::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

விஸ்வமடு விமானத் தாக்குதல்

mi24-1301.jpgகிளிநொச்சி மாவட்டம் பிரமண்டான் குளம், விஸ்வமடு பகுதிகளில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கடும் விமானத்தாக்குதல்கள் வெற்றியளித்திருப்பதாக விமானப் படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணக்கார தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ.24 ஜெட் விமானங்களே இனங்காணப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

தாக்குதல்களால் புலிகளின் இடைத்தங்கல் முகாமொன்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் சந்திக்கும் ஸ்தலமொன்றும் அழிக்கப்பட்டிருப்பதாக விங் கமாண்டர் தெரிவித்தார். பிரமண்டான்குளத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் ஸ்தலமொன்றை இலக்கு வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. விஸ்வமடுவிலிருந்து ஒரு கிலோமீற்றர் தென்கிழக்காக அமைந்துள்ள புலிகளின் இடைத்தங்கல் முகாமை இலக்கு வைத்து பி.ப. 2.05 மணிக்கு எம்.ஐ. 24 விமானம் கடும் தாக்குதலை நடத்தியது.

அப்பகுதி நோக்கி முன்னேறி வரும் முன்றாம் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்கள்

wanni.jpgமுல் லைத்தீவில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் இடம்பெயர்வதற்கான பாதுகாப்பு வலயங்களை இராணுவம் பிரகடனப்படுத்தியுள்ளது.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாளை, ஆனந்தபுரம், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கனை, மாத்தளன், முள்ளிவாய்க்கால், வள்ளிபுனம், தேவிபுரம், மூங்கிலாறு, உடையார் கட்டு, சுகந்திரபுரம், கைவேலி, ரெட்பானா கிராமம் ஆகிய இடங்களில் தற்போது ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். குறித்த மக்கள் மனிதக் கேடயங்களாக பயன்படுத்தும் நோக்கில் புலிகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களை தேவிபுரம், உடையார்கட்டு, சுகந்திரபுரம், சுகந்திரபுரம் கொலனி, சுகந்திரபுரம் மத்தி, கைவேலி வடக்கு, இருட்டு மடு போன்ற இடங்களுக்கு செல்லுமாறும் இந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.

குறித்த பிரதேசங்கள் யுத்த சூனியப் பிரதேசமாகவும் இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதன் மூலம் யுத்தத்தின் தாக்கங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியுமாக இருக்கும். ஆயினும் புலிகள் தங்களால் மனிதக் கேடயங்களாக குறித்த மக்களை பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் இடம்பெயர அனுமதிப்பார்களா என்பதே கேள்விக்குறியாகும். முல்லைத்தீவு பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை குறித்த வலயங்களுக்கு செல்லுமாறு படைத்தரப்பு அறிவித்துள்ளது

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.

38 புலிகளின் உடல்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 38 உடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உடல்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்தபோதிலும், புதுக்குடியிருப்பிலிருந்து தகுந்த பதில் வராததால் உடல்களை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியது. மிகவும் பழுதடைந்துள்ள இவை துர்நாற்றம் வீசுவதினால் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் வவுனியாவிலேயே அடக்கம் செய்ய பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

தர்மபுரத்தில் நிலத்தின் கீழ் புலிகளின் டீசல் களஞ்சியத் தொகுதி

_army.jpg முல்லைத்தீவு தர்மபுரம் பிரதேசத்தில் நிலக்கீழ் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய டீசல் களஞ்சிய தொகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் 225 லீற்றர்களைக் கொண்ட 300 பிளாஸ்டிக் பீப்பாக்களுக்குள் இந்த டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், அவை சுமார் இரண்டு வருடங்களுக்கு போதுமானவையெனவும் குறிப்பிட்டார். கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை தர்மபுரம் நகருக்குள் பிரவேசித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இங்கிருந்து தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினரே டீசல் களஞ்சியசாலைத் தொகுதியையும் கண்டு பிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட இந்த தர்மபுரம் பிரதேசத்திலிருந்தே புலிகளின் குண்டு தயாரிக்கும் பிரதேசம் ஒன்றையும், மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய டீசல் களஞ்சியசாலைத் தொகுதி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சுமார் ஒரு ஏக்கர் பரப்புள்ள பாரிய தென்னந் தோப்பின் கீழ் நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை அடிக்கு கீழாகவே இந்த களஞ்சியத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இலை, குலைகளால் மிகவும் தந்திரமான முறையில் இந்த டீசல் பீப்பாக்கள் நிலக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த டீசல் களஞ்சியத்திற்கு அடையாளமாக அந்த தென்னந் தோப்பிலுள்ள மரங்களில் சில குறியீடுகளும், அது களஞ்சியப்படுத்தப்பட்ட திகதி மற்றும் அதன் தொகை என்பன எழுதப்பட்டிருந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், படையினரின் கடுமையான தாக்குதல்களை தவிர்க்கும் வகையில் புலிகளால் அமைக்கப்படும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், மண் அரண்கள் அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாவிப்பதற்கும் இங்கிருந்தே டீசல் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஷெல் குண்டுகள் விழுந்து எரி பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளாத வகையில் நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட நீரோடையொன்றிலேயே டீசல் பீப்பாக்கள் வைக்கப்பட்டு மேலே மணல் மற்றும் காய்ந்த தென்னம் ஓலைகளால் அவை மூடப்பட்டிருந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

