சேனன்

சேனன்

சேரிநாய்க் கோடீஸ்வரன் – (சிலம்டோக் மில்லியனர்) – வறுமை விற்பனைக்கு அல்ல!!! : சேனன்

Slumdog_Millionare_Protestசிலம்டோக் மில்லியனர் – இயக்கம்: டேனிபோய்ல்

ஐந்து விமர்சகத் தேர்வு விருதுகள் நான்கு தங்கப் பூகோள விருதுகள், பாஃப்ரா விருதுகள் மற்றும் பத்து அக்கடமி விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படம் சொல்ல முடியாத அளவுக்கோ அல்லது சிறிதளவேனும் சில ஊக்கமளிக்கக் கூடிய கருத்துகள் கொண்டிருக்குமென நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் சிலம்டோக் மில்லியனர், அதைப் பற்றிய அதீத விளம்பரங்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு இருக்கக்கூடிய எதிர்பார்ப்புகளின் பரிமாணத்தைத் தாண்ட முடியவில்லை. அதனால் பூர்த்தி செய்ய முடியவில்லை எனச் சொல்லலாம்.

Slumdog_Millionare_Protestஅதே வேளையில் இந்தியத் திரைப்பட ரசிகர்களையும் கவர்வதில் அது தோல்வியுற்று உள்ளது. உண்மையைச் சொன்னால் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் 25 வீதமான இருக்கைகளே நிரம்பியிருந்ததாக ரைம்ஸ் மகசின் தெரிவித்திருந்தது. இந்திய மக்களுக்கு எப்போதுமே இவ்வகைப் பிரமாண்டமான கலைப் படைப்புகள் மீது சந்தேகமுண்டு. ஏனென்றால் இம்மாதிரியான கலைப் படைப்புகளைத் தயாரிப்பதன் முக்கிய குறிக்கோள் தங்களின் வறுமையை வியாபாரஞ் செய்து பணமாக்குவதே என்பதை அவர்கள் அறிவார்கள். இதன் பிரதிபலிப்புத்தான் இப்படத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்த அனில் கபூரின் வீட்டின் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இதைத் தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கைகளிலிருந்த அட்டைகள் பிரதிபலித்தன. அவற்றில் ‘வறுமை விற்பனைக்கல்ல” என்ற சுலோகம் எழுதியிருந்ததன் மூலமாக இதைப் பிரதிபலித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்குக் காரணம் சேரியும் சேரி மக்களின் வாழ்க்கையும் எவ்வாறு சித்தரிக்கப்பட்டு இருந்தது என்பதும் இப்படத்தின் தலைப்பில் சேரி என்ற சொல்லுடன் நாய் எனும் சொல்லும் உபயோகித்திருந்ததுமாகும்.

சிலம்டோக் மில்லியனர் எழுதப்பட்டதும் இயக்கப்பட்டதும் ஒருபுறம் மேற்கத்தைய சந்தை மறுபுறம் இலகுவாகச் சம்பாதிக்கக் கூடிய மிகப் பெரும் திரைப்படத்துறை மற்றும் உலகம் முழுவதும் பரந்துள்ள இந்தியர்களையும் வைத்துப் பணம் கறக்கலாம் என்பதனாலாகும்.

சினிமாத்துறை மூலமாகப் பணம் சம்பாதிக்க விரும்பும் சிலர் ஒரு விடயத்தைக் கவனித்திருக்கிறார்கள். ஆங்கிலமல்லாத இந்தித் திரைப்படங்கள் மூலமாக பிரிட்டனில் அதிக பணம் சம்பாதிக்கப்படுகிறது. சனரஞ்கமாகத் தயாரிக்கப்பட்ட ஐரோப்பியத் திரைப்படங்களை விட இந்தியத் திரைப்படத்துறை தயாரிப்பாளர்களை மிகவும் கவருகின்றது. பிரிட்டனில் பெருஞ் சனத்தொகை இந்தியர்கள் வாழுகின்றனர்.

பிரித்தானியக் கதாசிரியர்களும் முதலீட்டாளர்களும் தந்திரமான வழிமுறையொன்றைத் தேடினார்கள். வணிக ரீதியிலான சனரஞ்சகத் திரைப்படங்கள் இந்தியாவிலும் பிரிட்டனிலும் பிரபல்யமாக ஓடுவதலிருந்து பெறும் கோடிக்கணக்கான பணத்திலிருந்து ஒரு பங்கை இந்தியத் திரைப்படத்துறையிலிருந்து பெற்றுக் கொள்வதே அதுவாகும்.

ஆனால் சிலம்டோக் மில்லியனர், சராசரி இந்தியர்களின் சனரஞ்சகக் கற்பனாசக்தியை மட்டுமல்ல சேரி மக்களையும் கூட அப்படம் கவரவில்லை.

எவ்வாறாயினும் இத்திரைப்படம் மேற்கத்தைய மனோபாவத்தைக் கவர முயற்சித்துள்ளது.

ஏமாற்றம்.

Slumdog_Millionaire_Sceneஎந்த உலகில, ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பதே துன்பங்கள் தீர ஒரே வழியெனத் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறதோ, அவர்கள் ஒவ்வொருவரது கனவும் கோடீசுவரனாவதாகவே இருக்கும். ஆனால் சிலம்டோக் மில்லியனர் திரைப்படம் இக்கேள்வியை வெறும் மேலோட்டமாகப் பார்த்து விட்டு உடனே மலிவான காதல் கதையில் இறங்கி நகர்கிறது. இந்தியா, யார் கோடீஸ்வரனாகப் போகிறீர்கள்? நிகழ்ச்சிக்குச் சேரியிலிருந்து பங்குபற்றப் போகும் ஒரு இளைஞன் உச்சத்தொகையான இருபது கோடி ரூபாய் வெல்கின்றான். அவனுக்கு எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிந்தது? என்ற புலன்விசாரணையின் போது அவனது வாழ்க்கைக் கதை வெளிவருகிறது.

சிலம்டோக் மில்லியனர் ஒரு சாதாரண கதையாகும். இந்தியப் பின்னணியில் படமாக்கப்பட்டிருப்பதனால் வித்தியாசமான அசாதாரணமான பரிமாணங்களைப் பெற்றது. உச்சக் கட்ட வறுமையும் வன்முறையும் காட்டப்பட்டுள்ளன. இவை ஒன்றும் புதிதல்ல. ஆனால் ஐரோப்பியப் பார்வையாளர்களுக்கு இவை புதியவையாகத் தெரியும்.

இப்படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புகளைத் தூண்டுகின்றது. வேகமான கமராவின் நகர்வு, சேரிக்குள் ஓடும் சிறுவர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதிலே நடித்த சிறுவர்கள் மிகவும் நன்றாக நடித்துள்ளார்கள். ஆனால் திரைக்கதை சேரிக்கு வரும் மத்தியதர வர்க்க உல்லாசப் பயணியின் பரிதாபப் பார்வையுடன் பார்க்கிறது. இந்நிலையில் கழிப்பறையிலிருக்கக் கூடியவை கூட பார்வைக்கு மிக அழகாகக் காட்டப்படுகின்றது.

ஒரு வேளை, இந்த இந்தியாவின் அதாவது பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் நாட்டில் நீண்ட காலமாக ஆழமாக இருக்கும் வறுமையை அழகுபடுத்தும் முயற்சி தான் இத்திரைப்படம். அண்மையில் பிரித்தானிய இளவரசர் சார்ள்சினால் ஒரு கருத்துச் சொல்லப்பட்டது. சேரியின் மாதிரியை வடிவமைப்பாகக் கொண்டு இப்போது மக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அதுவாகும். எனவே எவராவது இப்படத்தினைப் பார்த்துத் தான் இந்திய சேரிவாழ்க்கையை அறியச் சென்றால் ஏமாற்றமேயடைவார்கள்.

1988 இல் மீரா நாயரினால் இயக்கப்பட்ட ‘சலாம்பாம்பே’ திரைப்படம் இதைவிட ஆழமான கருத்தை வெளிப்படுத்தும் திரைப்படமாகும்.

யுத்தத்தை எதிர்க்காத – புலத்து புலி எதிர்ப்பு மையம் : சேனன்

Wanni_Warசிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் / இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு / அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிக கவனமாக இருந்து வந்துள்ளார்கள்.

தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.

இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்த இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் – மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது.

சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்கள பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பசீரின் கவிதைப் புத்தகத்தின் உயிர்நாடி பேசப்படவேயில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும்.

அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்பு தமிழ்ர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய  – சிலசமயம் 90களுக்கு முந்திய – பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஏற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.

போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதன் உண்மை.

புலிகள் வளங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் போர்முளக்களுக்குள்ளல் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை.

பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.

தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். புலத்தில் தலித்தியம் சார்ந்த விழிப்பு எழுப்பியமைக்கு இந்த மிதாமக்களே காரணம். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தே இல்லாத தனக்கு முந்திய போர்முலக்களை பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலது சாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும்.

இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் – தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் – ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்கு பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.

புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள்.
மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் – பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரின வாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது.

பின்குறிப்பு : அவர்கள் / இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை – பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றை பிரசுக்க எந்த தயக்கமும் இல்லை.

உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்

இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.

மக்கள் அகப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள்? இலை குலைகளை உண்டா வாழ்வது? குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா? காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.

மக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.

நாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.

