புன்னியாமீன் பி எம்

புன்னியாமீன் பி எம்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இன்று அனுப்பப்படுகின்றன. – ஜெயபாலன் & புன்னியாமீன்

02.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரிநிலையங்களினுள்ளே இயங்கும் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கான மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் இன்று வவுனியா இடைத்தங்கல் முகாம் பாடசாலைகளின் கல்வியதிகாரி திரு. த. மேகநாதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

தேசம்நெற் ஆசிரியர் குழுவும், சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரிநிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி கல்வி செயற்பாடுகளுக்கு உதவும் திட்டத்தின் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரிவினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்தமை அறிந்ததே. இத்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கு 1100 வீதம் மாதிரிவினாத்தாள்கள் 10உம், புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடு தொகுதி 01 நூலும் கடந்த வாரங்களில் வழங்கப்பட்டன. 

இந்த மாதிரிவினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பரீட்சையாக நடத்தப்படுகின்றன. இந்த அனுப்பப்படும் பொதிகளில் பின்வரும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டி புத்தகங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 11 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 12 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 13 1100 பிரதிகள்
மாதிவிரிவினாத்தாள் இலக்கம் 14 1100 பிரதிகள்
மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02 எனும் நூலின் 1100 பிரதிகள்

மேற்படி மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி., பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி., காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 16 மாதிரிவினாத்தாள்களையும் (விசேட மாதிரிவினாப்பத்திரம் இலக்கம் 01 – 16 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், தரம் 06, 07, 08, 09, 10, 11 மாணவர்களுக்காக வேண்டி வி.ச. சுப்பரமணியம், ஞானசுந்தரம், பா. கிருபாகரன் ஆகிய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களின் ஒரு தொகுதியும் குவி அச்சக வெளியீடுகளின் ஒரு தொகுதி செயல் நூல்களும் இன்று அனுப்பப்பட்டுள்ளன.

மே 12 – சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம். (International Nurses Day) – புன்னியாமீன்

florencenightingale.jpg உலக ளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12 ஆம் திகதியும் சர்வதேச செவிலியர் (தாதியர்) தினம்  (International Nurses Day) கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland)  என்பவர் இத்தினத்தை  செவிலியர் தினமாக அறிவிக்க வேண்டுமென விடுத்த அழைப்பை அன்றைய ஜனாதிபதி ஐசன்ஹோவர்  நிராகரித்துள்ளார். இருப்பினும் 1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அதேநேரம், 1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரம் கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் “செவிலியர்கள்” என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். “செவிலியர்கள்” உலக அரங்கில் அங்கீகரிக்கபடுகிறார்கள். இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.

மறுபுறமாக ‘தாதியார்தினம்’ என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஆகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘விளக்கேந்திய சீமாட்டி’, ‘கை விளக்கேந்திய காரிகை’ (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார்.

பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். இவரின் தந்தை வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் (1789-1880), தாயார் பிரான்செஸ் நைட்டிங்கேல் (முன்னர் ஸ்மித்) (1794- 1875). புளோரன்சின் தாய்வழிப் பாட்டனான வில்லியம் சிமித் அடிமை முறை ஒழிப்புக்காக வாதாடியவராவார். ‘எம்ப்லீ பார்க்’ இது  புளோரன்ஸ் நைட்டிங்கேலின் குடும்ப வசிப்பிடமாகும்.

சிறுவயதில் கணிதத்தில் திறமையுள்ளவராயிருந்த இவர் தனது தந்தையாரின் கற்பித்தலில் அப்பாடத்தில் வல்லவாரானார். குறிப்பாகத் புள்ளிவிபரவியலில் ஆர்வமுள்ளவராக இருந்த இவர், தனது ஆய்வறிக்கைகளில் புள்ளி விபரங்களை அதிகளவில் பயன்படுத்தினார். தரவுகளை வரைபடமாக்கி அளிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். பலவிதமான வரைபுகளை உருவாக்கி அவற்றின் மூலம் தரவுகளை வகைப்படுத்தி அறிக்கைகளில் பயன்படுத்தினார்.

இந்தியாவின் கிராமப்புறங்களின் சுகாதாரம் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட புளோரன்ஸ் நைட்டிங்கேல் சீர்திருத்தப்பட்ட மருத்துவ மற்றும் கிராம கவனிப்புச் சேவைகளை நடைமுறைப்படுத்துவதிலும் முக்கியமானவராய் இருந்தார். 1858 இல் பதவியேற்றதன் மூல அரச புள்ளிவிபரவியல் கழகத்தின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் பெண்மணியானார். அதேபோல இவர் ஒரு எழுத்தாளருமாவார்.

ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ‘இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே’ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார். பெற்றோர் அக் கல்வி நெறியைப் பயில மறுப்புத் தெரிவித்து பாராளுமன்றத்தில் அறிக்கையிடுதல் சார்பான கல்வி நெறியைப் பயில ஊக்கமளித்தனர். இதனை மறுதலித்து நோயாளர்களைப் பராமரி க்கும் கல்வி நெறியை மேற்கொண்டு மூன்றா ண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார். 1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வு அவரது வாழ்நாள் முழுதும் நீடித்தது. பெற்றோரின், எதிர்ப்புக்கும் மத்தியில், தாதியர் சேவையில் ஈடுபடவேண்டும் என்னும் தனது முடிவை புளோரன்ஸ் 1845 ஆம் ஆண்டு அறிவித்தார். இதையடுத்து தன் வாழ்நாளையே தாதிச் சேவையில் இவர் இணைத்துக் கொண்டமை இவரது உள விருப்பையும், அவரது காலத்தைய பெண்ணுக்குரிய எதிர்பார்ப்புகளை முறியடிப்பதற்கான அடையாளப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.

அக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலையாட்களாகவும் உயர்குடும்பங்களில் வேலை செய்யவேண்டி இருந்தது.

புளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.

1846 ஆம் ஆண்டில் இவர் ஜேர்மனி சென்றார். அங்கு கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் வழங்கப்படும் கவனிப்புகளும், மருத்துவச் சேவைகளும்  இவரை மிகவும் கவர்ந்தன. 1851 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக  ஜெர்மனியில் கெய்சர்ஸ்வர்த் மருத்துவமனையில் இவர் தீவிரப் பயிற்சியைப் பெற்றார். தாதியர் சேவையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதிலிருந்து திருமணம் தடை செய்யும் எனக் கருதி ரிச்சர்ட் மொங்க்டன் மில்ன்ஸ் எனும் அரசியல்வாதியுடனான தனது உறவை முறித்துக் கொண்டார்.

பின்னாளில்- சிறந்த அரசியல் வாதியும், போர்ச் செயலராகப் பணியாற்றியவருமான சிட்னி ஹேர்பேர்ட் என்பவரை ரோமில் சந்தித்து அவர்பால் ஈர்க்கப்பட்டார். சிட்னி ஹேர்பேர்ட் ஏற்கெனவே மணமானவர். எனினும் இருவரும் வாழ்நாள் முழுதும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிரீமியாவில் நைட்டிங்கேல் ஆற்றிய பணிகளுக்கும், பொதுவாக அவரது துறையில் ஆற்றிய பணிகளுக்கும், ஹேர்பேட் வசதிகள் செய்து கொடுத்ததுடன் ஊக்கமும் கொடுத்து வந்தார். புளோரன்சும் ஹேர்பேட்டின் அரசியல் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி வந்தார் எனக் கூறப்படுகின்றது.

1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. இப்போரின் போது லண்டன் டைம்ஸ் உட்படப் பல முன்னிலைத் தினசரிகள் கிரிமியாவில் காணப்படும் பரிதாபகரமான நிலைமைகளையும் காயமுற்றோரும் ஊனமுற்றோரும் முறையாகப் பராமரிக்கப்படாமை சார்பாக பல கட்டுரைகளையும் கருத்துக்களையும் தொடர்ந்து வெளியிட்டன.

