போராட்டங்களில் கிடைத்த வெற்றிகளை கொண்டாடவும் செய்தார்கள்.

ஆனால் பிரச்சனை எங்கு எழுகிறது என்றால் ஒரு புரட்சிகர போராட்டத்தில் பாராளுமன்றத்தின் வரையறுக்கப்பட்ட பாத்திரம் என்ன என்பதை புரிந்து கொள்வதில் தான. முதலாளித்துவ அரசில் நாம் தேர்தல்களில் வாக்களிப்பதன் மூலமாக தேர்ந்தெடுக்கும் அரசாங்கமானது வகிக்கும் பாத்திரம் பற்றியதே இதுவாகும். அதாவது அரசு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவு பற்றியதே இந்த பிரச்சனையாகும். அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டில் இந்த வேறுபாடு என்பது மிகவும் தீர்க்கமானதாகிறது.

முதலாளித்துவ அரசியல் விஞ்ஞானத்தின்படி அரசானது மூன்று கூறுகளாக பிரிக்கப்படுகிறது. சட்டவாக்கம், நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றுமே அவையாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில் முடியரசின் கீழ் அரசரிடம் இருந்த வரம்பற்ற அதிகாரங்களின்படி அறவே சட்டத்தை ஆக்குபவராகவும், நீதியை வழங்குபவராகவும், தண்டிப்பவராகவும் இருந்து வந்தார். முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியானது இந்த மூன்று துறைகளையும் தனித்தனியாக பிரித்துவிட்டு அதனை முக்கிய சாதனையாக காட்டிக் கொண்டது. மார்க்சியமானது இந்த வெளித்தோற்ற அளவிலான அலங்காரங்களை மறுத்து அரசின் வர்க்க தன்மை பற்றி வலியுறுத்துகிறது. அத்துடன் அரசின் செயற்பாடுகளை  மார்க்சியமானது அரசு மற்றும் அரசாங்கம் என்று இரண்டாக பிரிக்கிறது. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை தம்மை ஆள்பவர் முதலாளிகளின் எந்த பிரிவினர் என்பதை தீர்மானிக்கும் இந்த பாராளுமன்ற தேர்தல்கள் மூலமாக ஒரு அரசாங்கத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இந்த தேர்தல் நாடகங்களுக்கு பின்னால் அதிகார வர்க்கமும், இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றை முதன்மையாகக் கொண்ட அரசானது இந்த மாற்றங்கள் எதனாலும் பாதிக்கப்படாமல் தொடர்ச்சியாக தனது வர்க்க நலன் பேணும் செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டேயிருக்கிறது.

இப்படியாக உண்மையான அதிகாரங்கள் எங்கேயோ இருக்க, வெறுமனே வெளித்தோற்றமாக அமையும் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலை ஜனநாயகத்தின் பிரமாண்டமான திருவிழாவாக சித்தரித்து அதில் கலந்து கொள்வதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தமது நலன்களை வென்று கொள்ளலாம் என்று ஒடுக்கப்பட்ட மக்களை நம்பச் செய்வதில்தான் ஆளும் வர்க்கங்களது ஏமாற்று வித்தை அடங்கியிருக்கிறது. இவையே மார்க்சிய அரசு தொடர்பான கோட்பாட்டின் அடிப்படையான அம்சங்களாகும். இந்த நிலையில் வெறுமனே பாராளுமன்ற தேர்தல்களில் மூலமாக குறிப்பிட்ட சில நபர்களை தேர்ந்தெடுப்பதன் மூலமாக ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதான ஒரு பிரமையை முதலாளித்து சக்திகள் வழங்க முனைகின்றன. இந்த ஏமாற்றை அம்பலப்படுத்துவது புரட்சியாளர்களின் முதன்மையான பணியாகிறது.

புரட்சியாளர்கள் பாராளுமன்றத்தின் மூலமாக அடிப்படையான மாற்றங்கள் நடத்திவிட முடியாது என்பதில் தெளிவாகவே உள்ளனர். ஆனால் வேறுபாடுகள் எழுவது என்னவோ  இந்த பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதா அல்லது முற்றாக நிராகரிப்பதா என்பதில்தான். ஒரு பகுதியினர் இந்த மோசடியுடன் கூடிய பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடுவது என்பது புரட்சியாளர்களும் இந்த ஏமாற்று வித்தையில் கலந்து கொள்வதாக அர்த்தப்படும் என்பதால் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார்கள். இவர்களே அந்த காலத்தின் முக்கிய ‘அராஜகவாதிகளாக’ இருந்தார்கள். (கோட்பாட்டுத் தளத்தில் Anarchist என்ற ஆங்கில சொல்லானது அராஜகவாதம் என்று மொழி பெயர்க்கப்படுவதே சரியானது. ஆனால் எமது போராட்டத்தின் குறிப்பான சூழலில் அராஜகவாதம் என்பது அடாவடித்தனம் பண்ணுவது என்ற பொருள்பட விரிவாக பயன்படுத்தப்படுவதால் இப்போதைக்கு இந்த பதம் தொடர்பாக ஏற்படக் கூடிய குழப்பங்களை தவிர்க்கும் விதத்தில் ‘அராஜகவாதம்’ என்று மேற்கோள் குறிகளுடனேயே பயன்படுத்துகிறேன்.)

ஆனால் காரல் மார்க்ஸ் அவர்கள் இதற்கு மாறான நிலைப்பாட்டை எடுத்தார். அவர் பாராளுமன்றத்தின் மிகவும் வரையறுக்கப்பட்ட பாத்திரத்தை மறுக்கவில்லை. ஆனால், மக்கள் அதில் தொடர்ந்து பங்கு பற்றிக் கொண்டு இருக்கும் வரையில் புரட்சியாளர்களும் அதில் கலந்து கொண்டு பணியாற்றுவது அவசியம் என்ற அவர் கருதினார். இதுதான் அப்போது ‘அராஜகவாதிகளுக்கும்’, மார்க்சியவாதிகளுக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடாக இருந்தது. இது தொடர்பாக லெனினது ஒரு முக்கிய மேற்கோளை காட்டுவது அவசியமானதாகிறது. அவர் தனது ‘அரசும் புரட்சியும்’ எனும் மிகவும் முக்கியமான ஒரு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘முதலாளித்துவ பாராளுமன்ற முறை பன்றித் தொழுவமே’ ஆயினும் கூட அதனைப் பயன்படுத்திக் கொள்ள, முக்கியமாய் நிலைமைகள் புரட்சிகரமானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக் கொள்ள திராணியற்றதாய் இருந்ததென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக் கொள்ள மார்க்சுக்கு தெரிந்திருந்தது. அதேபோது நாடாளுமன்ற முறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வாக்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்கு தெரிந்திருந்தது.

அதாவது பாராளுமன்ற முறைமை பிற்போக்கானதுதான் ஆனால் அதனை முற்றாக நிராகரித்துவிடக் கூடாது. புரட்சிகர வர்க்கங்கள் தமது நலன்களுக்கு ஏற்றவிதத்தில் பயன்படுத்திக் கொள்ள அறிந்திருப்பது அவசியம் என்ற படிப்பினை நாம் வந்தடைகிறோம். ஆனால் புரட்சிகர இயக்கங்களின் வரலாற்றில் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துவிடவில்லை. அவ்வப்போது மார்க்சியத்தின் அடிப்படையான நிலைப்பாடுகளை திரிக்க முனையும் போக்குகள் தலையெடுக்கவே செய்தன. வளர்ச்சியடைந்த மேற்கு நாட்டைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைகளில் ஒரு பகுதியினர் தம்மை ஒரு விதமான மேட்டுக்குடிகளாக உருவாக்கிக் கொண்டு, அந்தந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்களுடன் சமரசம் செய்ய முயன்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற பாதை மூலமாகவே சோசலிசத்தை அடைந்துவிடலாம் என்ற விதத்தில் மார்க்சியத்தின் அடிப்படையான நிலைப்பாடுகள் திரிபுபடுத்தப்பட்டன. இந்த விதமான திரிபுவாத நிலைப்பாடானது மறுபுறத்தில் ‘அராஜகவாதிகளது’ போக்குகளுக்கு உர மூட்டியது. இவர்கள் தம் பங்கிற்கு பாராளுமன்ற எதிர்ப்புவாதத்தை முன்னெடுக்கலானார்கள். இந்த இரண்டு போக்குகளையும் அந்தந்த காலத்து மார்க்சியவாதிகள் எதிர்த்து போராடி முறியடித்தாக வேண்டியிருந்தது.

Viyoogam_Toronto_20Feb10லெனினது போல்ஷேவிக் கட்சியிலும் பாராளுமன்றத்தை பயன்படுத்துவது பற்றிய பிரச்சனைகள் எழவே செய்தன.1905 இல் முதலாவது புரட்சியின் எழுச்சியானது ஆதிக்க சக்திகளது அதிகாரங்களை அசைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், விவசாயிகளும், தொழிலாளர்களும், படைவீரர்களும் தமது சொந்த அதிகார நிறுவனங்களான  சோவியத்துக்களை தன்னியல்பாகவே தோற்றுவித்த பின்பு, இந்த புரட்சிகர நிலைமைகளை தணிவிக்கும் நோக்குடன் ஜார் தனக்கு ஆலோசனை வழங்கும் பாத்திரம் மாத்திரம் வகிக்கக் கூடிய ‘டூமா’ என்ற அமைப்பை கூட்டுவதற்கு அழைப்பு விடுத்த போது, இந்த டூமா மக்களது புரட்சிகர உணர்வுகளை திசை திருப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்படவதன் காரணமாக அதனை போல்ஷேவிக்குகள் நிராகரித்தார்கள். அந்த முடிவானது சமூகப் புரட்சியானது முன்னேறிச் செல்கையில் அதனை திசைதிருப்பும் வித்தில் முதலாளித்துவ சக்திகளது நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. ஆனால்; 1905 ம் ஆண்டின் புரட்சியின் தோல்வியின் பின்பான கடுமையான காலகட்டத்தில் மீண்டும் ஒரு டூமா கூட்டப்பட்ட போது அதனை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் நிராகரித்த போல்ஷேவிக் கட்சியானது, தனது முடிவு தவறென உணர்ந்து விரைவில் திருத்திக் கொண்டது. அதன் பின்பு டூமாவில் பிரவேசித்த கட்சி அங்கத்தவர்கள் புரட்சிகரமான முறையில் தமது பணிகளை பாராளுமன்றத்தினுள்ளும் ஆற்றி வந்தார்கள். இதன் மூலமாக புரட்சியாளர்கள் எவ்வாறு பிற்போக்கான பாராளுமன்றத்தினுள் சிறப்பாக செயற்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். முதலாம் உலகப் போருக்கான நிதியொதுக்கீடுகளுக்கு பாராளுமன்றத்தில் ஆதரவாக வாக்களிக்க மறுத்து சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படும் வரையில் அதில் அங்கம் வகித்து பாட்டாளி வர்க்க புரட்சிக்கு ஆதரவாக தமது தொடர்ச்சியான போராட்டத்தை நிகழ்த்தினார்.

