ஏகாந்தி

ஏகாந்தி

இலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டார் – கருணாநிதி

karunanithi.jpgஇலங்கை தமிழர் பிரச்சனையை திருமாவளவன் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக்கிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ‘முரசொலி’ யில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

50 ஆண்டு கால வேதனை வரலாறு கொண்ட இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தக் கருத்து என்றும், அதே நேரத்தில் தனித்தனி கட்சிகளின் அணுகுமுறை என்றும், பல்வேறு கோணங்களில் மக்களுக்கு திசைகள் அறிவிக்கப்பட்டு, அவர்களைத் திண்டாட்டத்திலும், திகைப்பிலும் தள்ளி விடப்படுகிற செயல்கள் பஞ்சமில்லாமலே நடைபெற்று வருகின்றன.

அனைத்துக் கட்சிகளை ஒருங்கிணைத்து அறவழியில் எத்தனை எழுச்சியைத் தமிழ் மக்கள் வாயிலாக உணர்த்த வேண்டுமோ, அந்த வழிகளில் எல்லாம் உணர்த்தி விட்டு, பிரதமரையே சந்தித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை சென்று முயற்சி மேற்கொள்வது என்ற திட்டத்துடன் இந்த அறப்போரில் ஒரு அத்தியாயம் முடிவுற்றது.

ஆனால் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாததற்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகளின் நடவடிக்கைகள் காரணமாக, இது ஏதோ இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கும் பிரச்சினை என்றில்லாமல், காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனை என்ற கோணத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி, வெற்றி தோல்வி, ஆட்சி மாற்றம் என்பன போன்ற அரசியல் கட்சி தத்துவப் பிரச்சனைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும் ஒரு சில தலைவர்கள் இணைத்துக் குழப்புவது, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பிரச்சினையை விட்டு, வெகு தொலைவு போய் விட்டதாகவே தெரிகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை சென்று வருவதற்கு இயலாத காரணம் எதுவும் இருந்தாலும் அதனையும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கலாம். அல்லது எது தக்க காலம், நேரம் என்பதையாவது எடுத்துரைத்திருக்கலாம். அப்படியெதுவும் நடைபெறாதது, மாநில அரசைப் பொறுத்தவரையில் வேதனையான நிலையாக உணரக் கூடியதுதான்.

இப்போது வெளியுறவுத் துறைச் செயலாளர் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்துப்பேசி விட்டு வந்துள்ளார். அதன் விபரங்களும் சரியாக வெளிவரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும். கடந்த காலத்து ஜெயவர்த்தனே-ராஜீவ் ஒப்பந்தம் பரிசீலிக்கப்படலாம் என்பது போன்ற செய்திகள் உள்ளனவே தவிர, அது வரையில் போர் நிறுத்தம் என்று கூட அறிவிக்கப்படவில்லை. போர் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ற பெயரால் அப்பாவித் தமிழர்கள் அன்றாடம் அங்கே உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயவர்த்தனே-ராஜீவ் காந்தி உடன்பாடு பற்றிப் பேசி முடிக்கிற வரையில் போர் நிறுத்தப்படுகிற முயற்சியை மேற்கொள்வதில் பெரிய தவறு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை.

அந்த ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களையும், உடன்பாடு பற்றிய எண்ணங்களையும், ஒப்புதலையும் இலங்கைத் தமிழர்கள் மீது இங்கிருந்து நாம் திணித்திட முனைவதில்லை என்ற நிபந்தனையுடன் அணுகுவதே ஆரோக்யமானது மட்டுமல்ல, அமைதி வழியும், அமைதி நிலையும் இலங்கையில் “மறு பிறவி” எடுப்பதற்கு ஏற்றதுமாகும். இது எப்படி உருவாகும், எப்படித் தீர்வாகும் என்ற வினாக்களுக்கு விடை கிடைப்பதற்கு முன்னர் இப்போது நம்மைப் பொறுத்தவரையில், நமது தமிழ் மாநில அரசைப் பொறுத்த வரையில் இதனை மையமாக வைத்து ஏதேனும் விஷப் பரிசோதனைகளில் இறங்கி இதனை வீழ்த்தி விட்டுத் தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாமா என்றும் அவர்களோடு சேர்ந்து நாமும் பலன் பெற முடியுமா என்றும் சில மூளைகள் யோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.

அம்மையார் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் இந்த ஆண்டு முடிவதற்குள் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என்றும், சட்டமன்றத்துக்கும் எப்படியாவது தேர்தல் வரவழைக்க வேண்டும் என்பது தான் அவரது விருப்பம் என்றும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருப்பதாக தனது தொண்டர்களுக்கு உறுதி அளிப்பது எதற்காக என்று எல்லோர்க்கும் புரியுமென நம்புகிறேன்.

மாநிலத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திட வேண்டிய கழக ஆட்சியை, இது போன்ற பிரச்சினைகளில் வன்முறை அராஜகம் போன்ற கிளர்ச்சிகளை உசுப்பி விட்டு, கலைத்து விடலாம் என்று அவர் கருதுகிறார். அப்படிக் கலைத்தால் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, நாம் மூன்றாவது முறையாக ஆட்சியை இழக்க நேரிடலாம்.

திட்டமிட்டு, இந்த அம்மையார் நடத்திட முனையும் `அரக்கு மாளிகை சதி’யை நாம் புரிந்து கொண்டு தானிருக்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக நாம் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஜனவரி 12ம் நாள் என்னிடம் விவரித்து முடிவெடுக்க வேண்டுமென்று என் வீட்டுக்கு வந்த டாக்டர். ராமதாஸ், கி.வீரமணி, தொல். திருமாவளவன் ஆகிய மூவரும், `முதல்வர் எடுக்கிற முடிவை ஏற்று அவ்வாறு திட்டம் வகுப்போம்’ என்று தான் உறுதி அளித்தனர்.

உடனடியாக டெல்லியுடன் பேசுமாறு வேண்டினர். நானும் அன்று திருமங்கலம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக் கூட கவனிக்க நேரமில்லை. அந்த மூவருடனும் அந்தச் சமயத்திலும் ஒரு மணி நேரம் என்கிற அளவுக்கு பேசி, அனுப்பி வைத்தேன்.

ஆனால் என்னைக் கலந்தே எதுவும் நடவடிக்கை என்று சென்றவர்கள், என்னைக் கலந்து பேசாமலே அந்த மூவரில் ஒருவர், நண்பர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக உண்ணாவிரதம் என அறிவிக்கப்பட்ட நிலையில், உண்ணாவிரதப் பந்தலில், சிங்கள அரசை விட இங்குள்ள காங்கிரஸ் கட்சியுடன் தான் தமக்குப் போராட்டம் என்பது போல விரிவுரைகள் ஆற்றிக் கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையின் உயிரோட்டத்தை எப்படி அங்கே போராளிகளுக்குள் நடந்த சகோதர யுத்தம் பலவீனப்படுத்தியதோ, அதைப் போலவே, இலங்கைத் தமிழர்களுக்காக வாதாடிடும் நமக்குள்ளேயும் `சகோதர யுத்தங்கள்’ எல்லாம் மொத்தப் பிரச்சினையை மூளியாக்கி விடுகிற கதை நடப்பதற்குத் தான் காரணமாகி வருகின்றன.

எப்படியோ, மூவர் கூடி முதல்வருடன் பேசினோமே, அடுத்த நாளே, இப்போது உண்ணா நோன்பு அறிவிக்கிறோமே என்று கூட எண்ணாது, அரசு பேருந்துகள் பல எரிக்கப்பட்டனவே இத் துணை அவசரத்துடன், இப்போது நிறுத்திக் கொண்டிருக்கிறோமே என்பதை சற்றுக் கூட சிந்திக்காமல் `இலங்கை தேசியக் கொடி எரிப்பு’ என்று திருமாவளவன் அறிவித்திருப்பது ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் அவருக்குப் புரிகிறதோ இல்லையோ, இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுகிறவர்களுக்கு ஒன்று புரிகிறது.

தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்த வேண்டும் என்பதையும், காங்கிரஸ் ஆட்சிக்கு இனி இங்கே இடமே இல்லை என்று சபதம் செய்வதையும், அப்படியொரு ஒட்டு மொத்தமான அராஜகப் புரட்சி மூலமாகவாவது, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட முடியாதா என்ற கவலை மிகுந்த ஆவலால் தானே தவிர வேறல்ல.

உடன் பிறப்பே கேரளத்து மாவலி மன்னனை வீழ்த்தியோர் கதையை மறந்து விட முடியுமா?

கருணாநிதி வீட்டுக்குப் போகவும் தயார், தமிழர்களின் ஒட்டுமொத்த நல் வாழ்வுக்காக காட்டுக்குப் போகவும் தயார். அது இலை தழை நிறைக் காடாகவும் இருக்கலாம், அல்லால் இடு காடாகவும் இருக்கலாம், எதுவாயினும் ஏற்பதில் எனக்கொரு மகிழ்ச்சியே! அதுவும் என் நாட்டுக்காக-நண்பர்களினால் கிடைத்தால், இரட்டிப்பு மகிழ்ச்சியே!

முதலில் மூவரும் கலந்து யோசிப்போம்-அதில் ஒரு முடிவெடுப்போம் என்பது பின்னர் தனித்தனியே முடிவெடுத்து அறிவித்து அதற்கேற்ப செயல்படுவது, என்னையே இறுதியாகப் பழி கூறத்திட்டமிடுவது நல்ல அரசியல் தந்திரங்களாக இருக்கலாம். அதற்கு நான் ஒருவன் மயங்கி பலிக்கடா ஆகத் தயாராக இருக்கலாம். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கள் வளர்த்து எம்மிடம் அளித்து விட்டுப் போன இந்த இயக்கத்தை ஆம், ஒரு கோடி உறுப்பினர் கொண்ட இந்த இயக்கத்தை பலியிட முனைவோருக்குத் துணை போக நான் தயாராக இல்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியுடன் சேர்ந்து திருமாவளவன் நாடகம்: ஜெயலலிதா

jayalalitha-1701.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும் திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.இதனால்,இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.

நான்கு நாள்களாக பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, “தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்” என்று காவல்துறை அறிவித்தது.இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் திமுக இருப்பது தெளிவாகியுள்ளது.

ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி.இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் – டாக்டர் ராமதாஸ்

இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.

இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும். உலகையே உலுக்க வேண்டும்:

இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.

இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க பெப்ரவரி 15 இல் வெனிசூலாவில் சர்வசன வாக்கெடுப்பு

vote.jpgவெனி சூலாவின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க நடத்தப்படவுள்ள சர்வசன வாக்கெடுப்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். சுமார் ஆறு எம். பிக்கள் எதிர்த்து வாக்களித்ததுடன் ஐந்து பேர் நடுநிலைமை வகித்தனர். 167 எம்.பிக்கள் சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்தும் அரசியல் அமைப்பில் மாற்றம் கோரியும் வாக்களித்தனர்.

வெனிசூலாவில் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தி வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பை மாற்றம் செய்ய வேண்டுமா இல்லையா எனக் கோரியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. சாவெஸ் 1990 ஆம் ஆண்டு வெனிசூலாவின் ஜனாதிபதியாகப் பதிவியேற்றார். இரண்டு முறைகள் தொடர்ந்தும் வெற்றி பெற்று 1999 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவி வகித்த அவருக்கு தொடர்ந்து பதவியில் இருக்க முடியாமல் போனது. இதனால் முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்து 2005 வரை தொடர்ந்தும் ஜனாதிபதியாக கடமையாற்றினார். தற்போது 2012 இல் பதவி முடிவடைவதால் மீண்டும் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் இதற்கான ஆணையை வழங்கியுள்ளதுடன் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தும் விடயத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்கிவிட முயற்சிக்கப்படுகின்றது. இதற்கான ஆணையை மக்களிடம் வேண்டியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதிகள் இதுவரை தீர்மானிக்கப்படாதபோதும் பெப்ரவரி 15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் என ஜனாதிபதி சாவெஸ் சொன்னார். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிநபர் ஆட்சி கொடுங்கோலுக்கு வழிகோலுமென இம் மாணவர்கள் கோஷமிட்டனர். வீதிகள், பெருந்தெருக்களை மறித்து போக்குவரத்துகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையூறு உண்டு பண்ணினார்கள். பொலிஸார் பொல்லடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து இவர்களைக் கலைத்தனர்.

வெனிசூலாவில் மிக நீண்ட காலம் எம். பிக்களாகவும், ஜனாதிபதியாகவும் உள்ளோர் பண மோசடி, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதால் பதவிக் காலங்களை மட்டுப்படுத்த வேண்டும். எனவே மக்கள் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்பொன்று கருத்து வெளியிட்டுள்ளது. வெனிசூலாவை மிகத் திறைமையுடன் ஆள்வதற்கு சாவெஸைத் தவிர இன்னுமொருவர் இல்லை. எனவே அவர் அதிகாரத்தில் தொடரவே வாக்களிப்போம் எனச் சிலர் கூறினர்.

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம் – பாதுகாப்பு செயலர் கோதாபய

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது . தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இந்தப் பேட்டியினை ரூபவாஹினி, நேத்ரா டிவி. தெரண, ஐ.டி.என் ஆகிய தொலைகாட்சிகள் நேரடியாக ஓளிபரப்பின. யுத்த நிலைவரம், அரசியல் நிலைமைகள், ஊடகங்கள் என பல விடயங்கள் தொடர்பாக தனது பேட்டியில் அவர் விளக்கமளித்தார். கோதாபய ராஜபக்ஷவின் பேட்டியின் சாரம்சம் வருமாறு

வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இனிமேல் தப்பிவிட முடியாது.

எந்தவேளையிலும் பிடித்தே தீருவோம். தண்டிக்கப்பட வேண்டியவர் நிச்சயம் தண்டிக்கப்படுவார். பயங்கரவாதிகளான புலிகளுக்காக குரல் கொடுப்பவர்கள் எவராக இருப்பினும் எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் தேசத்துரோகிகளாவர். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்து இலங்கையை ஒரே நாடாக மாற்றியமைப்பது மட்டுமே எமது ஒரே இலக்கு. இதைவிட்டு சில்லறைத்தனமான விடயங்களில் ஈடுபாடு காட்டுவது அர்த்தமற்றது.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்டால் இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தமிழீழம் உருவாகியிருக்கும். ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறு சவால்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு நாட்டை ஒரு பாரிய யுத்த வெற்றிக்குக் கொண்டுசென்றிருக்கின்றார். ஜே.ஆர். முதல் சந்திரிகா வரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தற்போது எமக்கு வெற்றி கிட்டியதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது படையினரின் தியாகமாகும். போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்கின்றனர். இதுவே வெற்றியின் அடிப்படை ஆகும்.

இது தவிர ஜனாதிபதியின் தலைமைத்துவமும் மிக முக்கியமான காரணியாகும். ஜனாதிபதிக்கு தேசிய சர்வதேச மட்டத்திலிருந்து பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. பொருளாதார ரீதியிலும் பல சவால்களுக்கும் அவர் முகம்கொடுத்தார். ஆயுதங்களை கொள்வனவு செய்வதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இந்த சவால்களுக்கு முகம்கொடுத்து சிறப்பானதொரு அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்திருந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் சீனா, பாகிஸ்தான் ஜனாதிபதிகளுடன் பலமுறை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். அதன் மூலம் கிடைத்த உதவி ஒத்துழைப்புகளினால் தான் இந்த வெற்றியை அடைய முடிந்தது.
இராணுவத்தினர் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் உலகத்தையே கவர்ந்திருக்கின்றனர்.