யுத்தம் பிரச்சினைக்கு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.

எந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.

சற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா? பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை? நாட்டின் வளங்கள் யாருடயவை? எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா? –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.

முடிவின் தொடக்கம் – மக்களின் அவலத்தின் முடிவல்ல: சேனன்

Tamil_Boy_in_a_Bunker‘புலிகளின் அடிமைத்தனத்தில் இருந்து எமது குழந்தைகளை விடுவித்த இராணுவ வீரர்களுக்காக இன்று குடிசையில் இருந்து மாளிகை ஈறாக ஒவ்வொரு கூரையிலும் தேசியகொடி பறக்கிறது’ என்று முழங்கி ஜனவரி 26ல் முல்லைதீவில் இராணுவம் நுழைந்ததை கொண்டாடினார் நமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. – என்னே கரிசனை!

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் தெற்கில் இனவாதிகளின் கூத்தும் கொண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. வெடிகொழுத்தி குதூகலிப்பார் ஒருபக்கம். இரண்டாம் உலக யுத்த நிகழ்வுகளில் இருந்து உதாரணங்கள் எடுத்து ஆய்வுகளை அள்ளி வீசி இராணுவத்தை புழுகுவார் ஒரு பக்கம். வட கிழக்கை நோக்கி சுரண்டலுக்கு தம்மை தயார்படுத்துவார் ஒரு பக்கம் என்று தென் இலங்கை ஆளும் வர்க்கம் இருப்பு கொல்லாது துடிக்கிறது.

தை 2ல் புலிகளின் தலைமை பிரதேசமான கிளிநொச்சிக்குள் இலங்கை இராணுவம் நுழைந்ததை தொடர்ந்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக பாவனை செய்து அரசும் அரசுசார் ஆளும் சக்திகளும் கடும் பிரச்சாரம் செய்து வருகிவதை நாமறிவோம்.

ஆனால் வட கிழக்கில் சந்தோசப்பட ஒன்றுமில்லை – மாறாக இராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அவல நிலையில் இராணுவ வெற்றியில் பூரிக்கிறார் ஜனாதிபதி. யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம் என்ற பினாத்தல் பரப்பப்படுகிறது. இது வரலாறு காணாத வெற்றி என்று அரசாங்கம் வெற்றி பிரச்சாரம் செய்கிறது.

மக்கள் படும்பாடு என்ன என்பது பற்றி – சனத்துக்கு என்ன நடந்தது என்பது பற்றி எப்பக்கமும் எந்த மூச்சுபேச்சும் இல்லை.

வென்றது என்ன?

கடந்த முப்பது வருட காலமாக யுத்தமும் சாவும் பொருளாதார சரிவும் என்று இலங்கை மக்கள் மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வந்துள்ளார்கள்.  முன்பு வென்றெடுத்த உரிமைகள் பல பறிக்கப்பட்டு வாழ்க்கைதரம் பாதிக்கப்பட்டு ஒரு தலைமுறை சீரழிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் குழந்தைகளான புதிய தலைமுறையினர் மிக சீரழிந்த எதிர்காலத்தை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். யுத்த செலவுகள் இலங்கை பொருளாதாரத்தை முடக்கியுள்ள நிலையில் உலகளாவிய பொருளாதார சரிவின் பாதிப்பு மேலதிக சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிளிநொச்சி மக்கள் பலவந்தத்தாலோ பயத்தாலோ இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் சீரழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உணவு மருந்து மற்றும் தங்கும் வசதியற்று வாடிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் இன்னும் மிக கேவலமான அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெளிவு.

கிளிநொச்சியில் இருந்து பின்வாங்க முதல் வீடுகள் கடைகள் அனைத்தும் உடைத்து முழு பிரதேசத்தையும் தரைமட்டமாக்கிவிட்டு சென்றுள்ளனர் புலிகள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பற்றிய எந்த கவலையுமின்றி வெற்றி பூரிப்புடன் வெறிச்சோடிய கிளிநொச்சிக்குள் இராணுவம் புகுந்தததை எமது ‘மதிப்புக்குரிய’ ஜனாதிபதி அறிவித்ததை நாமறிவோம்.

கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களின் அவல நிலை – காயப்பட்டவர்கள் மற்றும் எஞ்சியவர்களின் பயக்கெடுதி என்று ஒட்டுமொத்த சமூக கட்டமைப்பு குலைந்துள்ள நிலையில் கொண்டாட என்ன இருக்கு?

பறிக்கப்பட்ட வாழ்க்கைத்தரம் மீண்டும் கட்டமைக்க – பொது மீளமைப்பு செய்ய இன்னும் ஒரு தலைமுறை காலம் தேவை. எல்லா பக்கத்தாலும் மக்கள் கொடுமை அனுபவிக்க வெற்றி ஆட்டம் ஆடுகிறார் ‘பொறுப்புள்ள’ ஜனாதிபதி.

பயங்கரவாத பூச்சாண்டி காட்டி மேற்கத்தேய ஆளும் வர்க்கம் காட்டும் விளையாட்டுகளை பார்த்து தாமும் விளையாடிப் பார்க்கிறார் ஜனாதிபதி.

வீடுகள் கடைகள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் மற்றும் அரச கட்டிடங்கள் உடைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மரங்களை அண்டி வாழும் கேவலத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். உணவு பொருட்களின் தட்டுப்பாடும் நல்ல தண்ணீர் தட்டுப்பாடும் என்றுமில்லாத அளவு அதிகரித்துள்ளது. பசி பட்டினியால் வாடுபவர் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.

மண்னெண்னை முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்ச விலையில் விற்கப்படுகிறது. கடந்த ஆறு மாத காலத்துக்குள் பல பொருட்களின் விலை இரண்டு மடங்காகியுள்ளது. உள்நாட்டு பிரச்சினை போதாதென்று உலகளவில் ஏற்பட்டுள்ள உணவுப் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆசியாவின் அதிகூடிய பணவீக்கத்துடன் தள்ளாடும் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை இப்போதைக்கு இறங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை. அண்மையில் விடாது பெய்த மழையும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் உள்நாட்டு உணவு உற்பத்தியை பாதித்து விலைவாசியை மேலும் உயர்த்தியுள்ளது.

உலகெங்குமுள்ள மனித உரிமை மற்றும் நிவாரண அமைப்புக்கள் ‘அவசர நிவாரண நிலை தேவை’ யான வகைக்குள் இலங்கையை வகைப்படுத்தியுள்ளன. இலங்கை வறுமை நிலவரத்தை அவர்கள் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கிறார்கள். முக்கியமாக வடக்கில் மனித அவலம் மிக மிக மோசமான நிலையில் இருப்பதை அவர்தம் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. இலங்கையில் 14 வீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் மிக மோசமான பட்டினி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அரச கணிப்பீடுகளே கூறியுள்ளன. கிழக்கில் இத்தொகை 30 வீதத்தை தாண்டியுள்ளது. இந்த கணிப்பீட்டில் வடக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் ஒட்டுமொத்த விகிதாசாரம் அரச கணிப்பீட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பது திண்ணம்.

வேலைவாய்பும் குறைந்து வரும் நிலையில் தெற்கு வறிய மக்களே ஆடிப்போயுள்ள நிலையில் வடக்கு நிவாரணம் மிகப்பெரிய கேள்விக்குறியே. விலைவாசி கூடி வேலை வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் மக்கள் என்ன செய்ய முடியும்? சம்பள உயர்வு மட்டும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பல தொழிலாளர்கள் பல வருடங்களாக எவ்வித சம்பள உயர்வுமின்றி வேலை செய்து வருகிறார்கள்.

ஆனால் கடந்த முப்பது வருடத்தில் ‘பாதுகாப்புக்கான’ செலவு – யுத்த செலவு மட்டும் 800 மடங்கு அதிகரித்துள்ளது.

இராணுவ கலாச்சாரம்

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இராணுவ தளபாடங்கள் பதவிகள் பெயர்கள் பேச்சுவழக்கில் அடிபடுவதை நாமறிவோம். விமானங்களின் பெயர்கள் இராணுவ தளபதிகளின் பெயர்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பெயர்கள் எல்லாம் சிறுவர்களுக்கே தெரியும். விமான சத்தத்தை வைத்தே சிறுவர்கள் எந்த விமானம் வருகிறது என்று கண்டு பிடித்து விடுவார்கள். துப்பாக்கி சத்தத்தை வைத்து எந்து துப்பாக்கி என்பதை கண்டுபிடித்துவிடுவார்கள். செல் குத்துற சத்தத்துக்கு பதுங்க வேண்டும் என்று வடக்கு கிழக்கு நாய்க்குட்டிகளுக்கு கூட தெரியும். இது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த சமூகத்து கதை.

தெற்கில் யுத்தமற்ற பிரதேசத்தில வாழ்ந்த மக்கள் மத்தியில் இவ்வகை யுத்த -இராணுவ அறிவு இருந்ததில்லை. ஆனால் இன்று கதை வேறு. யுத்த தளபதிகள் புகழ்பெற்ற கதாயாகர்களாக உலா வருகிறார்கள். யுத்தம் சார் சொற்கள் சகஜமாக ஊடகங்களில் பாவிக்கப்படுகிறது. யுத்தத்தின் ஒவ்வொரு சிறு வெற்றியும் ஆர்ப்பாட்டமாக பதிப்பிக்கப்படுகிறது. இராணுவ நடவடிக்கைக்கு கேள்வியற்ற ஆதரவு வழங்கும்படி மக்கள் பல திசைகளிலும் உந்தப்படுகிறார்கள். இராணுவத்துக்கெதிரான – அரசுக்கெதிரான ஒவ்வொரு நடவடிக்கைகளும் மூர்க்கத்தனமாக எதிர்க்கப்படுகிறது. தன்னிச்சையாக இயங்க முற்படும் ஊடகங்கள் அடித்து நொருக்கப்படுகிறது. சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க அண்மையில் அரச காடையரால் அநியாயமாக கொல்லப்பட்டது உலகறிந்த ஒன்று.

