சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ.போ.ச பஸ்ஸிலும் செல்லக்கூடிய நிலையை உருவாக்குவேன் – ஜனாதிபதி –

mahinda.jpg
யாழ்ப்பாணத்திற்கு ரயிலிலும் இ. போ. ச. பஸ்களிலும் பயணிக்கக் கூடிய நிலையை இவ்வருடத்தில் உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுமக்கள் மட்டுமன்றி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தலைவர்களும் இவ்வாறு பயணிக்கக் கூடிய வகையில் பாதுகாப்பான சூழ்நிலையும் நிலவு மெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இ. போ. ச. வின் ஐம்பதாவது வருட நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :-

ஒரு காலத்தில் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் நேரடி பஸ் சேவைகள் இருந்தன. இது வடக்கு – தெற்கு நட்புறவைப் பலப்படுத்தியிருந்தது. இந்நிலை இன்று மாறிவிட்டது. மீண்டும் அந்த நிலை உருவாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படுகின்றன.

விடுதலைப் புலிகள் துரையப்பாவைக் கொலை செய்த மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகள் போக்குவரத்தைக் குழப்பினர். அன்றுள்ள அரசாங்கமோ அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் தெற்கிலிருந்து வடக்கிற்கான பஸ் சேவையையும் யாழ். தேவி ரயில் சேவையையும் கூட நிறுத்தியது. இதுதான் அன்றைய நிலை. நான் பாடசாலைக்கு இ. போ. ச. பஸ்ஸில் பயணித்தவன். கடந்த காலங்களில் இரவில் தனியார் போக்குவரத்துக்கள் இருந்ததில்லை. இரவுப் பயணங்களை மக்கள் இ. போ. ச. பஸ்களிலேயே மேற்கொண்டனர். இதனை சீர்குலைக் கும் வகையில் இரவு 6 மணிக்கு மேல் பஸ் சேவையை நிறுத்திய காலமொன்றும் இருந்தது.

இ. போ. ச. மக்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்தது. ஒரு காலத்தில் எஸ். எஸ். சி. படித்த இளைஞர்கள் இ. போ. ச. நடத்துநர்களாக வருவதற்கு பிரயத்தனப்பட்டனர். ஏனெனில் அன்று அத்தொழிலுக்குப் பெரும் மவுசு இருந்தது. அவர்களுக்குப் பெண் கொடுப்பதற்குப் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்த காலமது.

இத்தகைய மக்களுக்கு நெருக்கமான இ. போ. ச., ச. தொ. ச. போன்றவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்கள் தனியாருக்கு விற்றனர். மக்கள் ஒரு போதும் இத்தகைய செயலை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனால்தான் இ. போ. ச. வை மீள ஸ்தாபிக்கும் உணர்வு மக்களிடம் எழுந்தது. அரசாங்கம் அதனை நிறைவேற்றியுள்ளது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மோசடிகள் இடம்பெற்றதாக கூறி தேர்தல் முடிவுகளை காலிதா ஷியா நிராகரிப்பு

w_n.jpgபங்களாதேஷில்  வெளியான தேர்தல் முடிவுகளை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா நிராகரித்துள்ளார். வாக்களிப்பின் போது நாடு பூராவுமுள்ள பல வாக்களிப்பு நிலையங்களில் ஒழுங்கீனங்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தும் தகவல்கள் தமக்கு கிடைத்திருப்பதாக செய்தியாளர்களிடம் ஷியா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் ஷியாவின் அரசியல் எதிரியும் அவாமி லீக் கூட்டணியின் தலைவியுமான ஷேய்க் ஹசினா அமோக வெற்றி பெற்றிருந்த அதேவேளை இத் தேர்தல் சுதந்திரமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்பட்டதாக ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் என்பன பாராட்டியிருந்தன.

இரண்டு வருட இராணுவ ஆதரவுடனான ஆட்சிக்குப் பின்னர் இத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அதிகளவானோர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் முதல் தடவையாக கருத்துத் தெரிவித்த ஷியா, தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இம்முடிவுகளை நிராகரிப்பதாகக் கூறியுள்ள ஷியா ஒழுங்கீனங்கள் நடைபெற்றமைக்கான விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த சில தினங்களில் இவற்றை ஊடகங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவோமெனத் தெரிவித்துள்ளார். சுமார் 200 வாக்களிப்பு நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக ஷியாவின் கட்சி முறையிட்டுள்ளது. இத் தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா அல்லது வன்முறைகளை தோற்றுவிக்கின்றதா என்பதை அறிவதற்கு அடுத்த இரு தினங்களும் மிகவும் முக்கியமானவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர். பாராளுமன்றத்தில் 260 இற்கும் அதிகமான ஆசனங்களை மற்றைய முன்னாள் பிரதமரான ஷேய்க் ஹசினா வென்றிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும் இதுவரை உத்தியோக பூர்வமான இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையகம் வெளியிடவில்லை.

யாழ். குடாவில் குறைந்த விலையில் கோதுமை மா, பால் மா

யாழ்ப்பாணத்தில் பால் மா மற்றும் கோதுமை மா கொழும்பைவிட குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் தெரிவித்தார்.

உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பொருள்களைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதால், குறைந்த விலையில் பொருள்களை விற்பனை செய்ய முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.