உலகத்திலேயே சிறந்த இராணுவத் தளபதியை இலங்கை கொண்டுள்ளது என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் என்னிடம் ஒரு தடவை தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். இராணுவத்தின் தலைமைத்துவம். அதுவும் மிக முக்கியமானதாகும். இராணுவத் தளபதியின் பொறுப்பு தேர்ச்சி அனுபவங்கள் இத்தருணத்தில் இன்றியமையாதவை.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போராட்டங்களில் பெற்ற வெற்றிகளுக்கு தரைப்படையினரின் பங்களிப்பு அளப்பரியது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மிகவும் சரியான யுக்திகளைக் கையாண்டு எதிரிகளை அழித்து வருகின்றார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும் யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும்.

 ஆயுதம் முக்கியமல்ல வெற்றிக்கு ஆயுதம் முக்கியமல்ல. அந்த ஆயுதத்திற்குப் பின் நிற்கின்ற மனிதனே முக்கியமானவனாவான். அந்த மனிதனுக்கு தைரிய மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும். அதனை நாம் திறம்பட செய்து கொண்டிருக்கின்றோம். அதனால்தான் இவ்வாறான தொடர் வெற்றிகளை பெற முடிந்தது.

விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகளை எதிர்கொண்டவிதம் குறித்து இலங்கை கடற்படையின் நடவடிக்கைப் பணிப்பாளருடன் அரை மணிநேரம் கலந்துரையாடுவதற்கு இஸ்ரேலிய கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொதுமக்களுக்குக் குறைந்தளவு பாதிப்பை மாத்திரம் ஏற்படுத்தி இலக்கைத் துல்லியமாகத் தாக்குவதில் தலைசிறந்த இலங்கை விமானப்படை உலகிலேயே சிறந்த விமானிகளைக் கொண்ட படை” என்பதே எனது கருத்தாகும்.

பிரபாகரன் சிறந்ததொரு யுத்தத்தை முன்னெடுக்கக் கூடியவர். அவரை யுத்தத்தின் மூலம் வெல்லமுடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண சமாதான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே முடியும். எனவே புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டுமென பல தரப்புகளிடமிருந்தும் தொடர்ச்சியாக எமக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதனையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். புலிகளுடன் யுத்தம் செய்ய வேண்டாமென்று சர்வதேச நாடுகள் பலவும் கூட ஜனாதிபதி அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்தன.புலிகள் மீது கை வைத்து அவார்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் புலிகள் 30 வருட காலமாகவுள்ள பலமான ஒரு அமைப்பு என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தின.அது மாத்திரமன்றி பொருளாதார ரீதியாகவும் எமக்கு சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிட்டது.சில நாடுகள் யுத்தம் செய்வதற்குத் தேவையான ஆயுதங்களை எங்களுக்கு விற்பனை செய்யவும் மறுத்தன.அவ்வாறான நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொண்டபோதும் இந்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் உறுதியுடன் செயற்பட்ட ஜனாதிபதி அவர்கள் அந்த நோக்கில் முன்வைத்த காலை எந்தக் கட்டத்திலும் பின் வைக்கத் தயாராக இருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது ஒரு சர்வாதிகாரியின் பயங்கரவாத இயக்கமாகும். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் கொன்றொழித்த தலைவனே இந்த சர்வாதிகாரி. தனக்கு அடுத்த தளபதியைக் கூட தலைதூக்கவிடாத சர்வாதிகாரியாகவே பிரபாகரன் செயற்பட்டார்.

இவ்வாறான நிலையில் முல்லைத்தீவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் போராடிவரும் எமது இராணுவத்தினர் தொடர்ச்சியாக தாய்நாட்டை வெல்ல வைப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை இன்னும் சில நாட்களுக்குள் எமது இராணுவத்தினர் கைது செய்து விடுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் நாட்டைவிட்டு தப்பியோடாவிட்டால் நிச்சயமாக அவரைக் கைதுசெய்ய படையினரால் முடியும். அதே நேரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பான ஓர் இடத்திற்கு தப்பிச் சென்று விட்டால் அங்கிருந்து போராட்டத்தை முன்னெடுக்கக் கூடும். ஆனாலும் அவர் இதுவரை இலங்கைக்குள் இருந்து கொண்டிருப்பாராயின் இனி பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டாலும் எந்தக் கட்டத்திலும் நாட்டைவிட்டுத் தப்பிச் செல்ல முடியாது.

பிரபாகரனை உயிரோடு பிடிப்பது அல்லது அழிப்பது எமக்கு முக்கியமானதாகும். சிறியதொரு பதுங்குக் குழிக்குள் பிரபாகரன் ஒளித்துக் கொண்டுள்ளார். அவரால் இனிமேல் தப்பிச்செல்ல முடியாது. எந்தவேளையிலும் பிரபாகரன் பிடிபடுவார். வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையின் போது வல்வெட்டித்துறையில் பிரபாகரன் சிக்கிக் கொண்டார். அவ்வேளையில் அவர் சயனைட் உட்கொள்வதற்கு முற்பட்டாலும் சிறிய இடைவெளியில் முல்லைத்தீவுக்கு தப்பியோடிவிட்டார். அந்த குறுகிய காலத்திற்குள் அவரது மனநிலை மாறிவிட்டது. தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் சைனட்டை உற்கொள்வதா இல்லையா என்ற மனோ நிலையிலேயே பிரபாகரன் இருந்து கொண்டிருக்கின்றார். வடக்கில் முன்னெடுக்கப்படும் படை நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத புலிகள் தொடர்ந்து பின்வாங்கிச் செல்கின்றனர். புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பகுதியை தற்போது நெருங்கிக்கொண்டிருக்கிறோம். எமது தூரநோக்கத்துடனான இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்காவிடின் பிரபாகரன் அந்த சமாதான நடவடிக்கையை மீண்டும் குழப்பி விடுவார்.

பிரபாகரன் அழிந்தால் இன்னும் பிரபாகரன்கள் தோன்றலாம் என்கின்றனர். உண்மை தான்.  ஆனால், அவ்வாறு தோன்றுவதற்கான சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த மாட்டோம். திட்டமிட்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அனைத்தும் முடிந்து விட்டது எனக் கருதிவிடவும் முடியாது. பிரபாகரனோ அல்லது இன்னொருவரோ இந்த வெற்றியை தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது. இந்த யுத்தம் இறுதி வரை முன்னெடுக்கப்படும்.புலிகள் மீண்டும் வெகுண்டெழ வேண்டும் என்பதே புலி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் நாங்கள் புலிகளை மீண்டும் தலைதூக்க விடமாட்டோம்.

படையினர் நிலங்களை மீட்பதன் மூலம் எவ்வாறான வெற்றியையும் அடைய முடியாதென சிலர் தெரிவித்தனர். எனினும், பிரபாகரன் தனது அதிகாரத்தின் கீழ் கிளிநொச்சியில் வங்கி, பொலிஸ், நீதிமன்றம் போன்றவற்றை நிர்வகித்து வந்தார். அந்த நிர்வாகத்தைச் சீர்குலைக்க முடியாதெனவும், கிளிநொச்சியைக் கைப்பற்ற முடியாதெனவும் எமது தலைவர்கள் நினைத்திருந்தனர். தொடர்ச்சியாக பின்வாங்கினார்கள்.

இன்று புலிகளுக்காகப் பேசுபவர்களே அன்று அவர்களைப் பாதுகாத்தனர். புலிகளுக்கும் எமக்கும் எந்த உடன்படிக்கையும் கிடையாது. நாட்டைக்காட்டிக் கொடுப்பவர்கள் நாமல்ல. துரோகிகளை நாடு விரைவில் கண்டு கொள்ளத்தான் போகிறது.

ஒரு சிலர் பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றமையாலேயே அரசாங்கம் யுத்த வெற்றிகளைப் பெற்றதாக கூறுகின்றனர். கருணாவைப் பிரித்ததன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றால் ஏன் அன்றைய அரசாங்கம் இந்தப் புத்திசாதுரியமான நடவடிக்கையைச் செய்யவில்லை ?