தாம் ஒரு இராணுவம் என்று புலிகள் பிரச்சாரம் செய்து வந்தாலும் அவர்கள் ஒருபோதும் இராணுவ வகை நேரடி யுத்தத்தில் ஈடுபட்டதில்லை. அதிநவீன ஆயதங்களுடன் காசாவுக்குள் அத்துமீறி நுழையும் உலகின் மிகப் பலம்வாய்ந்த இஸ்ரேலிய இராணுவத்துக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்தும் கமாசிடம் இருப்பதை விட அதிகளவு ஆயதம் புலிகளிடம் உண்டு என்பது உலகறிந்தது. கிளிநொச்சிக்குள் நுளையும் இலங்கை இராணுவத்தை நேரடியாக புலிகள் எதிர்கொள்ளாதது அவர்தம் முழு பலவீனத்தை காட்டவில்லை. கிளிநொச்சிக்குள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்த விமானங்கள் ஆயுதங்கள் ஒன்றையும் இராணுவம் இன்னும் கைப்பற்றவில்லை. கிளிநொச்சிக்குள் தளம் அமைத்து இராணுவம் நிலைகொள்ள முடியுமா என்பது கடும் கேள்விக்குள்ளாகி வருகிறது. ஊடகவியலாளர்களும் மனித உரிமை வாதிகளும் தினமும் தாக்கப்பட்டு வருகிறார்கள். சாக்கோடு சாக்காக அரசியல் எதிரிகளும் வேட்டையாடப்படுகிறார்கள். எதிர்த்து நிற்கும் ஒற்பன் இடதுசாரிகளும் தெற்கு புலிகள் என்று பெயர் வைக்கப்பட்டு வேட்டையாடப்படுகிறார்கள்;. ஜக்கிய சோசலிச கட்சியின் உறுப்பினர் பலர் ஒழித்திருந்து வேலை செய்ய வேண்டிய நிiயில் உள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் தமது உயிருக்கு பயந்த நிலையிலும் அவர்கள் ராஜபக்ச குடும்ப அராஜகத்துக்கு தெற்கில் பலத்த எதிர்ப்பு செய்து வருபவர்கள் அவர்கள் மட்டுமே.

ஊடகவியலாளர் மற்றும் நிவாரண அமைப்புக்கள் என்று இராணுவம் சாரா அனைவரும் யுத்த பிரதேசம் செல்வதற்கு தடைவிதித்துள்ளது அரசு. இதனால் இராணுவ பிரச்சாரம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ராஜபக்ச இலங்கையை காக்க வந்த இளவரசன் மாதிரி சால்வையை போத்துகொண்டு திரிய முடிகிறது. இராணுவம் கொன்று குவிக்கும் மக்களின் தொகை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை – எல்லாம் நாட்டின் நல்லதுக்கே என்று பாவனை கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவை 177.1 பில்லியன் ரூபாய்களுக்கு அதிகரிக்க கோரி இவ்வாண்டு பாராளுமன்றத்தை கோரவுள்ளது அரசு. இது கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமன். மிகவும் வறுமையான வடக்கை விட்டு பார்த்தாலும் மிகுதி நாட்டின் மொத்த சனத்தொகையில் 41.6 வீத மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலர்களிலும் குறைந்த வருவாயிலேயே வாழ்கிறார்கள். அரைவாசி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலரிலும் குறைந்த தொகையில் வாழும் ஒரு நாட்டில் ஒரு நாளைக்கு 5 மில்லியன் டாலர்களை யுத்த செலவுக்கு ஒதுக்க கேக்கும் அரசை என்ன சொல்வது? இந்த அரசில் புரட்சிகர கூறுகளை கண்டுபிடிக்கும் சில மத்தியதர வர்க்க ‘மா’க்களை என்ன சொல்வது?

இருபது மில்லியன் சனத்தொகயுள்ள இலங்கையில் 250000க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு துறையில் வேலை செய்கிறார்கள். நாட்டில் பத்து பேரில் ஒருவர் இராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவராக இருக்கிறார். இவர்களை குறிவைத்து இராணுவத்துக்கான பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இன்று இலங்கையின் முக்கிய – மற்றும் பெரும்பான்மை அரச ஊழியர்கள் இராணுவத்தினரே. இராணுவத்தினருக்கு 30 000 ரூபாய் வரை சம்பளம் வளங்கப்படுகிறது. முப்பது வருடத்துக்கு முன் வேலை தொடங்கிய பல ஆசிரியர்கள் இன்றும் 6000 ரூபாய்க்கு குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். மற்றய பெரும்பான்மை அரச ஊளியர்களின் சராசரி வருவாய் 4000 ரூபாய்கும் குறைவாகவே உள்ளது. கொழுத்த சம்பளம் மட்டுமின்றி இராணுவத்தினருக்கு இதர சலுகைகளும் வளங்கப்படுகிறது. ஓய்வூதிய அதிகரிப்பு மடடுமின்றி சமுக அந்தஸ்தை கூட்டும் சலுகைகளும் வளங்கப்படுகிறது. உதாரணமாக பொது அரச இடங்களில் இராணுவத்தினருக்கென்று தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது.

இளம் சமுதாயத்தை இராணுவ ஊழியத்துக்கு கவர்ந்திளுக்கவே இத்தனையும். மிக வறுமையான தென் மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு இராணுவத்தில் சேர்வதை தவிர வேறு வழியில்லை. இராணுவத்தினர் இறந்தால் ஆயுட்கால சம்பளமும் பெரும் தொகையும் குடும்பங்களுக்கு வளங்கப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்தில் இருந்து பலர் இராணுவத்தில் இணைகின்றனர். அண்மையில் ஜனாதிபதி ஒரு குடும்பத்துடன் போஸ் குடுத்து ஆகா கோ என்று புழுகி பலத்த பிரச்சாரம் செய்தது இலங்கை ஊடகங்களை கவனித்து வந்தவர்கள் அறிந்திருக்க கூடும். ஒரே குடும்பத்தில் இருந்து நாட்டை காக்க பல வீரர்கள் இராணுவத்தில் இனைந்துள்ளனர் என்பதே பின்னனி பிரச்சாரம். ஆனால் அந்த குடும்பத்தினர் இலங்கையின் மிக வறிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள். வேறு எந்த தொழிலும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் வேறு வழியின்றி இராணுவத்தில் சேர்ந்தவர்கள் அவர்கள். நாட்டு பற்று தேசிய இறையான்மை என்ற எந்த மன்னாங்கட்டி அக்கறையுமின்றி வயித்துபசியை முன்னிலைபடுத்தியதே அவர்களுக்கும் இராணுவத்துக்குமான தொடர்பின் இரகசியம். இதை லாவகமாக தமக்கு சாதகமாக்கி பிரச்சாரிக்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர். இலங்கை இராணுவத்தில் பெரும்பான்மையானவர் மிக மிக வறிய பகுதிகளில் இருந்து வந்தவர்களே.

புலிகளின் எதிர்காலம் ?

தமது முப்பது வருடகால வரலாற்றில் புலிகள் என்றுமில்லாத பின்னடைவை கண்டுள்ளனர். இராணுவ ரீதியில் ஒரு மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளனர். இந்திய இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வி புலிகளை பொறுத்த வரையில் பெரிய தோல்வியில்லை. அத்தோல்வியால் ஆயுத ரீதியான பின்னடைவோ அல்லது போராளிகளுக்கு பாரிய மனச்சோர்வோ ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி பொது மக்களிடம் இருந்த பெரும்பான்மை ஆதரவிலும் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. இந்திய இராணுவத்தின் ஆதரவுடன் மற்றய இயக்கங்கள் செய்த அட்டகாசங்கள் புலிகளின் ஆதரவை அதிகரிக்க உதவினவே அன்றி புலிகளின் செல்வாக்கை பாதிக்கும்படி எதுவும் நிகழவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தோல்வி புலிகளை பல்வேறு வழிகளில் பின்னடைய வைத்துள்ளது.