துரித கதியில் முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இவற்றை மீட்கக்கூட நேரமில்லாது அவற்றை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் படையினர் சுட்டிக்காட்டினர். வன்னியிலுள்ள மக்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து டீசலும் அரசாங்கத்தினால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டதெனவும் படையினர் கூறினர்.

கிளிநொச்சியை இழந்த புலிகள் கிளிநொச்சியில் முன்னெடுத்த சகல நிர்வாக நடவடிக்கைகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தர்மபுரம் பிரதேசத்திலேயே முன்னெடுத்துள்ளமை இங்குள்ள தடயங்கள் மூலம் தெரிய வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

சிதைவடைந்த நிலையில் புலிகளின் விமானப் பாகங்கள் கண்டுபிடிப்பு

1801.jpgசிதைவடைந்த நிலையிலுள்ள புலிகளின் விமானம் ஒன்றை இரணைமடுவுக்கு வடக்குப் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவு, காட்டுப் பகுதிக்குள் படை நடவடிக்கைளை மேற்கொண்டுள்ள இராணுவத்தின் 57வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதலின் போதே படையினர் அந்த விமானத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் கைப்பற்றிய இராணுவத்தினர் இரணைமடு குளத்திற்கு தென் கிழக்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை படையினர் கைப்பற்றினர். அந்தப் பிரதேசத்தில் முன்னேறி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே சிதைந்த விமானம் ஒன்றை படையினர் கண்டு பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் இந்த விமானத்தை தமது பயிற்சி நடவடிக்கைகளுக்கு பாவித்திருக்கலாம் என படையினர் சந்தேகிப்பதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர், இந்த விமானம் தொடர்பாக விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் பெற்ற விசேட குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விமானப் படையினரின் பூரண ஆராய்ச்சிக்குப் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம்,  கண்டுபிடிக்கப்பட்ட பழுதடைந்த விமான உறுதிப்பாகங்கள் இலங்கை இராணுவத்தின் விமான உறுதிப்பாகங்களாக இருக்கலாம் என்றும் சில இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்

_army.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றினையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றினையும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடந்த 42 மணித்தியாலங்களாக இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து அப் பகுதியிலிருந்து எட்டு புலிகளின் சடலங்களை படையினர் மீட்டிருப்பதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  புலிகளின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலையினை படையினர் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் முற்றுகையிட்டனர். இதில் பதினொரு படகுகள் இருந்துள்ளன. இரண்டு டோரா படகுகளும் இரண்டு வோட்டர் ஜெட்களும் ஏழு சிறிய படகுகளுமே இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவே இதனைக் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் (17) மாலை 5.30 மணியளவில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற கடும் மோதலைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு கிழக்கில் அமைந்திருந்த புலிகளின் பாரிய முகாமொன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரிய கட்டடங்களைக் கொண்டிருந்த இம்முகாமில் சாதாரண பதுங்குகுழி ஒன்றுடன் கூரைகளுடன் கூடிய பதுங்கு குழிகள் பல இருந்ததாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

இம்முகாமுக்குள் 40 x 20 அடி கொண்ட இரண்டு கட்டடங்களும் 20 x 30 அடி கொண்ட ஆறு கட்டடங்களும் கூரைகளுடன் கூடிய ஆறு பதுங்கு குழிகளும் காணப்பட்டதாகவும் இராணுவத்தினர் கூறினர். புதுக்குடியிருப்புக்கு கிழக்கே படையினருக்கும் புலிகளுக்குமிடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கடும் மோதலில் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டிருப்பதுடன் படையினருக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் சுட்டிக் காட்டியது.