இந்த யுத்தப் பகுதியில் போதியளவு சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாதிமார்கள், மருந்து வகைகள், மருந்துத் துணிகள் இல்லாமை பற்றி மனிதாபிமானத்தோடு சுட்டிக்காட்டி டைம்ஸ் தினசரி கட்டுரை வெளியிட்டது. இதனை வாசித்த புளோரன்ஸ் அதிர்ச்சியும் கவலையும் கொண்டார். கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 தாதியருடன் இராணுவ வைத்திய சாலைக்குச் சென்றார். பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். தனதன்பினாலும் சிகிச்சைகளாலும் புளோரன்ஸ் படையினரைக் குணப்படுத்தினார். ஒரே தடவையில் பெருமளவு காயப்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட வேளை இடைவிடாது அவர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். இரவு வேளைகளில் கையில் விளக்கொண்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று சுகம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தம்மைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு வந்துள்ளது என இராணுவவீரர்கள் புளோரன்ஸைக் கெளரவித்தனர். விளக்கேற்றிய பெருமாட்டியை ‘Lady with the Lamp’ என வர்ணித்தனர்.1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புகழ் பெற்றவரானார்.

இந்தப்போர் அனுபவம் அவரது பிற்கால வாழ்வில் சுகாதாரமான சூழலைப் பேணலின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைப்பதில் பெரும்பங்கை வகித்தது. பிரித்தானியாவில் இருந்த இராணுவ மற்றும் பொது மருத்துவமனைகளில் கவனிப்பையும், சூழலையும் மேம்படுத்த வேண்டுமென்று நைட்டிங்கேல் வாதாடி வந்தார். மருந்துத் தட்டுப்பாடும், குறையூட்டமும் அதிக பணியுமே நோயாளிகளான வீரர்களின் இறப்புக்குக் காரணமென புளோரன்ஸ் நைட்டிங்கேல் கருதினார்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள் (Notes on Nursing),  “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும் (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டிங்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில.

போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். விக்டோரிய அரசியின் வேண்டுகோளை ஏற்று படைவீரர்களின் உடல்நலன் குறித்த அரசு ஆணைக்குழுவை அமைப்பதிலும் அவ்வாணைக்குழுவிற்குத் தேவையான அறிக்கைகள் ஆயத்தப்படுத்தி வழங்குவதிலும் ஈடுபட்டார். அத்துடன், அரசாணைக் குழுவிற்கு இவர் சமர்ப்பித்த அறிக்கையில் படை வீரர்களின் இறப்புக்கு படைவீரர்களின் வாழ்க்கைத் தராதரம் மற்றும் சுகாதாரமான சூழல் கீழ்மட்டத்திலிருப்பதுவும் முக்கிய காரணமென எடுத்துரைத்தார்.   பெண்ணாகையால் இவ்வாணைக்குழுவிற்குத் தலைமை தாங்க இவருக்கு அனுமதி இருக்கவில்லை. சிட்னி ஹேர்பேர்ட் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிக்கையில் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் முன்னின்று செயலாற்றினார். மேற்குறித்த ஆணைக்குழுவின் செயற்பாட்டின் மூலம் படை வீரர்களது மருத்துவ கவனிப்பு மாற்றம் பெற்றதுடன் இராணுவத்தினருக்கான மருத்துவப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது.

துருக்கியிலிருந்த போது நவம்பர் 29, 1855 அன்று இவரது பணியினைக் கௌரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் ‘தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம்’ நிறுவப்பட்டது. நன்கொடைகள் குவிந்தன. இந்நிதியத்தின் துணையுடன் புனித தோமையர் மருத்துவமனையில் யூலை 9, 1860 அன்று நைட்டிங்கேல் பயிற்சிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக ‘புளோரன்ஸ் நைட்டிங்கேல் தாதியியல் மற்றும் செவிலியர் பயிற்சிக்கூடம என அறியப்படுகிறது. இவரெழுதிய தாதியியற் குறிப்புகள் என்னும் 139 பக்கங்களுடைய புத்தகம், நைட்டிங்கேல் பயிற்சிக்கூடத்திலும் ஏனைய தாதியர் பயிற்சிக்கூடங்களிலும் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக அமைந்தது. தாதியியலுக்கான ஒரு நல்ல அறிமுகமாகவும் இந்நூல் கருதப்படுகிறது.

தாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார். 1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் தாதியர் பரவலாகச் சேவை புரிந்தனர். புளோரன்ஸ் நைட்டிங்கேல் 1883 இல் விக்டோரியா அரசியிடமிருந்து அரச செஞ்சிலுவை விருது பெற்றார். 1907 இல் புளோரன்ஸின் அரும்பெருஞ் சேவைகளை அறிந்த இங்கிலாந்து மன்னர் பாம் எட்வேட் ‘Order of Merit’ எனும் பட்டத்தை வழங்கி புளோரன்ஸைக் கெளரவித்தார். உலகில் இப்பட்டத்தைப் பெற்ற முதலாவது பெண்மணியெனும் பேரும் புகழும் இவருக்கே உரித்தாகும்.

அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பெயரைத் தாங்கியுள்ள பல நிறுவனங்கள் தாதியியல் சார்ந்தவையாயினும், கனடாவிலுள்ள நைட்டிங்கேல் ஆராய்ச்சி மையம் புளோரன்ஸ் நைட்டிங்கேலுக்கு இருந்ததாக நம்பப்படும் அதீத களைப்பு ஏற்படல் நோய் (Chronic Fatigue Sydnrome) பற்றி ஆராய்கிறது. 1896 ஆம் ஆண்டளவிலிருந்து படுத்த படுக்கையானார். ஆகஸ்ட் 13, 1910 இல் இவர் இறந்த போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) புதைக்க அரசு முன்வந்தது.  

ஆனால் அவரது உறவினர்களால் அது மறுக்கப்பட்டது. புளோரன்ஸ் நைட்டிங்கேலின் உடல் ஈஸ்ட் வெலோவிலுள்ள புனித மார்கரட் தேவாலய இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

நைட்டிங்கேல் தாதியர் பயிற்சிக்கூடத்தின் சேவை இன்றும் தொடர்கிறது. புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம் ஒன்று லண்டனிலும் இன்னுமொன்று இவரது வீடான கிளெய்டன் ஹவுசிலும் உள்ளன. ரோமில் உள்ள அகஸ்டினோ ஜெமெல்லி மருத்துவ நிலையம் (இத்தாலியின் முதல் பல்கலைக்கழகஞ் சார் மருத்துவமனை)தாதியியலில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பங்களிப்பைக் கௌரவிக்கும் முகமாக தாதியருக்கு உதவும் படுக்கையருகே வைக்கும் கம்பியில்லா இணைப்புக் கொண்ட கணினியொன்றிற்கு ‘பெட்சைட் புளோரன்ஸ்’  (bedside Florence) எனப் பெயரிட்டுள்ளது.

மருத்துவ மற்றும் தாதியியற் துறைகளிலேயே இவர் புகழ் பெற்றிருந்தைப் போலவே  இங்கிலாந்தின் பெண்ணியத்திலும் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார். 1850-1852காலப்பகுதியில் சுயபரிசோதனை, உயர்குடி மற்றும் தன் குடும்பப் பெண்களின் வாழ்க்கை பற்றி யோசித்த புளோரன்ஸ் நைட்டிங்கேல், தனது சிந்தனைகளை “சமய மெய்யியல் தேடலுடையவர்களுக்கான சிந்தனைகள்” என்ற நூலாக எழுதினார். இந்நூல் மூன்று பாகங்களுடையது. மூன்றும் சேர்த்து இந்நூல் வெளியிடப் படவில்லையாயினும் ‘கசான்ட்ரா’ எனும் ஒரு பகுதி ரே ஸ்ட்ரக்கி என்பவரால் 1928ம் ஆண்டு வெளியிடப்பட்டு த காஸ் (The Cause) எனும் பெண்ணியல் வரலாற்று நூலில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.

எனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.

சர்வதேச உரோமர் கலாசார தினம்.( April 8: International Day of Roma ) – புன்னியாமீன்

international-day-of-roma.jpgஒவ் வொரு ஏப்ரல் மாதமும் 08ஆம் திகதி சர்வதேச உரோமர் கலாசார தினம் கொண்டாடப்படுகின்றது. உரோமர் கலாசாரம், உரோமப் பாரம்பரியங்கள்,  மற்றும் உரோமர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

20ஆம் நூற்றாண்டில் பின்னரைப் பகுதிகளில்,  குறிப்பாக 1960களில் உரோம கலாசாரத்தைப் பேணுவது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளில் பல இயக்கங்களும், அமைப்புகளும் அதிகளவில் உருவாகின. இதனால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 1971ஆம் ஆண்டில் லண்டனுக்கருகே ஓப்பிளிங்டன் Orpington    எனுமிடத்தில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சர்வதேச உரோமானிய அமையத்தை International Romani Union (IRU),  உருவாக்கினர்.

1990ஆம் ஆண்டு போலாந்தில் உள்ள ‘செரொக்’ எனுமிடத்தில் நடைபெற்ற 04ஆவது சர்வதேச உரோமானிய அமையத்தின் International Romani Union (IRU),  கூட்ட முடிவின்படியே ஏப்ரல் 08ஆம் திகதி சர்வதேச உரோம கலாசார தினத்தை கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.

பொதுவாக இத்தினத்தை உரோம கலாசாரங்கள், உரோம பாரம்பரியங்கள்,  மரபுகள் என்பவற்றை வலியுறுத்தக்கூடிய வகையில் போட்டிகள்,  கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்பவற்றை நடத்தி இத்தினத்தை கொண்டாடுவர். தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மே, இரண்டாவது ஞாயிறு -அன்னையர் தினம் – புன்னியாமீன்

mothers-day.jpgஅம்மா… இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும்,தொணிகளும்  ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

‘தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.

ஒரு பெண்ணானவள் மகளாக,  சகோதரியாக,  தாயாக, தாரமாக,  தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது;  தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

“அன்னையர் தினம் ” Mother’s Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் – கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வ‌ண‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகின்றது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளு‌க்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15 ந் தேதி மூன்று நாள் விழா நட‌த்‌தின‌ர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மா‌றியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் 20ஆம்   நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது. 

அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற இடத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ரீவிஸ் என்பவரின் மகள்தான் “அன்னா மரியா”. அன்னா என்று அழைக்கப்பட்ட அவர் 1852 – ஆம் ஆண்டு ‘கிரான்வில்லி ஜார்விஸ்’ என்பவரை திருமணம் செய்து கொண்டு மேற்கு விர்ஜீனியாவின் பிலிப்பியிலிருந்து கிராப்டனில் என்னும் இடத்திற்கு குடியேறினார். அன்னாவுக்கு மூன்று குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தைக்கு பார்வை கிடையாது.

அன்னா வாழ்ந்த காலகட்டங்கள் போர்களும், சண்டை, சச்சரவுகளும் அமெரிக்காவில் அதிகமிருந்தது. அதனால் சுகாதார வசதி குறைவுகளும், உணவு பற்றாக்குறைகளும், பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டும், தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இரக்க சுபாவமுள்ள அன்னா ஏதாவது செய்தாக வேண்டுமே என்று தோன்றியது. அந்த காலகட்டத்தில்தான் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக பெண்கள் நலச் சங்கங்களை தொடங்கினார். பணிபுரியும் பெண்கள் டி.பி.நோயால் பாதிக்கப்பட்டபோது அவர்களுடைய குடும்பங்களில் உதவி செய்ய இந்தச் சங்கங்கள் பணிப்பெண்களை அனுப்பி உதவி செய்தது. பல பொது சேவைகளையும் செய்தது. மேலும் பிலிப்பி, ப்ருண்ட்டிடவுன் பெட்டர்மேன், வெப்ஸ்டர் போன்ற நகரங்களிலும் சங்கங்கள் அன்னா உருவாக்கினார். அந்த காலக்கட்டத்தில்தான் அன்னாவின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. பார்வையற்ற பெண் குழந்தை மட்டுமே மிஞ்சினாள்.

மனம் தளராத அன்னா மேலும் சுகாதார கேடுகளை ஒழிக்க தீவிரமாக முயற்சி செய்தார். சுகாதாரக் குறைவான சுற்றுச்சூழற் கேடுகள் மறைய அங்கெல்லாம் சங்கம் அமைத்து வழி நடத்தினார். பால்டிமோர் நகரிலிருந்து ஒஹையோ வரையிலான இருப்புப்பாதை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அன்னா தீவிரமாக களம் இறங்கினார். யுத்தத்தில் படுகாயம் அடைந்த வீரர்களை சங்க கட்டிடத்தில் கொண்டு வந்து வைத்து மருந்திட்டு, உணவு, உடையளித்து காக்கும் பணியினை சங்கங்கள் மூலமாக அன்னா செய்தார். யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் இறந்த போது, அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து சிதறிப்போயினர். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் போராடினார் அன்னா.

தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அன்னாவின் வயது 72. பிலடெல்பியாவின் வெஸ்ட் லாரல் ஹில்லில் புதைக்கப்பட்டபோது அவருடைய 72 வது வயதைக் குறிக்கும் வகையில் “கிராப்டன் ஆன்ரூஸ்” சர்ச்சில் 72 முறை ஆலய மணி ஒலித்தது!

இவரின் மகள்  ஜார்விஸ் Jarvis  முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1907 – ஆம் ஆண்டு மே மாதம் 10 – ஆம் தேதி சிறப்பு வழிபாடு நடத்தினார். 1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் தின உரை நிகழ்த்தினார்! தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். 1909-ஆம் ஆண்டு அமெரிக்காவின் 45 – மாநிலங்கள், போர்ட்டோ ரிக்கோ, ஹாவாய், கனடா, மற்றும் மெக்சிகோவில் அன்னையர் தினத்தை விசேடப் பிரார்த்தனைகள் வெள்ளை மற்றும் சிவப்பு துணிகளை அணிந்து சிறப்பாகக் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து ஜார்விஸ் Jarvis  1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து,  நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் Anna Jarvis  திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் “அன்னையர் தினம்” கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும்,  நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் Woodrow Wilson   1914ம் ஆண்டு  வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை  அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க  காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல  46 நாடுகள் இதே நாளில் “அன்னையர் தினம்” என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமன நிறைவடையவில்லை.  46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க “அன்னையர் தினம்” அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  தற்போது அன்னையர் தினம் என்பது ஒரு வியாபார தினம்போல் மாறிவிட்டது கவலைக்குரியதே. அன்னையர் தினம் வருவதற்கு முன்பு அல்லது அன்னையர்களை கௌரவிக்கவும்,  மகிழ்விக்கவும் பல நூற்றுக்கணக்கான வியாபாரப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு அவற்றை விற்பனை செய்வதிலேயே முழு அளவில் கரிசனை காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.