யுத்த வெற்றிகளை விற்பனை செய்து வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் காசு சேர்க்கும் கலாச்சாரத்தை பரப்பியிருந்த புலிகளுக்கு இந்த யுத்தத்தின் போது பெரிய ‘பிரச்சார நிகழ்வுகளை’ வழங்க முடியாமற்போய்விட்டது. இறுதி அடி விழும் என்ற கதைகட்டி ஆளுக்கு ஆயிரம் பவுன்ஸ் சேர்த்து திரிந்தவர்கள் வாயில் இடி விழுந்த மாதிரி முல்லைத்தீவும் பறிபோனது. இயக்கம் என்ன இந்த அடி வாங்குது என்று இறுகிய புலி ஆதரவாளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். ஆயிரம் இரண்டாயிரம் என்று இராணுவத்தை ஒரே அடியில் விழுத்தபடுவர். புலிகளின் வீர பிரச்சாரம் கொடி கட்டி பறக்கபோகிறது என்று கனவு கண்டவர்கள் சப்பென்று போயுள்ளனர். இத்தேல்வியானது புலிகளின் கடும் ஆதரவு வட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி அவர்களது பொருளாதார நிலையிலும் பலத்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்தேய அரசுகளின் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புலிகளின் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் முடக்கப்படும் சாத்தியமுள்ளது. பல நாடுகளில் புலிகளுக்கான தடை அமுலில் இருப்பதாலும் அவர்கள் சொத்துக்கள் – பினாமி சொத்துக்கள் உட்பட – பல பறிக்கப்பட்டிருந்ததாலும் புலிகளின் வெளிப்படையான அசைவுகள் வெளிநாடுகளில் சாத்தியமற்று போயுள்ளது.

மிக கடுமையான கட்டுப்பாட்டுடன் – தமக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை வைத்து தமது வெளிநாட்டு நடவடிக்கைகளை செய்து வந்த புலிகள் அவ்வாறு தொடர்ந்தும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதற்தடவையாக போராளிகள் அல்லாத – போராட்டத்தோடு தொடர்பற்ற உதிரி ஆதரவாளர்களின் உதவியுடன் புலிகள் தமது நடவடிக்கைகளை வெளிநாடுகளில் செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. புலிகளின் காலம் போய் புலி வால்களின் காலம் வந்துள்ளது என்று சொல்லலாம்!

மீண்டும் புலிகள் பலப்படுவதற்கு எந்த நாடும் உதவப்போவதில்லை. இராணுவ ரீதியான – பிராந்திய ரீதியான வெற்றிகளை புலிகள் மீண்டும் நிறுவும் வரை புலிகளுக்கான ஆதரவு மங்கிக்கொண்டே போகப்போகிறது. இலங்கை அரசியலில் தமது செல்வாக்கை தொடர்ந்து நிலை நாட்ட அரசியல் எதிரிகளை கொல்லுதல் – மற்றும் வடக்கு கிழக்கில் தலையெடுக்கும் முக்கிய புள்ளிகளை ‘களையெடுத்தல்’- மக்கள் ஆதரவை நோக்காக கொண்ட செயற்பாடுகளை முடக்குதல் – முதலான காரியங்களில் புலிகள் ஈடுபடுவர் என்பது நிச்சயம்.

இது மட்டுமின்றி மக்கள் மத்தியில் நிலைகொல்லகூடிய இராணுவ தளங்களில் கொரில்லா தாக்குதல்களை நிகழ்த்துவதன் மூலம் இராணுவத்தை பொது மக்களுக்கு எதிராக திருப்பும் செயல்களிலும் புலிகள் கூடுதல் கவனம் செலுத்தகூடும். புலிகளின் கொரில்லா தாக்குதல்களுக்கு இரானுவம் எவ்வளவுதூரம் – எவ்வளவு காலத்துக்கு ஈடுகொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தது போல் இராணுவ காம்புகளை மையமாக வைத்த கட்டுப்பாடு புலிகளை பலப்படுத்தவே உதவும். அதற்கு மாறான புலிகளின் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது மிக மிக கஸ்டமான விசயம். முக்கியமாக வடக்கில் – அதுவும் புலிகள் நீண்டகாலமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரதேசங்களில் முழு கட்டுபாட்டை கொண்டுவருவது மிகவும் சிரமமான காரியமே. மக்கள்மேல் வன்முறை பாவித்து பயக்கெடுதி ஏற்படுத்தாமல் அது சாத்தியமில்லை. ஆனால் அதற்கான முயற்சியையே அரசும் அரசு சார் குழுக்களும் செய்வர்.

புலிகள் இராணுவ ரீதியாக மிகப்பெரிய தோல்வியடைந்திருப்பினும் கடைந்தெடுத்த மிகவும் பயிற்றுவிக்கப்பட்ட பல போராளிகள் தொடர்ந்து இயங்கிகொண்டுதான் இருக்க போகிறார்கள். தோல்வியால் ஏற்பட்ட விரக்தி – அதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருங்கமைக்கப்படாத அவர்கள் இயக்கம் பல அனர்த்தங்களை விளைவிக்கும் என்பதில் ஜயமில்லை. உதாரணமாக மக்களை கவனத்திற்கொள்ளாத மோட்டுத்தனமான தற்கொலை தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு. பல புலி உறுப்பினர்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை. அதை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படவுமில்லை. கருணா பிள்ளையான் முதற்கொண்டு அவர்களுக்கு பின்னால் இருக்கும் போராளிகள் உட்பட பலரும் ஆயுதம் சார் இயக்கம் தவிர வேறு பயிற்சி இல்லாதவர்கள். ஆயுதமற்ற அரசியல் நடவடிக்கையில் அவர்கள் திருப்திப்படப் போவதோ அல்லது பாதுகாப்பாக உணரப்போவதோ சாத்தியமில்லை. ஆயுதமற்ற கட்சி அது இது என்று எத்தனை புருடா விட்டாலும் ஆயுத குழு சாராது இயங்குவது கருணாவுக்கு சாத்தியமில்லை. இதே நிலைதான் பல புலி உறுப்பினர்களுக்கும். அரசாலும் அரசுசார் குழுக்கலாலும் வேட்டையாடப்படக் கூடிய நிலையில் அவர்களின் இந்த போக்கு தவிர்க்க முடியாததுமே. புலிகள் மேலான அனுதாபத்தை மீண்டும் மக்கள் மத்தியில் வளர்க்க இந்த அரசு சார் குழுக்களின் நடவடிக்கைகள்தான் உதவப்போகின்றன.

புலிகளின் போராடும் பலம் முறியடிக்கப்பட்டுவிட்டது. புலிகள் கதை முடிந்துவிட்டது என்ற அரச – மற்றும் புலி எதிர்ப்பு தமிழ் மத்தியதர வர்க்க (புலி விசயத்தில் இந்த இரண்டு பகுதிக்கும் பெரிய வித்தியாசமில்லை) பிரச்சாரத்துக்கு எடுபடுவதில் அர்த்தமில்லை. புலிகளின் ஆயுதங்களை இதுவரை இராணுவம் கைப்பற்றவில்லை. புலிகள் தமது ஆயுதங்களை குறிப்பிட்ட பங்கர்களுக்குள் முடக்கி பாதுகாத்ததாக வரலாறில்லை. தமது ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்று அவர்கள் ஆயுதங்கள் பல்வேறு இடங்களிள் பரவி கிடக்கும்.

அது மட்டுமின்றி பல்வேறு நாடுகளிள் தமது சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர் புலிகள். ஆயுத ரீதியாக புலிகளை பலவீனப்படுத்தவது என்பது அண்மையில் நடக்கிற கதையில்லை. இடைவிடாத புலிகளின் கொரில்லா தாக்குதலுக்கு எதிராக நீண்ட காலத்துக்கு நிண்டு பிடிக்க வேண்டும் என்றால் மக்களின் ஆதரவு தேவை. இதுவரை காலமும் பல்வேறு காரணங்களுக்காக புலிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்த மக்களின் ஆதரவை வென்றெடுப்பது என்பது சுலபமான காரியமல்ல. அவர்தம் அடிப்படை உரிமைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் மட்டுமே அது சாத்தியம்.

புலிகளின் நேரடி நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் முடக்கப்பட்டாலும் அவர்களது இரகசிய நடவடிக்கைகள் தொடரும் என்பதில் ஜயமில்லை. அவர்களது சர்வதேச ஆயுத வியாபாரமும் தொடரும். புலிகள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய சவால் தொடர்ந்து எவ்வாறு மக்கள் ஆதரவை தக்க வைத்து கொள்வது என்பதே. வெளிநாடுகளில் முடிந்தளவு தமது கால் ஊன்றுவதற்கான முயற்சியை அவர்கள் செய்வர். புலம்பெயர் மக்கள் மத்தியில் தொடர் போராட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் தமது இருப்பை பாதுகாக்க முயல்வர்.

அரசும் அரசுசார் குழுக்களும் மக்கள் பிரச்சினையை நேரடியாக எதிர்கொண்டு அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் நகராத வரை அரசியல் ரீதியாக பலம் பெறப்போவது புலிகள்தான்.

யுத்தம் முடிந்து விட்டதா?

புலிகளின் கட்டுபாட்டில் இருந்த பிரதேசங்களை கைப்பற்றுவதன் மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருகிறோம். யுத்தம் முடிவுக்கு வருவதால் இலங்கை பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவருகிறோம் என்று ஒரு மிக மோசமான பிரச்சாரம் செய்து வருகிறது இலங்கை அரசு.

நீண்ட காலத்துக்கு பிறகு முழு இலங்கையும் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் வருவது சாத்தியமே. ஆனால் இந்த இராணுவ ‘பிராந்திய ஆக்கிரமிப்பு’ எந்த தீர்வையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை. இராணுவ பலத்தை நிறுவிய கையுடன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவும் – அல்லது அவர்களை கட்டுபடுத்தும் வல்லமை – தமக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் கனவுகாண்பது போன்ற கேலிக்கிடமான விசயம் எதுவும் கிடையாது.