கருணா குழுவின் உறுப்பினர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் எம்மால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. அதனை ஏன் அவர்கள் செய்யவில்லை.யுத்த நிறுத்த காலத்திலேயே கருணா பிரிந்து வந்தார்.அதனாலேயே புலிகள் பலமிழந்தனர் என்பதை என்னால் ஏற்க முடியாது.ஏனெனில் யுத்த நிறுத்த காலத்திலேயே புலிகள் அதிகளவான ஆயுதங்களை வாங்கிக் குவித்தனர்.அதைக் கருணாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.நாம் கிழக்கை மீட்டதைத் தொடர்ந்து அங்கு கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தும் யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் கொள்வனவு செய்த ஆயுதங்கள்தான்.

மங்கள சமரவீரவும் நாட்டுக்கு துரோகியாக மாறிவிட்டார். படைத்தரப்பு இழப்புகள் பற்றிய கணக்குக்காட்டி வருகின்றார். 11 வருடங்கள் அவரும் அமைச்சராக இருந்தவர். அவர் அமைச்சுப்பதவி வகித்த 2000ஆம் ஆண்டில் 2,248 படையினர் பலியானார்கள். அதற்கு அவரும் பொறுப்புக்கூறியாக வேண்டும். முல்லைத்தீவு, ஆனையிறவு, மாங்குளம், கிளிநொச்சி என அனைத்தும் அன்று அவர் அமைச்சராக இருந்தபோதே வீழ்ச்சி கண்டன.

மூன்று வருடங்களுக்கிடையில் இன்று அவை அனைத்தையும் மீட்டெடுத்துள்ளோம். இதுதான் எமது படைவீரர்களின் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றி. யாழ்.குடாநாட்டை முழுமையாக மீட்டு விட்டோம். கிளிநொச்சி, பரந்தன், பூநகரி அனைத்தையும் வென்றுவிட்டோம். அடுத்த எந்த நிமிடத்திலும் முல்லைத்தீவும் கைப்பற்றப்படும்.

பிரபாகரனை தப்பிச் செல்ல இடமளிக்கப் போவதேஇல்லை. பிரபாகரனை பிடிப்பது உறுதியானது பிடிபட்டதும் எவருக்கும் கையளிக்கும் எண்ணம் எமக்குக்கிடையாது. ஜனாதிபதி என்ன செய்வாரோ எனத் தெரியாது. ஆனால் நாம் எடுத்திருக்கும் முடிவு பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும். எமது நாட்டில் தூக்கிலிடப்படவேண்டும் என்பதேயாகும். அதனைச் செய்ய எமக்கு உரிமையுண்டு. அவர் மாபெரும் கொலைக்குற்றவாளி. 200 வருடங்களுக்கு சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பவர். இந்தியாவிடம் கையளித்துவிட்டு எம்மால் ஆறுதலடைய முடியாது.
 
எமது நாட்டின் ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை வேதனைதரக்கூடியதாகவே உள்ளது. நேர்மையாக நடக்க வேண்டிய ஊடகங்கள் துரோகத்தனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில முக்கிய ஊடகங்கள் புலிகளுக்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. “சிரச’ ஊடகத்தை யார் தீ வைத்தனர். அவர்களே செய்துள்ளனர். காப்புறுதிபெறவும், இன்னொருதரப்புக்கு அரசியல் இலாபம் தேடவுமே அப்படிச் செய்தனர். உலகில் எங்குமில்லாத வகையில் இலங்கையில் ஊடகங்கள் தவறான வழியில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. நாட்டில் எந்த ஊடகத்தையும் விட எமது பாதுகாப்புத் தரப்பு இணையத்தை 6 மில்லியன் மக்கள் நாள்தோறும் பார்க்கின்றனர். எமது நாட்டு ஊடகங்கள் பெரும்பான்மையாக புலிகளுக்குத்துணைபோவதாகவே உள்ளன. சிரச தீவைப்பு தொடர்பாக ஒரு ஊடகவியலாளர் “சி.என்.என்.’னுக்கு பேட்டியளித்து அதனை அரசுதான் செய்ததாகக் கூறியுள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வந்ததும் முதல் வேலை அந்த ஊடகவியலாளரைப்பிடித்து சிறையில் அடைப்பதுதான்.

புலிகளை தாமதமாகியே தடைசெய்துள்ளோம். ஆனால், நான் எப்போதே தடை செய்து விட்டேன். பிரபாகரனைப் பிடிக்க திட்டமிட்ட அன்றே நான் புலிகள் மீது தடையை போட்டுவிட்டேன். பிரபாகரனை பிடிக்காதவரை நான் நித்திரை கொள்ளமாட்டேன். அந்த நல்ல செய்தி எந்த நேரத்திலும் எமதுகாதுகளில் விழத்தான் போகிறது. இலங்கை விடயத்தில் புதுடில்லி அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காது. அங்கு புத்திசாதுர்யமான தலைவர் இருக்கின்றார். இந்தியா எடுத்திருக்கும் முடிவு சரியானது, நியாயமானது.

ஒரு குழு சொல்வதற்காக இந்தியா அவசரப்பட்டு மூக்குடைபட்டுக் கொள்ளமுற்படமாட்டாது. அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட புலிகளுக்காகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உள்ளூர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமிழ் மக்களுக்கென்று கூறிக் கொண்டு கோடிக்கணக்கான பணத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளன. வடக்கிலோ, கிழக்கிலோ அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்த அபிவிருத்தி எதுவுமே கிடையாது. முழுவதும் புலிகளுக்கே சேர்க்கப்பட்டுள்ளன.

யார் என்ன சொன்னாலும் அரசாங்கத்தின் பயணத்தில் எந்த விதமான மாற்றமும் நிகழாது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த நாம் இந்த இடத்திற்கு சென்றமை குறித்த காரணங்களை வரிசைப்படுத்த முடியாது. எனினும், யுத்த களத்தில் உயிரைத் தியாகம் செய்து சமாதானம் மலரவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போராடுகின்ற இராணுவ வீரர்களை மறந்துவிட முடியாது. அதுவே இந்த வெற்றியின் அடிப்படை காரணமாகும். இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றிக்கம்பம் வரை செல்வோம். மக்களுக்கான பயணமே அரசின் பயணம். காட்டிக் கொடுப்பவர்களுக்கோ, பச்சோந்திகளுக்கோ பயந்து நாம் ஒதுங்கப் போவதில்லையென்றார்.

A-9 பாதை படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் : தொகுப்பு – ஏகாந்தி

a-9-road.jpg23 வருடங்களுக்கு பின்னர்  A-9 பிரதான வீதி முழுமையாக பாதுகாப்பு படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த அறிவித்தலை நேற்று (09) முப்படைகளின் பிரதம தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் நேற்று (09) நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக விடுத்தார்.

கண்டி யாழ்ப்பாணப் பாதையான A-9  சுமார் 270 கிலோமீற்றர் நீளமுடையது. கடந்த 23 ஆண்டுகளாக  A-9 பாதையில் வன்னிப் பிரதேசத்தில் இடைக்கிடையே புலிகளின் கட்டுப்பாடு நிலவியது தெரிந்ததே.

 A-9 பிரதான பாதையில் ஓமந்தை தொடக்கம் முகமாலை வரை இடைக்கிடையே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போதும்கூட,  23 வருடங்களுக்கு பிறகு படையினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

_army.jpgஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து முகமாலை வரையிலான 96 கிலோ மீற்றர் பிரதேசமே தற்பொழுது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து படை நடவடிக்கைகளை ஆரம்பித்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப் பிரிவினர் பளை, சோரன்பற்று ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் (08) கைப்பற்றினர். அங்கிருந்து முன்னேறிய படையினர் நேற்று (09) இயக்கச்சியையும், ஆணையிறவு பிரதேசத்தையும் முழுமையாகக் கைப்பற்றி தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். ஆணையிறவிலிருந்து முகமாலை வரையான 20 கிலோ மீற்றர் பிரதேசத்தை குறுகிய நாட்களுக்குள் படையினர் மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் ஆணையிறவை விடுவித்தமையூடாக  A-9 பிரதான வீதியை இணைக்க முடிந்ததாக குறிப்பிட்டார்.

