எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

கல்வி குறையில் – அரசியலில் தோல்வி – வாழ்க்கையில் விரக்தி – ஜெயந்தி! புதிய அத்தியாயம் !!! பாகம் 31

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 31 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: நீங்கள் பாரிசுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி உங்களுடைய வாழ்க்கையை புலம்பெயர் தேசத்தில் ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் வந்த காரணம் ஏற்கனவே குறிப்பிட்டது போல செல்வி கடத்தப்பட்டு இருந்த நேரம் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் ,அவர் விடுதலை ஆவார் என்ற எண்ணத்தில் வந்தீர்கள். ஆனால் கடைசி வரைக்கும் செல்வி உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற விடயம் கூட உங்களுக்கு மிக நீண்ட காலமாக தெரியாது. எந்தக் கட்டத்தில் செல்வி உயிருடன் இல்லை என்ற கட்டத்திற்கு நீங்கள் வாறீர்கள்? ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை பயணமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கு அல்லவா…

அசோக்: எப்படியும் ஒரு வருஷம் இருக்கும் அதுவரைக்கும் நான் நம்பிக் கொண்டு தான் இருந்தேன் செல்வி இருப்பாங்க என. அதற்குப் பிற்பாடு தான் எனக்கு தெரிய வருகிறது. செல்வி இல்லை என்று.

தேசம்: உண்மையிலேயே இந்தக் கொலையை விடுதலைப் புலிகள் கடத்திக் கொண்டு போன உடனேயே செய்துவிட்டார்களா? அல்லது குறிப்பிட்ட காலம் வைத்திருந்தார்களா?

அசோக்: நீண்ட காலம் வைத்திருந்தவர்கள் என்று நினைக்கிறேன். 6-7 மாதமாவது வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கைது செய்யப்பட்டதற்கு பிற்பாடு கைதிகள் சிறையில் இருந்த பெண் ஒருவர் செல்வியைக் கண்டதாக வேற ஆட்களிட்ட சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அவங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றால் அவங்கள் விரும்பவில்லை.

தேசம்: இந்தச் சம்பவம் எல்லாம் நடந்தது 92 ஆம் ஆண்டு காலப்பகுதியா?

அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்க வாறேன். செல்வி 91 ஓகஸ் ட் 30ம் திகதி கைது செய்யப்படுறாங்க.

தேசம்: 93 நீங்கள் முடிவுக்கு வாறீர்கள். அந்தக் கற்பனை, அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் முடிவுக்கு வருது.

அசோக்: ஓம்…

தேசம்: அதுக்குப்பிறகு அது மிகக் கஷ்டமான சூழலில் தான் நான் நினைக்கிறேன் நீங்கள் மன உளைச்சலோடு நிறைய சிக்கல்கள்களை கடந்து வந்திருப்பீர்கள். அந்தக்காலங்களை எப்படி எப்படி சமாளித்தீர்கள்? அரசியல் ரீதியாக விரக்தி, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் விரக்தி. நான் நினைக்கிறேன் உங்கள் வயது இளைஞர்களுக்கு உங்களுடைய தலைமுறை ஆட்களுக்கு இவ்வாறான வாழ்க்கை என்பது மிகப்பெரிய பாதிப்பு என்று நினைக்கிறேன். படிப்பை விட்டு வந்தவர்கள் அரசியல் ரீதியாக தோல்வி இதில் இருந்து எப்படி வெளியில் வந்தீர்கள்?

அசோக்: போராட்டத்தில் ஏற்பட்ட தோல்விகள் இருக்குதானே, நம்பி வந்த இயக்கத்திலும் தோல்வி , தவறுகளிலிருந்து மீளலாம் என எண்ணி எடுத்த முயற்சிகளும் தோல்வி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நம்பி நம்பி ஏமாந்து…

தேசம்: அப்படி ஒரு ஃபீலிங் வந்ததா நாங்கள் எல்லாத்தையும் இழந்திட்டம் என்று…

அசோக்: ஒரு கால கட்டத்தில் இருந்தது. இயக்கத்தில் முரண்பட்டு வரேக்க. பெரும் நம்பிக்கைகளோடுதானே போராட்டத்திற்கும் புளொட்டிக்கும் வந்தது. நான் தனியா வந்திருந்தால் பரவாயில்லை. எங்க கிராமத்திலிருந்து என்னை நம்பி வந்த தோழர்கள், மற்ற எல்லாத் தோழர்களையும் நினைக்கும் போது அவர்களின்ற, என்னுடைய இளமை வாழ்க்கையை எதிர்காலத்தை விணாக்கி விட்டேனோ என்ற குற்ற உணர்வு வரும்.

அதே நேரம் புளொட்டின் அரசியல் கோட்பாட்டை, அதன் செயற் திட்ட வடிவங்களை இதுவரைக்கும் சிறந்ததாக்தான் கருதுகிறேன். நாங்கள் விட்ட தவறுகளினால், அதிகார ஆசைகளினால் இந்த கோட்பாடுகளை போராட்ட வடிவங்களை சிதைத்தோம் என்பது வேறு விடயம்… அது அனைத்து ஒடுக்குமுறைகளையும் பற்றிக் கதைக்குது, ஒரு வர்க்கப் போராட்டத்தைப் பற்றி கதைக்குது, தேச விடுதலை பற்றி… அது சாத்தியமா சாத்தியம் இல்லையா என்பது இன்று விவாதத்துக்கு உரியது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் அது முற்போக்கானதாக இருந்தது. இன்றும் கூட அது நடைமுறைக்கு சாத்தியமானது தான்.

இலங்கை தழுவிய வர்க்கப் போராட்ட சூழல் இல்லைதான். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு நம்பிக்கை தரக்கூடியது. அந்த அடிப்படையில் புளொட்டின் அடிப்படை அரசியல் என்பது வித்தியாசமானது. எல்லா இயக்கங்களின் அரசியலை விட வித்தியாசமானது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணியம் பற்றி பேசுகிறது. பல்வேறு விடயங்களை கதைக்குது. அதை நம்பி தானே நாங்கள் வந்தோம். அந்த தோல்வி என்பது பெரிய சிக்கல் தான்.

கடைசி நம்பிக்கையிழந்து நான் வெளியேறி அந்த காலகட்டத்தில்தான் செல்வியினுடைய பிரச்சினையும் வருது. அது பெரிய தாக்கம், கடும் மன உளைச்சல் இருந்தது. அதுல இருந்து மீண்டதற்கு நண்பர்களும் தோழர்களும் தான் காரணம். அடுத்தது நிறைய வாசிப்புகள் இருந்தது.

அடுத்தது அந்த நேரத்தில் நிறைய பயணங்கள். தோழர் திருநாவுக்கரசு குடவறைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருந்தவர். அவரோடு பல்வேறு இடங்களுக்கு போயிருக்கிறேன். ஓரளவு என்னுடைய மனதை திசை திருப்பக் கூடிய சூழல் இருந்தது. அடுத்தது வாசிப்பு. வாசிப்புதான் என்னை ஆற்றுப்படுத்தியது. இங்க வந்தும் அதுதான். இலக்கிய தொடர்புகள் அரசியல் தொடர்புகள் மீண்டும் தொடங்கிவிட்டது அந்த இடைவெளியை நிரப்பி விட்டது. அந்த இடைக்காலம் என்பது சிக்கலானது தான்.

தேசம்: இதுல வந்து உங்கட அந்த நீண்ட இடைவெளியில் நீண்ட காலம் திருமணம் செய்யாமல் இருந்தீர்கள். இந்த அரசியல் குழப்பங்கள் தனிப்பட்ட இந்த நிலைகளுக்கு பிற்பாடு எப்படி உங்களுக்கு அந்த புதிய வாழ்க்கை பயணத்தை தொடர்வதற்கான அந்த உத்வேகம் வந்தது எப்படி அதை ஆரம்பித்தீர்கள். அதைப் பற்றி சொல்லுங்கள்…

அசோக்: தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு நான் இங்கு வந்தேன். பிறகு அரசியல் வாழ்க்கை இலக்கிய வாழ்க்கை என்று இயல்பாகவே போய்க் கொண்டிருந்தது அதுக்குள்ள தான் இலக்கியச் சந்திப்பு, நண்பர்கள் வட்டம் மனித உரிமைச் செயற்பாடுகள். இங்குள்ள கட்சி சாரா இடதுசாரிகளோடு இணைந்து வேலை செய்தல் என காலம் போனது… அந்த காலகட்டத்தில் புலிகளுடைய மோசமான அதிகார ராஜ்யம் ஐரோப்பிய நாடுகளில் இருந்தது அதற்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபடுவது…

தேசம்: இதை நாங்கள் கொஞ்சம் பிறகு டீடெய்லா கதைப்பம். இப்ப உங்களுடைய புதிய தனிப்பட்ட வாழ்க்கை அப்ப நீங்கள் ஜெயந்தியை சந்திக்கிறீர்கள்… எப்ப இந்த புதிய உறவை நீங்கள் ஆரம்பிக்க கூடியதாக இருந்தது…

அசோக்: நான் தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு இங்கு வாரேன். ஜெயந்தியை நான் 2003ல் தான் சந்திக்கிறேன்.

தேசம்: பாரிசிலா?

அசோக்: பாரிசில் தான் சந்திக்கிறேன்.

தேசம்: அதற்கு முதல் தொடர்புகள் என்ன மாதிரி…

அசோக்: ஜெயந்தியோடு தொடர்புகள் இருக்கவில்லை. பாரிசில்தான் நாங்கள் முதல்முதல் சந்திக்கிறோம். அதற்கு முதல் வேறு திருமணங்கள் தொடர்பாக நண்பர்களுடைய முயற்சிகள் நிறைய நடந்தது. நான் விரும்பவில்லை. எங்களுடன் சார்ந்த குடும்ப உறவுகள் இருக்கக்கும்தானே. நிறைய திருமணத்துக்கான அழுத்தங்கள் இருந்தது.

தேசம்: 2003 என்றால் உங்களுக்கு எத்தனை வயது இருக்கும்…

அசோக்: எனக்கு 40, 45 வயது இருக்கும். அப்போ எனக்கு ஒரு நண்பர் இருந்தவர் ஆதவன் என்று கனடாவில் இருக்கிறார். புளொட் மாணவர் அமைப்பில் இருந்தவர். பிற்காலங்களில் மனித உரிமைகள் தொடர்பாக வேலை செய்தவர், அவர் ஜெயந்திக்கு மிக நெருக்கமான நண்பர். அவர்தான் ஜெயந்தி பற்றி சொன்னார்.

ஜெயந்தி ஆரம்பத்தில் பூரணி பெண்கள் அமைப்பில் வேலை செய்தவர். அங்கதான் செல்வி, சிவரமணி, ராஜினி திராணகம, சித்திரலேகா மௌனகுரு, வாசுகி ராஜசிங்கம் போன்றவங்களோட உறவு கிடைக்கிது.
அதற்குப் பிற்பாடு சூரியா பெண்கள் அமைப்பு மட்டக்களப்பில் வேலை செய்தவர்.

தேசம்: அப்போ செல்விக்கு முதலே ஜெயந்தியை தெரியும்.

அசோக்: ஓம் செல்வியும் ஜெயந்தியும் ஒன்றாக வேலை செய்தவர்கள்.

அப்போ ஆதவன் ஜெயந்தியை பற்றி சொல்லி, இப்ப ஜெயந்தி அயர்லாந்தில் கொலாஷிப்பில் படிக்கிறார். அவங்க ஜெர்மனிக்கு வந்துட்டு பிரான்சுக்கு வாறாங்க. என்னை சந்திக்கும்படி சொன்னார். பிரான்சில் ஜெயந்திக்கு உறவினர்களும் இருந்தாங்க. ஜெயந்தி இலக்கியங்களுடன் சம்பந்தப்பட்ட ஆர்வம் இருந்தபடியால் சூர்யா நூலகத்துக்கு சிறு சஞ்சிகைகள் இருக்குதானே அதைத் தேடும் ஆர்வம் ஜெயந்திக்கு இருந்தது.

அப்போ ஆதவன் சொல்லியிருக்கிறார் ஜெயந்தியிடம் இப்படி அசோக் என்று ஒருத்தர் இருக்கிறார் என்று. என்னைப் பற்றி ஜெயந்தி முதலே கேள்விப்பட்டிருக்கிறார். அப்போ அசோக்கை போய் சந்தி என்று சொல்லி எனக்கும் டெலிபோன் நம்பர் தந்தவர். அப்போ பிரான்சுக்கு வந்த ஜெயந்தியை நான் சந்தித்து கதைக்கிறேன்.

என்னுடைய சமூக ஆர்வம், இலக்கிய ஆர்வம் முழுக்க ஜெயந்தியிடம் இருந்தது. அப்போ எங்களுடைய உரையாடல்கள் எல்லாம் அரசியல் சமூகம் இலக்கியம் என்று போயிட்டு இருந்தது.

அப்போ ஆதவன் சொன்னார் நீ ஜெயந்தியை திருமணம் செய்வது பற்றி யோசி. நான் ஜெயந்தியோடு கதைக்கிறன் என்று. எங்க திருமணத்துக்கு முழுக் காரணமும் ஆதவன் தான். ஆதவனை நானும் ஜெயந்தியும் மறக்க முடியாது. ஆதவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

தேசம்: ஜெயந்தியும் 90களில் இந்த பெண்ணியம் தொடர்பான கருத்துக்கள் அந்த செயற்பாடுகளில் ஈடுபட தொடங்கி விட்டாரா?

அசோக்: ஓம். இலக்கியம், பெண்ணியம், மனித உரிமைகள் தொடர்பான ஈடுபாடு எல்லாம் இருந்தது. அவர் உண்மையில் ஒரு கள செயற்பாட்டாளர். பெண்கள் மத்தியில் களப்பணி செய்வதுதான் அவரின் பிரதான நோக்கமாக இருந்தது.

தேசம்: ஆனால் அந்தக் காலகட்டத்தில் உண்மையாக பெண்கள் அந்த வயசுல ஈடுபடுவது என்பது குறைவு…

அசோக்: ஓம். அடுத்தது புலிகளுடைய மிக நெருக்கடியான காலகட்டம் தானே. அப்போ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வது தொடர்பாகத்தான் உடுவில் பெண்கள் இல்லம் உருவாக்கப்பட்டது. ஜெயந்தி அதில்தான் முதல்முதல் வேலை செய்கிறாங்க.

அடுத்தது நாங்கள் எங்களுக்கு வார துணைவி, எங்களுடைய உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணப்பாடு இருக்கும்தானே. அடுத்தது இன்னும் ஒரு பக்கத்தில் அவர் செல்வியினுடைய நெருங்கிய சினேகிதியாக இருந்தபடியால் என்னை பற்றிய முழு பின்புலமும் தெரிந்திருக்கும். என்னுடைய பலம் பலவீனம் எல்லாம் தெரிந்தவராக இருந்தார். என்னுடைய குளறுபடிகள் ஆதவனுக்கு தெரியும். ஆதவன் எல்லாம் சொல்லி இருப்பார்தானே…

தேசம்: இந்த உறவு ஏற்பட்டதற்கு பிற்பாடு 2003இலேயே திருமணம் ஆகிவிட்டதா…

அசோக்: இல்லை.. இங்க பாரிசில் சந்தித்த பின் அயர்லாந்து போயிட்டாங்க. பிறகு என்னை திருமணம் செய்வதற்காக பிரான்ஸ் வந்து என்னை ரெஜிஸ்ட்ரேஷன் செய்திட்டு திரும்ப இலங்கைக்கு போயிட்டாங்க. பிறகு நான் உத்தியோகபூர்வமாக திரும்ப அழைக்கிறேன்.