1917 ம் ஆண்டு ஒக்டோபரில் சோசலிச புரட்சி சோவியத் யூனியனில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த புரட்சியின் தாக்கங்கள் உலகலாவிய அளவில் உணரப்பட்டன. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த, சீர்திருத்தவாத அமைப்புகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர்கள் பாராளுமன்றவாத நிராகரிப்பு வாதங்களை முன்வைக்கலானார்கள். 1920 இல் கூட்டப்பட்ட மூன்றாவது அகிலத்தில் இணைந்திருந்த கட்சிகளது இந்தவிதமான தவறான போக்குகளுக்கு எதிராக லெனின் தீவிரமாக போராடினார். ‘இடதுசாரி கொம்யூனிசம், இளம் பருவக் கோளாறு’ என்ற நூல் முழுக்க முழுக்க பாராளுமன்றம், மற்றும் தொழிற்சங்கங்ககள் போன்ற ‘பிற்போக்கு’ அமைப்புக்களில் சேர்ந்து செயற்பட மறுத்த புரட்சியாளர்களுக்கு எதிரான விமர்சனங்களாகவே இருந்தன. இப்படியாக மார்க்சியத்தின் வரலாற்றில் பாராளுமன்றவாதம் தொடர்பான விவாதங்கள் முற்றிலும் சரியான விதத்தில் தீர்க்கப்பட்டதாகவே அந்த காலத்தில் வாழ்ந்த புரட்சியாளர்களுக்கு தோன்றியிருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகள் அத்தனை இலகுவாக தீர்க்கப்படப் போவதில்லை என்பது பிற்காலத்தில் வந்த புரட்சிகர, இடதுசாரி இயக்கங்களின் நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகியது.

புரட்சிக்கு பின்பு புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் ஒருவித அதிகாரவர்க்கமயமாதல் நடந்தேறியது. அதற்கு இணையாக இந்த கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த கொம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் அதேவிதமான அதிகாரவர்க்க நடைமுறைகளை நோக்கி செல்லத் தலைப்பட்டன. இதனால் இந்த கட்சிகளின் தலைமை அங்கங்கள் புரட்சியை, புரட்சியின் கடினமான பணிகளை தவிர்க்கும் விதத்தில் தமது வேலைமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டன. கட்சியின் தலைமை அங்கங்களைச் சேர்ந்தவர்களே பாராளுமன்ற தேர்தல்களில் ஈடுபடுவதும், அதில் வெற்றி பெற்று முக்கிய அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதும் நடந்தேறின. இதனால் ஏனைய புரட்சிகர பணிகள் பின்னே தள்ளப்பட, பாராளுமன்ற வாதத்தை சுற்றிலுமே கட்சியின் பணிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாய வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவுகளது ஒழுங்கமைப்பு மற்றும் போராட்டங்கள் முக்கியத்துவம் குறைந்து, இவை பாராளுமன்ற வாதத்திற்குட்பட வேண்டியதாகின. பல சந்தர்ப்பங்களில் முதலாளித்துவ அமைச்சரவையில்; இருந்து கொண்டு, முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை காப்பாற்றும் பணியை செய்ய நேர்ந்ததானது, தவிர்க்க முடியாதபடி, தொழிலாளர் மற்றும் விவசாயிகளது போராட்டங்களை தாமே முன்னின்று நசுக்க வேண்டிய மிகவும் துர்ப்பாக்கிய நிலைமைக்கும் இட்டுச் சென்றது. சொந்த தொழிலாளர் வர்க்கங்களுடன் மோதல்களில் ஈடுபடவும், ஏன் துப்பாககிpச் சூடு நிகழ்த்தும் அளவிற்கு கூட சென்று முடிந்தது.

இதனுடன் இணைந்த, ஆனால் இதற்கு முற்றிலும் மாறான ஒரு தளத்தில் நடைபெற்ற இன்னுமொரு விடயம் இந்த பிரச்சனையை இன்னமும் சிக்கலானதாக மாற்றியது. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மறைவைத் தொடர்ந்து பதவியேற்ற குருசேவ் ஒரு குறுகிய காலத்தினுள்ளேயே சில முக்கியமான மாற்றங்களை மேற்கொண்டார். ஸ்டாலினிசம் பற்றியதும், அதன் போது நடைபெற்ற மிகைப்படுத்தல்கள் பற்றியுமான பிரச்சனைகள் இதன் ஒரு பகுதியாக அமைந்தன. அதன் இரண்டாம் பகுதியானத சோசலிசத்திலுருந்து கொம்யூனிசத்தை நோக்கி மாறுவதற்கான காலகட்டத்தை தாம் அடைந்து விட்டதாக குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. இதன்படி வர்க்கங்களும் வர்க்க போராட்டங்களும் சோவியத் யூனியனில் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் பிரகடனப்படுத்தியதுடன், உலகலாவிய அளவிலும் தாம் முதலாளித்துவத்தை புரட்சியின்றி, சமாதானமாக, போட்டியின் மூலமாக தோற்கடிக்கலாம் என்று வலியுறுத்தினார். இதன்படி தம்முடன் நெருக்கமான உறவில் இருந்த கொம்யூனிஸ்ட்டு கட்சிகளை தலைமறைவு வேலை முறைகளைக் களைந்துவிட்டு பாராளுமன்ற வாதத்தில் முற்றாக இறங்குமாறு ஊக்குவிக்கப்பட்டது.

இதற்கெதிரான எதிர் வாதங்களை மாவோ தலைமையிலான சீன கொம்யூனிஸ்ட்டுக் கட்சியானது முன்னெடுத்தது. இந்த விவாதத்தில் பாராளுமன்றவாதத்திற்கு எதிரான தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதத்தின் தீவிரமானது, இந்த கருத்துக்கள் பாராளுமன்ற எதிர்வாதமாக அர்த்தப்படுத்தும் அளவிற்கு அழுத்தம் பெறலாயின. ‘துப்பாக்கிக் குழலில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்ற மாவோவின் வாதமானது, குறுக்கப்படுத்தப்பட்டு, அதன் நேரடியான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது, ஒரு புரட்சிகர இயக்கத்தில் சாத்தியப்படக் கூடிய அனைத்து போராட்ட வடிவங்களுக்குள்ளும் ஆயுத போரட்டத்தை படிநிலை வரிசையில் ஒரு மேல் நிலைக்கு கொண்டு செல்வதான ஒரு நிகழ்வாக அமைந்தன. இந்த சர்ச்சைகள் இடதுசாரி இயக்கங்களை உலகலாவியரீதியில் மொஸ்கோ சார்பு, சீன சார்பு என்று பிளவுபட வழி வகுத்தது. ஆயினும் உடனடியாக இந்த பிளவானது பாராளுமன்றவாதம் தொடர்பாக பாரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கவில்லை.

இந்தியாவில் தோன்றிய சிபிஎம் கட்சியும், இலங்கையில் சண்முகதாசன் தலைமையில் தோன்றிய சீன சார்பு கொம்யூனிஸ்ட்டு கட்சியும் வழக்கம் போலவே பாராளுமன்ற தேர்தல்களிலும் கலந்து கொண்டன. இலங்கையில் சண்முகதாசன் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியானது மேற்கொண்டு தேர்தல் முறைகளை முற்றாக நிராகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தின் தோற்றமானது இந்த வகையில் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்தது. இந்த இயக்கத்தை தோற்றுவித்த சாரு மஜும்தார் தலைமையிலான குழுவானது பல அதிதீவிர நிலைப்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இந்திய சமூக அமைப்பை வரையறுத்த விதம், அழித்தொழிப்பு தத்துவம், பாராளுமன்ற எதிர்ப்புவாதம், நீதிமன்றங்களை புறக்கணிப்பது போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும். இந்த நிலைப்பாடுகள் இன்றும் இந்தியாவில் உள்ள மார்க்சிய லெனினிய இயக்கங்களை மாத்திரமன்றி, இலங்கையில் இருந்த, இருக்கின்ற அமைப்புக்களது நிலைப்பாடுகளையும் தொடர்ந்து பாதித்து வருகிறது. சண்முகதாசன்; தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட்டு கட்சியானது பாராளுமன்ற நிராகரிப்பு, ஆயுத போராட்டம் போன்ற நிலைப்பாடுகளை கருத்தளவில் முன்னெடுத்த போதிலும், ஆயுத போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பதில் முனைப்பு கொண்டிருக்கவில்லை. சாதிய எதிர்ப்பு போராட்டத்தல் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெடி குண்டுகள், துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது நடைபெறவே செய்தது. ஆனால் இந்த நிகழ்வுகளைத் தாண்டி, இலங்கையில் ஒரு ஆயுத போராட்டத்தை நடத்துவது, அதற்கு இணையாக ஏனைய சட்டரீதியான மற்றும் சட்ட பூர்வமற்ற போராட்டங்களை ஒருங்கிணைப்பது என்ற வகையில் விரிவான ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. உண்மையில் இவர்களது ஆயுதபோராட்டம் பற்றிய பிரச்சாரமானது தமிழ் மக்கள் மத்தியில் தன்னியல்பாக எழுந்த ஆயுத போராட்டத்திற்கு ஒரு தார்மீக பலத்தை வழங்க மாத்திரமே பயன்பட்டது. அதுவும் தேசிய விடுதலைப் போராட்டத்தை அவர் முற்றிலும் நிராகரித்த நிலையிலேயே இது நடைபெற்றது.