1991 ஆம் ஆண்டு ஆணையிறவில் பாதுகாப்பு படையினர் பாரிய முகாம்களை அமைத்தமை புலிகளுக்கு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகவும் இடையூறாக அமைந்திருந்தது. ஆணையிறவின் மீது தமது பூரண கவனத்தை செலுத்தியிருந்த புலிகள் 1991 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி ஆணையிறவு பிரதேசத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். ஆணையிறவிலுள்ள தமது நிலைகளையும், முக்கிய தளங்களையும் பாதுகாத்துக் கொள்ள 1991 ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெற்றிலைக்கேணி பிரதேசத்திற்கு படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.  ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் தலைமையில் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆணையிறவை கைப்பற்றும் படை நடவடிக்கைகளின் போது அப்போதைய பிரிகேட் கொமாண்டராக தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா கடமையாற்றியதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி ஆணையிறவு புலிகள் வசமானதை அடுத்து நேற்று (09) மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
A-9  பிரதான வீதி ஓமந்தையிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடியை அடுத்து புலிகளின் சோதனைச் சாவடி அமைந்திருந்தது. இந்த பிரதேசத்தை ஊடுருவி யாழ். குடாநாட்டுக்குச் செல்பவர்களுக்கு விசேட பாஸ் நடைமுறைகளை புலிகள் அமுல்படுத்தியிருந்தனர். வாகனங்களில் செல்பவர்களிடம் வரி அறவிட்டனர். சொந்த பாவனைக்காக பொருட்கள் எடுத்துச் செல்பவர்களிடம் கூட வரி அறவிடப்பட்டது. வர்த்தகர்களிடம் வரி அறவிட்டதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு யாழ். குடாநாட்டிலுள்ள வர்த்தகர்கள் தள்ளப்பட்டனர்.

A-9 மீட்டெடுக்கப்பட்டதன் ஊடாக பொது மக்கள் எவ்வித கெடுபிடிகளும் இன்றி தரைவழி பாதையூடாக மக்கள் யாழ். குடாவுக்கு சுதந்திரமாக சென்றுவர நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.  பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து விமானத்தின் மூலம் யாழ். – கொழும்பு சென்றவர்கள் இனி A-9  பாதையூடாக செல்லும் வாய்ப்பை படையினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக் காட்டினார்.

இவ்வாறாக இராணுவப் பேச்சாளர் கருத்துத் தெரிவித்துள்ள போதிலும்கூட, A-9 பாதை பொதுமக்களின் பாவனைக்காக எப்போது திறக்கப்படும் என்ற அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது வன்னிப் பகுதியில் தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் A-9 பாதை விரைவாக பொது மக்களின் பாவனைக்கு விடப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது.

 A-9 வீதி படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள். கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

வீ. ஆனந்தசங்கரி
(கிளிநொச்சி முன்னாள் எம்.பி)

இது ஒரு பெரிய வரப்பிரசாதம். இதனையே மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தார்கள். இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் பயனாக யாழ். குடாநாட்டுக்குத் தரை வழியாக சென்று வரக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இனிமேல் தரைவழியாக யாழ்ப்பாணத்திற்கு சென்று வர போக்குவரத்து சிரமங்கள் இராது. இப்பாதையைத் திறந்ததன் மூலம் அரசாங்கம் யாழ். குடா நாட்டு மக்களுக்கு பாரிய உபகாரத்தைச் செய்திருக்கிறது. இது என்றும் மறக்க முடியாத உபகாரம்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடியதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அம்மக்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. புலிகள் இயக்கத்தினரின் இந் நடவடிக்கையால் யாழ். குடாநாட்டு மக்கள் வறுமைப் பிடிக்குள் பிடித்துத் தள்ளப்பட்டார்கள். பொருட்களின் விலைகள் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகரித்தன. யாழ். குடாநாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாமல் திண்டாடினார்கள்.

புலிகள் இயக்கத்தினர் தரைவழி பாதையை மூடிய போதிலும் அரசாங்கம் மக்களை கைவிடவில்லை. யாழ். குடாநாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களைக் கடல் வழியாக சரக்கு கப்பல்களில் அரசாங்கம் அனுப்பி வருகின்றது. இதுவும் அரசாங்கம் யாழ். குடாநாட்டு மக்களுக்கு செய்து வரும் மறக்கமுடியாத பேருபகாரமாகும்.

புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை இழுத்து மூடாததற்கு முன்னர் இப்பாதை வழியாகத் தினமும் 60, 70 லொறிகளில் யாழ். குடாநாட்டு உற்பத்தி பொருட்கள் தென்பகுதிக்கு வரும். அவற்றில் மரக்கறி, கிழங்கு வகைகள், மீன் வகைகள், கருவாடு, இறால், வாழைப்பழம் போன்றன அடங்கி இருக்கும். இதேபோல் 60, 70 லொறிகள் யாழ். குடாநாட்டுக்கு தென்பகுதியிலிருந்து பொருட்களை எடுத்துச் செல்லும். இவற்றில் சீனி, பருப்பு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களும் அடங்கியிருக்கும்.
இவ்வாறான சூழலில் யாழ். குடா நாட்டிலும், தென்பகுதியிலும் பொருட்களின் விலைகள் நியாயமான முறையில் குறைவாக ஏற்றத்தாழ்வின்றி காணப்பட்டன. இதே நேரம் யாழ். குடாநாட்டு மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்திருந்தது.
புலிகள் இயக்கத்தினர் தங்களது சுயலாபத்திற்காகவே A- 9 பாதையை இழுத்து மூடினர். அவர்கள் மக்களின் நலன்களை சிறிதளவேனும் கருத்தில் கொள்ளாமலேயே இவ்வாறு செய்தனர். தங்களை வளப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர்கள் இப் பாதையை மூடினர்.  இப்பாதை படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் யாழ். குடா நாட்டு மக்களின் பொருளாதாரம் மீண்டும் சுபீட்சம் பெறும். பொருட்களின் விலைகள் குறையும். எதுவிதமான சிரமங்களுமின்றி தரை வழியாகச் சென்று வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

புளொட்.- தர்மலிங்கம் சித்தார்த்தன்

A-9 பாதை திறக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கக் கூடிய விடயமாகும். இப்பாதை மூடப்பட்டதால் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள். யாழ்ப்பாணத்திற்கு விமானத்தில் ஒரு தடவை சென்று வருவதற்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டிய நிலைமை நிலவியது.  அதுவும் நினைத்த மாத்திரத்தில் சென்று வர முடியாது. அந்தளவுக்குக் கஷ்டமான காரியமாக அது இருந்தது.  இவ்வாறான காரணங்களினால் தான் இப்பாதை எப்போது திறக்கப்படும்? என்ற பெருத்த எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் மக்கள் இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இப்பாதையை மூடியதால் யாழ். குடாநாட்டின் விளைபொருட்கள் எதனையும் தென் பகுதிக்குக் கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டது. இதேநேரம் யாழ். குடாநாட்டில் பொருட்களின் விலைகளும் பெரிதும் அதிகரித்தது. இதனால் யாழ். குடாநாட்டு மக்களும், உற்பத்தியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்ற பெருத்த எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருந்தார்கள். அந்தளவுக்கு மக்கள் கஷ்டப்பட்டார்கள்.

இனி யாழ் குடாநாட்டுக்குத் தரை வழியாக சிரமங்களின்றி சென்று வர முடியும். அங்கு பொருட்களின் விலைகள் குறையும். யாழ்ப்பாணத்தில் விளைகின்ற பொருட்கள் தென் பகுதிக்கு வந்து சேரும். இதன் மூலம் மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக சுபீட்சம் ஏற்படும். மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.