தேசம்: நான் நினைக்கிறேன் பிற்காலத்தில் சூர்யா பெண்கள் அமைப்போடு தான் அவர் ஈடுபட்டிருந்தார் என்று.

அசோக்: சூரியா பெண்கள் அமைப்பில் தான் அவங்க மட்டக்களப்பில் வேலை செய்து கொண்டிருந்தங்க. அவங்களுக்கு மனித உரிமைகள் பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் ஆர்வம் இருந்ததால குறிப்பிட்டு ஒரு அமைப்போடு மாத்திரமல்ல வெவ்வேறு சிறு குழுக்கள் சார்ந்தும் வேலை செய்தார். மட்டக்களப்பில் இயங்கிக் கொண்டிருந்த அகிம்சைப் பணிக்குழு, இது அமரா அவங்களின்ற நண்பர்கள் சேர்ந்து சுயாதீனமாக இயங்கிய அமைப்பு. இவங்க நிறையவேலை செய்திருக்காங்க. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் தாய்மார்கள் மத்தியில் நிறைய வேலைகள் செய்திருக்காங்க.

தேசம்: பிற்காலத்தில் தன்னுடைய கல்வியிலும் நிறைய நாட்டம் கொண்டிருந்தவா என்று நினைக்கிறேன்.

அசோக்: ஓம். அயர்லாந்தில் படிப்பை முடித்துவிட்டு திரும்பி மட்டக்களப்பிற்கு போய் வேலை செய்தாங்க. மட்டக்களப்பில் இருந்தபோது அமரா என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர். மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் மத்தியில் களப்பணி செய்து கொண்டிருந்தாங்க. தாங்களாக சிறுகுழுவாக இயங்கிக் கொண்டிருந்தாங்க. அவங்க சிங்கள சமூகத்தை சேர்ந்தவர். ஒருபக்கம் இலங்கை அரசு, மறுபக்கம் புலிகள். மிக மோசமான சூழ்நிலையில் துணிந்து நின்று மட்டக்களப்பில் அவங்க அமரா வேலை செய்தாங்க. அவங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடி. புலிகளால் நெருக்கடி… இலங்கை அரசாங்கத்தால் நெருக்கடி…

தேசம்: அவருடைய கணவர் தான் சொர்ணலிங்கம்…

அசோக்: ஓம். அவரும் ஒரு சமூக செயற்பாட்டாளர்.

தேசம்: நான் நினைக்கிறேன் சூரியா அமைப்பில் அவர்கள் வேலை செய்கின்ற நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக… அந்த நேரம் மட்டக்களப்பில் அது பெரிய பிரச்சனை. அடிக்கடி கைதுகள் இடம்பெறும். அவர்களைப் பார்க்க இயலாத நிலைமை அந்த நேரத்தில் எல்லாம் இவர்களுடைய ஒத்துழைப்பு நிறைய இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அவர்களோடு வேலை செய்தார்களா?

அசோக்: இல்லை திருமணத்துக்குப் பிறகு இங்கேயே வந்திட்டா. அந்த உறவுகள் இருந்தது. இலங்கைக்கு போகும்போது அங்க நட்புக்களை உறவுகளை எல்லாம் சந்திப்பா. அமரா அவங்களோடு சேர்ந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுடன் வேலை செய்வது… மனித உரிமை விடயங்களில் ஈடுபடுவது…

தேசம்: உங்களுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் மிக உடைந்த நிலையில் தான் இருந்தீர்கள். இப்ப எப்படி பார்க்கிறீர்கள் 18 ஆண்டுகள் கடந்து…

அசோக்: என்னோடு வாழ்வது என்பதே அது ஒரு துணிச்சல் தானே ..! ஜெயந்தி வந்ததற்குப் பிறகுதான் நிறைய மாற்றங்கள் என்னிடம். நிறைய கற்றிருக்கிறேன் ஜெயந்தியிடமிருந்து. அடுத்தது ஜெயந்தியிடம் பொறுமை கூட. முரண்பாடுகளை எப்படி கையாளுவது என்று ஜெயந்தியிடம் தான் நான் கற்றேன்.

தேசம்: புலம்பெயர்ந்த தேசத்தில் உங்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய முரண்பாடுகள் இருந்தது. அந்த முரண்பாடுகளுக்குள் அவங்க வரேல பெரும்பாலும்.

அசோக்: ஜெயந்தி அதிலே தெளிவாக இருந்தாங்க. வந்த ஆரம்பத்தில் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. இங்கு புகலிட சூழலில் பிரயோசனமான வேலைகளில் ஈடுபடலாம் என்று. எங்களுடைய புகலிட சண்டைகளையும், முரண்பாடுகளையும், குழிபறிப்புக்களையும் பார்த்து பயந்து போயிற்றா. அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டா. ஜெயந்திக்கு ஆவணப்படுத்தலில் ஆர்வம் இருக்கு. பல விடயங்களை செய்து கொண்டிருக்கிறா.

புகலிட அரசியல் இலக்கிய செயற்பாடுகள் என்பது மக்களுக்கானது இல்லைத்தானே. அது எங்களின்ற அடையாள இருத்தலுக்கான ஒரு உத்திதானே . எனக்கு நிறைய விமர்சனங்களை வைத்திருக்காங்க. எங்களுடைய புகலிட அரசியல் இலக்கிய முரண்பாடு ஆரோக்கியமில்லாத முரண்பாடு. அதைப்பற்றி பிறகு கதைக்கலாம். நீண்ட நேரம் கதைக்க வேண்டும் அதை. என்னுடைய திசை வழியை மாற்றியதில் ஜெயந்திக்கு நிறைய பங்கு இருக்கு. ஒரு தோழியாக, சினேகிதியாக …

தேசம்: உங்களோடு ஏற்கனவே தொடர்பில் இருந்த நண்பர்கள் வரக்கூடியதாக இருக்கு தங்கக்கூடியதாக இருக்கு. அதுகளில் எல்லாம் நான் நினைக்கிறேன் நல்ல தோழியாகவும் அரசியல் துணையாக கூட இருக்கிறா…

அசோக்: எங்களுக்கு நண்பர்கள் தோழர்களின் வருகையைப் போல் சந்தோசம் தருவது வேறு எதுவும் இல்லை. செல்வியினுடைய சினேகிதங்கள் முழு பேரும் ஜெயந்திக்கும் சினேகிதங்கள் அந்தப் பழைய வட்டம் அப்படியே இரண்டு பேருக்கும் உறவாக இருக்கு. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் செல்வியினுடைய சினேகிதங்கள் எனக்கும் உறவு ஜெயந்திக்கும் உறவு. அது எங்களுக்கு ஒரு பெரிய ஆரோக்கியமாக இருந்தது. ஜெயந்திக்கு ஒரு நண்பர் வட்டம், எனக்கு ஒரு நண்பர் வட்டம் இருக்கு. இந்த நட்புக்களும் உறவுகளும்தான் எங்களுக்கு பலம். எங்களை காப்பாத்தினது. ஏனென்றால் நாங்கள் எங்களுடைய வட்டத்தை மீறி வேறு மட்டங்களுடன் பழக முடியாது. அவர்களுடைய வாழ்க்கையும் சிந்தனையும் போக்கும் வித்தியாசம். அப்போ எங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு குடும்ப வாழ்க்கையில் இந்த நட்புக்களின் துணையும் உதவ வேண்டும். அந்தவிதத்தில் ஜெயந்தியின் துணை என்பது பெரியது. இல்லாவிட்டால் நான் சாமியார் ஆகியிருப்பேன்…

தேசம்: உண்மையிலேயே நீங்கள் வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டேன் என்ற நிலையில் இருந்தீர்கள். இப்ப வாழ்க்கை ஓரளவு பூரணப்படுத்தப்பட்டிருக்கு…

அசோக்: பூரணம் என்பது… பொருளாதார ரீதியாக…

தேசம்: அதைப்பற்றி நான் கேட்கவில்லை. உணர்வு ரீதியாக…

அசோக்: எங்களுக்கு சந்தோஷமான ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு. பரஸ்பரம் புரிந்துணர்வு இருந்தாலே அது சந்தோசமான வாழ்க்கையாகத்தான் இருக்கும். மகிழ்ச்சியான குடும்பவாழ்விற்கு, ஜனநாயகப் பண்புகளும், சமத்துவ உணர்வுகளும் அவசியம். இது இருந்தாலே வாழ்க்கை சந்தோசம்தான். அடுத்தது ஒவ்வொருவரின் தனித்துவங்களை அங்கிகரிக்க, மதிக்க பழகணும். இவை பற்றி விமர்சனங்கள் இருந்தால் ஆரோக்கியமாக வைக்கணும். இது குடும்ப வாழ்க்கைக்கு மாத்திரம் அல்ல அரசியல் சமூக வாழ்க்கைக்கும் முக்கியம். இந்தப் பார்வை எங்களிடம் இருக்கு.

மற்றது நாங்க வேலை செய்கிறம். அந்த வருமானத்தில் நேர்மையாக வாழ்கிறம். எந்த பெரிய பொருளாதார எதிர்பார்ப்புக்களும் எங்களிட்ட இல்லை. வசதிகளை எங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கிக் கொள்றம். எங்களுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட வறிய மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று. ஜெயந்திக்கு நிறைய இருக்கு. அவருடைய நண்பர்கள் சேர்ந்து பல பேரை படிப்பிக்குறனாங்க. கஷ்டப்படுற மக்களுக்கு உதவி செய்வோம். பாதிக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களுக்கு கூட நாங்க உதவி செய்திருகிறக்கிறம். எங்களைப் பொறுத்தவரை துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அதுதான் முக்கியம்.

பாகம் 30: செல்வியை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வெளிநாட்டுப் பயணம்! நான் ஒன்றும் தூய்மைவாதி கிடையாது!! பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும்!!!

(ஞானம் – எம் ஆர் ஸ்டாலின்

ஆலோசகர் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்)

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 30 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

தேசம்: தோழர், செல்வி கடத்தப்பட்டது பற்றி அந்த காலத்தில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விபரம் உங்களுக்கு தெரியாது. நீங்கள் ஒரு வாழ்க்கையை செல்வியோடு சேர்ந்து அமைப்பதற்கு திட்டமிட்டு இருந்தீர்கள். அதேநேரம் உங்களுக்கு பொருளாதார வளம் தேட வேண்டுமென்ற ஆர்வம் எதுவுமே அந்த நேரம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான சூழலில் நீங்கள் எப்படி வெளிநாட்டுக்கு பயணமாவது என்ற முடிவுக்கு அல்லது தெரிவுக்கு வந்தீர்கள்? பொதுவாக வெளிநாட்டுக்கு வாற எல்லோருக்கும் பொருள் தேட வேண்டும் என்பதுதான் பிரதான காரணமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். செல்வி கடத்தப்பட்டிருக்கிற அந்த சூழலில் வெளிநாட்டுக்கு வாறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்.

அசோக்: உண்மையில் வெளிநாட்டிக்குவரும் எண்ணம் எப்போதும் என்னிடம் இருந்ததில்ல. அந்த நேரம் இந்தியா எனக்கு பாதுகாப்பான இடமாக இருந்தது. நிறைய தோழர்கள் இருந்தபடியால் எனக்கு ஆரோக்கியமாக என்னுடைய மனநிலைக்கு ஏற்ற உரையாடலுக்கான நட்புக்கான இடமாக இருந்தது. வெளிநாட்டுக்கு வாற ஐடியாவே இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்று கேட்டால், நான் இந்தியாவிலிருந்து கொண்டு தங்களுக்கு எதிராக வேலை செய்கின்றேன் என்ற சந்தேகம் புலிகளுக்கு இருப்பதாகவும் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிக்கு சென்றால் செல்வியை விடுவிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் புலிகள் பக்கத்திலிருந்து சந்தேகம் வந்ததாக எனக்கு செல்வியின் வீட்டில் இருந்தும், சில நண்பர்களும் சொன்னார்கள். நான் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு போனால் செல்வியை புலிகள் விடுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்கள்.

இந்த நேரத்தில் தீம்தரிகிட ஞாநி அவங்க செல்வியின் கைது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்திருந்தார். இந்த செய்தியை கேட்டதற்குப் பிறகு நானும் தோழர் திருநாவுக்கரசும் ஞாநி அவங்களிடம் சென்று நிலமையை சொல்லி அந்தக் கட்டுரை வேண்டாம் என்று சொன்னோம். நாங்கள் பார்த்தோம், அந்த கட்டுரை வெளி வந்தால், கட்டுரை புலிகள் பக்கத்தில் கோபத்தை உண்டு பண்ணும் என்று. ஆனால் நான் வெளிநாட்டுக்கு போற ஐடியாவை யோசிக்கவில்லை. ஏனென்றால் அப்படி கொஞ்சமாவது எண்ணம் எனக்கு இருந்திருந்தால் யோசித்திருக்கலாம். அப்படி ஒரு எண்ணமே என்னிடம் இருக்கவில்லை. அப்போ திரும்பத் திரும்ப அழுத்தம் வந்துச்சு போனால் விடுவார்கள் என்று. அப்போ உருத்திரனுக்கும் இந்த செய்தி தெரியும். திடீரென்று உருத்திரன் சொல்லிட்டு ஒரு வாரத்துக்குள்ள கிளம்பு போகலாம் என்று. எங்க என்று கேட்க பிரான்சுக்கு போ என்று சொல்லி.

தேசம்: அந்த நேரம் நீங்கள் திருச்சியில் இருக்கிறீர்கள்?

அசோக்: திருச்சியில் தோட்டம் போட்டு கொண்டு இருக்கிறோம். உருத்திரன் சொல்லிட்டுது உடனே மெட்ராஸ் வா என்று. நான் என் நிலைமையை சொன்னேன். இல்லை இல்லை நீ மெட்ராஸ் வா கதைக்கலாம் என்று. நான் மெட்ராஸ் வந்த உடனே…. அதுக்கு முதல் ஒரு சம்பவம் நடந்தது கனடாவிருந்த தோழர் தீபநேசன் வெளிநாட்டிக்கு என்னை வரும்படிகூறி எனக்கு பணம் அனுப்பி இருந்தார். நான் வரமுடியாது என்று சொல்லி ஈஸ்வரனை அந்தப் பணத்தை கொடுத்து உருத்திரன் ஊடாக சுவிஸ் அனுப்பி வைத்துவிட்டேன்.. வெளிநாடு வரும் நோக்கமே இருக்கவில்லை எனக்கு. அப்போ உருத்திரன் சொல்லிச்சு ஈஸ்வரன் அங்கிருந்து சொல்லிக்கொண்டு இருக்கு உன்னை அனுப்பி வைக்க சொல்லி. நீ போனால் சிலநேரம் செல்வியை விட்டுவிடுவதற்கான சாத்தியங்கள் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள போக வேண்டும் ஆயத்தமாகு என்றுசொல்லி. அந்த மனநிலையே எனக்கு இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

மெட்ராஸ் வந்து ஒரு வாரத்திக்குள்ளே டெல்லி வந்து ஜேர்மன் வந்துட்டேன். ஜேர்மனிக்கு வந்த பிறகுதான் நான் தோழர்களுக்கு அறிவித்தேன் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவங்களுக்கு நான் முதலில் சொல்லல. அப்போ தோழர் எஸ்.வி. இராஜதுரை அவங்களோடு நெருங்கிய அரசியல் உறவு இருந்தது. எங்களுக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர். அவர் ஈழத் தமிழர்களுடைய அரசியல் வளர்ச்சிக்கு அவருடைய புத்தகங்கள் எழுத்துக்கள் மிக உதவியாக இருந்தது. அவரும் நானும் அசோக் நகரில் மூவேந்தர் கொலனி என்று ஒன்று இருந்தது. அங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்தனாங்கள். நான் கீழ் வீட்டில் இருந்தன். அவர் மேல் வீட்டில் இருந்தவர். அப்ப நாங்க அடிக்கடி கதைத்துக்கொள்ளுவோம். அவரிட்ட தான் டெலிபோன் இருந்தது. நான் இங்கே வெளிநாட்டுக்கு வந்துட்டு அவருக்குத்தான் முதலில் சொன்னேன்.