இவ்விடத்தில் இத்தினத்தை வியாபாரப் பொருளாக ஒரு சம்பவத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும்.  எதையும் வியாபாரமாக்கி பணம் பண்ணும் அமைப்பு “அன்னையர் தினம்” அன்று “அன்னா மரியா” படத்தினை கொடிகளில் பதித்தும், செயின் டாலர்களில் படத்தை பதித்தும் வியாபாரமாக்கியது. இதனையறிந்த ஜார்விஸ் வெகுண்டெழுந்தார். 1923ம் ஆண்டு இத்தகைய கொடி விற்பனையை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார். என்னுடைய நோக்கம் அன்னையர் தினம் “செண்டிமெண்ட்” நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல் பணம் திரட்டும் நாளாக இருக்கக்கூடாது. இத்தகைய வசூலுக்குத் தடைவித்திக்க வேண்டும் என்று வாதிட்டார். ஈற்றில் வெற்றி பெற்றார். எனவே,  அன்னையர் தினம் என்பதை உள்ளார்த்தமாக உணர்வுபூர்வமாக கடைபிடிக்க வேண்டும் என்பதை ஜார்விஸ் எதிர்பாரத்தாரேயன்றி அது ஆடம்பரமாகவும், பணத்தை மையப்படுத்தியதாகவும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகின்றது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெருமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை அனுஸ்டிப்போம்.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

nilakannikal.jpgநவீன உலகில் யுத்தப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிக்கவும், அங்கவீனர்களாக்கவும் காரணமாக இருந்துவரும் நிலக்கண்ணி வெடி’  பற்றி மக்கள் மத்தியில் அறிவுறுத்தல் வழங்கி  விழிப்புணர்வை ஏற்படுத்து முகமாகவும், அதன் பிரயோகத்தை தடுப்பது தொடர்பாகவும் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

பொதுவாக நிலக்கண்ணி வெடிவகைகளில்  M14, Valmara 69, and VS-50A  போன்றன இன்று அதிகளவில் பாவனையிலுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஒரு தனி நபரை அல்லது ஒரு சிறு குழுவினரை அல்லது ஒரு வாகனத்தை அல்லது மிருகங்களை இலக்கு வைத்து நிலக்கண்ணிவெடி’கள் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவுள்ளன. பொதுவாக நிலத்தின் கீழும் நிலத்தின் மேலும் இக்கண்ணிவெடிகள் வைக்கப்படும். இக்கண்ணிவெடிகளை மிதிப்பதினூடாக வெடிக்கும் தன்மையும் அல்லது இக்கண்ணிவெடிகளை குறி வைத்து இயக்கி வெடிக்க வைக்கக்கூடிய தன்மையையும் இவை கொண்டவை.

நிலக்கண்ணிவெடி  வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது கிறிஸ்துக்குப் பின் 03ஆம் நூற்றாண்டில் சீனாவின் பிரதமர் சூஞ்லியான் என்பவர் மூலம் ஹ{ருலு பள்ளத்தாக்கு யுத்தத்தின்போது ஸிமா – ஈ படைக்கெதிராக பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பிற்காலத்தில் சில பதிவுகளின்படி கூறப்பட்டாலும்கூட, பொதுவாக வெடி மருந்தின் கண்டுபிடிப்பு 10ஆம் நூற்றாண்டுகளில் இடம்பெற்றதினால் மேற்படி தகவலினை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. இருப்பினும், வெடி பொருள் கலக்கப்படாத முறையில் விசஊசிகள் அன்றேல் விசத்தைப் பாய்க்கக்கூடிய ஏனைய உலோகங்களை நிலத்தில் புதைத்து எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்த பயன்படுத்தப் பட்டிருக்கலாம். இதுவும் ஒரு நிலக்கண்ணியென்றே இங்கு கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. அதேநேரம், 14ஆம் நூற்றாண்டில் சீனச்சட்டி குண்டுகள் வெடி மருந்து நிரப்பப்பட்ட முறையில் மொங்கோலியாவுக்கு எதிரான யுத்தத்தில் சீனா பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் நிலக்கண்ணிப் பாவனை நீண்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது என்பதை மேற்குறிப்பிட்ட தரவுகளிலிருந்து அறியமுடியும்.

பொதுவாக எல்லைப்புற யுத்தங்களின்போது; எல்லைப்புற பாதுகாப்பிற்கும், எதிரிகளை நகர விடாமல் பாதுகாப்பிற்கும் பெருமளவு நிலக்கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கண்ணிவெடி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படும் மாபெரும் குறை யுத்தங்கள் முடிந்த பின்பு உரிய நிலக்கண்ணிகள் அகற்றப்படாமையினால் சாதாரண மக்கள் அவற்றில் சிக்குண்டு பாதிப்புக்கு உட்படுவதாகும். உதாரணமாக கம்போடியாவில் யுத்தம் முடிந்த பின்பு 35,000 பொது மக்கள் அங்கயீனர்களாகியுள்ளனர். இதிலிருந்து இதன் அபாயத்தன்மையை உணர்ந்துகொள்ள முடியும். சில ஆய்வுகளின்படி நிலக்கண்ணிவெடிகளை வைத்தவர்களுக்கு தான் எந்த இடத்தில் வைத்தோம் என்று கூற முடியாதளவுக்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நிலக்கண்ணியின் ஆபத்தையுணர்ந்து நிலக்கண்ணி தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 1992ஆம் ஆண்டு கனடா அரசு தீவிரமாக முன்வைத்தது. கனடாவில் ஜோடி வில்லியம் Jody Williams இதன் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார். இவரின் முயற்சிக்காக 1997ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு நிலக்கண்ணிப் பாவனைக்கு எதிராக ஒட்டாவாவில் 122 நாடுகள் கைச்சாத்திட்டன.  ஒட்டாவா Ottawa  ஒப்பந்தம் Ottawa Treaty 1999ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. ஒட்டாவா ஒப்பந்தப்படி நிலக்கண்ணி பாவனை, களஞ்சியப்படுத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லல், விற்பனை செய்தல்  என்பன தடைசெய்யப்பட்டன. இந்த ஒப்பந்தத்தில் யுத்ததாங்கி அழிப்பதற்கான நிலக்கண்ணி, கொத்தணிக் குண்டுகள், கிளைமோர் குண்டுகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்போது 155 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்று கைச்சாத்திட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், 40 நாடுகள் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்படுகின்றது. கைச்சாத்திட்டுள்ள நாடுகளுள் 64 நாடுகள் பயிற்றுவிப்புக்காகவும், தற்பாதுகாப்புக்காகவும் இதைப் பயன்படுத்துவோம் என்ற அடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த ஒப்பந்தத்துக்கு இதுவரை கைச்சாத்திடாத நாடுகளாக  சீனா,  இந்தியா, இஸ்ரேல்,  பாக்கிஸ்தான்,  ரஸ்யா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பிரதான நாடுகள் இருப்பதும் அவதானிக்கத்தக்கதாகும்.  

முதலாம் கட்ட வழிகாட்டித் தொகுதிகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. : ஜெயபாலன் & புன்னியாமீன்

01.jpgவன்னி யுத்த அனர்த்தங்கள் காரணமாக முல்லைத்தீவு,  கிளிநொச்சி,  மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நகரிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி அந்தந்த நலன்புரி நிலையங்களினுள்ளே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 01ஆம் திகதி புள்ளிவிபரப்படி மேற்படி நலன்புரி நிலையங்களில் 13 பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் இணைந்து இந்த நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களின் நலன்கருதி சில கல்வி செயற்பாட்டு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல்படியாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக வேண்டி மாதிரி வினாத்தாள்களையும்,  வழிகாட்டி புத்தகங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

செட்டிக்குளம் ம.வித்தியாலயத்தில் இயங்கும் விசேட கல்வி அலுவலகத்தின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின் கீழ் நலன்புரிநிலையங்களில் தரம் 05 இல் கல்வி பயிலும் 1057 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பின்வரும் மாதிரிவினாத்தாள்களும்,  வழிகாட்டிப் புத்தகங்களும் திரு. த. மேகநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு மாணவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Letter_01_Mehanathan_06May09

Letter_02_Mehanathan_06May09

மாதிரி வினாத்தாள் இலக்கம் 01 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 02 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 03 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 04 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 05 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 06 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 07 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 08 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 09 – 1100 பிரதிகள்
மாதிரி வினாத்தாள் இலக்கம் 10 – 1100 பிரதிகள்

இவ்வினாத்தாள்கள் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு பரீட்சையாக நடத்தப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்படுகின்றனர்.