கிழக்கில் ஏதோ பொற்காலம் நடக்கிறது பொன் மழை பொழிகிறது என்று அந்த பொற்காலத்தை வடக்கிலும் கொண்டு வந்து காட்டுவதாக உறிதியளித்துள்ளது அரசு! மட்டுப்படுத்தப்பட்ட 13ம் திருத்த சட்டத்தை தவிர வேறு எந்த தீர்வையும் அரசு முன்வைக்கவில்லை. அரச பிரச்சாரத்தின் பின்னனி பலமாக இருக்கும் ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உரிமய போன்ற வலதுசாரி தேசியவாத – இனவாத கட்சிகள் 13ம் திருத்த சட்டத்தைகூட அமுல்படுத்த விடப்போவதில்லை.

கிழக்கில் ஜனநாயகம் பூத்து குலுங்குகிறது என்று இனியும் சொல்லி அதேபோல் வடக்கும் வந்தால் போதும் என்பதை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்கில் எப்பகுதியையும் சுயாதீனமாக விட அரசுக்கு சம்மதமில்லை. அதேவேளை நேரடி இராணுவ கட்டுப்பாட்டில் வட கிழக்கை தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையும் அரசுக்கில்லை. அதனால்தான். கருணா பிள்ளையான் டக்ளஸ் கட்சிகள் வடக்கு கிழக்குக்கான சரியான தீர்வாக அரசுக்கு தெரிகிறது. தமது முழு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுத குழுக்களிடம் அதிகாரத்தை வளங்குவதன் முலம் தமது பிராந்திய கட்டுப்பாட்டை நிலை நிறுத்த முடியும் என்று அரசு நினைக்கிறது.

பிராந்திய அதிகாரம் செய்யும் குழுக்கள் அரச ஆதரவின்றி எந்த முடிவும் எடுக்க முடியாத அரசின் பினாமி –  பம்மாத்து குழுக்கள் மட்டுமே. மக்கள் மத்தியில் பயக்கெடுதியை உருவாக்கி அவர்களை அரச கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே இவர்கள் செய்யகூடியது. தப்பித் தவறி இவர்கள் மாற நினைத்தால் அரசு அவர்களை உருவி புதிய அதிகார குழுவை இறக்கும் என்ற பயத்தில் இவர்கள் அரச ‘கைகூலிகளாக’ இயங்கப்போவது தவிர்க்க முடியாதது.

அது மட்டுமின்றி ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் – ஆதரவாளர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ புலிகளுடன் இயங்கியவர்கள் என்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை அரசு பயங்கரவாதிகள் என்று ஒதுக்ககூடிய நிலையுள்ளது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இனவாதிகள் இவர்களை கோட்டுக்கிழுத்து சிறைக்கனுப்பும் சாத்தியம் உள்ளது. மேலும் கருணா டக்ளஸ் பிள்ளையான் குழுக்களின் தனிப்பட்ட வேட்டைக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகக் கூடிய சாத்தியம் உள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு பலியாக் கூடிய காணாமற் போகக்கூடிய மக்களின் தொகை ஆயிரக்கணக்கிற் செல்லலாம்.

இது தவிர இலங்கையில் ஆயுத போராட்டத்துக்கு வித்திட்ட பிரச்சினைகள் அப்படியே இருக்கிறது. அதுபற்றி பேசுவார் இல்லை. இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கும்வரை யுத்தம் முடிவுக்கு வரப்போவதில்லை. அது மட்டுமின்றி யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட புது பிரச்சினைகளும் பேசப்படுவதில்லை. எல்லாம் முடிஞ்சுபோச்சு அமெரிக்க மேற்குலக இந்திய ஆசிய முதலாளிகளை கூப்பிட்டு வடக்கு கிழக்கில் சுரண்டல் கடை போடச்சொன்னால் எல்லாம் சரியாப்போகும் என்பவர்கள் வரலாற்றை சற்று உற்று நோக்க வேண்டும்.

சுயநிர்ணய பிரச்சினை முதலாளித்துவ சமுதாயத்தில் தீர்க்கப்பட்டதாக வரலாற்றில் எங்காவது ஆதாரமுண்டா? ஸ்கொட்லாந்து, வேல்ஸ் ஜயர்லாந்து, பாஸ்க், பெல்ஜியம், குபெக் என்று ‘வளர்ச்சி’ அடைந்ததாக சொல்லப்படும் இடங்களிலேயே தீர்த்து வைக்கபடாத சிக்கலான பிரச்சினை இது. அதனாற்தான் சமுதாய மாற்றத்துக்காக போராடுவNது சுயநிர்ணய உரிமையை அடைய ஓரே வழி என்கிறோம் நாம்.

இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒன்றுபட்ட சமுதாய மாற்றத்துக்கான புரட்சியை முன்னெடுக்காத வரை இலங்கைக்கு எதிர்காலமில்லை. இந்த போராட்டம் கனவுமல்ல. சமீபத்தில் பல வேலை நிறுத்தங்களை நாம் பார்த்துள்ளோம். யுத்தக் காய்ச்சல் – பிரச்சார திரை அவிழ மக்களின் கேள்விகளுக்கு பதில் தரமுடியாமல் ஆழும் வர்க்கம் திண்டாடப்போவது உண்மை. அத்தருனத்தில் நாம் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். யுத்தத்துக்கு நிரந்தர முடிவை கொண்டுவர அதைவிட வேறு வழியில்லை.

இலங்கை சாக்கடை அரசியலை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்ற தலைவிதி மக்களுக்கு இல்லை.

In Sri Lanka, politics is a terrible, terrible game. So dirty, absolutely filthy. Decent people do not want to have anything to do with it anymore.
FROM THE MARCH 29, 2004 ISSUE OF TIME MAGAZINE
– சொன்னது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா.- பாம்பின் கால் பாம்பறியும்.

16ம் திகதி 4.30 மணிக்கு, லசந்த கொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு பலியாகி வரும் தருணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்வதாக அதை நியாயப்படுத்தி வருகிறது அரசு. அரசின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக தெற்கின் இனவாதிகள் உக்கிர பணி செய்துவருகிறார்கள். ராஜபக்ச சகோதரர்கள் தமது கூலிக்குழுக்களை வைத்து கட்டற்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி பக்கச்சார்பற்ற குரலை ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகிற இத்தருணத்தில் துணிந்து எழும் ஒவ்வொருவரும் சாவை நோக்கியே எழுகிறார்கள். சமரசமற்ற ஊடகவியலை செய்ய விரும்பிய லசந்த தனக்கு சாவு நிச்சயம் என்று நம்பியிருந்ததில் யாருக்கும் ஆச்சரியம் வரப்போவதில்லை. ராஜபக்ச மன்னராட்சிக்கு எதிராக மூச்சு பேச்சு வரமுடியாத படிக்கு வன்முறை குழுக்கள் -கைக்கூலிகள் பயக்கெடுதி பரப்பி வைத்திருக்கிறார்கள்.

சன்டே லீடர் லசந்தவின் கொலை ராஜபக்ச அதிகாரத்தின் திரையை உலகுக்கு கிளித்து காட்டியுள்ளது. அரசின் யுத்த முன்னெடுப்புகளின் பின்னிருக்கும் அதிகார வெறியையும் மனித உரிமை மீறல்களையும் ஊழலையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது இக்கொலை.

ஊடகத்துக்கெதிரான வன்முறையில் இலங்கை உலகின் முன்ணனி நாடு. அதிலும் தற்போதய அரசு ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை புதிய உச்சத்துக்கு இட்டுசென்றுள்ளது. இந்த போக்குக்கு எதிராக நாம் கடும் எதிர்ப்பு கிளப்பியாக வேண்டும். மக்களை வேட்டையாடிக்கொண்டு அதை எழுத முற்பட்ட ஒரு தரமான ஊடகவியலாளனை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளிக்கொண்டு சர்வாதிகாரம் செய்யும் இந்த அரசுக்கெதிரான எல்லாவித எதிர்ப்பையும் நாம் செய்தாகவேண்டும்.

லசந்தவின் கொலையை கண்டித்து ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ (Committee for Worrkers International) பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.


இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 4.30 மணிக்கு, இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடக்க இருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த எதிர் நடவடிக்கைக்கு முழு ஆதரவும் வழங்கி கலந்து கொள்ளுங்கள். நன்றி

தேசம்நெற்

எக்சைல் யேர்னலிஸ்ட் நெட்வேர்க் –

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள;
சேனன் 07908050217
ஜெயபாலன் 07800596786

இக்கொலை சம்பந்தமாக ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ வெளியுட்டுள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. (இது நேரடி மொழிபெயர்ப்பல்ல)

கடந்த 8ம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரதுங்க கொல்லப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

எம் ரி வி நிலையதின் மேலான காடைத்தனமான தாக்குதல் நடந்து மூன்று மணித்தியாளத்துக்குள் இன்னுமொரு முக்கிய ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் ஊடகவியலாளர் மேலான அரச வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். துணிந்து உண்மையை கதைக்க நினைப்பவர்களை ராஜபக்ச அரசு எவ்வாறு அடக்க முயலுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரணங்களும் நல்ல உதாரணம்.

உண்மைகள் – இலங்கை மக்கள் படும்துன்பங்கள் வெளியில் வராமல் இருக்க இந்த அரசு எதைச்செய்யவும் தயாராக இருக்கிறது. புலிகளுக்கு எதிரான தமது புதிய வெற்றி பெருமித்துடன் அரசின் அட்டூளியங்கள் கேட்பாரற்று கூடிக்கொண்டிருக்கிறது. தமது ஊழல்களையும் சர்வாதிகார முறைகளையும் கபடமாக மறைக்கவும் இவர்கள் ஊடகங்களுக்கு எதிராக தமது பலத்தை காட்டி வருகிறார்கள்.