அங்கிள் நான் ஜேர்மனிக்கு வந்து விட்டேன் என்று. அவருக்கு ஆச்சரியம். ஒரு வாரத்திற்கு முதல் அவரும் நானும் சந்தித்து கதைக்கிறம். பிறகு அவரிடம் சொல்லித்தான் இரா பத்மநாதன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ரேடியோ சிலோனில் தயாரிப்பாளராக இருந்தவர்.

தேசம்: ரேடியோ மாமா என்று சொல்லுவது…

அசோக்: ஓம். அவருக்கு நீண்ட வரலாறு ஒன்று இருக்கு. மட்டக்களப்பின் ஆரம்ப கால அரசியல் இலக்கிய ஆளுமைகள். அந்த நேரம் கேள்விப்பட்டிருப்பீர்கள் வீரகேசரி செட்டியார் என்று. அந்தக் காலத்தில் அவரோடு உலகப் பயணம் போய் வீரகேசரியில் பயணக்கட்டுரை எழுதினவர். சுதந்திரன் பத்திரிகையில் எஸ் டி சிவநாயகம் ஆசிரியராக இருக்கும் போது, இவர் துணை ஆசிரியராக இருந்தவர். அவர் ரேடியோ சிலோனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது இனக்கலவரத்தால பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மெட்ராஸ்சில் தங்கி இருந்தாங்க. என் கிராமத்தை பற்றி முன்னர் கதைத்த போது இவங்களைப் பற்றி கதைத்திருக்கிறன். அவர் மகன் காண்டிபனோடு அங்க தங்கி இருந்தார். காண்டீபன் படித்துக் கொண்டிருந்தவர். அவங்களோட நான் விடுமுறை நாட்களில் வந்து நிற்பேன். இயக்கத்தை விட்டதற்குப் பிறகு அங்கேயும் தங்கியிருந்தன். தமிழ்நாட்டில் வாழ்ந்த எங்களைப் போன்ற கஷ்டப்பட்ட பல தோழர்களுக்கு அவரும் மகன் காண்டீபனும் நிறைய உதவி செய்திருக்காங்க. அந்த நேரத்தில் அவங்களுக்கும் கஷ்டம். இருந்தாலும் நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாது.

தேசம்: அவர் உங்களுடைய உறவினரும் கூட என?

அசோக்: அத்தான். பெரியம்மாட மகளை திருமணம் முடித்தவர். நாங்கள் திருச்சிக்கு வரும்வரைக்கும் அங்க தான் இருந்தது. எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம் அதிர்ச்சி எப்படி திடீரென்று போனது என்று. வந்ததற்கு பிறகு செல்வியை விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு விடுவார்கள் நாளைக்கு விடுவார்கள் என்று அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. இப்ப முப்பது வருஷமா போயிட்டுது நீங்கள் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் கனவாகி போய் விட்டது.

தேசம்: பிறகு ஜெர்மனியில் இருந்து எப்படி பிரான்சுக்கு வந்தனீங்க?

அசோக்: ஜெர்மனியில் நான் முகாமில் தான் இருந்தன். அங்கயே நான் இருந்திருக்கலாம். எனக்கு ஜெர்மனியை விட பிரான்ஸ் பிடித்திருந்தது. பிரான்சினுடைய புரட்சி, அரசியல் களம் எனக்கு உவப்பானதாக இருந்தது. அப்போ பிரான்சுக்கு வந்த எனக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்தேன்.

தேசம்: ஆரோக்கியமாக இருந்ததா…

அசோக்: நான் குறிப்பிட்ட காலம் தானே இருக்கப் போறேன். செல்வி விடுவிக்கப்பட்டதும் திரும்பத்தானே எண்ணி இருந்தன். அப்போ பிரான்ஸில் இருந்துட்டு போகலாம் என்றுதான் வந்தேன். இங்கே வந்ததற்கு பிற்பாடு இங்கே என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. இப்படி இங்கேயே இருப்பன் என்று நினைத்திருக்கவே இல்லை. நான் போற ஐடியாவிலதான் இருந்தன். கேஸ் போடுற ஐடியாவில இருக்கவில்லை. தோழர்கள் சொன்னார்கள் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும்படி. கிடைச்சா பிறகு இந்தியாவுக்கு போய் வாறது லேசாக இருக்கும் தானே என்று.

இந்த அகதி தஞ்சம் கோரும் வழக்கு தொடர்பாக முறைமைகள் தெரியாது எனக்கு. அப்பதான் சபாலிங்கம் தோழரை தொடர்பு கொள்கிறேன். அப்போ நான் பிரான்சுக்கு வந்ததும் யாருடைய தொடர்பும் இல்லை. என் கிராமத்து புளொட் தோழர்கள் இங்க இருந்தவர்கள் அவங்களோடு தான் நான் இருந்தேன். ஞானம் எம். ஆர். ஸ்டாலின், தயா, நல்லிஸ் என்று சொல்லி தோழர்கள் எல்லாம் இங்கே இருந்தவர்கள். ஞானம் எல்லாம் நிறைய உதவி செய்தாங்க. காலப்போக்கில் அரசியல் முரண்பாடுகள் வந்துவிட்டது என்பது வேறு விசியம். தனிப்பட்ட வகையில் ஞானத்தின் உதவிகளை மறக்கக் கூடாது. அவங்க தான் எல்லா உதவியும் செய்தார்கள். சாப்பாடு எல்லாம். ஒரு மாதத்துக்கு எதுவுமே செய்ய இயலாது. அப்போ எல்லா உதவியும் அவங்கதான் செய்தார்கள்.

அப்போ சேரன் கனடாவிலிருந்து எனக்கு சொன்னார். தன்ர ஃப்ரெண்ட் சபாலிங்கம் என்று, அவர் அகதி வழக்கு போன்ற விடயங்களில் அக்கறையாக இருக்கிறவர். அவரை போய் சந்தி என்று சொல்லி. அப்பதான் சபாலிங்கத்தோட உறவு வருது. சபாலிங்கத்தோடு பேசிட்டு இருக்கும்போது எனக்கு தெரிஞ்சது சபாலிங்கம் எழுதுவதைவிட நான் என் அகதிக் கோரிக்கையை எழுதினால் நல்லாயிருக்கும் என்று சொல்லி நானே எழுதினேன். பிறகு அந்த வழக்கு அகதிகள் காரியாலயத்திற்கு போய் பிறகு என்னுடைய அகதி கோரிக்கை ஏற்கப்பட்டது.

அப்ப செல்வியிட விடுதலைக்காக இங்கே வந்ததற்குப் பிறகு புலிகளுடைய அமைப்போடு தொடர்பில் இருந்த புளொட் தோழர் ஒருவர். இங்க ராஜ் என்று இருந்தவர். அவர் போய் திலகரோட எல்லாம் கதைத்து திலகர் என்னை ஆபிசுக்கு கூப்பிட்டவங்க. நான் ஆபிஸ் போகவில்லை. பிறகு தொடர்பாளர் என்று சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்கள். அவரிட்ட நான் இந்த பிரச்சினை எல்லாம் கதைத்தேன் அவர் தங்களுக்கு தெரியாது என்று சொல்லி தாங்கள் கட்டாயம் தலைமையோடு வன்னிக்கு கதைக்கிறம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உண்மையிலேயே நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிறகு எனக்கு விளங்கிவிட்டது. அவங்க சும்மாதான் என்னோட கதைத்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று. பிறகு எதுவும் நடக்கல.

தேசம்: இப்ப இதுல இந்தியாவில் இருந்த போது அரசியல் செயற்பாடுகளில் நிறைய ஈடுபட்டு இருக்கிறீர்கள். இந்த அரசியல் இலக்கிய உரையாடல்கள் அறிமுகம் நட்பு இதுவெல்லாம் எப்பவுமே இரண்டு பக்கத்துக்கு உரியது விவாதமும் … அதுகளைப் பற்றி சொல்லுங்கள் உங்களுக்கு அ.மாக்ஸோடையும் தொடர்பு இருந்தது என்று நினைக்கிறேன்.

அசோக்: அ. மாக்ஸோடையும் புளொட்டில் இருக்கும் போது தொடர்பு வந்தது. அது நெருக்கமான உறவு இல்லை. அக்காலங்களில் அவரின் அரசியல்கருத்துக்களில் நிறைய உடன்பாடுகள் எனக்கு இருந்தது. காலப்போக்கில் அவரின் அரசியல் நிறைய மாற்றம் அடைய தொடங்கியது. மார்ச்சியத்தை விமர்சனத்தோடு பார்க்காமல் அதை நிராகரிக்கின்ற நிலைக்கு அவர் வந்திட்டார். பின் நவினத்துவம் என்ற கருத்தாக்கத்தை தமிழ்நாட்டில் பிழையாக விளங்கிக் கொண்டவர்களில் அ.மாக்சும் ஒருவர். அதை பெருங்கதையாடல் என்று சொல்லி எல்லாம் நிறப்பிரிகை என்ற சஞ்சிகையில் எழுதினார். இப்படி நிறைய கட்டுரைகள். காலப்போக்கில் அது ஆரோக்கியமான முரண்பாடாக தொடங்கி ஒரு காலகட்டத்துல அவருக்கும் எனக்குமான உறவு கொஞ்சம் விரிசல் கண்டுவிட்டது. ஆனால் அவருடைய புத்தகங்கள் எங்களை பக்குவப்படுத்தி இருக்கு. ஆரம்ப காலத்தில்.

தேசம்: வரலாறு என்பது அப்படித்தானே தத்துவ மேதைகள் எடுத்துக்கொண்டாலும் தத்துவ மேதைகளின் மாணவர்கள் அவர்களுக்கு முரணாக போவது ஒரு இயல்பான வளர்ச்சி தானே.

அசோக்: அவருக்கு ஐரோப்பாவில் கிடைத்த புதிய நண்பர்கள் மிக மோசமான நபர்களாக எனக்குத் தெரிந்தார்கள். அவர்கள் கொள்கையிலும் கோட்பாட்டிலும் எவ்வித அக்கறையுமற்று தனிமனித நடத்தையிலும் மிக மோசமான நபர்களாக இருந்தபடியால் மாக்ஸோடு எனக்கு இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டேன்.

எஸ் வி ராஜதுரை தோழருடன் நிறைய தொடர்பிருந்தது. இங்க வந்து சந்திச்சவர். காலப்போக்கில் அவருடன் சினேக முரண்பாடு இருந்ததேயொழிய அவரோடு உறவு இருந்தது. இந்திய இராணுவத்தை புலிகள் எதிர்த்ததால புலிகள் தொடர்பாக அவரிடம் ஆதரவு நிலைப்பாடு இருந்தது.

தேசம்: உங்களைப் பற்றின விமர்சனங்களில் ஒன்று நீங்கள் கடுமையான தூய்மைவாதம் பேசுவது என்று. என்னிடமும் அந்த விமர்சனம் இருக்கு நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்…

அசோக்: பல்வேறு நண்பர்கள் மத்தியில் இந்த விமர்சனம் குற்றச்சாட்டு இருக்கு. எனக்குதெரியும்.

தேசம்: மற்றது நீங்க சமூக இயக்கங்களில் வேலை செய்யும்போது பல்வேறுபட்ட நபர்களை சந்திப்பீர்கள். எல்லாரும் நூறு வீதம் சரியாக இருப்பார்கள் என்று இல்லைதானே. நானும் நூறுவீதம் சரி என்று இல்லை நீங்களும் நூறுவீதம் சரி என்று இல்லை.

அசோக்: நானும் அப்படி இல்லை. நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்றால் நாங்கள் பேசுகின்ற எழுதுகின்ற கோட்பாட்டுக்கும் வார்த்தைகளுக்கும் குறைந்தது 50 வீதமாவது வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். யார்தான் வாழ்க்கையில் தவறுவிடாதவர்கள். என் வாழ்வே எனக்கு விமர்சனத்திற்கு உரியது. ஆனா கடந்த காலங்களில் விட்ட அதே தவறுகளையும் பிழைகளையும் தொடர்ந்து செய்ய முடியாதுதானே.

என் வாழ்க்கை வேறு, கோட்பாடு வேறு, எழுத்து வேறு என்றால் நான் ஊரிலேயே சந்தோஷமாக இருந்து இருக்க முடியும். அரசியல், ச மூகம், போராட்டம் என்று வந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
நான் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்டால் குறைந்தபட்சம் நாங்க பேசுகின்ற வார்த்தைகளுக்கு, எழுதுகின்ற வார்த்தைகளுக்கு, நம்புகின்ற கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று. அப்ப நண்பர்களும் தோழர்களும் தவறிழைக்கும்போது அந்த முரண்பாடுகள் வரும். நண்பர்கள் தோழர்களோடு நான் கொள்ளும் அரசியல் முரண்பாடுகளை பகை முரண்படாக்க நான் எப்போதும் விரும்புவதில்லை. ஆனால் சிலர் பகை முரண்பாடாக கையாண்டு எனக்கெதிரான மிகமோசமான செயல்களையெல்லாம் செய்திருக்காங்க. நான் அவங்களையெல்லாம் எதிரிகளாக நினைத்துப்பார்த்தது கூட கிடையாது.

நான் இவர்களைப்போல் வாழ நினைத்திருந்தால் இவர்களைப் போல் நிறைய சமரசம், பிழையாக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சின்னச்சின்ன சமரசம், செய்தாலே போதும். இதை நண்பர்கள் செய்யும் போது விமர்சனம் எனக்கு வருகின்றது. இதை தூய்மைவாதம் என்று சொல்ல முடியாது. ஆனால் நண்பர்கள் கடும் விமர்சனங்களை எனக்கு வைத்திருக்கிறார்கள். அதை ஆரோக்கியமாகத்தான் எடுத்து இருக்கிறேன். நிறைய திருந்தி இருக்கிறேன். நான் ஆரம்ப காலத்தில் நிறைய நண்பர்களுடன் நான் முரண்படுவேன். இப்ப ஓரளவு குறைவு. முரண்படுவதில் இருந்து ஒதுங்கி விடுவேன். உண்மையிலேயே எனக்கு கோபம் வாரது ஏனென்றால் அரசியல் தவறுகளை மன்னிக்கலாம். அரசியல் தவறுகள் எமது அரசியல் தெளிவற்ற தன்மை, புரிதல் அற்ற நிலைகளில் ஏற்படக்கூடியது. ஆனா சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட நலன்களுக்காக பிழைப்புக்காக அயோக்கித்தனங்களை செய்து கொண்டு மறுபுறம் அரசியல் செய்யும் நபர்களை காணும் போது கோபம் வராமல் என்ன செய்யும்.