பதற்றத்தைக் குறைப்பது குறித்து ஆராய்வு

w_n.jpgஇந்திய,  பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரு நாடுகளிடையேயும் மூண்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்கும் பொருட்டு தொடர்புகளை ஏற்படுத்திக் கொணடனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு நாடுகளின் இராணுவ உயரதிகாரிகள் தொலைபேசியில் இதுகுறித்து நீண்ட நேரம் கலந்தாலோசித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட போர்ப் பீதியால் இந்திய, பாகிஸ்தான் பிரஜைகளிடையே அச்சம் எழுந்தது. இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் காரசார மான அறிக்கைகளையும் வெளியிட்டன. இராணுவங்கள் எல்லைகளை நோக்கி நகர்த்தப்பட்டதால் இந்திய சென்ற பாகிஸ்தான் மக்களும் பாகிஸ்தானுக்கு வந்த இந்தியர் களும், அவசர அவசரமாகப் பயணங்களைப் பாதியில் நிறுத்திக் கொண்டு சொந்த நாடு திரும்பினர். அணு ஆயுதங்களையுடைய இரண்டு நாடுகளையும் சமாதானமுறையில் செல்லுமாறு சர்வதேச நாடுகள் தொடர்ந்து அழுத்தங்கள் வழங்கியுள்ள நிலையில் இராணுவ உயரதிகாரிகள் தொடர்புகளை ஏற்படுத்தியமை பதற்றத்தைத் தணிக்க உதவியுள்ளது.

படைகள் இரு எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதால் போரைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படலாம் என எச்சரித்துள்ள இராணுவ ஆய்வாளர்கள் படைகள் விலக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். தற்போது இரு நாடுகளின் இராணுவ அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள தொடர்புகள் பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தால் படைவிலக்கல் பற்றி பேசப்படலாம்.

பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்கள் குறித்து கவலையடையாமல் இருக்க முடியாது – யாழ். ஆயர் வேண்டுகோள்

jaffna_thomas.jpg
முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இந்த ஆண்டை எதிர்கொள்ள விளையும் நிலையில் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்க முடியாதென்பதால் சிறுபான்மையினர் மீதான அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காகவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வை முன்வைக்கவும் இந்நாட்டுத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதுவர்களும் உழைக்க வேண்டுமென யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சென்ற ஆண்டிலே நாட்டிலே பொருளாதார நெருக்கடிகள், இயற்கை அனர்த்தங்கள் போன்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றையும் விட வன்னிப் பிரதேசங்களை கைப்பற்ற அரசினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்தினால் உயிர் இழப்பும், ஆயிரக்கணக்கான மக்களின் இடம்பெயர்வுகளையும் சந்தித்தோம். வன்னிப் பிரதேசமும், குடாநாடும், விமானக் குண்டுத் தாக்குதலினாலும், அகோர எறிகணைகளின் சத்தத்தினாலும் அதிர்ந்தது. இக்கொடிய போரைநிறுத்தி அமைதியை கொண்டு வர பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்படியாக பிற நாடுகளிடமும், அயல் நாடான இந்தியாவிடமும் இருந்து குரல்கள் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டன.

எமது பரிசுத்த தந்தை 16 ஆவது பெனடிக்ற், இலங்கை ஜனாதிபதி அவரை சந்திக்க சென்ற போது போரை நிறுத்தும்படியாகவும், அமைதிக்காக உழைக்கவும் வலியுறுத்தினார். ஆனால், போர் இன்னும் உக்கிரமடைந்து, இடம்பெயர்ந்த மக்களின் துன்பங்கள் இரட்டிப்பாகின. நத்தார் காலத்தில் அமைதிக்கான போர்நிறுத்தங்களை கடைப்பிடிக்க ஆயர்கள் விடுத்த வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. 50 வருடங்களின் பின் கொட்டும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு யாழ்.குடாநாட்டு மக்களை மேலும் வெகுவாக பாதித்தது.

முடிவில்லா துன்பங்கள் மத்தியில் மீண்டும் ஒரு புத்தாண்டு ஆரம்பிக்கும் இவ்வேளையில் அரசு வெற்றிக்களிப்பில் இவ்வாண்டை எதிர்கொள்ள விளையும் போது பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களின் அவலங்களைப் பற்றி கவலையில்லாமல் இருக்கவே முடியாது. இந்நாட்டு தலைவர்களும், பிறநாட்டு தூதுவர்களும் சிறுபான்மையினர் மீது நடந்தேறும் அநீதிகளை கண்டித்து நிரந்தர அமைதிக்காக உழைக்கவும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான நிரந்தர தீர்வை எதிர்பார்க்கின்றோம். எல்லா மக்களும் யுத்தம் இன்றி மனித உரிமைகள் பேணப்பட்டு சுபீட்சமான வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அனைவர்க்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்துக்கொள்கின்றேன்.

போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் கைது

handcuff.jpg
நிக்கவரெட்டிய பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 648 ட்ரம்ஸ் கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன், 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், மற்றொரு சம்பவத்தில் 5800 ட்ரம்ஸ் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 3 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

புதுவருட தினத்தை முன்னிட்டு, நிக்கவரெட்டிய பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில், 310 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதும், இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.