திருநாவுக்கரசு
ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி)

A – 9 வீதி திறப்பது தொடர்பாக அனைத்து தரப்பினராலும் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த விடயமாகும். வன்னி மக்களின் சமூக பொருளாதார நடவடிக்கைகள் A – 9 வீதியையே மையமாகக் கொண்டுள்ளது. இவ் வீதி இயங்கினால்தான் மக்களின் வாழ்வு உயிர்பெறும்.

பெரும் வரப்பிரசாதமாய் அமைந்த இவ் வீதி திறக்கப்பட்ட பின்னர் எவரும் குழப்பக்கூடாது. மனிதனது வாழ்வு தொடர்பான பிரச்சினையாகவே இதனை நோக்க வேண்டும். A – 9 வீதி திறப்பதால் பொருட்களின் விலைகள் குறைவதுடன், மக்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மக்கள் அனுபவித்த துன்பங்களை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. சாதாரண மக்கள் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. A – 9 வீதி திறப்பின் மூலம் வடக்கு, தெற்கிடையேயான உறவுகள் வலுப்பெற்று இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படும்.

பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்ம
சர்வதேச இந்துமத பீடம

A – 9 பாதை திறக்கப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். அதேநேரம் பெளத்த மக்கள் நாகதீப விகாரைகளில் வழிபடுவதற்கான வாய்ப்புக்களும் இலகுவாகிவிடும். இப்பாதை மூடப்பட்டதால் யாழ். குடாநாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தான் பல் வேறு தேவைகளின் நிமித்தம் கொழும்புக்கு வருகின்றார்கள். இப் பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதுடன், பொன்னான காலமும் பிறந்திருக்கிறது என உறுதிபடக் கூறலாம்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் போராட வேண்டியுள்ளது. அந்தவகையில் இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடக்கு, தெற்கு மக்களுக்கிடையில் அன்னியோன்ய உறவும், புரிந்துணர்வும் வளர்ச்சி அடையும். இவை இன செளஜன்யத்திற்கும் சகவாழ்வுக்கும் வழி வகுக்கும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தரைவழியாகச் செல்லுவது ஏற்கனவே மக்கள் மனங்களில் ஆச்சரியம் மிக்கதான செயலாக இருந்தது. ஆனால் இப்போது இப்பாதை திறக்கப்பட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முழுநாட்டு மக்களுமே சந்தோஷமடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ஜனாதிபதியின் உரை

presidentmahinda.jpgநேற்றைய தினம் (09) ஆணையிறவு விடுவிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைக்காட்சிகளினூடாக மக்களுக்கு நிகழ்த்திய உரையின் தொகுப்பு வருமாறு:

2009 ஆம் ஆண்டு படையினரின் வெற்றி வருடமென நான் ஏற்கனவே கூறியிருந்தேன். பரந்தனை படையினர் முழுமையாக மீட்டெடுப்பதோடு 2009 ஆம் ஆண்டு உதயமானது. ஜனவரி 2 ஆம் திகதியாகும் போது படையினர் கிளிநொச்சியை முழுமையாக மீட்டனர்.

எமது படையினர் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியொன்றை ஈட்டியுள்ளனர். ஆனையிறவு பகுதியை எமது படையினர் இன்று மாலையாகும் போது முழுமையாக மீட்டுள்ளனர்.

அதேபோல, தேவேந்திரமுனை முதல் பருத்தித்துறை வரையான பகுதியை மீண்டும் இணைக்கும் வகையில் A-9 வீதியை முழுமையாக புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 23 வருடங்களின் பின்னரே A-9 வீதி முழுமையாக படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. 

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஆனையிறவை எமக்கு இழக்க நேரிட்டது. இந்த மோதலில் 359 படையினர் உயிர் நீத்தனர். மேலும் 349 பேர் காணாமல் போனார்கள். 2500 பேர் காயமடைந்தனர்.  அன்று தொடக்கம் எமது படையினர் முகமாலையினூடாக ஆனையிறவைக் கைப்பற்ற பல தடவைகள் முயன்றார்கள். இந்த முயற்சிகளினால் பெருமளவு படையினர் உயிர் நீத்தார்கள்.  இன்று 53 ஆம் 55 ஆம் படையணியினர் முகமாலையினூடாக ஆனையிறவை முழுமையாக மீட்டுள்ளனர். ஆனையிறவு வெற்றிக்காக கடந்த காலங்களில் உயிர் நீத்த சகல படையினருக்கும் நாட்டின் கெளரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடக்கினதும் தெற்கினதும் ஒற்றுமையை வெளிக்காட்டும் பாதையாகவே A-9 வீதி குறிக்கப்படுகிறது. A-9 வீதியினூடாக பயணிக்க மக்களுக்கு சட்ட விரோத பயங்கரவாதத்தின் கட்டுப்பாட்டிற்கு அடிபணிய நேரிட்டது. A-9 வீதியினூடாக பயணித்த மக்களிடம் புலிகள் பல மில்லியன் ரூபா கப்பமாக பெற்றது. அந்த வரலாற்றை எமக்கு ஒருபோதும் மறக்க முடியாது.  புலிகளின் பிடியிலுள்ள இடங்களை மட்டு மன்றி வடக்கு மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தையே எமது படையினர் வென்று தந்துள்ளனர்.

பயங்கரவாதமில்லாத இலங்கையொன்றை உருவாக்கும் மனிதாபிமானப் போராட்டமே இன்று முன்னெடுக்கப்படுகிறது. முழு நாடுமே படையினரின் வெற்றிகளுக்கு தமது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அந்த வெற்றிகளை இழிவுபடுத்தவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உள்நாட்டு வெளிநாடடு சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்த வெற்றிகளுக்கு முன்னின்று உழைக்கும் இராணுவத் தளபதி மீதும் அரசாங்கத்தின் மீதும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் அதனூடாக நாட்டில் ஸ்தீரமற்ற தன்மையை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் அவப்பெயர் ஏற்படுத்தவும் சதி முன்னெடுக்கப்படகிறது.

நத்தார் தினத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆலயமொன்றினுள் வைத்து சுடப்பட்டார். இதன் மூலம் நாட்டுக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டது. சர்வதேச ஊடக தினத்தில் உதயன் பத்திரிகை மீது தாக்கல் நடத்தப்பட்டது.  தொப்பிகல மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆங்கில பத்திரிகயொன்றின் ஊடகவியலாளர் கடத்தி தாக்கப்பட்டார். பல வருடங்களின் பின் பயங்கரவாதிகளுக்கு பலத்த தோல்வியை ஏற்படுத்தி விடத்தல்தீவை மீட்ட மறு தினம் வவுனியாவிலுள்ள முகாமொன்றின் மீது தீ வைக்கப்பட்டது.  தி. மகேஸ்வரன் கொல்லப்பட்ட போது அரசின் மீதே குற்றஞ் சுமத்தப்பட்டது. ஆனால், புலிகளே இந்தக் கொலையை செய்தனர் என பின்பு உறுதியானது.  கிளிநொச்சி வெற்றியின் சூடு தனிய முன்னர் ஊடக நிலையமொன்று தாக்கப்பட்டது. அதன் பின்னர் நாமறிந்த ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  இந்த சகல சம்பவங்களினாலும் வெற்றி கிடைப்பது யாருக்கு? இந்த சதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த உள்ளோம்.  இது எனக்கோ அரசுக்கோ எதிரான சதிகளல்ல. இது முழு நாட்டுக்கும் எதிரான சதியாகும். படையினரின் வெற்றியை கண்டு பீதியடைந்தவர்களே இந்த சதிகளின் பின்னால் உள்ளனர்.