மேலும்,  தரம் 05 புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 01 எனும் நூலின் 1100 பிரதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகமும் கீழுள்ள பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கதிர்காமர் வித்தியாலயம், சிவானந்தா வித்தியாலயம்,  செட்டிக்குளம் ம.வி, பம்பைமடு விடுதி, தொழில்நுட்பக்கல்லூரி, கலைமகள் வித்தியாலயம்,  முஸ்லிம் ம.வி, காமினி வித்தியாலயம், சைவபிரகாச வித்தியாலயம், தமிழ். ம.ம.வி, புந்தோட்டம் ம.வி, கல்வியியற் கல்லூரி, கோவில்குளம் இந்துக் கல்லூரி.

தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக வேண்டி மேலும் புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 02, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03, புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 04 ஆகிய நூல்களையும் 20 மாதிரி வினாத்தாள்களையும் (இலக்கம் 11 – 30 வரை) இம்மாத இறுதிக்குள் வழங்க தேசம்நெற் உம் சிந்தனைவட்டமும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதினால் அதற்கேற்ற வகையில் இந்த வழிகாட்டல் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன்,  தரம் 06,07,08,09,10,11 மாணவர்களுக்காக வேண்டி ஒரு தொகுதி செயல் நூல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாத இறுதியில் வன்னி பிரதேசத்திலிருந்து வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கு அதிகளவில் மக்கள்  இடம் பெயர்ந்துள்ளனர். இந்தநிலையங்களில் தரம் 5 இல் பயிலும் மாணவர்கள் மாத்திரம் 1860 பேர் கடந்த இரண்டு வாரத்துக்குள் இடம் பெயர்ந்துள்ளதாக உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக இடம்பெயர்ந்துள்ள மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளில் உதவுவது  குறித்தும்  சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் ஆலோசித்து வருகின்றது.

02.jpg 03.jpg 04.jpg

மனித நேயமிக்க அமைப்பாக திகழும் செஞ்சிலுவை செம்பிறைச் சங்கம்- புன்னியாமீன்

world-red-cross-and-red-crescent-day.jpgஇன்று மே 08ஆம் திகதி. உலக செஞ்சிலுவை – செம்பிறை  (World Red Cross and Red Crescent Day) தினமாகும்.

உலகில் யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் பாதிப்படைவோருக்கு மனிதாபிமான நோக்கில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் செம்பிறைச் சங்கம் என்பன பெயரில் ஒரு வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அடிப்படையில் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்னெடுப்பவைகளே. குறிப்பாக அரபுலக நாடுகளி;ல் சிலுவை எனும் குறியீட்டுக்கும்,  வார்த்தைப்பதத்திற்கும் பதிலாக பிறை எனும் குறியீடும்,  வார்த்தைப்பதமும் பயன்படுத்தப்படுகின்றது. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளினூடாக இந்த அமைப்புகள் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலக செஞ்சிலுவை – செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களினாலும் அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத,  மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுகள் மிக்க தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.

இச்சங்கத்தின் ஸ்தாபகரான ஜீன் ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்த தினமான மே மாதம் 8ம் திகதி அம்மனிதாபிமான மிக்க மனிதப் புனிதரைக் கெளரவிக்க இத்தினத்தை உலக செஞ்சிலுவைச் சங்கத் தினமாக உலகத்தோர் அனுஷ்டிக்கின்றனர்.

ஜெனீவாவில் பக்தியும் கருணையும் குடிகொண்டிருந்த குடும்பமொன்றில் 1828ம் ஆண்டு மே மாதம் 08ம் திகதி ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற அனுபவங்கள் காரணமாக சிறுபராயத்திலிருந்தே சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார்.  சிறிய பராயத்திலே அயலவர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.

1859 ஜுன் 25இல் அவர் வட இத்தாலிக்குச் சென்றபோது அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய,  இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலயங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். இவ்வாறு குற்றுயிராய்க் கிடந்தவர்களிடத்தே எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி டியூனண்ட்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி  சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது.

பின்பு ஜெனீவா திரும்பிய டியூனண்ட் ‘சோல்பரினோ நினைவுகள்|| என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வினையடுத்து நாடு நாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 ஒக்டோபர் 30இல் உயிர் நீத்த ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது

1863ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபபட்ட தொண்டர்களை இனங்காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவைச் சின்னம் தெரிவு செய்யப்பட்டது. 1864ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனிவாவில் மாநாடொன்று இடம் பெற்றது. இம்மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களே ஜெனீவா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு மனிதனையும் அவரின் பெருந்தன்மைகளையும் கெளரவிக்கவே ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதில் தரையில் காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட அல்லது கப்பல் உடைந்ததால் பாதிக்கப்பட்ட ஆயுதந்தரித்தோரைக் காப்பாற்றல் யுத்தக் கைதிகளைப் பாதுகாத்தல் பொதுமக்களைக் காத்தல் சர்வதேச ஆயுத மோதல்களினாலும் உள்நாட்டில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டோரை பாதுகாத்தல் என்பன ஜெனீவா சாசனத்தில் காணப்படுகிறது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம்.

1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் என அழைக்கப்படுகிறது.

செஞ்சிலுவை,  செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளமையினால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறையாகக் கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் யுத்தங்களினால் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளன. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு பிரதான கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

01. மனிதாபிமானம்
02. பாரபட்சமின்மை
03. நடுநிலைமை
04. சுதந்திரத் தன்மை
05. தொண்டு புரிதல்
06. ஒற்றுமை
07. சர்வவியாபகத் தன்மை என்பனவே அவை.

யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிப்புறும் மக்களுக்கு இன,  மத, மொழி,  பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது,  அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது,  நடுநிலைமையுடனும்,  சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகிறது.

1936ல் இலங்கை மக்களைத் தாக்கிய மலேரியா மற்றும் கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்தவென இலங்கை அரசுக்கு உதவிபுரியும் வண்ணம் பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் மத்திய கிளையொன்று இலங்கையில் அமைக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இக்கிளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமென மாறியது. 1952ல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் இலங்கை இணைந்து கொண்டது.

ஆரம்பத்தில் இரத்ததானம் முதற்சிகிச்சை முதலுதவிக்கான பயிற்சி வழங்கல்,  நடமாடும் சுகாதார சேவை வழங்கல் விபத்துக்குள்ளானவர்களுக்கு உணவு உடை,  உறையுள் என்பவற்றை வழங்கல். வரட்சி, வெள்ளப் பெருக்கு, யுத்தம் குண்டு வெடிப்பு, வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான பயிற்சிகள், போன்ற சேவைகளை வழங்கியது.