நாட்டின் மிக முக்கியமான ஒரு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இக்கதி, சாதாரண மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் போராளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பக்கசார்பற்ற ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைவாதிகள் தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்ட தனியார் விசாரனைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட யுத்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகளும் சரியாக விசாரிக்கப்படவேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரச எதிர்தரப்பினரையும் ஊடகவியலாளர்களையும் கொல்வதும் தாக்கப்படுவதும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

ஊடகங்களுக்கான உண்மையான சுதந்திரம் வழங்கப்படுவதுடன் ஜனநாயக மனித உரிமைகள் மீளமைக்கப்படவேண்டும்.

ஊடக சுதந்திரம் -பகுதி 1 – சேனன்

writing.gifமுன்குறிப்பு
‘ஜனநாயகம்’ மற்றும் ‘ஊடக சுதந்திரம்’ என்ற பதங்கள் இன்று உலகெங்கும் அதிகாரம் சார்ந்த பொது அர்த்தத்திலேயே பேசப்பட்டு வருகிறது. ஜனநாயகம் சிறுபான்மை அதிகார கும்பலின் ஜனநாயகமாகவும,; சிறுபான்மை அதிகாரத்தின் பேச்சு சுதந்திரத்தை பிரச்சாரம் செய்வது ஊடக சுதந்திரமாகவும் அர்த்தப்பட்டு வருகிறது. இந்த அர்த்தப்படுத்தலில் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் பெரும்பான்மை ஊடகங்கள் மிகச்சிறுபான்மை பணக்காரர்களின் கைகளில் முடக்கப்பட்டு வருவதால் அவை பெரும்பான்மையினர் நலன்களில் இருந்து விலத்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஊதிப்பெருத்த பெரும் ஊடகங்கள் சிறு சிறு ஊடகங்களை விழுங்கி மிகச்சிறுபான்மை நலனை பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஊடக நிறுவனங்களின் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த ‘பொது’ ஊடகங்களில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு மிக மிக குறைந்தளவிலேயே இருக்கிறது. விக்டோரியன் காலத்தின்பின் மிககூடிய அளவில் ஊடகங்கள் மக்களிள் இருந்து தனிமைப்பட்டு போயுள்ளன என்பது மிகையான கருத்தல்ல. இன்று ஊடகங்கள் மேல் விழுந்துள்ள பொருளாதார-அரசியல் ஆதிக்கத்துக்கு பலத்த எதிர்ப்பை ஏற்படுத்துவதன் மூலமே மக்கள் பங்களிப்பை – மக்களின் நலன் பிரதிபலிக்கும் பொது ஊடகத்தை உருவாக்க முடியும். இந்த சாத்தியத்தை இணைய ஊடகங்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளன. ஜனநாயகத்தின் எல்லைகளை அகலப்படுத்துவதிலும் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் அதிக பங்களிப்பை வழங்கி வருபவை இணைய ஊடகங்களே.

உலகளாவிய பாரிய நிறுவனங்கள் பல சரிந்து பெரும் பொருளாதார சிக்கலுக்குள்ளாகியுள்ள இத்தருணத்தில் அரசியலில் தமது பங்களிப்பின் அவசியத்தை பெரும்பான்மை மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர். தேர்தல்களிள் மக்களின் நலனை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் பெரும்பான்மை மக்களுக்கு கிடைப்பதில்லை. போட்டியிடும் ‘பெரும்பான்மை’ கட்சிகள் யாவும் சிறுபான்மை அதிகார வர்க்கத்தினர் நலன்சார்ந்தே இயங்குவதால் மக்கள் நலன் ஜனநாயக தேர்வுக்கு வருவதே இல்லை. அதனால் பல்வேறு நவீன முறைகளிள் மக்கள் தங்கள் அரசியற் பங்களிப்புகளை செய்யும் புதிய காலத்தில் நாம் நுளைந்துள்ளோம். அதிகாரவர்கத்தின் தான் தோன்றி தனமான முடிவுகளை எதிர்க்க வேண்டிய தேவையும் அரசியல் முடிவுகளிள் மக்களின் பங்களிப்பு இருக்கவேண்டிய அவசியமும் இன்று உலகெங்கும் உணரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பங்களிப்பை உள்வாங்குவது மக்கள் சார்ந்து இயங்கும் எந்த ஊடகத்தினதும் பெரும் சவாலாக இருக்கிறது.

வரலாற்று பின்னனி
18ம் நூற்றான்டு காலகட்ட தொழிற்புரட்சி பல்வேறு சமூக பொருளாதார விஞ்ஞான மாற்றங்களை கொண்டு வந்தது. இக்காலகட்டத்தில் அச்சுத் துறையில் ஏற்பட்ட வேகமான மாற்றம் மிக முக்கியமானது. 19ம் நூற்றான்டின் மத்திய காலத்தில் பத்திரிகைகள் மில்லியன் கணக்கான பிரதிகளை அச்சிடும் அளவுக்கு அச்சுதுறை தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சி கண்டது. பெரும்பான்மை மக்களை குறிவைத்து பத்திரிகைகள் அச்சிடப்பட்டாலும் அவை பெரும்பான்மையினரின் நலன்சார்ந்து இயங்கவில்லை. பத்திரிகை துறையை அதன் ஆரம்பகாலம் தொட்டு அதிகார வர்க்கம் தனது கட்டுபாட்டில் வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்து வந்துள்ளது. பொது அறிவில் செல்வாக்கு செலுத்தல் – தகவல்களை கட்டுப்படுத்தல் முதலானவையை அதிகாரம் தனது இருத்தலை உறுதிப்படுத்தும் இயல்பான நடவடிக்கையாக கொண்டிந்தமையால் இதற்கு சிறந்த வசதி ஏற்படுத்தி கொடுத்த அச்சுதுறையை அதிகாரம் உடனடியாக தமது கட்டுபாட்டில் கொண்டுவந்தது ஆச்சரியமானதல்ல. பெரும்பான்மையர் சுயமாக பணம்கொடுத்து வாங்கும் பத்திரிகை மிக சிறுபான்மை நலன்சார்ந்து அச்சிடப்பட்டது விரைவில் முரண்பாடுகளை தோற்றுவித்தது. இந்த முரண்பாடு தோற்றுவித்த அதிருப்தியை மக்கள் சார்ந்து சிந்தித்த ‘மொழி வல்லுமையாளர்’ பலர் தமது வெளிப்பாடுகளில் பிரதிபலித்து வந்துள்ளனர். பெரும்பான்மையரின் எதிர்ப்பு இவர்களுக்கூடாவகவே சிறிய அளவில் பதியப்பட்டது. இவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பாவித்து ‘பேச்சு சதந்திரம்’ என்ற கருத்தை முன்தள்ளினர்.

பெரும்பான்மை மக்களின் பல்வேறுபட்ட குரலை உள்நுளைப்பதானால் முரணான பல கருத்துக்களை-ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை அனுமதித்தாக வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகியது. பேச்சு சுதந்திரம் என்ற உரிமை ஒவ்வொருவரினதும் தனி உரிமை ஆக்கப்பட்டால் மக்களின் குரல் வெளிப்படுவதற்கான அதிகாரத்தின் தடை தளர்த்தப்படும் என்பது உணரப்பட்டது.

பேச்சுரிமை ஒவ்வொரு மனிதனிதும் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நிலைநாட்டுவது, மக்களின் பேச்சு பொதுவில் வளரவிட அதிகாரத்தை நிர்பந்திக்கும் உத்தியானது. அதிகாரம் சார்-எதிர் என்ற சார்நிலைகளுக்கும் அப்பால் ‘பேசும் உரிமை’ என்பதை மனித உரிமையாக பார்க்கும் போக்கு அதிகார வர்க்கத்துக்கு பெரும் சிக்கல்களை தோற்றுவித்தது. பேச்சு உரிமை அதிகாரத்துக்கு எதிரான நலன் கொண்டது என்பதை அதன் ஆரம்பகாலங்களிலேயே அதிகாரம் தெட்டத் தெளிவாக புரிந்து கொண்டது. தமக்கு எதிரான கருத்துக்களையும் ‘உரிமை’ அடிப்படையில் அதிகாரம் ஏற்றுகொள்ள வைப்பது என்பது மக்கள் சார்ந்து கருத்து வைத்த அன்றய புத்திஜீவிகளின் பெரிய சவாலானது. பிரெஞ்சு புத்திஜீவி வால்டேரின் புகழ்பெற்ற கூற்றை இந்த அடிப்படையிலேயே பார்க்கவேண்டும். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அதை சொல்ல இருக்கும் உனது உரிமையை காக்க நான் எனது உயிரையும் கொடுப்பேன்.’ என்று வால்டேர் வலியுறுத்தியதன் அரசியற் பின்னணி இதுதான். ‘நீ சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை’ என்ற பகுதி அதிகாரத்தை நோக்கி பேசியதாகவும் அதிகாரம் உடன்படாத கருத்து வெளிப்பாட்டின் குறியீடாகவும் பார்க்கபட வேண்டும். ஆனால் அதிகாரம் ‘தத்துவ’ கோரிக்கைகளுக்கு மசியவில்லை. அதிகாரத்தை மசியவைக்க மக்கள் உரிமை போராட்டத்தை நடத்தவேண்டியிருந்தது.