இப்போது நாம் எமது போராட்டத்தில் எவ்வாறு பாராளுமன்ற எதிர்ப்பு வாதமானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைப்பாடாக மாறியது என்பதை பற்றி பரிசீலிக்க வேண்டியுள்ளது. எழுபதுகளின் நடுப்பகுதியிலேயே பல்வேறு இளைஞர் அமைப்புக்களும் மரபார்ந்த தமிழர் தலைமைகள் மீது மிகுந்த ஏமாற்றம் அமைந்திருந்தனர். இவர்கள் இதன் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தையும் நிராகரித்தனர். தமிழர் தேசிய இயக்கத்தில் இருந்த கோட்பாட்டு அரசியல் வறுமை காரணமாக ஏனைய முக்கிய கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறைகள் பற்றிய பிரச்சனைகள் விவாதித்துத் தீர்வு காணப்படாமை போன்றே போராட்ட வழிமுறைகள் பற்றியும் எந்தவிதமான கோட்பாட்டுரீதியான விவாதங்களும் நடக்கவில்லை. இவற்றையும் மீறி பிரச்சனைகளை முகம் கொடுக்க நேரிட்ட போது அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவிதத்தில் ‘பயனீட்டுவாத’ அடிப்படையில் (Pragmatism)  முடிவுகள் எடுக்கப்பட்டன. 1981. 1982 களில் யாழ்ப்பாணத்தில் தேர்தல்களை குழப்பிய நடவடிக்கைகள் எந்த கோட்பாட்டுரீதியான முடிவின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படாமல், அவ்வப்போதைய அரசியல் மற்றும் குழுக்களது விருப்பு – வெறுப்பிற்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டது. இது ஏனைய போராட்ட நடைமுறைகள் தொடர்பாகவும் நடைபெற்றது. ஒரு சந்தர்ப்பத்தில் பிறரது உண்ணாவிரதத்தை குழப்பியவர்கள், இன்னோர் சமயத்தில் தாமே உண்ணாவிரதம் இருந்தார்கள். அவ்வாறே ஒரு சமயத்தில் பாரளுமன்ற தேர்தல்களை குழப்பியவர்கள் இன்னொரு சமயத்தில் பாராளுமன்ற தேர்தல்களில் கலந்து கொண்டார்கள். இந்த இடத்தில் போராளிகள் ஒருபோதும் தாம் முன்மொழிந்தவற்றிற்று விசுவாசமாக இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது. இது போராட்ட வடிவங்கள் தொடர்பாகவும் அமைந்தது.

பாராளுமன்றம் தொடர்பான விடயத்திலும் இதே அணுகுமுறையே கைக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொதுவில் எமது போராட்டத்தில் கோட்பாட்டு, அரசியல் புரிதல் மட்டமானது மிகவும் அடிநிலையில் இருக்கிறது. அறிவுத்துறை சோம்பேறித்தனமும், போலிப் புலமையும் ஓங்கி நிற்கின்றன. வெறுமனே சில வறட்டுச் சூத்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதே போதியளவு விவாதத்தை நடத்தியதாக கருதப்படுகிறது. வெறுமனே Cut and Pasteஇல் தமது இணையத்தளங்களை நடத்தும் குழுக்கள் கருத்துக்கள் எதனையும் புதிதாக உருவாக்க முனைவதில்லை. அதற்கான திறமையும், உழைப்பும் இவர்களிடம் கிடையாது. தமிழக மாலெ குழுக்களது வாசகங்கள் சிலவற்றை இரவல் எடுத்து திரும்பத் திரும்ப உச்சரிப்பதே இவர்களது மார்க்சிய புரிதலாக உள்ளது. தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது…. இப்படியாக நடந்து கொண்டு ஆரோக்கியமாக விவாதம் நடத்துவதாக கூறினால் இதுதானே இந்த காலத்தின் மிகச் சிறந்த நகைச் சுவையாக இருக்கும். சரி இப்போது விடயத்திற்கு வருவோம்.

எனவே எமது போராட்ட சூழலில் பாராளுமன்றம் தொடர்பாக நாம் திட்டவட்டமான முடிவுகளை மேற்கொள்வது என்பது பல அம்சங்களில் தங்கியிருக்கிறது. முதலில் அரசு பற்றிய மரபார்ந்த  மார்க்சியத்தின் அடிப்டையான கருத்துக்களை சரிவர புரிந்;து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த மார்க்சிய மூலவர்களது காலத்திற்கு பிற்பட்ட இந்த இடைக்காலத்தில் இந்த துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகள், விவாதங்களை சரிவர கிரகித்துக் கொள்ள முயல வேண்டும். இதற்குமேல் பொதுவில் மூன்றாம் உலக நாடுகளில் அரசின் தன்மை குறித்தும், குறிப்பாக இலங்கையில் அரசின் தன்மை குறித்தும் புரிதலை எட்ட வேண்டும்.

அத்தோடு இலங்கையின் குறிப்பான நிலைமை என்ற வகையில் இலங்கையில் உள்ள சமூக உருவாக்கம், அதிலுள்ள பொருளாதார, சித்தாந்த, அரசியல், தேசிய, சாதிய, பெண் ஒடுக்குமுறை போன்றவற்றுடனும் இணைத்து இந்த புரிதலை ஆழப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு எல்லாம் மேலாக ஒடுக்கப்பட்ட ஒரு தேசம் என்ற வகையில் இலங்கை பாராளுமன்றத்துடன் எமது மக்களுக்கான உறவு என்ன என்பதையும் வரையறை செய்தாக வேண்டும். அத்தோடு எமது போராட்டத்தின் வளர்ச்சியானது பாராளுமன்றம் மற்றும் சட்டபூர்வமான போராட்ட நடைமுறைகளை நிராகரிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளதா? என்ற கேள்வியையும் நாம் எழுப்பியாக வேண்டியுள்ளது. இவற்றின் வெளிச்சத்தில் நாம் எமது முடிவுகளை எடுக்கும் போதே அவை மிகவும் சரியானவையாக அமையும் என்ற நாம் நம்புகிறோம். ஆனால் அது ஒரு நீண்ட செயற்பாடு என்பதனால் இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் எவையும் மிகச் சரியானவை என்று உத்தரவாதப்படுத்த முடியாதனவாக இருப்பதுடன், ஒருவித இடைக்காலத் தன்மை கொண்டதாகவே இருக்கும் என்ற முடிவுடன் தொடர்ந்து விவாதத்திற்கு செல்வோம்.

ஒரு புரட்சிகர போராட்டத்தில் சமூக மாற்றத்தை எற்படுத்த முனையும் எந்த வொரு அமைப்பும், வரலாறானது இருவரை முன்வைத்துள்ள அத்தனை போராட்ட வடிவங்களிலும் முறைப்படி கற்றுத் தேர்ந்து கொள்வது அவசியமானதாகும்.  இவற்றில் சில சட்டபூர்வமானவை, இன்னும் சில சட்டத்திற்கு புறம்பானவை: சில மக்கள் திரள் சார்ந்தவை. இன்னும் சில சிறிய கருக்குழுக்களால் செய்யப்படுபவை: சில அகிம்சை வடிவானவை, இன்னும் சில வன்முறை சார்ந்தவை: சில தீவிர செயற்பாடு கொண்டவை, இன்னும் சில மிகவும் மந்தமான செயற்பாடு கொண்டவை. இவையாவும் வரலாறு புரட்சிகர போராட்டங்களில் மக்கள் முன்வைத்தவை என்ற வகையில் அனைத்துமே ஒரேவிதமாக முக்கியத்துவம் உடையனவாகும். குறிப்பிட்ட ஒரு சூழலில் தாக்கமுள்ளதாக திகழும் ஒரு போராட்ட வடிவம் இன்னொரு சந்தர்ப்பத்தில் அறவே பயனற்றதாக ஆகிவிடும். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் அறவே விரும்பப்படாத ஒரு வடிவம், இன்னோர் சந்தர்ப்பத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக ஆகிவிடும். ஆதலால் எல்லா போராட்ட வழிமுறைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமாக பண்பை கொண்டவையாக கருதப்பட்டு, அவற்றை கற்றுத் தேர்வதிலும், தனித்தேர்ச்சி பெறுவதிலும் புரட்சியாளர்கள் போதிய கவனம் எடுக்க வேண்டும். ஏனெனில் வரலாறானது எப்படிப்பட்ட ஒரு போர்க்களத்தை எம்முன் விரிக்கப் போகிறது என்பதை எவருமே முன்னறிந்து கூறும் திறமை அற்றவர்கள் என்பதே உண்மையாகும். ஏன் எமது போராட்டத்திலேயே எடுத்துக் கொண்டாலும் கூட, ஆயுத போராட்டமானது ஏனைய அனைத்து போராட்ட வடிவங்களிலும் உயர்ந்ததாகவும், பின்பு அதுவே ஒரே போராட்ட வடிவமாகவும் குறுக்கப்பட்ட நிலைமை எமது போராட்டத்தில் உருவானது. இந்த நிலைமை எப்படிப்பட்ட நெருக்கடிகளை போராட்டத்தில் உருவாக்கிவிட்டிருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தனது எதிரியுடன் மோதச் செல்லும் ஒரு படையானது, தனது படைக்கலன்கள் அனைத்தையும் பாவிக்க தயாரான முறையிலேயே போர்க்களத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் யுத்தத்திற்கான தயாரிப்பு நிலையிலேயே சில படைக்கலன்களை துறந்துவிட்டு செல்லும் ஒரு படையணி தனது வெற்றியை உத்தரவாதப் படுத்திக் கொள்ள முடியாது அல்லவா? நாம் இப்போது ஒரு பாரிய பின்னடைவில் இருந்து தமிழர் தேசியத்தை சிறிது சிறிதாக முன்னெடுத்துச் செல்ல முயல்கிறோம். ஆனால் அதன் ஆரம்ப கட்டத்திலேயே பாராளுமன்ற எதிர்ப்புவாதத்தை மேற்கொள்வது சரியான பாதையாக எமக்குப் படவில்லை.