இலங்கையில் வடக்குப் பிரதேசத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்படுகின்றது. போரின் நிமித்தம் சிறைபட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடல்,  எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல்,  காணாமற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல்,   யுத்தப் பிரதேசத்திலுள்ளவர்களை அழைத்து வருதல்,  குடும்பச் செய்திகளைப் பராமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பினரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல்,  நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல்,  மருத்துவ உதவி வழங்கல் தற்காலிக கூடரங்களை அமைத்தல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க சம்மேளனம் அதன் அனுபவத்தையும் சர்வதேச அமைப்புகளின் அனுபவமிக்க தொண்டர்களையும் இலங்கையில் நீண்டகால சேவையில் ஈடுபடுத்தி வருகின்றது. எனினும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் இத் தொண்டர்கள் பாதிப்புக்குள்ளாகியமையும் நோக்கத்தக்கது.

செஞ்சிலுவைச் சங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் சேவைகள் அண்மைக்காலத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கைகள் தற்போதைய யுத்த நிலையில் மேற்கொண்டு வரும் சேவைகள் எமக்கு கண்கூடான உதாரணங்களாகும்.

சர்வதேச மருத்துவிச்சிகள் தினம் International Midwives Day – புன்னியாமீன்

midwives.jpgஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் சர்வதேச மருத்துவிச்சிகள் தினமாக  International Midwives Day அனுஸ்டிக்கப்படுகிறது

பொதுவாக மருத்துவிச்சிகள் தினம் எனும்போது நவீன உலகில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் சமூகக் கட்டமைப்பில் ஒரு முக்கிய பிரிவினர் தொடர்பான நினைவூட்டல் தினமாகவே இது அமைகின்றது.

மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது தாய், சேய் மரண வீதம் அதிகமாகும். இந்த தாய், சேய் மரண வீதத்தை கட்டுப்படுத்த மூன்றாம் உலக நாடுகள் கூடிய கரிசனைச் செலுத்த வேண்டுமென கடந்த சில தசாப்தங்களாகவே உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகின்றது.

அதேநேரத்தில் இந்தியா,  இலங்கை,  பாக்கிஸ்தான், மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான்,  பங்களாதேஸ் போன்ற சார்க் நாடுகள் இவ்விடயத்தில் கூடிய கரிசனைக் காட்டி வருவதின் காரணமாக அண்மைக்காலமாக தாய் சேய் மரண வீதம் இந்நாடுகளிலும் வெகுவாக குறைந்து வருவதை அவதானிக்கலாம். இச்செயற்றிட்டத்துக்கு அரசாங்கங்களும், சுகாதார அமைச்சுக்களும், சுகாதார நிறுவனங்களும் கூடிய பங்களிப்பினை வழங்கி வந்தாலும்கூட, இச்செயற்றிட்டத்தை நேரடியாக எடுத்துச் செல்வதில் மருத்துவிச்சிகள் என்றழைக்கப்பட்ட குடும்பநல உத்தியோகஸ்தர்களின் பங்களிப்பே முதன்மைப் பெற்றுள்ளது.

ஒரு பெண் கர்ப்பம் அடைந்ததிலிருந்து சிசுவைப் பிரசவிப்பதுவரை பிறந்த சிசு சுமார் ஐந்து வயதை அடையும் வரை இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்களின் நேரடிப் பராமரிப்பும், அவதானமும், ஆலோசனைகளும் விசாலமானவை. மருத்துவிச்சிகளின் சேவை மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவர்களின் பணி உயரியதாகவே கருதப்படுகின்றது.

இந்த அடிப்படையில் 1987ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச மருத்துவிச்சிகள் மாநாட்டில்  International Confederation of Midwives  சர்வதேச ரீதியில் மருத்துவிச்சிகள் தினமொன்று பிரகடனப்படுத்தப்பட வேண்டியது மருத்துவிச்சிகளுக்கு சமூகத்தில் உயரிய இடம் வழங்கப்படுவதையும், கௌரவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தினம் அமைய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் 1991ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதியை சர்வதேச மருத்துவிச்சிகள் தினமாக  International Midwives Day ஏற்றுக்கொண்டு தொடர்ச்சியாக அதனை ஒவ்வொரு மே மாதம் 05ஆம் திகதியும் அனுஸ்டித்து வருகின்றன. இன்று உலகில் பெரும்பாலான நாடுகள் இத்தினத்தை அனுஸ்டிப்பதை அவதானிக்கலாம்.

குடும்பநல உத்தியோகஸ்தர்களான மருத்துவிச்சிகள் பொதுவாக ஒரு தாய் கர்ப்பம் தரித்ததிலிருந்து பிரசவம் வரை சகல விடயங்களிலும் கர்ப்பினித் தாய்க்கு ஆலோசகர்களாகவும், வழிகாட்டிகளாகவும், பராமரிப்பாளர்களாகவும், இருந்து வருகின்றனர். குறிப்பாக ஒரு கர்ப்பினித் தாயின் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப நிலை தொடர்பான விபரங்கள் போன்றவற்றை அவதானித்து கர்ப்பினிக்குரிய தேவையான ஆலோசனைகளை வழங்கி மேற்கொள்ளவேண்டிய வைத்தியப் பராமரிப்புக்கான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.

அதேபோல குழந்தை பிறந்ததும் மூன்றாம் உலக நாடுகளில் யுனிசெப்பின் ஆதரவுடன் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு பேணப்படுகின்றது. இந்த ஆரோக்கிய வளர்ச்சிப் பதிவேடு குடும்நல உத்தியோகஸ்தர்களின் மூலமாகவே குழந்தை பிறந்ததிலிருந்து ஐந்தாண்டு காலம்வரை பராமரிக்கப்படுகின்றது. குறிப்பாக குழந்தை பிறந்ததும் குழந்தைக்கு பி.சீ.ஜி. தடுப்பூசி வைத்தியசாலையிலேயே ஏற்றப்படுகின்றது. பிரசவத்தின் பின் தாய் வீடு சென்ற பின்பு குடும்பநல உத்தியோகஸ்தர் தாயின் வீட்டுக்கு வந்து குழந்தையை பரிசோதித்து தேவையான அறிவுரைகளை வழங்குவார்.

குறிப்பாக தாய்ப் பாலூட்டுதல், தொப்புள்கொடி பராமரிப்பு, குழந்தையின் உளவிருத்தியைத் தூண்டுதல், ஆபத்தான அறிகுறிகள், குழந்தைக்கான தடுப்பூசி விபரங்கள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற விடயங்களும், குழந்தை 06 மாதங்கள் நிறைவடைந்ததும் குழந்தைக்கு உணவூட்டுதல், குழந்தை நோய்வாய்ப்படும்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள், குழந்தையின் உள விருத்தியைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்குவார்.

பொதுவாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சுகாதார அமைச்சுக்களில் குடும்ப சுகாதார பணியகம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இத்தகைய நடவடிக்கைகளுக்கு பூரண அனுசரணையாளர்களாகவும், ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
மேலும் இந்த குடும்பநல உத்தியோகஸ்தர்கள் தொற்றுநோய்கள் பரவும் காலங்களில் கிராமங்கள் தோறும் சென்று அது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவர். அத்துடன் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மக்களை அறிவுறுத்தி நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவர்.

பெரும்பாலான நாடுகளில் இன்று நகர, கிராமத்து வைத்தியசாலைகளுடன் இவர்களது பணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அளவிடமுடியாத சேவைகளை வழங்கிவரும் மருத்துவிச்சிகளாகிய குடும்பநல உத்தியோகஸ்தர்களின் தொழில் அந்தஸ்தை அதிகரிக்கக்கூடிய வகையில் இவர்களுக்கு கூடிய வசதிகளைச் செய்து கொடுப்பதுடன், இன்றைய அரசாங்கங்கள் இது விடயத்தில் கூடிய கரிசனைக் காட்டுவதினூடாக சமூகத்துக்கு இவர்களின் தொண்டு எத்தகையது என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters’ Day (IFFD) – புன்னியாமீன்

international-firefighters-day.jpgஇன்று மே மாதம் 04ஆம் திகதி. ஆண்டு தோறும் மே 4ஆம் திகதியன்று  அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்  International Firefighters’ Day (IFFD) நினைவுகூரப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது. ஆனால்,  இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை அனர்த்தங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும்ää அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.

இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும்,  அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும்,  தேசிய மட்டத்திலும் அங்கீகாரத்த தன்மையை வழங்கி இவர்களை நன்றி கூருமுகமாக இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் பிரதான எதிர்பார்க்கையாகக் காணப்படுகின்றது. அதாவது,  சமூகத்தையும்,  சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும்,  சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூர்வதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.

வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. இந்நிலையில் 1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பாரிய காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர். இந்நிகழ்வையடுத்து மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதன் விளைவாகவே மே 4ஆம் திகதி அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூரப்பட்டு வருகிறது. 

உனது உரிமை எனது மூக்கு நுனி மட்டும்… :ஜனநாயகத்தின் பாதுகாவலனாக திகழும் ஊடகங்கள் – புன்னியாமீன் –

iworld-press-freedom-day.jpgஇன்று மே -3 உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day)

சம்பவங்களையும், புதினங்களையும், நிகழ்ச்சிகளையும், படங்களையும் தொகுத்துத் தரும் அச்சடித்த தாள்களாக மாத்திரம் பத்திரிகைகளை கருதமுடியாது. அவை ஒரு நாட்டின் நலன்களுக்கும், அபிவிருத்திக்கும் அவசியமான சமுதாய மேம்பாட்டிற்கு வேண்டிய கருத்துக்களை வழங்கும் அதே வேளை ஜனநாயகத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகின்றது.

ஒரு நாட்டின் ஜனநாயக மேன்மைக்கும், ஜனநாயக விரோதிகளினதும் அடக்கு முறையாளர்களினதும் வீழ்ச்சிக்கும் பேருதவி புரிகின்றதென்பதை வரலாறு உலகிற்கு பலமுறை எடுத்துக்காட்டியுள்ளது. பத்திரிகையானது ஒரு நாட்டினை கட்டியெழுப்பும் அல்லது நிர்மாணிக்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. நவீன காலத்தில் இலத்திரனியல் ஊடகங்களின்அபரிமிதமான வளர்ச்சியின் பின்னணியில் பத்திரிகை சுதந்திரம் என்பது இன்று ‘ஊடக சுதந்திரம்’ என்ற நிலையில் விரிவுபட்டுள்ளது.

மனிதனின் ஒரு அடிப்படை உரிமையாக பத்திரிகைச் சுதந்திரம் காணப்படுகிறது. இச்சுதந்திரமானது ஒருவரின் சொந்தக் கருத்துக்களை மாத்திரமன்றி, ஏனையோரின் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தையும் தெளிவுபடுத்துகின்றது. பத்திரிகையின் பங்களிப்பானது மனித உரிமைகளின் பாதுகாவலனாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. பத்திரிகைகளின் சுயாதீனமானது சுதந்திரம், பொறுப்புணர்வு, தார்மீகம் ஆகிய முத்தூண்களில் சார்ந்திருக்கிறது. இப்பண்புகள் பத்திரிகைகளுக்கு தேசத்தின் வாயில் காப்போன் எனும் அந்தஸ்தையும் வழங்குகின்றன.

பத்திகைச் சுதந்திரத்துக்காக அடிப்படை ஐ.நா.வின் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் 19உறுப்புரையில் குறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்திலும் 19வது உறுப்புரிமையில் இதற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் அரசியல் யாப்புக்களிலும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் அரச கொள்கைகளுக்கமைய இந்த பத்திரிகைச சுதந்திரத்திற்குஅச்சுறுத்தல் ஏற்பட்டு வந்துள்ளது. அமெரிக்க நீதியரசர் கார்டோஸோ மற்றைய சுதந்திரத்திற்கெல்லாம கருவாக திகழ்வது சிந்தனை, மற்றயது பேச்சுச் சுதந்திரம் என்றார். informed public is the Essence of working democracy எனக்கூறப்படும். ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகிறது.

இதுபற்றிய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையினால் உலக பத்திரிகை சுதந்திர (World Press Freedom Day) சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பத்திரிகை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியற்கலையாகும். மனிதனையும் சமூகத்தினையும் பற்றியறியும் ஒரு சாரளமாகும். சமுதாய மேன்மைக்காக சகலதுறைகளையும் சேர்த்து எண்ணப்படும் ஒரு தொழிற்துறையாகும். ஒரு நாட்டின் அல்லது அரசின் நான்காவது கூறாக வைத்து இத்துறை எண்ணப்படுகிறது. அரசுத் தலைவர், பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகைத்துறை போன்ற நான்கும் மக்களாட்சியின் கூறுகளாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வகையில் பத்திரிகைத் துறையின் முக்கியத்துவம் காலம் காலமாக உணரப்பட்டு வந்தது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது.

இந்நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒருவருக்கு வருடாவருடம் யுனெஸ்கோ நிறுவனத்தினர் விருது (UNESCO/Guillermo Cano World Press Freedom Prize) வழங்கிக் கௌரவிக்கின்றனர். இவ்விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பியஸ பத்திரிகையாளர் “கில்லெர்மோ இசாசா” (Guillermo Cano Isaza) என்பவரின் நினவாக வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகை சுதந்திரம் என்பது மக்களின் தகவல் பெறும் உரிமை, தகவல் வழங்கும் உரிமை, பேச்சு, எழுத்து, கருத்து வெளிப்பட்டு உரிமை என்பவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட அடிப்படைச் சுதந்திரமாகும். பத்திரிகைச் சுதந்திரம் 4 சுவர்களைக் கொண்டு கட்டியெழுப்பட்டுள்ளது. அவை

1.உண்மைக்கு பாதுகாப்பு
2.சனநாயகத்துக்குப் பாதுகாப்பு
3.மக்கள் சுதந்திரத்திற்குப்பாதுகாப்பு
4.பொது நலன்களுக்குப்பாதுகாப்பு என்பனவாகும்.

இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் 3 இல் 14 (1) (அ) உறுப்புரிமையாக எழுத்து, பேச்சு, வெளிப்பாட்டுச்சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் நலன், நாட்டு நலன், பொதுப்பாதுகாப்பு, பொதுச்சுதந்திரம், பிறர் உரிமை பாதுகாக்கப்படல் போன்ற பல்வேறுகாரணங்களுக்காக இந்த அடிப்படைச்சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் பல சட்டதிட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம், தேசிய பத்திரிகைப் பேரவைச் சட்டம், தண்டனைச் சட்டக்கோவை, பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமை சட்டம், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் என்பன பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது.

கி. பி. 10ம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு செய்தி ஏடு அரச சார்பாக தொடங்கப்பட்டுள்ளதை பிரித்தானியக் கலைக்களஞ்சியம் உறுதிப்படுத்துகின்றது. 1609ம் ஆண்டில் ஜேர்மனியில் பல நகரங்களில் செய்தித்தாள்கள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்திப் பத்திரிகைகளின் தோற்றம் உலகளாவிய ரீதியில் வியாபித்தது. 1832ல் கொழும்பு ஜேர்னல் எனும் நாளிதழ் இலங்கையில் வெளியிடப்பட்டது.