தேசம்: முரண்படுவது பிரச்சினை இல்லை பகையாக மாறாமல் இருந்தால் சரி…

அசோக்: நான் எந்த பகைவரோடும் உரையாட தயாராக இருப்பேன். மிக மோசமான புலிகளோடும் உரையாடல் இருந்திருக்கு. உரையாடலுக்கு நான் எப்போதும் தடை விதித்தது இல்லை. அனால் உரையாடலில் நிகழும் தருணத்தில் அந்த உரையாடலுக்கு நேர்மையோடும் உண்மையோடும் நாம் இருக்க வேண்டும்.

தேசம்நெற் பதிவை நீக்கக்கோரிய விண்ணப்பத்தை பிரித்தானிய நீதிமன்றம் நிராகரித்தது!

அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் ஆகியோர் கூட்டாக தம்பிராஜா ஜெயபாலன் உட்பட ஒன்பது பேருக்கு எதிராக கொண்டுவர முற்பட்ட இடைக்காலத் தடையை வில்சன் கவுன்ரி கோட் நிராகரித்துள்ளது. மாவட்ட நீதிபதி கன்வர் முன்நிலையில் அபிராமி கணேசலிங்கம் தன்பக்கத்து வாதத்தை வைத்து தடையுத்தரவைக் கோரி இருந்தார். இந்த விண்ணப்பத்தில் அபிராமி கணேசலிங்கம் முதலாவது வாதியாகவும் ராகுலன் லோகநாதன் இரண்டாம் வாதியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தனது விண்ணப்பத்தை முன்வைத்து அபிராமி கணேசலிங்கம் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கையில் தானும் தனது குடும்பமும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டதாக ஒன்லைன் வெளியீடு ஒன்றில் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதனால் தனது குடும்பத்தினர் பயமுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், பிரதிவாதிகள் தங்களுடைய நன்மதிப்பை பாதிக்கும் வகையில் இவ்விணையத்தளத்தில் கருத்துக்களை எழுதியதாகவும், அதனால் அப்பதிவை நீக்குவதற்கான இடைக்காலத்தடையுத்தரவை அவர் கோரியிருந்ததாக அந்த விண்ணப்பத்தை நிராகரித்து வழங்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இடைக்காலத்தடையுத்தரவைக் கோரிய விண்ணப்பதாரிகளான அபிராமி கணேசலிங்கம், ராகுலன் லோகநாதன் பற்றிய தம்பிராஜா ஜெயபாலனால் எழுதப்பட்ட செய்தியொன்று தேசம்நெற்றில் பெப்ரவரி 15 அன்று வெளியிடப்பட்டு இருந்தது. வாதிகளில் ஒருவரான ராகுலன் லோகநாதன் இயக்குநராக இருந்த ரெய்டன் (Raidenn Ltd) என்ற நிறுவனம் பற்றியும் அதன் வாடிக்கையாளர்கள் பற்றியும் அச்செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளால் தாங்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அச்செய்தியின் கீழ் அபிராமி கணேசலிங்கம் ராகுலன் லோகநாதன் ஆகியோருக்கு சார்பாகவும் எதிராகவும் கருத்தக்கள் வெளியிடப்பட்டு இருந்தது.

மேலும் அச்செய்தியில் ராகுலன் லோகநாதன் இச்செய்தி தொடர்பாக தம்பிராஜா ஜெயபாலனோடு தொடர்புகொள்வார் என்று அபிராமி கணேசலிங்கம் தம்பிராஜா ஜெயபாலனுக்கு உறுதியளித்து இருந்தார் என்றும் ஆனால் பல வாரங்களாகியும் பல்வேறு வகையில் முயற்சித்தும் ராகுலன் லோகநாதன் தொடர்பு கொள்ளவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டிக்காட்டி இருந்தது.

இதன் பின்னணியிலேயே அபிராமி கணேசலிங்கன் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோர் வில்சன் கவுன்ரி கோர்ட்டில் இச்செய்திக்கு எதிராகத் தடையுத்தரவைக் கோரியிருந்தனர். பெப்ரவரி 17இல் நீதிபதி கன்வர் அபிராமி கணேசலிங்கம் மற்றும் ராகுலன் லோகநாதன் ஆகியோரின் விண்ணப்பம் சிபிஆர் 3.40 (CPR 3.40. க்கு அமைவாக அமையாததன் அடிப்படையில் அதனை நிராகரிப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.

அக்கட்டளை வருமாறு குறிப்பிடுகின்றது: The application for Injunction part 8 claim are struck out pursuant to CPR 3.40. இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள்: இந்த விணப்பத்துக்கான நியாயமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம், இது நீதிமன்ற செயன்முறைகளை துஸ்பிரயோகம் செய்வதாக அமையலாம் எனப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என ஜஸ்ரிஸ்.கோ.யுகெ இணையத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

இந்த விண்ணப்பத்தில் இச்செய்தியை எழுதிய தம்பிராஜா ஜெயபாலன் முதலாம் எதிரியாகவும் ரவிச்சந்திரன் சேனாதிராஜா இரண்டாம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ரவிச்சந்திரன் சேனாதிராஜாவின் துணைவியார் புஸ்பாவதி சேனாதிராஜா மூன்றாம் எதிரியாகவும் இவர்களுடைய மகள் சிவானி ரவிச்சந்திரன் நான்காம் எதிரியாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரவிச்சந்திரன் சேனாதிராஜா தன்னுடைய நண்பரான செல்வராஜா செல்வச்சந்திரனை ரீமோட்கேஜ் செய்து கொடுப்பதற்காக அபிராமி கணேசலிங்கத்திடம் அறிமுகப்படுத்தியதாக தேசம்நெற்றிடம் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பின்னாட்களில் இந்த ரீமோட்கேஜ் விடயம் விபரீதமாக ரவிச்சந்திரன் சேனாதிராஜா அபிராமி கணேசலிங்கம் தம்பதிகளின் வீட்டுக்கு நியாயம் கேட்கச் சென்றதாகவும் அப்போது தாங்கள் தன்னை தாக்க வருவதாக அவர் பொலிஸில் முறையிட்டு இருந்ததாகவும் தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். இவை எதுவற்றிலுமே தன்னுடைய மனைவிக்கும் மகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தங்கள் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயற்படுவதாக அபிராமி – ராகுலன் தம்பதியினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 5ம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரன். ஆறாம் எதிரி செல்வராஜா செல்வச்சந்திரனின் துணைவியார் ஜெயவதனி செல்வச்சந்திரன். செல்வச்சந்திரன் – ஜெயவதனி தம்பதிகளின் மகள் கௌசிகா செல்வச்சந்திரன் ஏழாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளார்.

எட்டாம் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட நடராஜா ரபீன்திரன் தேசம்நெற் இல் வெளியான வயதான தம்பதிகளோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர். ரெய்டன் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் இவர் தொடர்பில் உள்ளதாக தெரியவருகிறது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

கடைசி எதிரியான ரூபன் நடராஜா யாழ் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட அபிராமி கணேசலிங்கத்தின் மிக நெருங்கிய உறவினர். தான் வெளிநாடு வருகின்ற போது அபிராமி பிறந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். தானும் அபிராமியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் முதலீட்டுக்காக நூறாயிரம் பவுண்களை வழங்கியதாகவும் ஆனால் ஆரம்பத்திலேயே ஏதோ சரியாகப்படவில்லை என்பதை உணர்ந்து பணத்தை மீளப்பெற முயன்றதாகவும் இன்னமும் தனக்கு பணம் வந்து சேரவில்லை எனவும் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக அபிராமி கணேசலிங்கம் – ராகுலன் லோகநாதன் ஆகியோரோடு தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவர்கள் தேசம்நெற்றை தொடர்புகொள்ளும் பட்சத்தில் அவர்களுடைய பக்கதை சொல்வதற்கான முழுமையான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

அன்புக்குரியவள் செல்வி புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை! துணைபோனவர்களும்!! ஆதரித்தவர்களும்!!! : பாகம் 29

 

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 29 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 13.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 29:

தேசம்: கடந்த உரையாடலில் நீங்கள் அமைப்பை விட்டு வெளியேறி பிறகு ஈ.என்.டி.எல்.எப் ஆரம்பித்து அதில் இருந்து வெளியேறினது பற்றி எல்லாம் கதைத்திருக்கிறோம். இப்ப கிட்டத்தட்ட நீங்கள் ஒரு நீண்ட ஒரு அரசியல் இடைவெளி ஒன்றுக்குள் வாறீர்கள். கிட்டத்தட்ட 86 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து அரசியல் வெற்றிடம் ஒன்று வருது. அந்த ஐந்து ஆண்டுகள் 87 களில் இருந்து 92ஆம் ஆண்டு பரிசுக்கு வரும்வரைக்கும் எப்படி அந்த சூழல் இருந்தது தமிழகத்தில்.

அசோக்: நாங்கள் ஈ.என்.டி.எல்.எப் தொடர்பாக முரண்பட்டு வெளியேறும்போது மிகுந்த பொருளாதார நெருக்கடி இருந்தது. நாங்கள் எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தானே இருந்தனாங்கள். பொருளாதார ரீதியாக மிக நொந்துபோன காலம் தான் அது. என்ன செய்வது என்று தெரியவில்லை. தெரிந்த தமிழகத்து இடதுசாரி தோழர்கள் பலர் எங்களுக்கு உதவிகள் செய்தாங்க. குறிப்பாக செம்பியன் என்றொரு தோழர். அடுத்தது ஏழுமலை என்றொரு தோழர்.

தேசம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்களா?

அசோக்: செம்பியன் தோழர் அவர் கட்சி சார்ந்தவர் அல்ல. அந்த நேரத்தில் எக்ஸ்ரே ரிப்போட் என்ற வாராந்த சஞ்சிகை ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தவர். அவர்தான் அதன் ஆசிரியர்.

அவருடைய உதவி கிடைத்தது. இவரும் தோழர் ஏழுமலையும் தோழர் டக்ளஸ் ஆட்களுக்கும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள். தோழர் ஏழுமலை எக்ஸ்ரே ரிப்போர்ட் சஞ்சிகையின் காரியாலய பொறுப்பாளராக இருந்தார். இந்த பத்திரிகை காரியாலயம்தான் எங்களுக்கு பல நாட்கள் தஞ்சம் கொடுத்தது. இந்த தோழர்களை எல்லாம் வாழ்க்கையில் மறக்க முடியாது.

தேசம்: இது நீங்கள் எல்லோரும் ஒரு இடதுசாரி கருத்தியலில் இருந்தபடியால் அவர்களோடு தொடர்புகள் இருந்திருக்கு.

அசோக்: ஓம். அடுத்தது ஆரம்ப காலங்களிலேயே இந்தியாவுக்கு போன காலங்களிலேயே இலக்கிய அரசியல் நட்புகள் கூட இருந்தது.

தேசம்: பேனா நண்பர்களுக்கு ஊடாகவா?

அசோக்: இல்லை இல்லை. இந்தியாவில் ஏற்பட்ட உறவுகள். அரசியல் இலக்கிய உறவுகள். நிழல் திருநாவுக்கரசு…

தேசம்: இதெல்லாம் நீங்கள் மத்திய குழு கூட்டங்களுக்கு போகேக்கயா?

அசோக்: போகேக்க அந்தக் காலங்களில் ஏற்பட்ட உறவுகள். அப்போ அவங்களும் நிறைய ஹெல்ப் பண்ணினார்கள்.

தேசம்: யார் அப்படி சொல்லக் கூடிய ஆட்கள்?

அசோக்: தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, ஜமாலன், காலக்குறி கான், சண்முகம், நீண்ட பயணம் சுந்தரம் நிறையபேர் இருந்தார்கள். நிறைய தோழர்கள் ஹெல்ப் பண்ணினார்கள். பத்திரிகையாளர் தீம்தரிகிட ஞாநி போன்றவர்களின் உறவுகள் இருந்தபடியால் எங்களுக்கு ஒரு ஆத்ம ரீதியான பலம் ஒன்று இருந்தது. தோழர் கேசவன், தோழர் பொதிய வெற்பன், எஸ்.வீ இராஜதுரை, வீரா.சந்தானம், போன்றவர்களின் உறவும் இருந்தது.

தேசம்: அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்குள்ள இந்தியாவிலையும் ஒரு இடதுசாரி கருத்தியல் வலுப்பெற்று கொண்டிருந்தது அல்லது மார்க்சிச கட்சிகள் தமிழகத்தில் ஒரு போராட்டத்தை தொடங்குவது மாதிரியான சிந்தனைப் போக்குகளும் இருந்தது தானே.

அசோக்: எம். எல் குரூப்புகள் இருந்தது. மாக்சிச ஐடியோலொஜியோடு அரசியல் இலக்கிய சஞ்சிகைகள் வெளி வந்தகாலம் அது.

தேசம்: அவர்களோடு நீங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்று யோசித்தீர்களா?

அசோக்: நீண்ட காலமாகவே நான் போன காலத்தில் இருந்து மக்கள் யுத்த குரூப் – பீப்பிள்ஸ் வோரோடு (People’s War) எனக்கு உறவு இருந்தது. அதுல தான் எனக்கு நீண்ட பயணம் தோழர் சுந்தரம், தோழர் கேசவன் நிறைய தோழர்களின் உறவு எனக்கு இருந்தது. பெயர்கள் வேண்டாம். அந்த உறவுகள் ஒரு அரசியல் சார்ந்த உறவாக இருந்தது. அவர்கள் சின்ன சின்ன ஹெல்ப் எல்லாம் பண்ணினார்கள்.

தேசம்: இலக்கியம் சார்ந்த ஈடுபாடுகள் எப்படி இருந்தது அது எவ்வளவு தூரம்?

அசோக்: ஆரம்ப காலத்தில் எனக்கு இலக்கியம் தொடர்பான ஆர்வம் இருந்தபடியால் இலக்கியத் தொடர்பு நிறைய இருந்தது எனக்கு. என்னுடைய நண்பர்களும் இலக்கியவாதிகள் தான். அரசியல் சார்ந்தவர்கள் எல்லோரும் இலக்கியத்தோடு தொடர்பு கொண்ட தோழர்கள்தான். நாங்க அந்த நேரத்தில் பொங்கும் தமிழமுது என்ற சஞ்சிகை வெளியிட்டம் தானே டெசோவுக்கு. அந்த நேரம் நான் ஜெயகாந்தனை போய் பேட்டி கண்டேன். இலக்கிய ஆர்வத்தால்தான் அவரைப் பேட்டி கண்டேன். நீண்ட பேட்டி. அடுத்தது பொங்கும் தமிழமுதுதிற்காக அந்த நேரம் நான் நிறைய பேரை சந்தித்து எழுத வைத்தேன். அப்படி இலக்கிய உறவு ஒன்று இருந்தது. ஆனால் நான் இயக்கம் சார்ந்த இருக்கிறபடியால் அந்த உறவை என்னால் பேண முடியாமல் போய்விட்டது.

தேசம்: பிறகு அந்த இடைப்பட்ட காலத்தில் அந்த உறவுகள்…

அசோக்: அந்த உறவுகள் உதவிச்சு. அவங்க தான் எனக்கு துணையாக இருந்தவர்கள். நிழல் திருநாவுக்கரசு எல்லாம் மறக்க முடியாத தோழர்.