முதலாவதாக, நாம் ஒரு தோல்வியை அடுத்து எமது முயற்சிகளை தொடங்குகிறோம். இப்போது மாற்றுக் கருத்துள்ள அனைவரும் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே எமது போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் சட்டபூர்வமான வழிமுறைகள், அதிலும் பாராளுமன்ற தேர்தல் முறைகள் நாம் மக்களைச் சென்றடைய கணிசமான வாய்ப்புக்களைத் தரும்.

Viyoogam_Toronto_20Feb10மக்கள் இப்போதுதான் ஒரு நீண்ட இருண்ட காலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த அமைதி தற்காலிகமானதுதான் என்றாலும் அதனை யாரும் குழைப்பதை விரும்ப மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது வெறுமனே வாக்களிப்பது என்பதாகவே சுருங்கிப் போயுள்ளது. கடந்த காலத்தில் கூட யாருமே பாராளுமன்றத்தின் பற்றாக்குறை குறித்தோ, அதற்கு மாற்றான வழிமுறைகளில் ஒழுங்கமைத்துக் கொள்வது குறித்தோ எதுவுமே செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அண்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பாராளுமன்ற முறைமை அமுலில் இருந்தே ஆக வேண்டியுள்ளது. இதில் பல்வேறு சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் கலந்து கொண்டு ஆசனங்களை நிரப்பவே போகிறார்கள். பாராளுமன்றத்தை நாம் நிராகரிப்பதனால் இந்த இடங்களில் மோசமான பேர்வழிகள் அமர்ந்து கொண்டு அதனை தேசவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் போகிறார்கள். வேறு ஜனநாயக சக்திகள் அந்த இடங்களை எடுப்பதனால் இப்படியாக எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் புல்லுருவியொன்றை ஒரு பகிரங்கமான மேடையை விட்டும் அகற்றி விடுகிறோம்.

மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது தொகுதிகளில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களது உதவிகளில் சார்ந்தருpக்க நேர்கிறது. அந்த பொறுப்பை ஏன் இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமும் நாம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்தல்களில் நாம் கலந்து கொள்வது எப்படியும் ஆசனங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவினால் அல்ல. தேர்தலில் கலந்து கொள்வதானது நாம் முதலில் மக்களை சந்திக்கவும், அவர்கள் மத்தியில் எமது கருத்துக்களை எடுத்துச் செல்லவும் வழி வகுக்கிறது.

வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பட்சத்தில் அரசினதும், தமிழ் தலைமைகளினதும் மோசடிகளை அம்பலப்படுத்த உதவியாக செயற்படலாம். இது பாராளுமன்றத்திற்கு வெளியில் செய்யும் எமது பணிகளுக்கு உதவியாக அமையும்.

உள்ளூரில் முளைவிட முயற்சிக்கும் பல்வேறு புதிய குழுக்களும் மோசமாக ஒடுக்கப்படும் நிலைமைதான் இப்போது காணப்படுகிறது. அனுபவத்தில் குறைந்து, போதிய பாதுகாப்பு வசதிகள் அற்ற பல்வேறு நபர்கள் தனித்து இப்படியாக எதிரியின் ஒடுக்குமுறைகளை முகம் கொடுக்குமாறு விட்டுவிடுவது அனுபவம் வாய்ந்த, பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு அழகல்ல. பாராளுமன்ற திசையில் நாம் வைக்கும் முன்னெடுப்புக்களும், அது தொடர்பான எமது செயற்பாடுகளும் இன்னும் இப்படிப்பட்ட பலர் அரங்கிற்கு வந்து செயற்பட இடைவெளியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஜனநாய முன்னணியின் அவசியம்

இலங்கையில் ‘பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட்டு ஜனநாயக சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டாலும், அது ஆளும் தரப்பிற்கான ஜனநாயகமாகவே குறுக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கருத்துள்ளவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்கவோ, அல்லது கூட்டங்களை ஒழுங்கு செய்யவோ, அமைப்பாகவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதிலும் தாயகத்தில் ஆக்கிரமித்துள்ள அரச படைகளும், அவர்களது ஆதரவுடன் செயற்படும் கூலிப்படைகளுமே மக்களதும், மாற்றுக் கருத்தாளர்களதும் செயற்பாடுகளுக்கும் பெரிய முட்டுக்கட்டைகளாக இருக்கிறார்கள். இங்கு அரசு வேடம் போடுகிறது. ஒரு புறத்தில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டிக் கொள்கிறது. மறுபுறத்தில் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் செயற்பாடுகளை கட்டவிழ்த்து விடுகிறது. ‘ஜனநாயக வழிக்கு வந்துவிட்டவர்கள்’ ஆயுதம் தாங்கியவாறு மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதிரணி ஜனாதிபதி வேட்பாளருக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை, ஏனெனில் விடுதலைப் புலிகள் இல்லை எனக் கூறும் அரசானது, இந்த கூலிப்படைகளை ஆயுதங்களுடன் வலம் வர அனுமதிக்க முடியாது.

இப்போது தமிழர் தாயகத்தில் தேசிய விடுதலைக்காக குரல் கொடுக்கும் சக்திகளுக்கு மட்டுமல்ல, ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நம்பும் சக்திகள் கூட செயற்பட முடியாத நிலைமையே இருக்கிறது. இந்த நிலைமையை கடந்து செல்லாமல் நாம் எமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து செயற்படுவதோ, மக்கள் தமது முடிவுகளை சுயாதீனமாக மேற்கொள்வதோ சாத்தியப்படமாட்டாது. ஆதலால் நாம் இந்த நிலைமையை எதிர் கொண்டு முறியடிப்பது முக்கியமான பிரச்சனையாக முன்னிற்கிறது. இதில் நாம் மாத்திரம் அன்றி தமிழர் தாயகத்தில் சுதந்திரமாக செயற்பட முனையும், எம்மோடு மாறுபட்ட கருத்துடையவர்களுடனும் கூட சேர்ந்து செயற்பட்டு இந்த ஜனநாயகவிரோத சக்திகளுக்கு எதிராக செயற்பட்டாக வேண்டியுள்ளது. இதில் மரபார்ந்த இடதுசாரி கட்சிகள், மற்றும் ஏனைய முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அனைத்துடனும் நாம் சேர்ந்து செயற்பட்டாக வேண்டும். இந்த கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் பல்வேறு விடயங்களிலும் எமக்கு தீவிரமாக கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் நாம் இந்த வேறுபாடுகளையும் மீறி செயற்படவில்லையானால் இன்றைய நிலையில் தப்பிப்பிழைப்பதோ, அல்லது எதிர்காலத்தில் இந்த வேறுபாடுகளை விவாதித்துத் தீர்க்க முனைவதோ, முடியாதபோது மக்கள் முடிவிற்கு கொண்டு செல்வதோ சாத்தியப்பட மாட்டாது. ஆகவே எமது குறுகிய குறுங்குழுவாதங்களை கடந்து நாம் ஒரு விரிவான கண்ணோட்டத்தில் அனைத்து புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடனும் ஒரு விரிவான ஐக்கிய முன்னணிக்கு வருவது உடனடி அவசியமாகிறது.

ஐக்கிய முன்னணி என்று வந்து விட்டாலேயே இதில் பங்கு பற்றும் எந்தவொரு குழுவுமே அதன் அரசியல் நிலைப்பாடுகளை அப்படியே முன்னணியின் கூட்டான முடிவுகளாக திணிக்க முடியாது என்பது புரிந்து கொள்ளத் தக்கதே. அந்த வகையில் நாம் அனைவரும் இணங்கக் கூடியதும், இன்றைய நெருக்கடி நிலைமைகளை கடந்து செல்வதற்கு அவசியமானதுமான குறைந்த பட்ச புரிதல்களை எட்ட முனைவது அவசியமானதாகிறது. அந்த குறைந்த பட்ச புரிதல்களாக பின்வருவன அமையலாம் என்று நாம் முன்மொழிகிறோம்.

1. இலங்கை ஒரு பல்தேச சமூகம். இதிலுள்ள ஒவ்வொரு தேசமும் சுயநிர்ணய உரிமை உடையவை.
2. தமிழர் தாயகம் இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் (Demilitarization).
3. உயர்பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்பட்டு மக்கள் தமது சொந்த பிரதேசங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும்.
4. முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்து ஊர்களுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இடம்பெயர்வுகள் யுத்தத்தினால் ஏற்பட்டது என்றவகையில் அரசிடம் இருந்து நட்டஈடு பெறும் உரிமை இவர்களுக்கு இருக்கிறது.
5. இனஒழிப்பு மற்றும் போர்க்கால் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
6. அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும.
7. துணை இராணுவ குழுக்கள் ஆயுதம் களையப்பட வேண்டும்.
8. பத்திரிகை சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
9. மக்களது ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்.
10. புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயச சக்திகள் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தின் கீழ் அனைத்து புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக சக்திகளும் ஐக்கியப்பட்டு செயற்படுவது இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான தேவையாகிறது. இந்த முயற்சிகளை மேற்கொள்ளமால் இருப்பது அல்லது இவற்றிற்கு ஊறு விளைவிப்பது எதேச்சாதிகார சக்திகளுக்கு துணைபோகும் நடவடிக்கைகளாகவே கருதப்பட வேண்டும். 