1776ல் இருந்து 1800 வரையான காலப்பகுதியை ‘புரட்சிகளின் காலம்’ என்று பல வரலாற்றாசிரியர்கள் வர்னிப்பர். ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் உரிமைகளுக்கான கிளர்ச்சி பாரிய அளவில் வெடித்த காலப்பகுதியிது. ஆரம்பகால முதலாளித்துவத்தின் ‘கருத்துநிலையை’ தீர்மானித்த காலப்பகுதியிது. 1776 யூலை 4ல் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் ‘மனித உரிமைகளை’ தோமஸ் ஜெபர்சன் அறிமுகப்படுத்தியது மறுமலர்ச்சி காலகட்டத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை. இதன்பின் 1789 பிரெஞ்சு புரட்சியின்போது உருவான பல்வேறு கோசங்களில் ‘மனிதரின் உரிமைகள் பிரகடனம்’ முக்கிய செல்வாக்கு செலுத்தியது. தோமஸ் பெயினின் ‘மனிதரின் உரிமை’ புத்தகம் உரிமை கோரிக்கைகளின் சின்னமானது மட்டுமின்றி அக்கால புரட்சியாளர் பலருக்காக வாதாடவும் உதவியது. இக்கருத்துகள்மேல் அன்று அதிகாரத்துக்கு இருந்த அச்சத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. தோமஸ் பெயினுக்கு இங்கிலாந்து ஆழும் வர்க்கம் மரண தண்டனை வளங்கியது ஆச்சரியமானதல்ல. அவர் பிரான்சுக்கு தப்பியோடித்தான் தூக்கில்; இருந்து தப்பினார்.

1791ல் அமெரிக்காவில் அமுலுக்கு வந்த உரிமை சட்டமும் அதில் முதலாவது சேர்ப்பாக (First Amendment to the Bill of rights) பேச்சு சுதந்திரமும் மனித குல வரலாற்றில் மிக முக்கியமான மைல்கற்கள். பேச்சுரிமையையோ அல்லது ஊடகத்தையோ பாதிக்கும் எந்த சட்டத்தையும் காங்கிரஸ் கொண்டுவரகூடாது என்று தடுத்தது இச்சட்டம்.

இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து மக்களின் உரிமைகளை சூறையாடிக் கொண்டுதான் இருந்தனர். வளங்களையும் ஊடகங்களையும் தொடர்ந்தும் அவர்கள் தமது கட்டுபாட்டிலேயே வைத்திருந்தனர். ஆனால் அதிகாரத்துக்கும் ஊடகத்துக்குமான உறவு பற்றி மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். யோன் ஸ்டுவர்ட் மில் தனது ‘ஊடக சுதந்திரமும் அவதூறு சட்டமும் ‘‘Law of Libel and Liberty of press’ (1825) என்ற கட்டுரையில் இதுபற்றிய முக்கியமான அவதானத்தை ஏற்படுத்துகிறார். அதிகாரம் எப்பொழுதும் பெரும்பான்மை ஒடுக்கப்படுபவர்களின் சுதந்திரத்தை நசுக்குவதாகவே இருக்கும் என்பதை மில் சுட்டிகாட்டுகிறார். பொது உரையாடல் மூலமாகவும், பிழை-கூடாது-தவிர்க்கப்படவேண்டியது என்று கருதப்படுகிற கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமாகவுமே சுதந்திரத்தை சாத்தியப்படுத்த முடியும் என்றார் அவர்.

‘எதிர்’ கருத்து எவ்வகைப்பட்டதாக இருப்பினும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதோடு தொடர்ந்தும் பின்னி பிணைந்திருப்பதை நாம் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதன்பிறகு முதலாளித்துவம் முதிர்ச்சியடைய தொடங்கிய கால கட்டத்தில் உருவான புது ஒடுக்குமுறைகள் புது ஒடுக்குதல்களை தோற்றுவித்தது. அதற்கெதிரான போராட்டமும் வலுப்பெற்றது. இரஸ்ய புரட்சி பேச்சு சுதந்திரத்தின் எல்லைகளை வரலாறுகாணாத வகையில் அகட்டியது. மார்க்சிய புரட்சியாளர் ஊடகத்துக்கும் அதிகாரத்துக்குமான உறவை முதல் முதலாக உடைத்தனர். தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்குமான ஊடகத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முதலாக இறங்கினர் இரஸ்ய புரட்சியாளர்கள். அதிகாரத்தை தகர்த்து ஒடுக்கப்படும் மக்களுக்கான தொழிலாளர் ஜனநாயகத்தை உருவாக்கியதன் மூலம் புதிய அரசியல் -பொருளாதார உறவுமுறைகளுக்கு வழியேற்படுத்தினர். மனித குல வரலாற்றில் முதன் முறையாக ஒடுக்கப்படும் அனைத்து மக்கள் சார்பிலும் இயங்கும் பதிய சமுக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.

புரட்சி நடந்த ஒரு மாதத்திற்குள் நவம்பர் 1917ல் போல்சிவிக் கட்சி பத்திரிகை பிரவ்டா லெனினின் பின்வரும் கோரிக்கையை பிரசுரித்தது.

‘ தோழர்களே! தொழிலாளர்களே! இனி நீங்கள்தான் அரசின் தலைமைத்துவத்தில் இருக்கிறீர்கள் என்பதை நன்றாக ஞாபகத்தில் வைத்துகொள்ளுங்கள். நீங்களாக ஒன்றினைந்து உங்கள் அரச கருமங்களை உங்கள் கையில் நீங்கள் எடுப்பதற்கு வேறு யாரும் உதவப்போவதில்லை. உங்கள் வேலையில் இறங்குங்கள். அடிமட்டத்தில் இருந்து ஆரம்பியுங்கள். யாருக்காகவும் தாமதிக்காதீர்கள்.’

சர்வாதிகாரி என்று பூர்சுவாக்கள் புறங்கூறும் லெனினின் மக்கள் நோக்கிய கோரிக்கை இது. சோவியத் துரித கதியில் மாற்றத்துக்குள்ளானது. உலகெங்கும் உள்ள அதிகார வர்கத்துக்கு அதிர்வலைகளை சோவியத் மக்கள் அனுப்பினர். பல்வேறு நாடுகளில் உரிமைபோரில் மக்கள் இறங்க இது ஊக்கமளித்தது. இருப்பினும் புரட்சியின் வெற்றி தொடர்ந்து நீடிக்கவில்லை. சிறு அதிகார வர்க்கம் அரசை கைப்பற்றி தொழிலாளர் நலனை நசுக்க தொடங்கியது. ஸ்டாலினுடன் பிராவ்டாவின் இணை ஆசிரியர்களில் ஒருவரான காமினேவ் புரட்சிக்கு சில மாதங்களின் முன் லெனின் எழுதிய ஏப்பிரல் தீசிஸ்க்கு எதிராக ஆசிரியர் தலையங்கம் எழுதி விமர்சிக்ககூடிய ஒரு சூழல் இருந்தது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றியதுடன் நிலை தலைகீழாக மாறியது. பேச்சு சுதந்திரத்தை நசுக்குவது ஸ்டாலினிஸ்டுகளின் முக்கிய பணியானது. மக்கள் அபிப்பிராயத்தை காவல்காத்து வழிநடத்துவதல்ல ஒரு உண்மையான புரட்சிகர தொழிலாளர் அரசின் பணி. மாறாக முதலாளித்துவ கட்டுபாட்டில் இருந்து மக்கள் கருத்தை விடுவிப்பதே அவர்கள் பணியாக இருக்கவேண்டும் என்பதை ட்ரொட்ஸ்கி சுட்டி காட்டினார். தகவல் உற்பத்தியையும் மக்கள் மயப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதை சாதிக்கலாம் என்று ட்ரொட்ஸ்கி கூறியது மக்கள் நலனில் இயங்காத ஸ்டாலினிஸ்ட் அதிகாரத்துக்கு துரோகமாக பட்டதில் ஆச்சரியமில்லை.

இதை தொடர்ந்த பனி யுத்தத்தில் ‘தகவல் கட்டுப்பாடு’ மிக முக்கிய பங்குவகித்தது. தேசிய இறையான்மை – பாதுகாப்பு காரனங்கள் என்ற பம்மாத்துகள் காட்டி அதிகாரம் தகவல் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் தமது கைக்குள் இறுக்கி வைத்துக்கொண்டிருக்கின்றன. பனியுத்த காலத்திலும் அதற்கு பிறகும் ஊடக சுதந்திரத்துக்கான பல போராட்டங்களை நாம் பார்த்துவிட்டோம். அமெரிக்காவில் 60களில் சிவில் ரைட் இயக்கம் முன்தள்ளிய போராட்டம் இவற்றில் முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக எழுந்த பேச்சு சுதந்திர இயக்கம் உலகெங்கும் பலமான செல்வாக்கு செலுத்தியது நாமறிவோம்.