தேசம்: அதைவிட நான் நினைக்கிறேன் தமிழக எழுத்தாளர்களுக்கும் புலம்பெயர்ந்த அல்லது இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பாடல் அல்லது உறவு இருந்தது…

அசோக்: ஓம் அப்படியான உறவும் சூழலும் இருந்திருக்கு. ஒரு பக்கத்தில் பார்க்கப்போனால் அவர்கள் தங்களை இழந்து எங்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாங்கள் அந்த நிலையில் இருந்தால் நான் நினைக்கல நாங்கள் உதவி செய்வோம் என்று. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், இடதுசாரி இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கொடுத்த ஒத்துழைப்பு இருக்குதானே, அந்த மனநிலை நான் நினைக்கவில்லை எங்களுக்கு இருக்கும் என்று. தங்களுக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மாதிரி. தோழர் நிழல் திருநாவுக்கரசு எல்லாம் வசதியான தோழர் இல்லை. பிஎச்டி செய்வதற்கு பதிஞ்சுபோட்டு வசதி இல்லாமல் பிஎச்டியை விட்டவர். குடவரைக் கோயில் ஓவியங்கள் தொடர்பாக ஒரு ஆய்வு செய்தவர். அப்படியான நெருக்கடியான சூழலிலும் எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தவர்கள். அவங்களை மறக்க இயலாது.

தேசம்: அதற்குப் பிறகு நீங்கள் பரிசுக்கு வந்த பிறகும் இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தீர்கள். அதற்கு அங்க ஆதரவு…

அசோக்: நான் ‘அசை’ என்ற சஞ்சிகை வெளியிட்டேன் தானே. அதுக்கெல்லாம் முழு உதவி. நானும் நாவலனும் நடாத்திய இனியொரு இணையத்தளத்திற்கும் இந்த தோழர்கள் எழுதினாங்க. இங்க தோழர் யமுனா ராஜேந்திரன் செய்த உதவிகள் நிறைய. நான் கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கவும், எழுதவும் மிகவும் துணை நின்ற தோழர் அவர். அடுத்தது கோட்பாட்டு ரீதியாக பிற்காலத்தில் வளர்வதற்கான பின்புலமாகவும் அவங்க இருந்தார்கள். காலக்குறி சஞ்சிகை எல்லாம் கோட்பாட்டு ரீதியான சஞ்சிகை. கான் கொண்டு வந்தவர். அவர் சமீபத்தில்தான் காலமானவர்.

தேசம்: இந்தியாவில் இருந்த அந்த நான்கு ஆண்டுகளில் நிறைய பேரை வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது எப்படி நடந்தது? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு பொருளாதார பலம் இல்லாத நிலையில் ஏற்கனவே வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த தோழர்கள் உங்களுக்கு உதவி செய்தவையா? அது எப்படி அந்த ஏற்பாடு நடந்தது? வெளிநாடுகளுக்கு ஒரு காலகட்டத்தில் நான் நினைக்கிறேன் 90, 91 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெருந்தொகையான ஆட்கள் வெளிநாடுகளுக்கு வந்தவர்கள். அதில் குறிப்பாக புளொட் அமைப்பிலிருந்து வந்த ஆட்களும் நிறைய பேர் என்று நினைக்கிறேன். அது எப்படி நிகழ்ந்தது?

அசோக்: உருத்திரன் என்று ஒரு தோழர் இருந்தவர். அவர் புளொட்டில் இருந்தவர். அவர் சென்னையில் கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று வைத்திருந்தவர். அவர் குறைந்த செலவில் எல்லா தோழர்களையும் அனுப்பினார். அடுத்தது நாங்கள் வந்த பிறகு அங்க உள்ள தோழர்களை கூப்பிடுவது. முழுப் பணத்தையும் கொடுக்கத் தேவையில்லை. அப்போ குறிப்பிட்ட தொகைகளை கொடுத்து விட்டு பின் இங்கு வந்த பின் வேலை செய்து கொடுப்பது.

தேசம்: அப்போ நட்பின் அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் …

அசோக்: ஓம். நிறைய தோழர்கள் அப்படித்தான் வந்தவர்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வரக்கூடிய சூழல் எங்களுக்கு இருக்கவில்லை தானே. முதல் கொஞ்சம் காசு கொடுக்கறது பிறகு வந்து உழைச்சு மிச்சக்காசு கொடுக்கிறது. உருத்திரன் பக்கத்திலிருந்து அதற்கான உதவி கிடைத்தது.

தேசம்: உருத்திரன் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன்…

அசோக்: இறந்திட்டார். தீவுப் பகுதியை சேர்ந்த தோழர். நிறைய பேரை அனுப்பி இருக்கிறார்.

தேசம்: புளொட்டில் இருந்த சிலபேர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் வட இந்தியாவில் போயிருந்து இப்படியான உதவிகளை செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியா? உருத்திரன் போல வேறு சிலரும் அந்த அமைப்புக்குள் இருந்தவர்களா?

அசோக்: அப்படி இருந்த மாதிரி நான் கேள்விப்படவில்லை. நான் அறிந்தவரை உருத்திரன் தான் அந்த காலகட்டத்தில் நிறைய ஹெல்ப் பண்ணினது. வேற ஆட்கள் ஹெல்ப் பண்ணின மாதிரி தெரியல. சில வேளை எனக்கு தெரியாமல் இருக்கலாம்.

தேசம்: எத்தனை பேர் அளவில் உங்களுக்கு தெரிய அந்தக் காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து இருப்பார்கள்? நீங்கள் இருந்த அந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் ?

அசோக்: எனக்கு தெரிய வெவ்வேறு ஏஜென்சிக்கால வந்த தோழர்கள் இருக்கிறார்கள். உருத்திரனுக்கால வந்த தோழர்களா?

தேசம்: இல்லை இல்லை பொதுவாக…

அசோக்: பொதுவா நாங்கள் ஒரு 100 -150 தோழர்கள் வந்திருப்போம். சில தோழர்களை ஐரோப்ப நாடுகளுக்கு கூப்பிட முடியாமல் போய்விட்டது. அந்தத் தோழர்களை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம். இலங்கைக்கு போன தோழர்களுக்கு அங்க இருக்க முடியாமல் போய்விட்டது. அவங்கள் கொழும்புக்கு போய் குறைந்த பயணச் செலவோடு ஏஜென்சிக்கு ஊடாக அப்படி நிறைய தோழர்கள் வளைகுடாவுக்கு போனவர்கள். வளைகுடாவுக்கு போனவர்கள் கூட சில தோழர்கள் ஐரோப்பாவுக்கு வந்து விட்டார்கள். ஏனென்றால் பெருந்தொகை காசு வேணும் தானே அந்த நேரம் வளைகுடாவுக்கு போறதுக்கு குறைந்த காசுதான்.

தேசம்: 87 ஆம் ஆண்டிலிருந்து 92 ஆண்டு அந்த இடைப்பட்ட காலம் வரைக்கும் நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை…

அசோக்: பின்தள மாநாட்டுக்கு வந்ததற்கு பிறகு நான் இலங்கைக்கு செல்லவில்லை.

தேசம்: இன்றைக்கு வரைக்கும் செல்லவில்லை…

அசோக்: இன்றைக்கு வரைக்கும் போகவில்லை.

தேசம்: இந்த காலகட்டத்தில் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் வருது. விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடு வந்து ஒரு யுத்தம் நடக்கிறது இந்திய ராணுவத்தோடு. பிறகு 91 ஆம் ஆண்டு இந்திய ராணுவம் திருப்பி வருது. அதுக்குள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். இவ்வாறு இலங்கை அரசியலைப் பொறுத்தவரைக்கும் அது மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிற காலகட்டம். அதேநேரம் விடுதலைப் புலிகளின் கரங்கள் நாளுக்கு நாள் பலமடைந்து கொண்டு வருது. செல்வியும் அந்த நேரம் கடத்தப்படுறா…

அசோக்: அந்தக் கால கட்டத்தில் நாங்கள் ஒரு அரசியல் அனாதை தான். ஏனென்றால் இந்த கால கட்டத்தில் நாங்கள் எந்த அரசியலிலும் பெருசா ஆர்வம் காட்டவில்லை. எங்கட சொந்த வாழ்க்கை மிக மோசமாக இருந்த காலகட்டம் தானே. எங்களோட வந்த தோழர்களை காப்பாற்றுவது தான் எங்கட முயற்சியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் 91 ஓகஸ்ட் 30 செல்வி புலிகளால் கடத்தப்படுகிறார். யுனிவர்சிட்டிக்கு முன்னால இருந்த ஆத்திசூடி லேனில் எனக்கு தெரிந்த நண்பர்களுடைய வீட்டில் தான் இருந்தவா. அப்போ புலிகளின் பெண்கள் பிரிவால் விசாரணைக்கு என்று அழைக்கப்பட்டு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது.

தேசம்: அதற்குப்பிறகு என்ன நடந்தது என்றே தெரியாது…

அசோக்: பிறகு கொலை செய்யப்பட்டு விட்டார்.

தேசம்: செல்வியை மீட்பது சம்பந்தமா அல்லது விடுவிப்பது சம்பந்தமா நீங்கள் ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டீர்களா?

அசோக்: கம்யூனிகேஷன் இல்லைதானே. கடத்தி ஒரு வாரத்துக்குப் பிறகு தான் இந்த சம்பவமே எனக்கு தெரியும். இப்படி அரெஸ்ட் பண்ணி விட்டார்கள் என்று. அதற்குப் பிறகு பல்வேறு மட்டங்களில் சிவத்தம்பி தொடர்பாக ஒரு கதை இருந்தது தானே அவருக்கு புலிகளோடு உறவு இருக்கு என்று. அவரோடு உரையாடிய போது அவர் தன்ற பக்கத்தில் உள்ள இயலாமையை சொல்லிக் கொண்டிருந்தார். ட்ரை பண்ணுறேன் ஆனால் தெரியும் தானே பிரச்சினைகள் என்று சொன்னார். பிறகு நாங்கள் இந்தியாவிலிருந்த விடுதலைப் புலிகள் சார்ந்த ஆட்களோடு எல்லாம் நாங்க நிறைய ட்ரை பண்ணினது. அந்த நேரம் பிபிசிக்கு தெற்காசிய பிரிவில் ஒருத்தர் இருந்தவர். விடுதலைப் புலிகளோடு மிக நெருக்கமாக இருந்தவர். அவர் எல்லாம் சொன்னார் நாங்கள் தீவிரமாக முயற்சி செய்கிறோம் என்று. எதுவுமே சாத்தியப்படவில்லை. அந்த நேரத்தில் ஃபாதர் இமானுவேல் வந்தவர். அவரையும் சந்தித்து கதைத்தேன். அவர் ஒரு புலியாகத்தான் கதைத்தார்.

தேசம்: லண்டனில் இருக்கிறார் நாடுகடந்த தமிழீழத்தில்…

அசோக்: ஓம். அப்ப ஒரு சிஸ்டர் தான் ஏற்பாடு செய்து தந்தவர் எனக்கு. அவர் சொன்னார் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். புலிகள் ஒரு புனிதமான அமைப்பு. அப்படி எல்லாம் கதைக்க வெளிக்கிட்டார். பிறகு சொன்னார் அப்படி நடந்து இருந்தால் நான் முயற்சி செய்கிறேன் என்று. தெரியும் தானே…

தேசம்: அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

அசோக்: அவர் அவ்வளவு அக்கறை எடுக்கவில்லை…

தேசம்: அதை விட உங்களுக்கு தனிப்பட்ட முறையில் புலிகளிலிருந்த சில நண்பர்களையும் உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன். இப்ப ரவி அருணாச்சலம் போன்றவர்கள்…

அசோக்: ரவி அருணாச்சலம் அதற்கு பிறகுதான் புலிகளுக்கு போனவர். வெளிநாடு வந்த பின். அந்த நேரம் இந்தியாவில் புலிகளில் இருந்த நண்பர்கள் தொடர்பு கிடைக்கவில்லை. புலம்பெயர்ந்து வந்த பிறகு சந்தித்தேன். குறிப்பாக நோர்வே ரஞ்சித், இப்ப லண்டனில் இருக்கிறார். அவருக்கு எங்களைக் போலவே புலிகள் தொடர்பாக விமர்சனம் இருந்தது. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் சிலர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் செல்வியை காப்பாற்றி இருக்கமுடியும். உதாரணமாக புலிகளின் மிக முக்கிய அதிகாரத்தில் இருந்தவர் நோர்வே சர்வேஸ்வரன். அவர் இப்ப கடைசியா 2009 வரைக்கும் புலிகளுடைய ஐரோப்பாவில் அதிகாரமிக்க தலைமையில் இருந்தவர். கே பி யோடு மிக நெருங்கிய உறவு. அவர் எல்லாம் நினைத்து இருந்தால் செல்வியை விடுவித்து இருக்கலாம் ஏனென்றால் புலிகளில் பவர்ஃபுல் ஆன ஆட்கள் இவர்கள்.

தேசம்: சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் ஆட்கள்…

அசோக்: சிதம்பரநாதன் ஆட்கள் தொடர்பாக எல்லாம் நிறைய விமர்சனம் இருக்கு…

தேசம்: பல்கலைக்கழகங்களில் இருந்தவர்கள்…

அசோக்: அவங்கதான் பொங்குதமிழ் எல்லாம் செய்தவர்கள். யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்தில் புலிகளுக்கு மறைமுகமாக வேலை செய்தவங்க. செல்வி கடத்தப்பட்டது தொடர்பாக புலிகள் பக்கத்தில் இருந்து யாரும் கதைக்க தயாரில்லை. இன்றைக்கும் கூட என்ன நடந்ததென கதைக்க தயாரில்லை . அந்த கால கட்டத்தில் புலிகளில் இருந்த பலருக்கும் இது தெரிந்திருக்கும்.

பெண்கள் பிரிவு என்ற படியால் தமிழினிக்கு எல்லாம் தெரிந்திருக்கும். தமிழினி இறந்து விட்டாங்க. ஆனால் யாருமே கதைக்கத் தயாரில்லை புலிகள் பக்கத்திலிருந்து . செல்வி கடத்தப்பட்டு இருந்த காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டி க்கு போன இடத்தில் எனக்கு தெரிந்த ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வனிடம். அதற்கு தமிழ்ச் செல்வன் சொல்லி இருக்கிறது, அந்த கதையை விடுங்கள் என்று சொல்லி. மற்றது கவுண்டர் பாயிண்ட் பத்திரிகையாளரிடம் சொல்லுகிறார்கள் செல்வி இன்னும் கஸ்டடியில் தான் இருக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லி அந்த நேரம் அன்டன் பாலசிங்கமே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் புலிகள் பக்கத்திலிருந்து யாருமே கதைக்கத் தயாரில்லை.

இன்றைக்கு மனித உரிமை பேசுற நோர்வே சர்வே எல்லாம் மிகமோசமான ஆட்களா இருந்தவங்க. சர்வே புலிகளின் அதிகாரத்தில் இருந்த காலகட்டத்தில் நானும் பரிசில் இருந்தன். ஊடகத் துறைக்கு எல்லாம் அவர்தான் பொறுப்பாக இருந்தவர். அதிகாரமிக்க நபர்களாகத்தான் இருந்தவர்கள். இன்றைக்கு ஜனநாயகம், மனித உரிமை பற்றி நோர்வேயில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தேசம்: செல்வி கடத்தப்பட்டது கொலை எப்ப நடந்தது என்பதும் தெரியாது…

அசோக்: 91 ஓகஸ்ட் கடைசி காலம் 30 ஆம் திகதி மட்டில. முப்பது வருஷம் வருது.