பாராளுமன்றத் தேர்தலும் – தனிநபர் – சமூகப் பொறுப்புணர்வும் : மீராபாரதி

One_Country_One_Nationமனித நலன் எனும் போது குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கை கவனத்தில் கொள்ளும் பொழுது, உடனடி நலன் அல்லது குறுகிய காலத்தில் நலன்களைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம் என்றும் மற்றது நீண்ட காலடிப்படையில் மனித நலன்களை அடைவது அல்லது பெற்றுக் கொள்வது என்பதாற்கான நீண்ட கால திட்டம் என்றும் இரண்டு திட்டங்களை முன்வைத்து செயற்படவேண்டியதாக உள்ளது இன்றைய சூழல்.

குறுகியகால அல்லது உடனடி திட்டம் என்று கூறும் பொழுது, இது குறிப்பாக போர் மற்றும் வன்முறை போன்றவற்றால் மிகவும் பாதிப்படைந்திருக்கும் மனிதர்களுக்கான உடனடி தேவைகளை நிறைவேற்றுவதாக அர்த்தப்படும். இந்த மனிதர்கள் எதிர்கொள்கின்ற பாதிப்பானது பலவகைப்படும். அதாவது அவர்களது உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் அங்க அவயங்கள் இழந்தது முதற்கொண்டு உளவியல் அடிப்படையிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் வீடுகளை உறவுகளை இழந்து வீடற்றவர்களாக உறவற்றவர்களாக இடம்பெயர்ந்து நிரந்தரமற்ற வாழ்வை வாழ்கின்றனர். கல்வியை சீராக தொடர்வதற்கான மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்க்கான வாய்ப்புகளும் குறைவாகவும் நம்பிக்கையற்றும் இருக்கின்றன. மேலும் நாளாந்த வாழ்வு உரிமைகள் மட்டுமல்ல சுதந்திரமும் இல்லாது இராணுவப் படைகள் சூழ பயந்த வாழ்வை மேற்கொள்கின்றனர். வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களது இவ்வாறான வாழ் நிலையிலிருந்து உனடியான மாற்றம் தேவைப்படுகின்றது. இது நாளாந்த வாழ்வுக்கான தேவைகள் மற்றும் அத்தியாவசியமானதுமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்யலாம். இது ஒரு உடடியான குறிகிய கால திட்டம் ஒன்றின் மூலமே சாத்தியமானது. அதற்கான தேவை இன்று உள்ளது. இதை எவ்வாறு மேற்கொள்வது….

இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளை அழிப்பதிலும் போரை வெல்வதிலும் காண்பித்த அக்கறை அவற்றுக்கு மூல காரணமான தமிழ் பேசும் மனிதர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறையை இல்லாது செய்வதற்கோ அவர்களது உரிமைகளை மீள நிலைநாட்டுவதிலோ தொடர்ந்தும் அக்கறை இல்லாதே செயற்படுகின்றனர். இந்த அக்கறை உணர்வுடன் அல்லது இன முரண்பாடுகளை களைந்து முன்னோக்கி செல்வதற்குப் பதிலாக அடக்குமுறை அரசை அதன் இயந்திரத்தையே தொடர்ந்தும் பயன்படுத்தும் அதேவேளை மனித நலன்கள் மற்றும் அவர்களது நாளந்த பிரச்சனைகளில் கூட அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். இதனடிப்படையில்தான் அவர்கள் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தலும் மேற்கொள்ளப்போகின்ற பாராளுமன்ற தேர்தலும் பார்க்கப்படவேண்டும். ஜனாதிபதி தேர்தல் போலவே பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அபிலாசைகள், மற்றும் உரிமைகள் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலை முன்வைத்தும் மனிதர்களுக்கு அரசியல் அறிவை தெளிவை ஏற்படுத்தி அவர்களை வளர்த்தும் செல்வது நோக்கமல்ல. மாறாக தமது வர்க்க மற்றும் அரசியல் இலாபங்களின் அடிப்படையில் பிழைப்புவாத அரசியலை முன்னெடுத்து சிங்கள இனவாத கட்சிகளுக்கு முண்டுகொடுக்கும் வேலை திட்டத்தையே கடந்த காலங்களைப்போல அதன் தொடர்ச்சியாக இப்பொழுது இருக்கின்ற தமிழ் பேசும் மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் முன்னெடுத்தன. இந்த தவறை மறைக்கும் முகமாக வடக்கு கிழக்கில் அல்லது தமிழ் ஈழத்தில் பச்சை நிறம் சிறிலங்காவில் நீல நிறம் ஆகவே தேசங்கள் பிரிந்திருக்கின்றது எனவும் மக்கள் சரியான முடிவை தெரிவித்துள்ளார்கள் எனவும் மகிந்தவின் அரசாங்கத்தின் முகத்தில் அறைந்துள்ளார்கள் எனவும் கூவித்திரிந்து திருப்தியடைகின்றனர்.

வடக்கு கிழக்கில் பச்சை நிறத்தை உருவாக்கியதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் அடிப்படையில் எதைச் சாதித்தோம் அல்லது வென்றோம் எனப் பார்த்தால் பூச்சியமே. ஆனால் சிறிலங்காவின் அரசியல் அடிப்படையில் அவர்களது பார்வையில் வடக்கு கிழக்கு அரசியல் தம்மில் தங்கியிருக்கும் பிழைப்புவாத அரசியல் என்பதையே அவர்களுக்கு மேலும் நிரூபித்திருக்கின்றது. இது சிறிலங்காவில் அதாவது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள சிறிலங்காவின் அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தெரிவித்த ஒரு நற்செய்தியே. தமிழ் பேசும் மனிதர்களின் அரசியலைப் பொறுத்தவரை இது நற்செய்தியல்ல.

தமிழ் பேசும் மனிதர்களின் அரசியல் துரதிர்ஸ்டம் என்னவென்றால் தொடர்ந்தும் பழிவாங்கும் அரசியல் வழியில் தொடர்ந்தும் செயற்படுவதே. அதன் உடனடி வெற்றியில் குளிர்காய்வது. இதன் மூலம் தமிழ் பேசும் மனிதர்களையும் ஏமாற்றி அவர்களது உணர்வுகளுக்கு உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருப்பது அவற்றை சுரண்டுவதுமே. இது இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகளுக்கும் சாதகமானதே. இதனால்தான் மகிந்தாவை வடக்கு கிழக்கில் தோற்கடித்ததாக புளகாங்கிதமடைபவர்கள் சரத் பொன்சேக்காவிற்கு வாக்களித்தற்காக வெட்கப்படவுமில்லை மற்றும் அது வெளிப்படுத்துகின்ற அரசியலை புரிந்து கொள்ளவுமில்லை.

இதற்கான காரணம் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியலில் தங்கி நிற்காது அதனை முதன்மையாக முன்வைக்காது மேலோட்டமாக அரசியலை வியாபாரமாக கருதி செயற்பட்டமையே. இவ்வாறு சிறிலங்காவின் அரசியலில் இருந்து தமது அரசியலை தீர்மானிக்காது அவர்களது நிறத்தில் ஒன்றை தெரிவு செய்யாது தமது அரசியலில் ஊன்றி நின்று ஒரு புதிய நிறத்தை தமது அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறத்தை வெளிப்படுத்துவது தொடர்பாக தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களும் புலிகளின் சித்தாந்தத்திற்குள் அகப்பட்டவர்களும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு வால்பிடிப்பவர்களும் சிந்திப்பதில்லை. அதன் வழி தமிழ் பேசும் மனிதர்களை வழிநடாத்த முயற்சிப்பதுமில்லை. தமிழ் பேசும் மனிதர்களும எந்தக் கேள்வியுமின்றி அவர்கள் பின்னால் கொடிபிடிப்பது தொடர்கின்றது.

இந்த நிலைமையில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களிடம் எவ்வாறு உருப்படியான ஒரு செயற்பாட்டை எதிர்பார்ப்பது. ஆகவே அவ்வாறன ஒரு அரசியலை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டிய உடனடி தேவை சமூக பொறுப்பு உள்ளவர்களுக்கும் மற்றும் எல்லாவகையான அடக்குமுறைகளை எதிர்கொள்கின்ற மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது சமூக மாற்றம் ஒன்றிக்காக செயற்படுகின்ற அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களினதும் பொறுப்பாகவும் உடடியாக செய்யவேண்டிய செயற்பாடாகவும் இருக்கின்றது. அல்லது இந்த இருபக்க பிழைப்புவாத அரசியல்வாதிகள் இந்த இன அடக்குமுறையிலும் இன முரண்பாட்டிலும் குளிர்காய்ந்து தமது வாழ்வை நலமாக கொண்டு செல்வர். அடக்கப்பட்ட மனிதர்கள் தொடர்ந்தும் உரிமைகளற்றும் சுதந்திரமற்றும் நிரந்தர இருப்பிடமில்லாதும் அலைந்து திரிந்துகொண்டு இருக்கவேண்டியதுதான். இதற்காக செயற்படுவதற்கு தலைமறைவு வாழ்வு இனிமேலும் அர்த்தமற்றது. அடக்கப்படும் மனிதர்களுடன் வெளிப்படையாக வாழ்ந்து அவர்களது அரசியல் அபிலாசைகளை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் பல முனைகளிலும் பல தளங்களிலும் செயற்படுவேதே இன்றைய தேவை.