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்கும் உறுதியுடனே நான் 2005 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறினேன். தோற்கடிக்க முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள எமக்கு சிறிய குழுவின் சதிகளைத் தோற்கடிப்பது இலகுவான விடயமாகும்.  நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நாம் உயிரூட்டி வருகிறோம். ஜனநாயகத்துக்கு உயிரூட்டி வருகிறோம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதென்பது சமாதானத்திற்கும் சுதந்திரத்திற்கும் உயிரூட்டும் நடவடிக்கையேயாகும்.
பருத்தித்துறையில் இருந்து தேவேந்திரமுனை வரை சுதந்திரமாக பயணிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே மக்கள் ஒற்று மையாக வாழும் நிலையை நிச்சயமாக உருவாக்கு வோம். அந்த வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபடுவோம்.

இவ்வாறு ஜனாதிபதி உரையாற்றினார்.

பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சமளிக்காது இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை – ஷேய்க் ஹசீனா

haseena.jpg பயங்கரவாதிகளுக்கு பங்களாதேஷ் தஞ்சம் அளிக்காதெனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசீனா, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். இவரது தலைமையிலான கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 262 இடங்களில் வென்றுள்ளது. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஹசீனா மேலும் கூறியதாவது; “அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் நோக்கில் பங்களாதேஷ?க்குள் தீவிரவாதிகள் புகுவதை அனுமதிக்கமாட்டோம். அண்டை நாடுகளுடனான உறவு குறிப்பாக, இந்தியாவுடனான உறவை தொடர்வதே புதிய அரசின் செயல்திட்டமாக இருக்கும்.

நாங்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதில்லை. இனி ஆட்சி அமைக்கும்போதும் இந்த நிலை தொடரும். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நீடிக்கும். இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க தெற்காசிய அதிரடிப் படையை அமைக்கலாம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதும் இந்த பிராந்தியத்தில் மேம்பாட்டுப் பணிகளை செயல்படுத்துவதும் முக்கியமானது. பயங்கரவாத விடயத்தில் இந்த பிராந்திய நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டி பேசுவது வழக்கமாக இருக்கிறது. தெற்காசிய அதிரடிப்படை உருவாக்கப்பட்டால் இந்த நிலை இருக்காது’ எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடந்துமுடிந்த தேர்தல் மோசடி நிறைந்த தேர்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஷியா. 300 ஆசனங்களைக் கொண்டது பங்களாதேஷ் பாராளுமன்றம். இதற்கான தேர்தல் டிசம்பர் 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் காலிதா ஷியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சி கூட்டணி வெறும் 32 இடங்களையே வென்றது. இந்த கூட்டணியில் 4 கட்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி வீழ்ந்தது. ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு ஜனாதிபதி புலிகளுக்கு இறுதி வேண்டுகோள்: தொகுப்பு-ஏகாந்தி

kilinochchci_victory_.jpgபுலிகளின் அரசியல், நிர்வாகத் தலைமையகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று (02) கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். – கண்டி ஏ-9 வீதி ஓமந்தை முதல் பரந்தன் வரை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சியில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புலிகளின் மறைமுக அரச நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று முற்பகல் சுற்றிவளைத்து உள்நுழைந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மும்முனைகளில் முன்னேறிய படையினர் கிளிநொச்சி நகரத்திற்குள் பிரவேசித்து நேற்று நண்பகல் அளவில் இறுதி நடவடிக்கையை மேற்கொண்டதாக நேற்றுப் பகல் தேசிய பாதுகாப்பு நிலையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம்

* 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம்
* நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்
* 95 கிராம சேவையாளர் பிரிவுகள்
* மூன்று பிரதேச சபைகள் (பச்சிலைப்பள்ளி, கரச்சி, பூநகரி)
* 1279 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது
* சனத்தொகை – 1,95,812
* தமிழர் தொகை – 1,95,386 (99.78%)
* இலங்கை சோனகர் – 424 (0.22%)

கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.

புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறிவைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது. இந்த மோதலில் ராணுவத்தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.

புலிகளின் தற்போதைய ஒரே முக்கியதலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது. இலங்கையிலிருந்து இன்று வெளிவந்துள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவமே பிரதான செய்தியாக பிரசுரமாகியிருந்தது. நேற்றைய தினம் அரசாங்க தொலைக்காட்சியில் கிளிநொச்சி சம்பவம் குறித்த சில செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. ஆனால், கிளிநொச்சியின் வெற்றியானது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அடக்கிவிட்டது என்று பொருள் கொள்ளப்படுமாயின் அது பெருந் தவறு. இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு, யானையிரவு போன்ற சுமார் 40 கி.மீ. வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அறிவித்தார். இது கிழக்கில் தொப்பிகலை பிரதேசத்தைவிட குறைந்த பிரதேசம் என்றும் தெரிவித்தார். எனவே, இராணுவத்தின் அடுத்த இலக்காக முல்லைத்தீவு, யானையிரவு போன்ற பிரதேசங்கள் அமையுமென்பது அவர் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது. கிளிநொச்சியின் வெற்றி என்று கூறும்போது நகர்சார்ந்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றியாக அது அமையுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபடக்கூடிய நிலை அதிகரிக்கப்படலாம் எனப்படுகின்றது.

இது தொடர்பான செய்தித் தொகுப்புகள் கீழே இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல.

mahi.jpgகிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல. தெற்கு வடக்கை தோல்வியுறச் செய்ததாக வரைவிலக்கணப்படுத்தக்கூடிய தொன்றுமல்ல. இது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித வாழ்க்கையை விளையாட்டாகக் கொண்ட கொடூர பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்த தீர்க்கமான வெற்றி. மக்களை இனம், மதம் என பிரிப்பதற்குப் பிரயத்தனம் செய்த இனவாதத்தைத் தோற்கடித்த வெற்றியாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். படையினர் கிளிநொச்சியை நேற்றுக் கைப்பற்றியதையடுத்து அதனை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (02) பிற்பகல் இடம் பெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது 2009ம் ஆண்டை வெற்றியின் ஆண்டென நான் அறிவித்தேன். அதன்படி, வருடம் பிறந்து இரண்டாவது நாளில் போராட்ட வரலாற்றில் முக்கியமானதொரு வெற்றியைச் சொந்தமாக்க முடிந்துள்ளது. உலகளவில் பிரபலமான அமைப்பான விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த கிளிநொச்சியை எமது படையினர் வெற்றி கொண்டுள்ளனர். கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நான் கனவுகாண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். எனது கனவு நனவாகியுள்ளது. இது எனது கனவுமட்டுமல்ல. அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்புகின்ற அனைவரினதும் கனவு இது. அனைத்து மக்களினதும் கனவு எமது படையினரால் நனவாக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண வெற்றியல்ல. வரலாற்று வெற்றி. புலிகளின் கோட்டையை எமது படையினர் மீட்ட வெற்றியென்பது பயங்கரவாதத்துக்கு எதிராக முழு உலகிற்குமான வெற்றி. முழு உலகமும் இதற்காக எமது படை வீரர்களைப் பாராட்டும். கிளிநொச்சி என்பது தனியானதொரு அரசு அமைக்க எண்ணியோரின் தலை நகரமாகும். சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி சில ராஜதந்திரிகளும் நம்பி செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. புலிகளின் அந்த தனிராஜ்யத் தலைநகரம் கை நழுவியது.

2005ம ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முழு நாட்டிலும் ஒரே சட்டத்தை நிலைநாட்டுமாறு மக்கள் எம்மைக் கேட்டுக்கொண்டனர். பல உடன்படிக்கைகளால் பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துமாறு கேட்டனர். முப்படையினரும் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றவே அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. 2009ம் ஆண்டில் எமது நம்பிக்கை மேலும் மேம்பாடடைந்துள்ளது. படையினர் தமது கண், காது, இரத்தம் மட்டுமன்றி தமது உயிரைக் கூட தியாகமாக வழங்கியே இவ்வெற்றியைப் பெற்றுள்ளனர். இதற்காக நாட்டுத் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் கெளரவத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த வரலாற்று வெற்றிக்கு தலைமைத்துவம் வழங்கிய முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட சகல படை உயரதிகாரிகள், வீரர்கள் அனைவருக்கும் நாட்டு மக்களின் கெளரவம் உரித்தாகட்டும்.