தேசம்: அதற்கு பிறகு எந்த தகவலும் இல்லை? உத்தியோகபூர்வமாக புலிகள் அறிவிக்கவும் இல்லை.

அசோக்: ஒரு கட்டத்தில் செல்வியின் வீட்டுக்கு போய் சொல்லி உள்ளார்கள். செல்வி வீட்டார் அடிக்கடி புலிகளிடம் சென்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது புலிகள் ஒரு கட்டத்தில் வரவேண்டாம் முடித்தாச்சு என்று சொல்லிட்டாங்க.

தேசம்: ஆனால் என்ன காரணத்துக்காக என்று தெரியல. அவா ராணுவ ரீதியாக எந்த செயலிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை முழுக்க கலை இலக்கிய ஈடுபாடு தான்?

அசோக்: ஒன்றுமே இல்லை. அந்தக் காலத்தில கவிதைகள், மொழிபெயர்ப்பு நாடகங்கள் எல்லாம் செய்துகொண்டிருந்தவங்க… ரவி அருணாச்சலம் போன்றவர்களெல்லாம் செல்வி புலிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தவ அதனால தான் புலிகள் கொலை செய்தது என்று சொல்லிக் கொண்டிருந்தாங்க.

தேசம்: ரவி அருணாச்சலம் புலிகள் பற்றி விமர்சித்த ஒரு ஆள் தானே…

அசோக்: பிற்காலத்தில் புலிகளுடைய ஆதரவாளராக வந்த பிறகு இந்தக் கதைகள் சொன்னவர். செல்வி அந்த நேரம் மொழிபெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறா. அதிகாரத்துக்கு எதிரான மொழிபெயர்ப்பு நாடங்களை யாழ்ப்பாணம் யுனிவர்சிட்டியில் போட்டிருக்கிறா. தியேட்டர் சயன்ஸ் தானே செய்தவ செல்வி. அதிகாரத்துக்கு எதிரான நாடகங்கள் போடும்போது புலிகள் இயல்பாகவே தங்களுக்கு எதிரானது என்று கருதிக்கொண்டாங்க. அந்தத் தகவல்களை செல்விக்கு எதிராக புலிகளுக்கு பரிமாறினதில குறிப்பிட்ட ஆட்கள் இருந்திருக்காங்க.

தேசம்: குறிப்பிட்ட அந்த ஆட்கள் யா ர் சொல்ல முடியுமா?

அசோக்: எனக்கு சிதம்பரநாதன் மீது சந்தேகம் இருக்கு. அவரோட மிக நெருக்கமாக இருந்த பல பேர் இது பற்றி அவர்களோடு கதைத்துப் போட்டு மறுத்திருக்கிறார்கள். அவர் அப்படி அதில் சம்பந்தப் படவில்லை என்று சொல்லி.

தேசம்: யார் இந்த தகவல்களை புலிகளுக்கு கொடுத்தது என்பதில்…

அசோக்: இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்தபோது அவர் மறுத்ததாக அவரோடு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் எனக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள், சொல்லி இருக்கிறார்கள்.

தேசம்: கிட்டத்தட்ட இலங்கை ராணுவம் மனித உரிமை மீறல்களை நடத்தியிருக்கோ கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் எங்க பக்கத்திலும் நடந்திருக்கு. இல்லை அதிலும் பார்க்க மோசமாக நடந்திருக்கு.

அசோக்: இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். கேட்கலாம். புலிகளுடைய படுகொலை தொடர்பாக எதுவும் செய்யமுடியாது. குறைந்தபட்சம் இதுதொடர்பான வருத்தம் கூட யாரிடமும் இல்லை. இன்றைக்கு புலிகளின் மிக விசுவாசிகளாக படைப்பாளிகளாக, கவிஞர்களாக பெண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். பெண்கள் மீது புலிகள் செய்த படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்ச மனவருத்தத்தை கூட வெளிப்படுத்தக் கூட தயாரில்லை. அவங்களும் பெண்கள் தான். படைப்பாளிகள், கவிஞர்கள் சொல்லப்படுகிற பெண்கள் கூட பெண்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் தொடர்பாக குறைந்தபட்சமாக மனவருத்தத்தை வெளிப்படுத்தவில்லை. இன்டைக்கு பேஸ்புக்ல பார்க்கலாம் புலிகள் உத்தமமானவர்கள், பிரபாகரன் மிக உத்தமமானவர் என பிழைப்பு இலக்கியம் செய்பவர்களை. அது அவங்கட சுதந்திரம். ஆனா குறைந்தபட்சமாக இந்த மனிதாபிமான கண்டனங்களை, மனவருத்தங்களைக் கூட வெளிப்படுத்த தயாரில்லை தானே. கொலை செய்த புலிகளை விட கொடிய மனநிலை கொண்டவங்க இவர்கள்.

தேசம்: ரவி அருணாச்சலத்தை விட வேறு யாராவது இப்படியான சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக கருத்துகள் சொல்லி இருக்கிறார்களா?

அசோக்: இல்லை. நண்பர்கள் என்ற அடிப்படையில் ரவி அருணாச்சலம் கொலையை கண்டிக்கின்ற நபராக இல்லை. ஆரம்பத்தில் இருந்தவர். சரிநிகர் பத்திரிகையில் வேலை செய்யும்போது புலிகள் தொடர்பாகவும், பிரபாகரன் தொடர்பாகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்ததில் ரவி அருணாச்சலமும் ஒராள். பல்வேறு புனை பெயர்களில் நிறைய விமர்சனங்களை வைத்தவர். காலப்போக்கில் ஐரோப்பாவுக்கு வந்தபிறகு அவருடைய முகம் மாறிவிட்டது. அவர் மட்டும் இல்லை கடந்த காலங்களில் புலிகளுடைய செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை வைத்த பலர் காலப்போக்கில் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காக மாறிவிட் டார்கள்.

ஈயுனிஸ் மணித்தியாலத்திற்கு 125 கி மீ வேகத்தில் பிரித்தானியா மீது தாக்குதல்! மூவர் பலி!! ரஷ்யா அல்ல இயற்கை!!!

பிரித்தானியாவும் – அமெரிக்காவும் உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பிற்கு சகுனம் பார்த்துக்கொண்டிருக்க இன்று காலை முதல் ஈயுனிஸ் புயல்காற்று மணித்தியாலத்திற்கு 125 கிமீ வேகத்தில் பிரித்தானியாவை தாக்கிக் கொண்டுள்ளது. இச்செய்தி எழுதப்படும் வரை லண்டன், இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய பிரதேசங்களில் மூவர் கொல்லப்பட்டு உள்ளனர். தலைநகர் லண்டனில் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் வீசப்பட்டு நிலத்தில் வீழ்த்தப்பட்டனர். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஈயுனிஸின் தாக்குதல் மோசமாக இருந்தது. மூன்று தசாப்தங்களுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரும் புயலாக ஈயுனிஸ் வர்ணிக்கப்படுகின்றது. அதிவேக வீதிகளில் பயணித்த இரு பெரும் லொறிகள் அருகருகே புரட்டிப் போடப்பட்டது. ஈயுனிஸ் புயல்காற்று மணிக்கு 70கிமீ முதல் 122 கிமீ வேகத்தில் நாடு முழுவதும் பரந்த தாக்கத்தைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவில் அம்பர், யலோ, ரெட் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளது. முதற் தடவையாக லண்டன் ரெட் எச்சரிக்கைப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 1,250,000 வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவற்றில் 750,000 வீடுகளுக்கு மீளிணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 500,000 வீடுகள் இன்றைய இரவை இருளிலேயே களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

லண்டனின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஓற்று அரினாவின் கூரை பிய்த்தெறியப்பட்டு உள்ளது. நூற்றுக்கணக்கான மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி உள்ளது. விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி காணொலியாக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சில ரெயில் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டது. வேல்ஸில் விமான, ரெயில் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டது.

ஈயுனிஸ் எவ்வளவு மோசமான நட்டத்தினை ஏற்படுத்தியது என்ற கணக்கை அரசு கணக்கிட ஆரம்பித்துள்ளது. இவ்வாறான புயல்களுக்கு பிரித்தானியா தயார் நிலையில் இருக்கின்றதா என்ற கேளிவியும் எழுப்பப்படுகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் வாகனப் போக்குவரத்தும் சக்தியும் மின் இணைப்பிலேயே தங்கியுள்ளதால் மின்வெட்டுக்கள் துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை துரிதகெதியில் சீரமைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயற்கை அழிவுகள் மேற்கு நாடுகளிலும் பரவலாக நடைபெற ஆரம்பித்துள்ளது. வெள்ளம், புயல், கோவிட் என்று இயற்கையின் சீற்றத்துக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்கு அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் அதனைவிடுத்து மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் யுத்த தளபாடங்களுக்கும் இராணுவ விஸதரிப்புகளுக்குமே அரசுகள் முன்னுரிமை தருகின்றன.

புதன் கிழமை ரஷ்யப் படையெடுப்பு ஒரு அமெரிக்க – பிரித்தானிய Sexed Up Intelligence செக்ஸ்டப் இன்ரலிஜன்ஸ்

எங்களுடைய சாத்திரிகளையும் மிஞ்சிய அமெரிக்க – பிரித்தானிய உளவுப் பிரவுகள் இன்று புதன் கிழமை பெப்ரவரி 16 சுக்கிரன் உக்ரைனில் நிற்கும் என்றும் சனி பகவான் ஏழு அரையின் உச்சத்திற்கு வரும் என்றும் அதனால் ரஷ்யா படையெடுக்கும் என்றும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்திருந்தனர். அமெரிக்காவும் பிரித்தானியாவும் தங்களது படையணிகளை ரஷ்யாவை நோக்கி நகர்த்தி இருந்தனர். லண்டனிலும் நியூயோர்க்கிலும் இராஜதத்திரிகள் மத்தியில் ஒரே அல்லோல கல்லோலம். ஆமெரிக்க மற்றும் மேற்கு நாட்டு தூதரகங்கள் தங்களுடைய மக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுமாறும் யுத்தம் ஆரம்பித்தால் விசேட விமானங்களை அனுப்பியெல்லாம் காப்பாற்ற முடியாது என்று சர்வதேச பதட்டத்தையே ஏற்படுத்தி இருந்தன. மேற்கு நாட்டு ஊடகங்களில் யுத்தம் வெடிக்கப் போகின்றது, இதோ ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழையப் போகின்றன என்ற பாணியில் செய்திகளுக்கு தயாராக இருந்தனர்.

தாங்களும் ஒரு சமநிலையில் நின்று செய்திகளை வழங்குகின்றோம் என்பதைக் காட்ட மேற்கு ஊடகங்கள் ரஷ்ய உத்தியோகபூர்வ பிரதிநிதி ஒருவரையும் அழைத்து “நீங்கள் புதன் கிழமை உக்ரைனுக்கு படையெடுக்கப் போகின்றீர்களா? நேட்டோ படையணிகள் ஆயத தளபாடங்களை குவிப்பதால் பின் வாங்குவீர்களா?” என்று கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஷ்ய பிரதிநிதிகள், “நாங்கள் ஒரு போதும் படையெடுப்பது பற்றி பேசவே இல்லையே. இது அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் பிரச்சாரமே அல்லாமல் வேறொன்றுமில்லை” என்று பதிலளித்தனர். ரஷ்ய பிரதிநிதியின் கூற்றைப் பிரதிபலிப்பது போல் மேற்கு நாட்டு ஊடகங்களே உக்ரைனில் மக்கள் எந்தவொரு யுத்தப் பதட்டமும் இல்லாமல் வழமைபோல் தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடுபட்டு இருந்தனர் என்று செய்திகளை வெளியிடுகின்றன.

படையெடுப்பிற்கு தயாராகி விட்டதாக சொல்லப்பட்ட ரஷ்யாவிலும் பதட்டமில்லை. யுத்தம் நடந்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்த்த உக்ரைனிலும் பதட்டமில்லை. ஆனால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் மட்டும் பெரும் பதட்டம். அதிஸ்ரவசமாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் ஜனாதிபதி ஜோ பைடனதும் கதையைக் கேட்டு லண்டனில் மக்கள் ரோய்லற் ரோலை வாங்கிக் குவிக்கவோ அல்லது பெற்றோல் ராங்குகளை நிரப்பவோ முற்படவில்லை.

“சதாம் ஹூசைனிடம் பேரழிவு ஆயதங்கள் இருக்கின்றது. சதாம் ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் டமார் என்று லண்டனிலும் நியோர்க்கிலும் பேரிழவுக் குண்டுகள் வெடிக்கும் என்று 2003 இல் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ஒரு மெகா ரீல் விட்டார். அதன் விளைவால் ஈராக் யுத்தம் தொடங்கி 500,000 பேர் வரை கொல்லப்பட்டு இன்றும் யுத்தம் வேறு வடிவில் தொடர்கிறது. ஜோர்ஜ் புஸ்ஸிற்கு தன்னுடைய இருப்பை தக்க வைக்க ஒரு யுத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஜால்ராவும் சிஞ்சாவும் போட பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் ரெடியானார்.

அதற்குப் பின் டேவிட் கமரூன் லிபியாவுக்குள் மூக்கை நுழைத்தார், சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தார். அந்நாடுகளை சின்னா பின்னமாக்கி இப்போது உக்ரைனில் வந்து நிற்கின்றனர்.

தன்னுடைய வீட்டு சுவருக்கு பெயின்ற் அடித்த கணக்கில் இருந்து தப்பவும் கோவிட் காலத்தில் சனங்கள் சாக இங்கால் குடித்து கும்மாளம் அடித்த கதையை மறைக்கவும் உக்ரைனில் இரத்த ஆறு ஓட வேண்டும் என்று நினைக்கின்றார் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன். அவர் மட்டுமல்ல ஜோ பைடனுக்கும் ரேற்றிங் ரொம்ப படான்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மேற்கு நாடுகளில் விலைவீக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 7.5 வீதம் விலைவாசி உயர்வு ஏற்பட்டு உள்ளது. பிரித்தானியாவில் இன்றைய கணிப்பின்படி 5.5 வீதம் விலைவாசி உயர்ந்துள்ளது. வரும் ஏப்ரலில் இது 7.5 வீதமாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை ஈடுகட்டும் அளவுக்கு சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சம்பளங்களை கூட்டிக் கேட்க வேண்டாம் என பாங்க் ஒப் இங்லன்ட் கவர்னர் அன்ரூ பெய்லி தொழிலாளர்களைக் கேட்டுள்ளார். அதிகரிக்கும் விவாசியோடு ஒப்பிட்டால் குடும்ப வருமானம் இரண்டு வீதத்தால் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்படுகின்றது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு குறிப்பாக எரிபொருட்கள் ரொக்கட் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் குடும்ப வருமானம் வீழ்ச்சியடைகின்றது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு வட்டிவீதத்தை அதிகரிக்கின்றது. வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டால் வீட்டுக்கு செலுத்தும் மோட்கேஜ் அதிகரிக்கும். வாடகைக்கு இருப்பவர்களின் வாடகை அதிகரிக்கும். மக்களின் கையிருப்பில் உள்ள பணம் வறண்டு போய்விடும். மக்கள் நெருக்கடிக்கு உள்ளானால் அது அரசுக்கு எதிராகத் திரும்பும். இந்த அபாயநிலை மேற்கில் ஏற்பட்டுள்ளது. அதனால் ஒரு யுத்தம் வந்தால் மக்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். அதற்கு மேற்குலகிற்கு ஒரு யுத்தம் அவசியமாகின்றது.