ஒரு ஏக்கர் கானிக்குள் அடைத்துவைக்கக்கூடிய தொகை பணக்காரர் பூமிப்பந்தின் மொத்த வளங்களையும் சொந்தம் கொண்டாடி மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியாலும் நோயாலும் தினமும் சாவதை பார்த்துகொண்டிருக்கும் மிகவும் சமமற்ற உலகில் இன்று நாம் வாழ்கிறோம். இந்நிலையில் மக்கள் குரலை வலுப்படுத்துவதும் அதற்கான முன்னெடுப்புகளை செய்வதும் மிக முக்கியமானது.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஜோன் ஸ்டுவர்ட் மில் ஏற்படுத்தின தெளிவுகூட இன்று பலருக்கு இல்லை. சுதந்திர உரையாடலுக்கு எதிரான கருத்து எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் அன்றே சுட்டிகாட்டியிருந்தார். ‘ சரியான கருத்தை உருவாக்கி கொள்ள முடியாத படியால்தான் ஒரு தவறான கருத்து உருவாகிறது. சுதந்திர உரையாடலை தொடர்வதுதான இதை மாற்ற ஒரே வழி;. சுதந்திர உரையாடல் உருவாக்கும் தவறான கருத்துக்களை தவிர்க்க-மாற்ற சுதந்திர உரையாடலை தொடர்வதுதான் ஒரே வழி. சுதந்திர உரையாடலில் ஏற்படும் அறிதலே தவறான கருத்துகள் உருவாகும் அறிவின்மை சூழலை தவிர்க்க உதவும்’ என்று மில் கூறியது இன்றும் பலருக்கு புதினமாக படலாம். பேச்சு சதந்திரத்தை எதற்காகவும் விட்டு குடுக்க முடியாது என்று கடந்த இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தாலும் இன்றும் அது அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாலேயே இந்தநிலை.

இதை நிரந்தரமாக மாற்ற இன்றுள்ள இணைய சுதந்திரத்தை நாம் எமது போராட்டங்கள் மற்றும் பேச்சு சுதந்திரம் வலுப்பட பாவிக்கவேண்டும்.

காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன்

1230990018227.jpgகடந்த ஆண்டுகளில் பல எதிர் போராட்டங்கள் கண்ட லண்டன் ட்ராபல்கர் ஸ்காயரில் இன்று (3rd Jan)மீண்டும் மக்களின் குரல் பலமாக ஒலித்தது. மேற்கத்தேய அதிகாரங்களின் ஆதரவுடன் கேட்டுக்கேள்வி இல்லாமல் பாலஸ்தீனிய மக்களை கொன்று தள்ளிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய அதிகாரத்தின் அட்டகாசத்துக்கு எதிராக மீண்டும் ஆயிக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் எம்பாங்மென்றில் இருந்து பாராளுமன்றம் முதலான முக்கிய இடங்களை தாண்டி ட்ராபல்கர் ஸ்கார்வரை ஊர்வலமாக வந்து தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 

1230991169810.jpgஇஸ்ரேலிய டாங்குகள் காஸா பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த இன்று லண்டன் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொண்டை வறள கத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். பாலஸ்தீனர்கள் யூதர்கள் மற்றும் பல்வேறு இன மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் கத்தி 2009ம் ஆண்டின் எதிர்ப்பை தொடங்கி வைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய திறந்த சிறை என்றழைக்கப்படும் காஸா பிரதேசத்தில் அங்கு வாழும் 1.5 மில்லியன் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அடக்குமுறைகள் சொல்லிமாளக் கூடியவையல்ல. கடந்த 16 மாதங்களாக இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கடும் முற்றுகை காரணமாக குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் பசி பட்டினியுடன் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது நாமறிந்ததே. ஏராளமானவர்கள் பட்டினியால் செத்து கொண்டிருக்கும் தருணத்தில் எந்த தற்காப்பு வசதியுமற்ற அப்பாவி மக்கள் மேல் நவீனரக ஆயுதங்களை கொண்டு கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

இரண்டு வருடங்களுக்கு முன் லெபனானில் செம்மை அடி வாங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவம் தமது பலத்தை காட்ட அப்பாவி மக்களை  தாக்குவது மிகவும் கேவலம். ஏதிர்வரும் பெப்பிரவரி தேர்தலில் வலது சாரிகளின் வாக்குகளை அள்ளி சுருட்டும் நோக்குடன் இயங்கும் இஸ்ரேலிய அரசுக்கு உலகின் புதிய விடிவெள்ளி ஒபாமா உட்பட அனைத்து அதிகாரங்களும் ஆதரவு! இஸ்லாமின் பெயரைசொல்லி மக்களை ஆட்டிப் படைக்க நிற்கும் சவுதிஅரேபியா முதற்கொண்ட அரேபிய தலைமைகளும் வெறும் சாக்குக்கு இஸ்ரேலை கண்டிப்பதோடு நின்றுவிட்டன.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை நினைக்க சோகம் கவ்வுகிறது. இந்த தான்தோன்றித் தனமாக இயங்கும் கொலை வெறி நாய்களின் வால்களை நறுக்க வழியற்ற நிலையின் வேதனை குமுறல் லண்டன் தெருக்களில் கணீரென்று ஒலித்தது. அவர்தம் ஆத்திர பொறி மேலும் மேலும் வெடித்து பரவும் என்பதை தீர்மானமாக பார்க்க முடிந்தது. நீண்டகால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் வேட்டையாடப்படுவதை சத்தம்போடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தோடு நாமில்லை என்பதை உலகெங்கும் உள்ள மக்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் மேலும் மேலும் அதிகமான எதிர்ப்பு ஊர்வலங்கள் போராட்டங்களை பார்க்கப்போவது தவிர்க்க முடியாதது.

உலக பொருளாதாரம் தலைகீழாய் கவிழ்ந்து உருண்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதிகாரங்கள் யுத்தம் -ஆக்கிரமிப்பு துவேசம் பக்கம் சார்ந்து மக்களை துவைத்து பிழியும் வரலாற்றை இதுவரை பார்த்துள்ளோம். அதிகாரத்துக்கு தெரிந்த தப்பும் வழி அது ஒன்றுதான் என்பது எமக்கு தெரியும். ஆனால் முதல் தடவையாக உலகமயப்பட்ட மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. எல்லாரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் இருக்கும் பொழுது நசுக்கிடாமல் போய் காஸாவில் அடித்தால் தப்பிவிடலாம் என்ற அதிகார கனவை உடைத்துள்ளனர் மக்கள். கண்டும் காணாமல் இருக்கும் இங்கிலாந்து அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய அதிகார வர்க்கங்கள் உடனடியாக குலுக்கப்படும் என்பதை மக்கள் சத்தம்போட்டு உணர்த்தியுள்ளனர். உலகவரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த போக்கு அதிகரித்து வருவதை தற்போது நாம் அவதானிக்க முடியும்.

நீண்ட இடைவெளியில் நடக்கும் போது தேர்தலில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசமைக்கு சிறுபான்மை அதிகாரவர்க்க பிரதிநிதிகள் அடுத்த தேர்தல் வரையும் செய்யும் அநியாயங்கள் அட்டகாசங்களை இனியும் பொறுத்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கத்தால் உணரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒபாமாவின் தேர்தலில் நிகழ்ந்தது போன்று ஒடுக்கப்படுபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவதால் மட்டும் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட முடியாது என்பது மக்களுக்கு இன்று மிகவும் வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில் புதிய உலகளாவிய போராட்ட வடிவத்தின் தேவை அத்தியாவசிய தேவையாகியுள்ளது. உலகெங்கும் அதிகாரங்கள் தமது அட்டூழியங்களை ஒட்டுமொத்த மக்களின் சார்பிலும் நிகழ்த்துவதாக பாவனை செய்வது வரலாற்றில் என்றுமில்லாதபடி கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு அட்டூழியத்துக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து ‘எமது பெயரில் இல்லை’ என்று கடும் எதிர்ப்பை வைப்பது உலகளாவிய எதிர்ப்புகளின் ஒன்றிணைவுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா மக்களுக்கெதிரான கொடுமையை எதிர்த்து உலக மக்கள் ஒன்றிணைவது இதன் ஒரு முதற்கட்டமே.

ஆயுதம் தாங்கி தற்காப்பு போர் செய்ய பாலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அந்தபோர் மக்கள் ஒன்றிணைந்த மக்கள் நடத்தும் போராக இருக்கும் வரையில்தான் அது வெற்றி நோக்கி செல்ல வாய்ப்புண்டு. இஸ்ரேலிய ஒடுக்கப்படும் மக்கள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த போர் தான் நிரந்தர தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரே ஒரு போர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராடிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய தோழர்கள் பாலஸ்தீன-லெபனான் தோழர்களுடன் இனைந்து போராட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது சூழ்நிலை. இருப்பினும் லெபனானிலும் இஸ்ரேலிலும் தோழர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள் ஓரே குரலில் ஓரே மாதிரியான வேண்டுகோளுடன் விநியோகிக்கப் படுவதை கேள்விப்படவே பலருக்கும் புல்லரிக்கிறது. அதே வேண்டுகோள்களுடன் இங்கிலாந்து மக்கள் பாராளுமன்றத்தின் முன் கூச்சல் இட்டது ‘உன்னத சங்கீதமாக’ இருந்தது.இஸ்ரேலிய –லெபனான் – அமெரிக்க இங்கிலாந்து தோழர்கள் ஒன்று சேர்ந்த குரலில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து அவர்தம் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தது அனைவரது உரிமைகளையும் மதிக்கும் உலகை ‘கனவு’ காண்பவர்களுக்கு இதத்திலும் இதமான நம்பிக்கை தருகிறது.