யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்களவர்கள் யாழ்குடா நாட்டில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசித்ததாகவும், அதனால் அங்கு தம்மை மீளக்குடியமர்த்த வேண்டுமெனவும் கோரி யாழ் ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியிருக்கும் சிங்கள மக்கள் உரிய ஆவணங்களை உறுதிப்படுத்தினால், மூன்றுமாத காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மீள்குடியேற்றத்துறை அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கியபின், அவர்களுடன் கலந்துரையாடிய போதே அமைச்சர் மில்ரோய் ஃபெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இங்குள்ள குடும்பமொன்றுக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபா பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களை 1000 ரூபாவாக உயர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தமிழோசையிடம் கூறினார்.
1970களில் தாம் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அங்கு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்ததாகவும் இந்த மக்கள் தன்னிடம் கூறியதாக மில்ரோய் ஃபெர்ணாண்டோ தெரிவித்தார். இவர்களின் கோரிக்கை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக சுமுகமான முறையில் இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யாழ் குடாநாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படாதுள்ள நிலையில் 30 வருடங்களுக்கு முன்னர் வெளியேறியதாகக்கூறும் சிங்கள மக்களை குடியேற்ற முனைவது தொடர்பில் சிலர் விசனம் தெரிவிக்கிறார்களே என்ற கேள்விக்கு, ‘ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இனமத வேறுபாடின்றி மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் மில்ரோய் ஃபெர்ணாண்டோ. அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் தற்போதுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் நிலைநிறுத்திவிட்டு, அந்தக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கமெனவும் அமைச்சர் கூறினார்.
நன்றி BBC.
._._._._._.
”சிங்களக் குடியேற்றங்களை விமர்சிப்பதாலேயே அபிவிருத்திக் கூட்டங்களுக்குகூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை” கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றதாலேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு கூட்டமைப்பை அரசாங்கம் அழைப்பதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்துவிட்டு தற்போது வடமாகாண அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தை அரசாங்கம் நடத்துகின்றது. கூட்டமைப்பின் ஆதரவின்றி அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான அபிவிருத்தியும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதை ஜனாதிபதி உணரும் காலம் விரைவில் வரும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எதனையும் அது முன்வைக்காமல் காலத்தைக் கடத்தி வருகின்றது. எனவும் அவர் தெரிவித்தார்.
._._._._._.
October 15 2010
”யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீள்குடியமர்த்தப்படுவது போல தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தெற்கில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்” தமிழர் விடுதலைக் கூட்டணி
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதென்பது நியாயமானதே. அதே போல் இனக்கலவரங்களினால் தென்னிலங்கையிலிருந்து வந்த தமிழ் மக்களும் மீண்டும் அங்கு குடியேறி வாழ வழிவகை செய்ய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா இவ்விடயம் தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அரசியல் நோக்கம். சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் குடியிருந்திருந்தால் அவர்கள் தங்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிப்பதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் யாழப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்கள் தங்களுக்கு சொந்தக் காணிகள் வேண்டும் என்று கேட்பதில் எவ்வித நியாயமம் இல்லை.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தென்னிலங்கை மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறி வாழ்வதற்கு எந்தளவு உரிமை இருக்கின்றதோ அதேயளவு உரிமை 1956, 1958, 1977, 1983 ஆகிய வருடங்களில் நடந்தேறிய இனக்கலவரங்களின் போது தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டு ஓடிவந்த தமிழ் மக்களுக்கும் உள்ளது. குறிப்பாக அனுராதபுரம், கெக்கிராவ, தம்புள்ள, கலேவெல, திஸ்ஸமகராம போன்ற பகுதிகளிலில் தங்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேறவோ, அல்லது தங்களது சொத்துக்களை விற்பனை செய்யவோ வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்துத தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களாக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகள் அம்மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். தென்னிலங்கை சிங்கள மக்கள் யாழப்பாணத்தில் மீள்குடியேற வேண்டும் என அக்கறைக்காட்டும் தரப்பினர் தமிழ் மக்களின் விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் தமிழர் விடுதலைக்கூட்டணி பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
._._._._._.
11 Oct 2010
”யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகளை ஆராய மூன்று மாதகால அவகாசம் தேவை” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்துள்ள சிங்கள மக்களின் ஆவணங்களை ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைக்க மூன்று மாதகால அவகாசம் தேவை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வந்து, யாழ்.புகையிரத நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்த போதே அவர் இவ்வாறு அவர்களிடம் தெரிவித்தார்.
“நீங்கள் மீண்டும் அனுராதபுரத்திற்குச் செல்லப் போகின்றீர்களா?” என அமைச்சர் அவர்களிடம் கேட்டபோது முடிவு தெரியாமல் போக மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.
அம்மக்களுக்கான குடிநீர்ப்பிரச்சினை, சுகாதார வசதிகளை மாநகரசபை கவனிக்கும் எனவும், அரிசி மற்றும் சமையல் பொருட்களைத் தமது கட்சி நிதியிலிருந்து வழங்க முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அம்மக்களிடம் தெரிவித்தார்.
தினசரி இரண்டு மூன்று குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருப்பதாகவும், முன்னர் வந்தவர்களில் பாட்சாலை மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் சில மீண்டும் தாங்கள் இருந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை, யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்து வந்த சிங்கள மக்கள் மீள்குடியமர அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும என ஐக்கியதேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
._._._._._.