அமேரிக்காவும் அதன் நேச நாடுகளும் இன்றும் தாங்கள் உலகைக் கோலோச்ச முடியும் என்ற பழைய நினைப்பிலேயே செயற்பட்டு வருகின்றன. கோவிட் அவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தியதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட சீனாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் தான் வந்தன. மேற்குநாடுகளின் விலைவாசி உயர்வுக்கு மாறாக சீனாவின் விலைவாசி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அவர்களது விலைவாசி உயர்வு தசம எண்ணிலேயே இருக்கின்றது. அது ஒன்றைக்கூட எட்டவில்லை. அதனால் சீனா மேற்கு நாடுகளுக்கு மாறாக வட்டி வீதத்தை குறைக்க உள்ளது. அந்நாடு கோவிட்டை மிகக் கவனமாகக் கட்டுப்படுத்தி இருப்பதுடன் கோவிட் மரணங்களை முற்றாக இல்லாமல் அல்லது ஒற்றை இலக்கத்துக்குள்ளேயே வைத்துள்ளது. பிரித்தானியாவில் இவ்வளவு வக்சீன் ஏற்றப்பட்டும் மரணங்கள் தினமும் 300 வரை செல்கின்றது. அமெரிகாவில் இதனிலும் அதிகம்.

ரஷ்யா ஒன்றும் பாலும் தேனும் ஓடும் நாடு கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஒன்றும் புனிதரும் அல்ல. ரஷ்யாவுக்கு உக்ரைனில் கண் இருப்பதும் மீண்டும் பரந்த சோவியத் குடியரசை கட்டமைக்கும் கனவு விளாடிமீர் பூட்டினுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இதில் மேற்கு நாடுகள் குளிர்காய முற்படுகின்றனர் என்பது தான் உண்மை.

லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!!

லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் – Raidenn Limited அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் கட்டிடம் இருக்கின்றதேயொழிய அங்குள்ள யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஹரோ பகுதியில் வாழும் எஸ் செந்தூரன் எனத் தன்னை அறிமுகப்படுத்தியவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தானும் ஒரே கல்லூரியிலேயே கல்விகற்றதாகவும், தாங்கள் சில சமயம் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதாகவும் தானும் இவ்வாறான ஒரிரு சம்பவங்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு மேல் தன்னால் எதுவும் தெரிவிக்க முடியாது என்று மேலதிக தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

அப்பகுதியில் நீண்ட காலமாக நிதி ஆலோசகராக வீடு வாங்குவதற்கான ஆலோசணைகளை வழங்குவது மோற்கேஜ் பெற்றுக்கொடுப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் தேசம்நெற் க்கு தெரிவிக்கையில் அபி என்றொரு பெண் ரீமோட்கேஜ் இன்வெஸ்ற்மன்ற் என்று செயற்பட்டதாகவும் இதனால் சிலர் பாதிக்கப்பட்டதாக தனக்கு தெரியவந்ததாகத் தெரிவித்தார். இப்போதெல்லாம் ஊரை கொள்ளையடித்து ஏப்பம் விடும் சிலரும் மோட்கேஜ் செய்து தருகின்றோம் என்று கடைவிரிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ராகுலன் லோகநாதன், அபி கணேசலிங்கம் (படங்கள்) ஆகிய இருவரும் ரீமோட்கேஜ் எடுத்து முதலீடுகளை மேற்கொண்டு லாபமீட்ட முடியும் என ஆசை வார்த்தைகளைக் கூறி நம்பிக்கையூட்டி இந்த வயோதிபத் தம்பதிகள் உட்பட சிலரை அவ்வாறு செய்ய வைத்துள்ளனர். ஆனால் முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டுவது என்பது பல்வேறு புறச் சூழல்களிலும் தங்கியுள்ளது. ஆனால் இந்த முதலீட்டை மேற்கொண்டவர்களுக்கு இதன் ஆபத்துக்கள் பற்றி சொல்லப்பட்டதா என்பதோ சம்பந்தப்பட்ட இருவருமே நிதி ஆலோசணைகளை வழங்கத் தகுதி உடையவர்களா என்பதும் உறுதிபடத் தெரியவில்லை.

ஆனால் இவ்விருவரும் ஒரு மேட்டுக்குடித்தன வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராகுலன் லோகநாதன் பிரித்தானியாவின் மட்டுமல்ல உலகெங்கும் அறியப்பட்ட உதைபந்தாட்ட விளையாட்டு பிரமுகர் டேவிட் பெக்கத்துடன் நின்று எடுத்த புகைப்படங்களை எல்லாம் தன் முகநூலில் பரிமாறியிருந்தார்.

இத்தம்பதியினரின் சில படங்களும் அவர்களின் டாம்பீகமான வாழ்க்கையை வெளிப்படுத்தி நின்றன. ஆனால் இவர்களை நம்பி முதலீட்டை மேற்கொண்டவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இவர்களை நம்பி முதலிட்டவர்களுடனான சகல தொடர்புகளையும் ரகு – அபி தம்பதியினர் துண்டித்துள்ளதைத் தொடர்ந்தே இவ்விடயம் பொதுத் தளத்திற்கு வந்துள்ளது.

பிரித்தானியா குறிப்பாக லண்டன் சுதந்திரமான செயற்பாட்டுக்கான களமாக இருந்தாலும் இந்தச் சுதந்திரம் என்பது மோசடிகளுக்கான சுதந்திரமாகவும் இருக்கின்றது. இந்த மோசடிகளுக்கு நடைமுறை விதி முறைகளில் உள்ள ஓட்டைகளும் உதவுகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். லண்டன் உலகின் நிதிப்பரிவர்த்தனையின் தலைநகரமாக இருக்கின்ற அதே நேரம் நிதி மோசடியாளர்களின் கூடாரமாகவும் இருக்கின்றது. உலக மோசடியாளர்கள் பலரதும் வாழ்விடமாகவும் லண்டன் இருப்பது ஒன்றும்; இரகசியமானது அல்ல. அவர்களுக்கு எதிராக பிரித்தானிய அரசும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது. ரஷ்யாவின் பெரும் பணமுதலைகள் கூட பிரித்தானியாவிலேயே ஒழிந்து கொண்டுள்ளனர். பிரித்தானிய பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மத்திய கிழக்கு பணமுதலைகளுக்கு லண்டனில் கோடிக்கணக்கில் சொத்துப் பத்துக்கள் உள்ளன. தற்போது பிரதமர் பொறிஸ் ஜோன்சனே தவறான வழிகளில் தனது வீட்டைத் திருத்துவதற்கான செலவை செலுத்த முற்பட்டு அம்பலப்பட்டு உள்ளார். இந்தப் பின்னணியிலேயே லண்டனின் மோசடிகளை அணுக வேண்டியுள்ளது. லண்டனில் மோசடிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல. தமிழர்கள் மத்தியிலும் இம்மோசடிகள் நிறைந்துள்ளது.

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி; ஒரு மனிதனின் வாழ்வில் வீட்டைக் கட்டுவது அல்லது வாங்குவது திருமணம் செய்து கொள்வது என்ற இரு விடயங்களுமே மிக முக்கிய அம்சங்களாக கணிக்கப்படுவதை குறித்து நிற்கின்றது. அப்படியான கஸ்டங்களுக்கு மத்தியில் வாங்கிய வீட்டை முதுமைiயில் பறிகொடுப்பது என்பது மிகக் கொடுமையானது. அவ்வாறான ஒரு நெருக்கடியில் தமது முதுமையில் கணவன் அல்ஸ்மியர் என்ற மறதி நோய்க்கு ஆளாகிய நிலையில் வீட்டையும் இழக்கும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். லண்டன் குரொய்டனில் வாழும் இத்தம்பதியினரை நேரடியாகச் சந்தித்து அவர்கள் சேகரித்து இருந்த கட்டு ஆவனங்களையும் தேசம்நெற் பார்வையிட்டு இருந்தது.

இன்றைய காலகட்டங்களில் வீடு வாங்குவது என்பது அவ்வளவு இலகுவான பொறிமுறையல்ல. பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளில் மனிதர்கள் நேர்மையாக பொறுப்போடு நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் நம்பினால் அதற்கு பாரிய விலையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இந்த வீடு வாங்குவது விற்பது தொடர்பில் சற்று அசந்தாலும் பாரிய இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வீடு வாங்கும் விற்கும் விடயங்களில் சட்டத்தரணிகளுக்கூடாகவே நிதிப் பரிமாற்றம் நிகழும். இவ்வாறான பரிமாற்றங்களில் சட்டத்தரணிகளே நிதியை கையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது என்கிறார் கிழக்கு லண்டனில் மோற்கேஜ் ஏற்பாடுகளைச் செய்துகொடுத்து வருபவர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெயசீலன் – ராணி தம்பதியினரும் அடக்கம். இவர்கள் 100,000 பவுண்களை (3.3 கோடி ரூபாய்) சட்டத்தரணியிடம் இழந்தனர். மற்றுமொரு இளைஞர் வாங்காத வீட்டுக்காக மோற்கேஜ் கட்டிக்கொண்டுள்ளார்.

குரொய்டன் தம்பதியினரிடம் இருந்து பெற்ற 200,000 முதலீட்டுக்கான வருமானம் செப்ரம்பர் 2021இல் நின்று போனது. இது தொடர்பாக தம்பதிகள் ரெய்டன் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது இந்தா பணத்தை போடுகின்றோம் என்று சொல்லப்பட்டதேயல்லாமல் பணம் போடப்படவில்லை. மாதாந்தம் 1500 பவுண்களும் 400 பவுண்களுமாக 1900 பவுண் பணம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேசம்நெற்றை அத்தம்பதியினர் டிசம்பரில் தொடர்பு கொண்ட போது அத்தம்பதியினருக்கு கடந்த மூன்று மாதங்களாக அவர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டு இருந்தது. ரெய்டன் நிறுவனத்துடனனா அவர்களுடைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இருந்தது. “தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலில்லை. மின் அஞ்சல்கள் பதிலளிக்கப்படவில்லை. தபால்களுக்கும் பதிலில்லை. ஹரோ விலேஜ் வேயில் இருக்கும் அந்நிறுவனத்திற்கு நேரடியாகப் போனபோது அது பூட்டிக்கிடந்தது. அருகில் உள்ள பிரபலமான ரெஸ்ரோறன்ருக்கு போனால் அவர்கள் புதிய வாடிக்கையாளர்களை அங்கு வரும்படி சொல்லி சந்திப்பதாக அறிந்தோம்” என அத்தம்பதியினர் தேசம்நெற்க்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் தேசம்நெற் ராகுலன் லோகநாதன் மற்றும் அங்கு பணியாற்றியதாக சொல்லப்பட்ட அபி கணேசலிங்கம் ஆகியோரது தொலைபேசியூடாக தொடர்புகொள்ள முயற்சித்தோம் ஆனால் அது பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய முகநூலூடாகவும் அவர்களுடைய நண்பர்களுடைய முகநூலூடாகவும் தொடர்புகொள்ள முயற்சித்து அபி கணேசலிங்கம் ரகு லோகநாதனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டிருந்தோம். அந்நிலையில் அபி கணேசலிங்கம் தேசம்நெற்றை தொடர்பு கொண்டார்.

அவரிடம், முதலீடு செய்யலாம் என்று சொல்லி ரீமோட்கேஜ் எடுத்து கொடுத்து தற்போது அவர்கள் தங்கள் முதலீட்டுக்கான வருமானம் இல்லாமல் வீட்டை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அவர் உடனடியாகவே தனக்கும் ரெய்டன் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று விட்டார். அப்படியானால் நீங்கள் எப்படி பாதிக்க்பட்ட க்ளைன்ற்றோடு தொடர்பில் இருந்தீர்கள் என்று தேசம்நெற் கேட்டபோது தான் 2013 அளவில் அதில் வேலை செய்ததாகவும் தாங்கள் ரீமோட்கேஜ் போன்றவற்றை செய்து கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

அப்படியானால் பாதிக்கப்பட்டவர் எப்படி குறித்த முகவரியில் வந்து ரீமோட்கேஜ் பற்றி பேசியுள்ளார் என தேசம்நெற் கேள்வி எழுப்பியது. திரு பில்சாட் என்பவரே மோட்கேஜ் விடயங்களை கையாண்டவர் என்றார். அவரே அந்நிறுவனத்தின் பிரென்ஜைஸி எனத் தெரிவித்ததுடன் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றார். அப்படியானால் அதன் பிரென்ஜைசர் யார் (தாய் நிறுவனத்தின் உரிமையாளர்) எனக் கேட்ட போது ராகுலன் என்றார். ராகுலன் உங்கள் கணவரா? என்று தேசம்நெற் சார்பில் கேட்கப்பட்ட போது. ‘ஓம்’ என்றார் அபி.

அப்படியானல் உங்கள் கணவருடைய நிறுவனத்தில் நீங்கள் பணியாற்றி இருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்டவருடைய மோட்கேஜ் விடையத்தை நீங்கள் கையாண்டு இருக்கிறீர்கள்? என்று தேசம்நெற் தனது கேள்விகளைத தொடர்ந்தது. என்னுடைய கணவருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றி தனக்குத் தெரியாது அதனை அவரோடு தான் கதைக்க வேண்டும் என்றவர், ஆனால் தான் தனக்கு குழந்தை கிடைப்பதற்கு முன் வரை வேலை செய்ததாகவும், குழத்தைகள் பிறக்க 2013இல் வேலையை விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். நீங்கள் உண்மையைச் சொல்கிறீர்கள் இல்லை. நீங்கள் சில மாதங்களுக்கு முன் வரை மின் அஞ்சல் தொலைபேசியூடாக தொடர்பில் இருந்துள்ளீர்கள் அதற்கான ஆதாரங்கள் தேசம்நெற் இடம் உள்ளது என்று தெரிவித்ததுடன் அவருடைய கணவரை தொடர்பு கொள்ளுமாறு தேசம்நெற் கேட்டுக்கொண்டது.

இச்செய்தி எழுதப்படும் வரை ராகுலன் லோகநாதன் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அபி கணேசலிங்கம் முதலும் கடைசியுமாக அன்றைய உரையாடலின் பின் தேசம்நெற்றோடு தொடர்பு கொள்ளவில்லை. அந்த உரையாடலை அடுத்து ராகுலன் லோகநாதன் அபி கணேசலிங்கம் இருவரது முகநூல்களும் மூடப்பட்டது. அதேச சமயம் தேசம்நெற் அபி கணேசலிங்கத்துடன் உரையாடியதன் பின் பாதிக்கப்பட்ட சிலருடன் ரெய்டன் தொடர்பு கொண்டதாக தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டது.