இந்த அடிப்படையில் மனித நலன்களிலும் அவர்களது வளர்ச்சியிம் மற்றும் சுற்று சூழலிலும் அக்கறை கொண்ட மனிதர்கள் இணைந்து மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி ஒன்றை உருவாக்கி இந்த பாராளுமன்ற தேர்தலில் அல்லது தொடர்ந்து வரும் தேர்தல்களில் பங்குபற்றுவது ஒரு வழிமுறையாகும். இதன் மூலம் அடக்கப்பட்ட மனிதர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தொடர்ந்தும் பதவி சுகங்களை மட்டும் அனுபவித்துக்கொண்டும் இனவாத அடக்குமுறை அரசுகளுக்கு முண்டு கொடுத்துக்கொண்டிருக்கும் மரபு மற்றும் இயக்க வழிவந்த பிழைப்புவாத, மற்றும் வன்முறை அரசியல்வாதிகளின் செயற்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது அல்லது மாற்றாக ஒன்றை நிலைநிறுத்துவது மிகவும் அவசர அவசியமானது.

இதன் மூலம் தலைமறைவு வாழ்வுக்கு அல்லது புலம் பெயர் பாதுகாப்பு வாழ்வுக்கு விடைகொடுத்து அடக்கப்பட்ட மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டு செயற்படுவதற்கு இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்படலாம். ஆகக் குறைந்தது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் அரசியல் மற்றும் சமூக அக்கறையுடைய மனிதர்கள் இது தொடர்பாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அல்லது புலம் பெயர்ந்த இடங்களிலிருந்து நாம் எழுதும் எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லாது போய்விடும்.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் அடக்கப்பட்ட மனிதர்களின் அரசியல் அபிலாசைகளை அவர்களது உரிமைகளையே, இந்த அமைப்பு அல்லது கட்சி சார்பாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் அல்லது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இதன் மூலம் போரினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட அடக்கப்பட்ட மனிதர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை உருவாக்கி செயற்படலாம். இவ்வாறான பாராளுமன்ற செயற்பாடுகளையே முதன்மையான நோக்கங்களாக கொண்டு பதவிகளுக்காக செயற்படும் பிற கட்சிகளைப் போலன்றி, இவ்வாறான செயற்பாடுகள் பல்வேறு வேலை திட்டங்களின் ஒரு பகுதியாகவும், அடக்கப்பட்ட மனிதர்களின் முழுமையாக விடுதலைக்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை முடக்கிவிடுவதற்குப் பதிலாக அதற்கான அத்திவாரங்களாகவும் செயற்பட வேண்டும். இதை அமைப்பு அல்லது கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல்வேறு அமைப்பு துறை சார்ந்த வழிகள் மூலமாக இதனை மீள மீள உறுதி செய்துகொண்டு முன்னேறலாம்.

இவ்வாறு முன்னோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கம் சந்தர்ப்பத்தில் அமைப்பு அல்லது கட்சி தனிநபர் சார்ந்த தன்னியல்பான தன்முனைப்பு செயற்பாடுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு கடந்த காலங்களைப் போன்றே முகம் கொடுக்க வேண்டிவரும். இவ்வாறான தனி நபர் செயற்பாடுகளை அக் குறிப்பிட்ட நபர்களின் வர்க்க சாதிய பால் பாலியல் போன்ற குணாம்சம் அல்லது வீயூகம் சஞ்சிகை குறிப்பிடும் ஒரு சமூகப் போக்காக அடையாளம் காண்பது சரியான பார்வையே. ஒவ்வொரு மனிதர்களும் பலவகைகளில் இந்த சமூக போக்குகளாலும் அதன் அடக்கு முறைகளாலும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இவ்வாறு “சமூக போக்காக” மட்டும் அடையாளம் காண்பதால் இந்தப் பிரச்சனைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. ஏனெனில் இது மறுபுறம் தனிநபரின் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே இருக்கும். ஆகவே இவ்வாறான பிரச்சனைகளை “சமூக போக்காக” மட்டுமல்லாமல் தனிநபரின் பொறுப்பு சார்ந்த பிரச்சனையாகவும் புரிந்துகொண்டு தீர்வு கண்டு முன்னேறுவது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். அதாவது ஒரு மனிதர் தன் மீதான தான் சார்ந்த சமூகத்தின் ஆதிக்கத்தை புரிந்து கொள்வதும் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக சிந்திப்பதும் அதன் அடிப்படையில் செயற்படுவதும் முக்கியமானதாகும். இங்குதான் தனிநபர் பொறுப்புணர்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் பிற இயக்கங்களின் தலைவர்களான உமாமகேஸ்வரன், பத்பநாபா, சிறிசபாரட்னம், பாலகுமார் போன்றவர்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒவ்வொரு காலகட்டங்களில் ஒன்றாகவோ தனித்தனியாகவோ முன்னெடுத்த போதும் தங்களது வர்க்க சாதிய மற்றும் பிரதேச அடிப்படையில் தம்மை பிரதநிதித்துவப் படுத்தியது மட்டுமல்ல குறுகியவாத ஆணாதிக்க வன்முறை அரசியலுக்கும் வித்திட்டனர். இதை ஒரு “சமூகபோக்காக” இனம் காண்பது சரியான போதும் அவ்வாறான இனங்காணல் மட்டும் அப் பிரச்சனைக்குத் தீர்வாகாது. ஏனெனில் தனி நபரின் பொறுப்பை மறந்து விடுகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் நமது செயற்பாடுகள் சிந்தனைகள் மூலம் குறிப்பாக நமது சமூகத்திற்குள் இருக்கும் ஆதிக்க அடக்கும் சக்திகளையும் அவர்களது பிற்போக்கான அரசியலையும் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்ல அவற்றில் பங்கும் கொள்கின்றோம் என பெண்ணியவாதிகள் முன்வைக்கும் வாதத்தை புரிந்து கொள்வது நல்லது. ஆகவே இவ்வாறான பிரச்சனைகள் தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் பிரக்ஞை சார்ந்த பிரச்சனையாகவும் பார்க்கப்பட வேண்டும்.

இதற்கு காரணம் ஒருவரை குறிப்பிட்ட சமூகமாகவும் அவரது செயற்பாட்டை சமூக போக்காகவும் என சரியாக இனங்காணும் அதேவேளை தனிநபரின் பொறுப்பை அவரது பிரக்ஞையின் முக்கியத்துவத்தை தட்டிக்கழிப்பது தவறானதாகும். ஏனெனில் சமூக மாற்றம் என்பது வெறும் வர்க்க பொருளாதரா அடிக்கட்டுமானங்களையும் மற்றும் புற அல்லது மேல் கட்டமைப்புகளையும் கட்டுமானங்களையும் மட்டும் மாற்றுவதன் ஊடாக ஏற்படுவதல்ல. மாறாக தனிநபர் மாற்றமும் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்கவேண்டியதாகும். ஏனெனில் தனி மனிதர்கள் இல்லாது ஒரு சமூகம் இல்லை. இந்த தனி மனிதர்களின் கூட்டினால் உருவானதே இன்றைய சமூக கட்டமைப்புகள் மற்றும் அது கட்டமைத்த சித்தாந்த மேலாதிக்கங்களும். இதைக் கட்டிக்காப்பதில் நாம் ஒவ்வொருவரும் பிரக்ஞையின்றி ஏதோ ஒரு வழியில் பங்கு கொள்கின்றோம். இதிலிருந்து பிரக்ஞையாக விடுபடுவது என்பது பிற செயற்பாடுகளான கோட்பாடு, கட்சி கட்டுதல், புரட்சிகர செயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்று மிக முக்கியமானது. அதாவது சமூகத்தை சகல மனிதர்களின் நல்வாழ்விற்காகவும் மாற்றுவதற்காக புரட்சிகர வழியில் செயற்படும் அதேவேளை அதற்கு சமாந்தரமாக புரட்சியாளர்கள் சமூக மாற்றம் வரை காத்திராமல் இப்பொழுது இருந்தே தம்மையும் புரட்சிகரமாக மாற்றவும் தமது பிரக்ஞையை வளர்க்கவும் ஆகக் குறைந்தது அதில் அக்கறை கொள்ளவும் முயற்சிக்கவுமாவது வேண்டும்.
 
நாம் மேற்குறிப்பிட்டவாறு தனிநபர் மாற்றத்தில் அக்கறை இல்லாது இருப்பது, கார்ல் மார்க்ஸின் தத்துவ அடிப்படையில் புரிந்து கொண்ட பொருள் முதல்வாத கோட்பாட்டை அதன் அடிப்படையிலான இயங்கியலை கேள்விக்குள்ளாக்கின்றது. ஏனெனில் சமூகத்தை வெறும் வர்க்க அடிப்படையில் சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் சமூகங்களுக்கு இடையிலான இயக்கமாக காண்பதும் கீழ் கட்டுமானம் மற்றும் மேல் கட்டுமானம் என்பவற்றுக்கு இடையிலான இயக்கமாக மட்டும் காண்பது சரியானதாக இருந்தபோதும் போதாமையாகவே கருதப்பட வேண்டி உள்ளது. இது எந்த வகையிலும் மார்க்ஸின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாகாது. ஏனெனில் அவரது தத்துவம் அல்லது கோட்பாடு அவர் வாழ்ந்த சுழலில் அன்றைய அனுபவத்திற்கும் அறிவின் பரம்பல்களுக்கும் ஏற்ப உருவான ஒரு முன்னேறிய கோட்பாடு. இதை அவர்களும் அதன்பின் வந்த லெனினும் மாவோவும் தங்களது சமூகங்களுக்கு ஏற்ப மாற்றி வளர்த்து உரசிப் பார்த்தனர்.