உலகில் எவ்விடத்திலும் நிகழும் எவ்வகையான செய்திகளையும் உடனுக்குடன் அறிய சமூகம் ஆவலோடுள்ளது. நம்பகத்தன்மையான, உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்குவது பத்திரிகையின் பொறுப்பாகும். இதன் மூலமே சமூகத்தில் மறுமலர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும். 16ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி இத்தாலி, ஜேர்மன் ஆகியவற்றின் ஐக்கியம், பிரான்சியப் புரட்சி, ரஷ்ய புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திரப் புரட்சி போன்றவற்றுக்கு பத்திரிகைகள் வழங்கிய பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறந்த செயற்றிறன் கொண்ட ஜனநாயகத்திற்கு பத்திரிகைச் சுதந்திரம் அத்தியாவசியமானதும் உண்மையான ஜனநாயகத்தின் பண்பும் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. எனினும் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறும் வகையிலான தடைகளும் பத்திகையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை, கொலை செய்யப்பட்டமை, சிறைவைக் கப்பட்டமை, கடத்தப்பட்டமை, தாக்கப் பட்டமை போன்ற சம்பவங்கள் பற்றியும் சர்வதேச அறிக்கைகள் மூலம் அறியக் கிடைக்கின்றது.

பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் அவமானமாகவும் உள்ள சட்டங்கள் பண்டைய ஆங்கிலக் கோட்பாட்டில் அடிப்படையில் பிறந்தவையாகும்; அதாவது மன்னன் தவறு செய்வதில்லை என்ற அடிப்படையாகும்.பிரித்தானியப் பாரளுமன்றத்தில் மன்னனின் செலவீன ஒதுக்கீடுபற்றிய விமர்சித்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது தண்டிக்கப்பட்டார்கள். மன்னரின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் சட்டரீதியாகப்பட்டுள்ளது.

இன்றையவுலகில் மிக ஆபத்துள்ளதாக பத்திரிகைத் தொழிலும் பத்திரிகையாளன் பணியும் மாறியுள்ளன. சர்வதேச பிராந்திய மற்றும் தேசிய ரீதியாகவும் பத்திரிகையாளர் சங்கங்கள் தமது பாதுகாப்புக்காகப் போராட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. 1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் 734 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோக பூர்வமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண்டு ரீதியாக ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட விபரம் வருமாறு: 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை 11, 2008: 41, 2007: 66, 2006: 56, 2005: 48, 2004: 60, 2003: 42, 2002: 21, 2001: 37, 2000: 24, 1999: 36. 1998: 24, 1997: 26, 1996: 26, 1995: 51, 1994: 66, 1993: 57, 1992: 42

1992ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2009 ஏப்ரல் 3ம் திகதி வரை சர்வதேச ரீதியில் நாடுகள் ரீதியாக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட விபரம் வருமாறு: இப்பட்டியலில் ஈராக் முதலாம் இடத்திலும், இந்தியா 6ம் இடத்திலும், இலங்கை 11ம் இடத்திலும் இருப்பதை அவதானிக்கலாம். 1) Iraq: 138, 2) Algeria: 60, 3) Russia: 50, 4) Colombia: 41, 5) Philippines: 34, 6) India: 26, 7) Somalia: 25, 8) Pakistan: 21, 9) Bosnia: 19, Turkey: 19, 11) Afghanistan: 18, Sri Lanka: 18, 13) Rwanda: 16, Sierra Leone: 16, Tajikistan: 16, Brazil: 16, 17) Mexico: 15, 18) Bangladesh: 12, 19) Israel: 9, 20) Angola: 8, Cambodia: 8, Georgia: 8, Yugoslavia: 8 (தகவல் – நன்றி : the Committee to Protect Journalists )

சுதந்திர ஜனநாயகக் கொள்கை நிலைநாட்டப்பட வேண்டுமாயின் அந்நாடுகளில் பத்திரிகைச் சுதந்திரம் மேலோங்க குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு என்பன ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. நிலையான வளர்ச்சி வீதம், துரித அபிவிருத்தி வறுமை ஒழிப்பு என்பன மூலம் மூன்றாம் மண்டல நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தங்கியுள்ளன. இவற்றைப் போக்க பத்திரிகைகளின் பங்களிப்பு அவசியமாகும். பத்திரிகைகளினதும் பத்திரிகையாளரினதும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த உன்னத தினத்தில் திட்சங்கற்பம் கொள்வோம்

செய்தியாளர்களை தாக்குவோரை சட்டத்தின் முன் நிறுத்த சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்- உலக பத்திரிகை சுதந்திர தின செய்தியில் பான் கீ மூன் 
 
உலகெங்கிலும் செய்தியாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவும் இவ்வருடம் கொண்டாடப்படும் நிலையில், செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவித முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து சமுதாயங்களையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு சமூகத்தின் மிக இளம் உறுப்பினர்களில் இருந்து முழுமையான பிரஜைகள் வரை அவர்களது அரசியல் தலைமைத்துவத்துடன் அனைவரும் தகவலை அறிந்து கொள்வதற்கான வசதிகள், உயிர் வாழ்வுக்கு நீர் எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு அவசியமானவை. அறிவானது எதையும் கற்பனை செய்வதற்கும் மாற்றியமைப்பதற்குமான எமது ஆற்றலை நிலைநாட்டுகிறது.

தகவல் தாராளமாக பரப்பப்படும் போது, மக்கள் அவர்களது வாழ்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சகல அம்சங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், தகவல் பிரவாகம் தடைப்படுத்தப்படும் போது அரசியல் காரணமாக இருந்தாலும் தொழில்நுட்பக் காரணங்களாக இருந்தாலும் செயற்பாட்டுக்கான எமது ஆற்றல் முடக்கப்படுகிறது.

60 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை வரைந்தவர்கள் 19ஆவது சரத்தை அதில் புகுத்திக் கொண்டார்கள். அபிப்பிராய மற்றும் கருத்து வெளியிடுவதற்கான ஒவ்வொருவரினது சுதந்திரத்திலும் எதுவித குறுக்கீடுகளும் இன்றி அபிப்பிராயத்தை வெளியிடுவதற்கும் கேட்டறிவதற்கும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பூரண உரிமை உண்டு என்று இந்த 19ஆவது சரத்தில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. துரித உலக மயமாக்கலின் பயனாக சுதந்திரமானதும் பன்முகமானதும், தாராளமானதுமான தொழிற்புலமைப் பெற்று ஊடகத்தின் அபிவிருத்தி மேலும் வலுவடைந்துள்ளது.

தாராளமானதும், பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான ஊடகம் சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான அத்திபாரங்களில் ஒன்றாகும். பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான தாக்குதல்களாகும். ஐக்கிய நாடுகள் ஆதரிக்கும் அனைத்து விடயங்களுக்கும் எதிரான தாக்குதல்கள் ஆகும். இன்று செய்தியாளர்கள் உலகெங்கிலும் தாக்குதல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். மேலும், இத்தகைய குற்றச்செயல்கள் விரிவாக விசாரணை செய்யப்பட்டு பொறுப்பானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படாதமை எனக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

உலக பத்திரிகை சுதந்திர தினமும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60ஆவது ஆண்டும் இந்த வருடம் கொண்டாடப்படும் இவ்வேளையில் செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை நடத்துவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சகலவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சகல சமுதாயங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். தாராளமான, பாகுபாடற்ற தகவல்களை எங்களுக்குத் தருவதற்காக மிக சிரமமானதும் அபாயகரமானதுமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தப் பகுதியிலும் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை கோட்பாடுகளை கொண்டதாகும்.

இதேவேளை, பத்திரிகை சுதந்திரத்தை மதிப்பிடுவதற்கும், ஊடகங்களின் சுதந்திரம் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றை காப்பாற்றுவதற்கும் கடமையின் போது உயிர்துறந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் உலக பத்திரிகை சுதந்திர தினம் சந்தர்ப்பமளிக்கிறது. 1991ஆம் ஆண்டின் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 26ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதப்புரையை தொடர்ந்து 1993ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உலக பத்திரிகை சுதந்திர தினத்தை பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.