நாட்டு மக்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது. மக்கள் இந்த அர்ப்பணிப்புடனான பங்களிப்பை இன்னும் குறுகிய காலத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்கும் வரை இதற்காக ஆதரவு தருமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியாக வேண்டுகோள்விடுக்கின்றேன். பல தசாப்தங்களாக புலிகளின் பிடியில் பணயக் கைதிகளாகவுள்ள வடக்கு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தமிழில் உரை

வடக்கு மக்களே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பான எதிர்காலத்தை நான் நாட்டுத் தலைவன் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்கிறேன் என வாக்குறுதியளிக்கிறேன். ஒரே கொடியின் கீழ் மகிழ்வுடன் வாழ நவீன இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம். எமது இணைந்த அர்ப்பணிப்பு சகல தடைகளையும் வென்று முன்னோக்கிச் செல்ல வழிவகுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்களுக்கான வாக்குறுதியைத் தமிழில் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை தகர்ந்தது…’ – இராணுவப் பேச்சாளர்

kili-01.jpgபுலிகளின் கனவு ஈழத்தின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்தமை அவர்களுக்குப் படுதோல் வியாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நீதிமன்றம், வங்கி, சமாதான செயலகம், அரசியல் தலைமையகம், நடவடிக்கைத் தலைமையகம் போன்ற அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளையும் கிளிநொச்சியி லேயே புலிகள் வைத்திருந்தனர். இன்று அவர்களின் ஈழத் தலைநகர் சிதைக்கப்ப ட்டுள்ளதுடன் புலிகள் ஏ-9 வீதியின் கிழ க்குப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளார்களென்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

சட்டவிரோத வரிசேகரிப்புக்கும் தளமாக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப் பட்டுள்ளதால் ஆனையிறவு, பளை பகுதிகளுக்கு புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பிரிகேடியர் நாணயக்கார, தொப்பி கலைக்குச் சமமான ஒரு பிரதேசத்தில் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘புலிகளின் 236 இலக்குகள் தாக்கி அழிப்பு’ – விமானப் படை பேச்சாளர்

kili-02.jpgபரந்தன் மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது, புலிகளின் 236 இலக்குகளை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்தார். இராணுவத்திற்கு உதவியாக 139 தடவைகள் விமானப்படையின் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் படை நடவடிக்கைகளுக்கு பாரிய வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகருக்குள் படையினர் பிரவேசித்ததை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் விமானப்படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்:- விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. – 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் 32 இலக்கு மீது 25 தடவைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ள அதேசமயம் கிபிர் மற்றும் எப்-7 ரக ஜெட் விமானங்களை பயன்படுத்தி 204 இலக்குகள் மீது 144 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இராணுவத்தின் 57 வது படைப் பிரிவினருக்கும், முதலாவது செயலணியினருக்கும் உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. விமானப் படையினரின் வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் கிளிநொச்சி, பரந்தன், இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், பலமான மற்றும் ஒன்று கூடும் தளங்கள் பல முக்கிய இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விமான ஓட்டிகளும், களமுனையிலுள்ள போர் வீரர்களும் இதனை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈழப் போர் … ஒரு பார்வை…

1983 – விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப்போர் என புலிகள் வர்ணித்தனர்.

1987 – போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

1990 – 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.

1991 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

1993 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.

1995 – அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.

1995 -2001 – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். சந்திரிகாவும் காயமடைந்தார்.

2002 – நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

2003 – அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.

2004 – கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.

2006 – ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.

2007 – கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

2008 – ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.

2009 – ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்தது.

வெற்றியின் பயனை மக்கள் அனுபவிக்க எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – ரணில்

ranil-2912.jpgகிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியை நாட்டு மக்கள் அனுபவிக்கும் விதத்தில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறுனார். நாட்டில் மக்கள் இன்று பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய மானியங்கள், சலுகைகள் வழங்கப்படவேண்டியது இன்று அவசியம். அரசு அதனைச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்களுக்கு அறிவூட்டும் இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது; சிந்தனை என்று கூறுவது நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு இங்கு சிந்தனையில்லை. இன்று அடாவடித்தனம், அநீதி, ஊழல்கள், வீண்விரயம், மக்களிடம் அனுதாபம் காட்டாமை போன்ற தீய வழிகள் காணப்படுகின்றன. நாட்டில் இவை இருக்கக்கூடாது. எரிபொருள் விற்பனை தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் 120 சத வீத இலாபத்துடன் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவது நாட்டு மக்களுக்கு அநீதியையும் அசௌகரியங்களையும் இழைப்பதாகும்.

கிளிநொச்சியை கைப்பற்றியதாக அறிவிக்கின்றனர். இதனால், நாம் படையினரை கௌரவித்து பாராட்டி எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கிளிநொச்சியை கூட்டாக வைத்துக்கொண்டுதான் விலைவாசிகள் உயர்த்தப்பட்டது. அவ்வாறானால் இம்மாதத்திலிருந்து பெற்றோலை 100 ரூபாவாகவும் மண்ணெண்ணெயை 5 ரூபாவாகவும் குறைத்து மக்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மக்களே இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றார்.

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம்

கிளிநொச்சி நகரை படையினர் கைப்பற்றி விட்டனர் என்ற செய்தி நேற்று அறிவிக்கப்பட்டதும் தெற்கில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கோஷமெழுப்பியவாறு தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாகவும் சென்றனர். கொழும்பில் சகல பகுதிகளிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. பிரதான வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும், கோஷமெழுப்பியும் பட்டாசு கொளுத்தியதாகவும் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. நகரெங்கும் கோர்வை கோர்வையாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சிப் பகுதியை அரச படையினர் கைப்பற்றியதாக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இரத்தினபுரி நகரில் நேற்று (02) பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இராணுவ வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

அனுராதபுரம் நகரையும் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பட்டாசு கொளுத்தி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அனுராதபுரம் டி. எஸ். சேனநாயக்க சுற்று வட்டம், ஓங்கிப் பகுதி, பழைய நகரப் பகுதி, மார்க்கப் பகுதி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஒன்று கூடிய பொதுமக்கள் கிளிநொச்சி வெற்றியை பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம, கெக்கிராவ, ஹொரவப்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய, மதவாச்சி, கெபிதிகொள்ளாவ, ரம்பாவ, கலன்பிந்துனுவெவ, திறப்பனே, மரதன்கடவள, எப்பாவல, மிஹிந்தலை போன்ற நகரங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் பட்டாசி வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களின் உள்ளங்களை புண் படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக மாற இடமுண்டு. இத்தகைய சம்பவங்களினால் இனக்குரோதங்களை வளக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகக் கொள்ளலாம்.

கொழும்பு விமானப் படை தலைமையகம் முன்னால் தற்கொலைத் தாக்குதல்
மூன்று விமானப்படைவீரர்கள் பலி; 34 பேர் காயம்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்து சில மணிநேரத்திற்குள் விமானப்படை தலைமையகத்தின் முன்பு தற்கொலை குண்டுதாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. தற்கொலை குண்டுதாரி தலைமையகத்திற்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தி வருமாறு:-

கொழும்பு விமானப் படைத்தலைமையகத்திற்கு முன்னால் நேற்று (02) மாலை இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று விமானப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வீதியின் மறுபுறத்திலிருந்து வேகமாக ஓடிவந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இரண்டு பஸ் வண்டிகளும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 13 விமானப் படைவீரர்களும், 23 சிவிலியன்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அலுவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு ஊழியர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டது. இந்த நேரத்தில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

குண்டு வெடிப்பு இடம்பெற்றதும் முப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்ததுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்று வட்டத்திலிருந்து கொம்பனி வீதி வரையிலான வீதிப்போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு சில மணிநேரத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.