இருந்தும் அவர்களது முயற்சி இன்று தோற்றுப் போய்விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் அதன்பின் வந்தோரின் அதிகாரமும் குறுகிய கோட்பாட்டுத்தளமும் ஆகும். முன்னேறிய கோட்பாடு மட்டும் இருப்பது போதாது மாறாக சுய மாற்றமும் சுய பிரக்ஞையும் அதன் வளர்ச்சியும் அவசியமானது என்பதே இத் தோல்விகள் சுட்டி நிற்கின்றன. ஆகவே “முன்னேறிய பிரிவினர்” என்பது புரட்சிகர கோட்பாட்டை மட்டும் உள்வாங்கிக் கொண்டவர்கள் அல்ல. மாறாக அதனுடன் சுயமான புரட்சிகர மாற்றத்தை தன்னளவில் உருவாக்கியவர்கள் அல்லது உருவாக்க முயற்சிப்பவர்கள் மற்றும் உடல் மற்றும் ஆன்மா சார்ந்த பிரக்ஞையில் தம்மை வளர்ப்பவர்களுமே ஆகும். ஆனால் பலர் மார்க்ஸிய தத்துவத்தை வேதாகமாக மாற்றம் இன்றி கடைபிடிப்பது மார்க்ஸின் கோட்பாட்டிற்கே எதிரானது என்பதை புரிந்துகொள்ள தவறுகின்றனர்.

ஏனெனில் இன்று நாம் வாழும் சூழல் பல புதிய பிரச்சனைகள் முரண்பாடுகளை மட்டுமல்ல பலவேறு விதமான அறிவுகளையும் தந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பார்வையும் இனிவரும் காலங்களில் அக் கோட்பாடுகளின் முக்கியத்துவமும் சமூக மாற்றத்திற்கான செயற்பாட்டில் அதன் முக்கியத்துவமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவாக இருக்கின்றன. இது போன்றே தனி நபர் மற்றும் அவர் மீதான சமூகத்தின் தாக்கம் அதானால் உருவான உளவியல் பாதிப்பு மற்றும் அதிலிருந்து எவ்வாறு வெளிவருதல் தனிநபர் இருப்பு பொறுப்பு தொடர்பான அக்கறை முக்கியத்துவம் என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டியனவையாக இருக்கின்றன. இதற்கு மேற்கத்தைய உளவியலை மட்டும் புரிந்து கொள்வது குறைபாடானதாகவே இருக்கும்.

இங்குதான் புத்தர் என்கின்ற கௌதம சித்தாத்தர் முக்கியத்துவம் பெறுகின்றார். மார்க்ஸியத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாழும் நாஸ்திகர்ளுக்கு புத்தர் மேலைத்தேய சோக்கிரட்டீசைப் போல ஒரு கீழைத்தேய தத்துவஞானி என்பதை ஏற்றுக் கொள்வது கஸ்டமானதே. ஆனால் வெகுவிரைவில் மேலைத்தேய சிந்தனையாளர்களில் ஒருவர் புத்தரின் தத்துவங்கள் சமூக மாற்றங்களுக்கான செயற்பாட்டிற்கு முக்கியமானவை என தமது பொருள்முதல்வாத மற்றும் மார்க்ஸிய அடிப்படையில் நிறுவும் போது காலனியாதிக்கத்திற்கு உட்பட்டு பழக்கப்பட்ட சிந்தனையாளர்கள் அதன் பின் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையாக நிற்கப்போகும் காலம் வெகுதுராமில்லை. இந்தப் போக்குக்குக் காரணம் நாம் இன்றும் நமக்கருகில் இருப்பதை புரிந்துகொள்ளாது மேலைத்தேய வெள்ளை ஆதிக்கத்திற்கு உட்பட்ட நமது சிந்தனையில் அடிமைப்பட்டிருப்பதுதான் என்றால் மிகையல்ல.

கடந்த காலங்களில் தனி மனிதர்கள் வெறும் பண்டங்களாக பொருட்களாக பார்க்கப்பட்டமைக்கும் மனித படுகொலைகளுக்கும் வரட்டுத்தனமான பொருள்முதல் வாத கண்ணோட்டம் ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையல்ல. இதுபோன்றதே ஆணாதிக்க பார்வையில் அமைந்த வன்முறை செயற்பாடும் அதன் வழிமுறையும். இவற்றிலிருந்து விடுபட புதிய அறிவுப் பரம்பல்களை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அதற்காக தேடலில் ஈடுபடவும் உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் இன்று நாம் அறிந்த அறிவு என்பது அறிவின் ஆழமும் பரம்பல்களும் அதிகரித்த போதும் மீளவும் சிறிதளவே என்பது எப்பொழுதும் புரிந்து கொள்ளப்படவேண்டிய ஒன்று. அதாவது அறிவு எப்பொழுதும் முழுமையாதல்ல என்பது எப்பொழுதும் நமது பிரக்ஞையில் இருக்கவேண்டும்.

அது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் தாம் முன்மாதிரியாக மட்டுமல்ல அடக்கப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிகள் என்ற பிரக்ஞை ஒவ்வொரு கணமும் அவர்களில் ஓளியாக வீசவேண்டும். இதுவே அடக்கப்பட்ட மனிதர்களுக்கு நம்பிக்கையையும் செயற்பாடுவதற்காகன உந்துதலையும் தரும். அல்லது மீளவும் மீளவும் அரசின் அடக்குமுறை இயந்திரங்களிள் அடக்குமுறையிலிருந்தே எதிர்செயற்பாடாகவே போராட்டங்கள் மேலேழுவது தவிர்க்கப்பட முடியாததாக இருக்ககும். மாறாக பிரக்ஞைபூர்வமான போராட்டமாக முன்னெடுக்கப்பட மாட்டாது.

இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில் நாம் ஒவ்வொரு மனிதரும் இந்த ஆணாதிக்க இருபால் மற்றும் ஐரோப்பிய வெள்ளை இனவாத மேல் அல்லது மத்திய வர்க்க சிந்தனைளால் பரந்தளவிலும் நமது சமூக அளவில் ஆணாதிக்க இருபால் மற்றும் சாதிய வர்க்க சிந்தனைகளால் நமது பால் பாலியல் உளவியல் மற்றும் பல வழிகளிலும் அடக்கப்பட்டு முடமாக்கப்பட்டவர்கள் என்பதையும் தமிழ் சுழலைப் பொறுத்தவரை புலிகளினதும் மற்றும் விடுதலை இயக்கங்களின் குறுகிய ஆயுத வன்முறை சித்தாந்தமும் இன்றும் மேலாதிக்கம் செய்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேணடும். மேலும் இதன் வழி நாம் பிரக்ஞையின்றி நம் மீதான ஒடுக்குமுறைகளுக்கே நாமும் பங்களிக்கின்றோம் என்பதை புரிந்துகொள்வதன் மூலம் அதை மாற்றுவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து வெளிவரமுடியும்.
 
மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் பேசும் மனிதர்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஒன்று சர்வதேச அளவில் இருப்பதன் தேவை நீண்டகாலமாகவே உணரப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முயற்சி ஒன்று 1998ம் ஆண்டு தமிழீழ மக்கள் கட்சியின் ஒரு முன்ணணியாக புலம் பெயர் நாடுகளில் உருவாக்க முயன்ற முயற்சியும் பல காரணங்காளால் கட்சியைப் போல வெற்றியளிக்கவில்லை. மேலும் அவ்வாறு ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்று இல்லாமையின் பாதகமான தன்மையை கடந்த வருடம் புலம் பெயர் நாடுகளில் நடந்த போராட்டங்களிலும் அதைத் தலைமை தாங்க எந்த ஒரு அமைப்பு முன்வராதது மட்டுமல்ல தமிழ் பேசும் மனிதர்களை அரசியல் அடிப்படையில் சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்த எந்த ஒரு அமைப்பும் இல்லாதிருந்ததும் மிகவும் துரதிர்ஸ்டமானதே. 

நாடு கடந்த அரசம் மற்றும் அதுபோன்ற பிற அமைப்புகளும் இருக்கின்றன என்று சிலர் கூறலாம். இவர்களும் அவர்களது ஊடகங்களும் மீளவும் புலிகளின் சிந்தாத்த அரசிலையே தொடர்கின்றது மட்டுமல்ல புலம் பெயர் மனிதர்களிடம் ஒரு வகையான அரசியல் வியாபாரரீதியான தொடர்பாடலையும் செயற்பாட்டையுமே முன்னெடுக்கின்றன. கடந்த காலங்களில் நடந்த தவறுகளுக்கு புலம் பெயர் மனிதர்களிடம் பெற்ற நிதிகளுக்காக விபரங்களை எதையும் இதுவரை மனிதர்கள் முன்வைக்கவில்லை.  மாறாக புதிய செயற்பாடுகளை பல்வேறு பிரிவுகளாக அதுவும் கொள்கை அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செயற்பாட்டால் கூட ஏற்றுக்கொள்ளலாம் மாறாக பிரபாகரன் இருக்கிறார் இல்லை என்றடிப்படையில் அல்லவா பிரிந்து செயற்படுகினறனர்.

மேலும் சிலர் இலங்கை அரசாங்கத்துடன் அல்லது இனப் பிரச்சனைகளுக்கு காரணமான இனவாத கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என பிரிந்து இருக்கின்றனர். புதிய கருத்துக்கைளை உள்வாங்கியவர்களாகவோ அல்லது பெண்கள் தொடர்பான முன்னேறிய கருத்துகள் உடையவர்களாகவோ இவர்கள் இன்னும் இல்லை என்பது ஒரு துர்ப்பாக்கியமானதே. இனிவரும் காலங்களில் அமைப்பின் அங்கத்துவத்தில் மட்டுமல்ல அதன் தலைமைக் குழுக்களிலும் பெண்கள் சம பலத்துடன் எண்ணிக்கையுடன் இருக்க வேண்டியது ஆணாதிக்க பாதையில் செல்வதை சிறிதளவாவது தடுத்து நிறுத்த உதவுவது மட்டுமல்ல ஆரோக்கியமாக செயற்படவும் வழிவகுக்கும். இவற்றுடன் புலம் பெயர் நாடுகளின் தமிழ் பேசும் மனிதர்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்டு தேர்தல்களிலும் நின்று வெற்றி பெறுகின்றனர். தமிழ் பேசும் மனிதர்களும் “தமிழ் பேசும் மனிதர் தேர்தலில் நிற்கின்றார்” என்பதற்காக தமது வாக்கை அளித்து வெற்றிபெறச் செய்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட அமைப்புகளாலும் பின்பு குறிப்பிட்ட பிரதிநிதிகளாலும் வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்களுக்கு எந்தவிதமான ஒரு நன்மையும் இல்லை. காரணம் இவர்களிடம் ஒரு அமைப்பின் கீழான ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கும் மேலாக நிதி பங்களித்தவர்களுக்கோ அல்லது வாக்களித்தவர்களுக்கோ நம்பகத்தனமாக பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் இல்லை. ஏனெனில் அவ்வாறான ஒரு அமைப்பு கட்டுப்பாடு இல்லை. ஆகவே இவர்களிடம் இது தொடர்பாக சுய பிரக்ஞை இருக்கும் என்பதை எவ்வாறு எதிர்பார்ப்பது.