10 Oct 2010
மீளக்குடியேற யாழ் வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசஅதிபர் பசில் ராஜபக்சவிற்கு கடிதம்.
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சவிற்கு யாழ். அரச அதிபர் அவசர கடிதம் ஒன்றை நேற்று சனிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு கோரி யாழ். புகையிரத நிலையத்தில் இவர்கள் தங்கியுள்ளனர் இவர்களில் சிலர் முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கு சொந்தக் காணிகளோ சொந்த வீடுகளோ இருக்கவில்லை. இந்நிலையில், எவ்வித முன்னறிவித்தலுமின்றி யாழ்ப்பாணத்தில் தங்களை மீள்குடியமர்த்துமாறு வந்திருக்கும் இம்மக்களால் யாழ். மாவட்ட அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரும் இவர்களுக்கு உதவிகளைச் செய்யும் அரசாங்க திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உடனடியாக சாத்தியமில்லை. அத்துடன் இவர்கள் தொடர்ந்து புகையிரத நிலையத்தில் தங்கியிருப்பது அவர்களுக்கு ஆரோக்கியமானதல்ல என அரச அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போன்ற கடிதமொன்றை நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்திற்கும் யாழ். அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.
._._._._._.
Oct 09 2010
யாழ். வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை ஆராய கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு வருகை.
தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமுக்தி அதிகார சபையின் பணிப்பிற்கு இணங்க அதிகாரசபையின் அதிகாரியான கே.ஜி.குணதிலக்க தலைமையில் இக்குழுவினர் வருகை தந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள குறிப்பிட்ட சிங்களக் குடும்பங்களிடம் சில படிவங்களை வழங்கி விபரங்களைச் சேகரித்தனர்.
இதே வேளை, இம்மக்களுக்கு யாழ்.மாநகர சபையினால் குடிநீர், கழிப்பறை வசதிகள், மின்சாரம் என்பன எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் 500 குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று வெள்ளிக்கிழமை 10 குடும்பங்கள் மட்டும் வந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
._._._._._.
Oct 08 2010
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தகவல்: விஸ்வா
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுவதற்காக மேலும் பல குடும்பங்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்காக மேலும் பல சிங்களக் குடும்பங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 180 சிங்களக் குடும்பங்கள் யாழப்பாணத்திற்கு வந்துள்ள நிலையில் (Oct 08 2010) 500 குடும்பங்களைச் சொந்த 1500 பேர் வரவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர். அனுதாரபுரம், மிகிந்தலை, பிரதேசங்களிலிருந்து இவர்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பகையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.
இதேவேளை, இவ்வாறு மீள்குடியேறும் நோக்கத்துடன் வந்திருக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு யாழ்.செயலக அதிகாரிகளுக்கு உயர்மட்டத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
._._._._._.
Oct 07 2010
1980ல் யாழில் இருந்து வெளியேறிய 180 சிங்களக் குடும்பங்கள் யாழில் மீளக் குடியிருக்க வந்துள்ளனர்!
1980ஆம் அண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த வந்ததாகக் கூறப்படும் 180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 180 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் இதிலடங்குகின்றனர். சிறுவர்கள் குழந்தைகளோடு வந்துள்ள இவர்கள் யாழ்ப்பணத்தில் குடியேறி நிரந்தரமாக வசிக்க விரும்புவதாகவும், தங்களுக்கான காணிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த போதும், இவர்களுக்கு சொந்தமான காணிகள் எதுவும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களில் பலருக்கு தமிழர்களோடு திருமண பந்தம் உள்ளது. தமிழிலும் பேசக் கூடிவர்களாகவுள்ளனர்.
நேற்று புதன்கிழமை அரசாங்க அதிபரைச் சந்தித்த இவர்கள் தங்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு மனுவொன்றையும் கையளித்துள்ளனர்.
இது குறித்து அரசாங்க அதிபர் தெரிவிக்கையில், இவர்களின் பிரச்சினை தொடர்பாக உடனடி தீர்வு காணும் திட்டம் எதுவும் இல்லை எனத் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இவர்களின் வருகை குறித்து தமக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது இச்சிங்களக் குடும்பங்கள் யாழ். புகையிரத நிலையக் கட்டடத்திலும், விடுதிகளிலும் தங்கியுள்ளனர். தங்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கப் போவதாக யாழ். புகையிரத நிலையக்கட்டத்தில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
1980க்களில் யாழ்பாணத்தில் இருந்து வெளியேறிய இவர்கள் அனுராதபுரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல், ஆகிய இடங்களில் இவர்கள் வருகின்றனர். இனி நிரந்தரமாக யாழ்ப்பாணத்தில் வசிக்க விரும்பவதாக தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு தங்களுக்கு காணிகளை வழங்க வேண்டும் என கோருகின்றனர். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் திருநெல்வேலி, நாவற்குழி, ஆகிய இடங்களில் தங்களுக்கு காணிகள் ஒதுக்கப்பட்டதெனவும். அதற்கான கடிதங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அக்காணிகளைத் திரும்பத்தரத் தேவையில்லை வேறு இடங்களிலாவது காணிகள் ஒதுக்கித்தர வேண்டும் எனக் கூறுகின்றனர்.
தெற்கின் பல பகுதிகளில் வசித்து வந்த இவர்கள் திடீரென ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருப்பதற்கு தெற்கில் சிங்கள கட்சிகள் அல்லது அமைப்புகளின் பின்னணிகள், தூண்டுதல்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.