ஆகவே புலம் பெயர் வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்களுக்கும் நம்பகத்தனமாகவும் பொறுப்பாகவும் இருப்பதற்காக ஒரு பொதுவான அமைப்பின் கீழ் செயற்படுதலுக்கான தேவை இன்று உள்ளது. இதுவே நீண்ட கால நோக்கில் அரசியல் அடிப்படையில் சாதகமாகவும் இருக்கும்.  இதன் மூலம் பரஸ்பரம் நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன் வடக்கு கிழக்கு மனிதர்களின் உடனடி தேவைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் குறுகிய கால திட்டங்களுக்கும் நீண்ட கால அடிப்படையிலான திட்டங்களுக்கும் தமது பங்களிப்பை வழங்கலாம். வடக்கு கிழக்கு மனிதர்கள் பல தேவைகளை இன்று எதிர்நோக்கி இருந்த போதும் பல புலம் பெயர் அமைப்புகள் அந்த அக்கறை இன்றி இருப்பதையே காணமுடிகின்றது.

மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாக்கும் அமைப்பு அல்லது கட்சி என்பது அதன் பெயரில் உள்ளதைப் போன்று மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுழலை பாதுகாப்பதற்குமே முதன்மையாக செயற்படவேணடும். கடந்த காலங்களைப் போன்று கருத்துகளுக்கோ கோட்பாடுகளோ சொற்களுக்கோ முதன்மை கொடுக்காது அதற்காக மனிதர்கள் செயற்படாது மாறாக அதனடிப்படையில் மனித நலன்களைப் பெறுவதற்கான வழிகாட்டியாகவே அவை உதவவேண்டும், இருக்க வேண்டும். மற்றும் அனைத்துக் கோட்பாடுகளுமான மார்க்ஸியம் பெண்ணியம் தலித்தியம் இருப்பியல் உளவியல் பின் நவீனத்துவம் சூழலியல்…மற்றும் ஆன்மீகவியல் அல்லது பிரக்ஞையியல் மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் சுழல் பாதுகாப்பிற்கும் பயன்படவேண்டும். எதுவும் முடிந்த முடிவல்ல…மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன…அதற்கேற்ப நாமும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே இப்பொழுது வரவிருக்கும் தேர்தல் மிக குறுகியா காலத்தில் நடைபெறவிருப்பதால் அதில் புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி செயற்பட கால அவகாசம் போதாது. ஆகவே இனிவரும் காலங்களில் இப்படியான சந்தர்ப்பங்களில் செயற்படக் கூடியவாறு முன்கூட்டியே தயாராக இருப்பது பல்வேறு வகைகளில் அடக்கப்படும் மனிதர்கள் சார்பாகவும் நீண்டகால நோக்கில் சமூகமாற்றத்திற்காக செயற்படுவதற்கும் சாதகமாக இருக்கும். இது தொடர்பாக இன்றே சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும். அதேவேளை நடைபெறப் போகும் பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்காவின் இனவாத கட்சிகளின் நிறங்களான நீலத்தையோ பச்சையையோ வடக்கு  கிழக்கில் பிரதிநிதித்துவபடுத்துவதற்குப் மாறாக புதிய ஒரு நிறத்தை தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நிறத்தை நிலைநாட்ட சிறிதளவாவது முயற்சிப்பது வடக்கு கிழக்கு வாழ் மனிதர்களைப் பொறுத்தவரை பயனுள்ளதாக இருக்கும்.

புலிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’! வியூகம் அமைக்கின்றார் ஆர் சம்பந்தன். : த ஜெயபாலன்

Sampanthan_Rதமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் பற்றிய முடிவை இறுதிக் கட்டத்திலேயே அறிவிக்க உள்ளது. 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை. இறுதிக் கட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதன் மூலம் ஆசனங்கள் வழங்கப்படாதவர்கள் ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியில் இறங்கிவிடாமல் தடுக்கவே அக்கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இரகசியமாக வைத்திருப்பதாக தேசம்நெற்றுக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனங்கள் வழங்கப்பட மாட்டாது என அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்து இருந்தார். இச்செய்தி முதன்முறையாக பெப்ரவரி 10ல் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. புலிகளால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு ரிஎன்ஏ இல் ஆசனம் இல்லை! லண்டனில் ஆர் சம்பந்தன் : த ஜெயபாலன் இதே தகவலை எம் கெ சிவாஜலிங்கமும் பெப்ரவரி 17ல் தி ஐலண்ட் பத்திரிகைக்குத் தெரிவித்து இருந்தார். http://www.island.lk/2010/02/17/news30.html

தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் யார் போட்டியிடுவது என்பது இறுதி நேரத்திலேயே வெளியிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் விடுதலைப் புலிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேசி ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது கடினமாக்கப்படும் மேலும் சுயேட்சையாக நிற்பது பற்றிய முடிவுகளை எடுப்பதற்கும் கால அவகாசம் இருக்காது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘அரசியல் முள்ளிவாய்கால்’ கட்ட ஆர் சம்பந்தன் குழு தயாராகி வருவது தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமநாதனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்த காலகட்டத்தில் அவரினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நியமிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரானவர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பாக மாறிய போதும் தங்கேஸ்வரி கதிர்காமநாதன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலேயே அங்கம்வகித்தார். ஜனாதிபதித் தேர்தலில் கூட ஆர் சம்பந்தனுக்காக எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க வாக்களித்தவர்.

தற்போது ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்க்கால்’இல் முதல் களப்பலியாகி உள்ளார் தங்கேஸ்வரி கதிர்காமநாதன். அவரைத் தொடர்ந்து கஜேந்திரன் செல்வராஜ் (யாழ்ப்பாணம்), பத்மினி சிதம்பரநாதன் (யாழ்ப்பாணம்), சொலமன் சிறில் (யாழ்ப்பாணம்), ரசீன் மொகமட் இமாம் (தேசியப் பட்டியல்), சந்திரகாந்தன் சந்திரநேரு (தேசியப்பட்டியல்), ரி கனகசபை (மட்டக்களப்பு), சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (மட்டக்களப்பு), பாக்கியசெல்வம் அரியேந்திரன் (மட்டக்களப்பு), சதாசிவம் கனகரட்ணம் (வன்னி), சிவநாதன் கிசோர் (வன்னி), சதாசிவம் கனகரத்தினம் (வன்னி), கெ துரைரத்தினசிங்கம் (திருகோணமலை), வில்லியம் தோமஸ் (திகாமடுல்ல) மற்றும் எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா, விநோதரலிங்கம் சுப்பிரமணியம் ஆகியோர் ஆர் சம்பந்தனின் ‘அரசியல் முள்ளிவாய்கால்’ இல் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டாலும் வெல்லப்படக் கூடிய ஆசனங்கள் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தங்கேஸ்வரி கதிர்காமநாதன் போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆசனம் மறுக்கப்படவுள்ள மற்றுமொருவர் பத்மினி சிதம்பரநாதன். பத்மினி சிதம்பரநாதனுக்கும் ஆசனம் மறுக்கப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு பெண் வேட்பாளர்கள் யாரும் இருக்கின்றார்களா என்பது சந்தேகமே.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஆர் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் நிறுத்தப்படுவார்கள் என தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தங்கேஸ்வரி கதிர்காமநாதன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட முடிவெடுத்து உள்ளார். எம் கெ சிவாஜிலிங்கம், என் சிறிகாந்தா ஆகியோர் விக்கிரமபாகு கருணாரட்னவின் என்எஸ்எஸ்பி கட்சியில் போட்டியிடுவது பற்றி பேசிவருகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க முன்னால் ஈபிடிபி உறுப்பினரும் கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தனின் ஆலோசகருமான கலாநிதி விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளதாகத் தெரியவருகின்றது. கலாநிதி விக்கினேஸ்வரன் ஆர் சம்பந்தனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடக் கூடிய மற்றுமொருவர் ஓய்வுபெற்ற நீதிபதி விக்கினேஸ்வரன் எனத் தெரியவருகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை ஆதரித்தவர். இவரது கருத்துக்களே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பலம் சேர்த்து இருந்தது.

கடந்த தேர்தல் போலல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் கடுமையான போட்டியை பலவீனமான நிலையில் எதிர்கொள்ள உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுக்கின்ற சக்திகள் இல்லாத காரணத்தினால் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சியாக மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே உள்ளது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோக அரசியல் இப்பாராளுமன்றத் தேர்தலுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் உத்தியோகத்தர்கள்!

election-commisone.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த உத்தேசிப்பதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றுது.

இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை தேர்தல் தலைமை செயலகத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 2 இலட்சத்து 50 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.

தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அபேட்சகர்களின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வேட்புமனு ஏற்கும் பணி ஆரம்பம்: அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும்,  ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென கட்சி வட்டாரங்கள் கூறின. ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.