ஆபி கணேசலிங்கம் தேசம்நெற்க்கு கூறியதற்கு மாறாக அவர் பாதிக்கப்பட்ட தம்பதியரோடு யூன் 7 2021 மற்றும் ஒக்ரோபர் 4 2021 இல் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஜனவரி 18 2021 காலை 8:23 மின் அஞ்சல் அனுப்பி உள்ளார். அதனால் அபி கணேசலிங்கம் 2013இற்குப் பின் வேலை செய்யவில்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.

கம்பனி ஹவுஸ் ஆவணங்களின் படி ரெய்டன் நிறுவனத்தின் பெறுமதி வெறும் ஒற்றைத்தான ஆயிரத்திற்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் ரெய்டனில் வைப்பீட்டுக்கு வழங்கிய முதலீடு முத்தான ஆயிரமாக இருந்தது. ரெய்டன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களிடம் வாங்கிய பணத்தை கஃப்லிங் என்ற நிறுவனத்திலேயே முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி தங்களையே முதலான தொடர்பாளர்களாகவும் ரெய்டன் பதிவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மையான முதலீட்டாளர்களுக்கும் இடையே எவ்வித சட்ட ரீதியான தொடர்பும் இல்லை.

அபி கணேசலிங்கம் இல்லாத நேரங்களில் பிரியா, மேகா ஆகிய பெயர்களில் சிலர் மின் அஞ்சலில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக பாதிக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பையும் ரெய்டன் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு என்ன ஆனாது என்று தெரியாமல் இருண்ட எதிர்காலத்தோடு தாங்கள் குடியிருக்கும் வீட்டை இழக்கும் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

ரோவின் திருவிளையாடல்கள்: தோழர் டக்ளஸ் – பரந்தன் ராஜன் முரண்பாடு மாணிக்கன் தாசன் அசோக் மீது துப்பாக்கிப் பிரயோகம் – குன்றக்குடி அடிகளாரிடம் அடைக்கலம்!!! – பாகம் 28

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 28 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 28:

தேசம்: ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் ENDLF யின் உருவாக்கம் பற்றி சொல்லி இருந்தீர்கள். அது உண்மையா நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதுல முரண்பாடு வருது தோழர் டக்ளஸுக்கும் பரந்தன் ராஜனுக்கும். அது எந்த அடிப்படையில் அந்த முரண்பாடு வருது. அரசியல் ரீதியான முரண்பாடா? தனிநபர் பிரச்சினையா? அல்லது ஆளுமை சம்பந்தமான போட்டியா? ஏன் இந்த முரண்பாடு?

அசோக்: முதன்முதல் டக்ளஸ் தோழருடன் நாங்கள் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக கதைக்கும் போது அவர் கேட்டவர் ராஜன் இதுகுள்ள வாறாரா என்று. நாங்கள் சொன்னோம் அவருடன் நாங்கள் கதைத்திருக்கிறோம். அவங்களோட தோழர்கள் நிறைய பேர் வெளியேறிட்டாங்க. அவங்களையும் உள்வாங்க வேண்டும் என்று நோக்கம் இருக்குது. அவங்களுடனும் நிறைய நல்ல சக்திகள் இருக்கிறார்கள்.

அப்போ அவர் சில விமர்சனங்கள் வைத்தவர் ராஜனை பற்றி. சிறைக்குள் நடந்த பிரச்சனைகள் பற்றி…

தேசம்: இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு முதலே…

அசோக்: இல்ல. வெலிக்கடை சிறையில இவங்க எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். அப்போ அங்க புளொட்டில் இருந்த மாணிக்கதாசன், ராஜன் ஆட்கள் எல்லாம் நடந்துகொண்ட முறைகள் தொடர்பாக கடும் விமர்சனம் வைத்தார். அங்கேயே அவங்களுக்கு முரண்பாடு தொடங்கி விட்டது. அந்த முரண்பாடு தனிநபர் முரண்பாடாக கூர்மை அடைந்து விட்டது. அப்போ அவர் சொன்னார் சிக்கலாக இருக்கும் காலப்போக்கில் என்று.

அப்போ நாங்க சொன்னோம் தனிநபர் முரண்பாட்டுக் அப்பால் சுமூகமாக அமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்றும் முரண்பாடுகள் வராமல் நாங்கள் பொறுப்பு நிற்கிறோம் என்றும், அந்த முரண்பாடுகள் வராம இருக்க அதற்கான எல்லா பொறுப்புகளையும் நாங்கள் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவர் அமைப்பிற்குள் வந்தவர்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கை தொடர்பான விடயங்களில் கவனம் கொள்ளத் தொடங்குகிறது. காலப்போக்கில் இலங்கையில் இந்திய இராணுவத்தை இறக்கும் எண்ணம் உருவாகிறது. இதற்காக சில இயக்கங்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்க முடிவு பண்ணுகிறது. எங்களையும் அணுகுகிறது. நாங்களும் பயிற்சிக்காக செல்கிறம். பயிற்சி முடிந்து ஒரு மாதம் கழித்து சென்னை வந்து பார்த்தால் டக்ளசிக்கும் ராஜனுக்கும் முரண்பாடு கூர்மைடைந்து இருந்தது.

தேசம் : என்ன காரணத்தால் இந்த முரண்பாடுகள் ஏற்படுகிறது?

அசோக்: அந்தத் தனி நபர் முரண்பாடு இதுகுள்ள வந்து ஆளுமை செலுத்த தொடங்கிட்டுது. நாங்கள் அமைப்பு தொடங்கினதற்கு பிறகு பல்வேறு அரசியல் சக்திகள் இந்திய அரசு, ஏனைய அரசியல் தொடர்பான உறவுகளை, உளவுத்துறைகள் போன்ற அந்த உறவுகளை கமிட்டி மூலமாக அணுக வேண்டும் என்பதுதான் எங்கட விதி முறை.

ஏனென்றால் தனித்தனியாக அணுகினால் அவர்கள் தனித்தனியாக எங்களை கையாள வெளிக்கிடுவார்கள். உளவுத்துறை எப்பவுமே தனி நபர்களை வைத்து தான் எதையும் செய்கிறது. நாங்கள் அவர்களால் வாங்கப்படுவதே எங்களுக்கு தெரியாம இருக்கும். புளொட்டிலிருந்து தனி நபர்களாக உளவுத்துறைகளோடு உறவு வைத்திருந்தவர்களை குறிப்பாக ரோ எப்படி பயன்படுத்தியது எங்களுக்கு உள்ள படிப்பினைதானே. அதே தவறையும் ஆபத்தையும் மீண்டும் நாம் விடக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருந்தம். இனிமேல் வந்து உளவுத்துறை தொடர்பாக ரோ, இந்திய பொலிஸ் துறை, ஐபி, கியூ பிரான்ச் போன்றவற்றோடு தனிநபர்கள் கதைக்கக் கூடாது என்று. அப்படியே அவங்க தனிநபரை கூப்பிட்டாலும், கமிட்டியில் முடிவெடுத்துப் போட்டு தான் போய் கதைக்க வேண்டும் என்று சொல்லி முடிவெடுத்திருந்தோம்.

இரரணுவக்கமிட்டி, அரசியல் கமிட்டி இணைந்து முடிவுகளை எடுக்கும்.எந்த சந்திப்புக்களும் தனிநபர் சார்ந்து இருக்கக் கூடாது என்பது எங்கட தீர்மானம். அவங்கள் வடிவாக தனிநபர்களை கையாளத்தொடங்கிட்டாங்க. ராஜனைத் தனிய சந்திக்கிறது, டக்ளஸை தனிய சந்திக்கிறது, உங்களுக்கு தனிய ஆம்ஸ் தாறம் என்கிறது. இப்படி இவர்கள் கையாண்டவுடன் அது பெரிய முரண்பாடாக போய்விட்டது.

ஒரு தடவை ஒரு தொகுதி ஆம்ஸ் தாறம் என்று தனியா ராஜனுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்ஸ்சும் கொடுத்து விட்டார்கள். இது டக்ளஸ் தோழருக்கு தெரியாது. தெரிந்தவுடன் பிரச்சனையாகி விட்டது. எங்களுக்கு இந்தப் பிரச்சினையெல்லாம் பயிற்சிமுடித்து வந்தபின்தான் தெரியவருகிறது.

இந்த முரண்பாடுகள் பற்றி ராஜனோடு பேசுகிறோம். எந்த முடிவும் தனிநபராக எடுக்கமுடியாது கமிட்டிதான் முடிவு பண்ணவேண்டும் என்று.

மிலிட்டரி கொமிசாரில் கதைக்கப்பட்டு நாங்கள் ஆயுதம் வாங்குவதா இல்லையா என்று தீர்மானத்துக்கு வர வேண்டும் என்று சொல்கிறோம். இந்த முரண்பாடு கூர்மையடையுது. ராஜனுக்கு எங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை சுமூகமாக நடக்கல. அப்போ நாங்கள் சொல்லுறோம் நாங்கள் வெளியேறுகிறோம் என்று. அதுக்கு முதல் இந்த காலகட்டத்தில் டக்ளஸ் தோழர் வெளியேறிட்டார். இதைப் பற்றி நாங்கள் ராஜனிட்ட கதைக்கும் போது ராஜனுக்கும் எங்களுக்கும் இந்த முரண்பாடு வருகிறது.

தேசம்: இது நான் நினைக்கிறேன்… நீங்கள் அறிக்கைவிட்டு ஒரு சில வாரங்கள் அல்லது நாட்கள்…

அசோக்: எங்களுக்கும் ENDLF க்குமான உறவுக்காலம் காலம் 6 மாதம் 7 மாதம் இருக்கும். அதுக்குள்ள முரண்பாடு வந்து நாங்கள் வெளியேறிட்டம்.

தேசம்: ஒருவகையில் அது நல்லம் என்று பார்த்தால் முதல் உமாமகேஸ்வரன் புளொட்டுக்குள்ள நடந்தவைகளை பார்க்கும்போது எவ்வளவு முன்னுக்கு அந்த பிரிவு முரண்பாடு நடக்குதோ அதால ஏற்படும் இழப்புகளும் குறைவு. இதே மாதிரியான பிரச்சனையை ஆரம்பத்திலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு பெருந்தொகையான தோழர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் அந்த வகையில இது ஓரளவுக்கு பரவாயில்லை என்றும் பார்க்கலாம்.

அசோக்: அதுல ஒரு நல்ல பண்பு என்ன என்று கேட்டால் நாங்கள் ராஜனுடன் கடுமையான முரண்பாடு வாய்த்தர்க்கம். நாங்கள் வெளியேறிய பின்னர் அதற்குப் பிறகு எங்கள் மீதான நடவடிக்கைகளோ தேடுதலோ குற்றச்சாட்டு எதுவுமே ராஜன் வைக்கேல. மிக கௌரவமாக அவரும் விலகிக்கொண்டார். நாங்களும் விலகிக் கொண்டோம். பிறகு ENDLF என்ற பெயரை தாங்களே எடுத்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகு தோழர்களை அடிக்கடி சந்திப்பேன். எந்த முரண்பாட்டையும் நாங்கள் வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. நாங்கள் விலகிக் கொண்டோம். ஜனநாயக பூர்வமாக விலகிக் கொண்டோம்.

காலப்போக்கில் டக்ளஸ் தோழருக்கு நெருக்கடி வருகிறது. சூளைமேடு பிரச்சினை …

தேசம்: சூளைமேட்டில் என்ன பிரச்சினை?

அசோக்: சூளைமேடு சூட்டிங் பிரச்சனை இவர் மீது தான் குற்றம்சாட்டப்பட்டது. அந்த பிரச்சனையில் எல்லாம் மிக அழுத்தம் இருக்கிறது. அப்போ அவங்களுக்கு இந்தியாவில் தொடர்ந்து இருக்க முடியாத சூழல். எப்படியோ அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வேற இடத்துக்கு போக வேண்டும். அடுத்தது தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருக்கு. கட்டின அமைப்பும் சீர்குலைந்து போய்விட்டது. அப்போ நாட்டுக்கு போக வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

தேசம்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எண்பத்தி ஆறு கால கட்டத்தில்தான் இது எல்லாம் நடக்குது.

அசோக்: எண்பத்தி ஆறு கடைசி காலகட்டத்தில்.

தேசம்: அப்போ அங்காள எண்பத்தி ஏழில் இந்திய ராணுவம் அங்க போகுது.

அசோக்: ஓம் அதற்கு முதல் தான் இது நடக்கிறது. அப்போ அவருக்கு இலங்கைக்குப் போய் அரசியல் செய்கின்ற நோக்கமெல்லாம் இருக்கிறது.

தேசம்: இந்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை ராஜன் எடுத்த பிறகு, அந்த காலகட்டத்திலேயா ஈபிடிபி உருவாக்கப்பட்டது?

அசோக்: இல்லை இந்த காலகட்டத்தில்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ன செய்கிறது என்று. இலங்கைக்கு போய் அரசியல் செய்கிற நோக்கமாக அசோக் சந்திரகுமார் 4- 5 பேரை இலங்கைக்கு அனுப்பி அதற்கான ஒரு பேச்சுவார்த்தை களத்தை உருவாக்குகிறார். உருவாக்கின பிறகு இவங்க தீர்மானிக்கிறார்கள் அங்கே போக வேண்டுமென்று. அப்போ அவர் எங்களையும் தங்களுடன் வந்து சேர சொல்லி கேட்கிறார். அதுல நான் மிக கவனமாக இருந்தேன். நான் சொன்னேன் எனக்கு உடன்பாடில்லை எனக்கு இந்த அரசியல் இனி வேண்டாம். நான் ஒதுங்கி இருக்கலாம் என்று.

பிறகு நான் தோட்டம் போட்ட வரலாறு வேற. என்னோட ஒரு 10 – 15 தோழர்கள் வந்துட்டாங்க. அவங்களை நான் காப்பாற்ற வேண்டிய தேவை வந்துவிட்டது. அந்த அடிப்படையில் நான்… அந்த வரலாறு வேற வரலாறு.

தேசம்: ஈபிடிபி ஒரு அறிக்கை விடுதா அந்த காலகட்டத்தில்?

அசோக்: ஓம் அது என்ன நடந்தது என்று கேட்டால், தோழர் ஈஸ்வரன் அவர் இங்கே இருந்து டக்ளஸ் தோழருடன் கதைக்கும்போது டக்ளஸ் தோழர் கேட்டிருக்கிறார் இப்படி ஒரு அமைப்பு ஒன்று தொடங்கப் போகிறோம் நீங்கள் சப்போர்ட் பண்ணுவீங்களா என்று. ஓம் என்று சொல்லியிருக்கிறார் போல. அதை டக்ளஸ் தோழர் தான் சொன்னார் அவர் ஓம் என்று சொன்னவர் என்று.

தேசம்: உங்களை கேட்கும்போது நீங்க மறந்துட்டீங்க…

அசோக்: நான் கிளியரா மறுத்துட்டேன். ஈஸ்வரன் தோழர் ஓகே பண்ணிட்டார் என்று தோழர் சொல்லுறார். ஈஸ்வரன் இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு நாட்டுக்கு போயிட்டார். அங்க புளொட்டால கடுமையாக தேடப்பட்ட உடனே அவர் மலையகத்துக்கு போயிட்டார். மலையகத்தில் போய் தலைமறைவாக இருக்கிறார். தம்பா என்று ஒரு தோழர். நல்ல அருமையான தோழர். டெசோவில் இருந்தவர். எல்லாருக்கும் உதவி செய்கிற தோழர். அவர் அங்க அரசாங்க தொழில் பார்த்துக் கொண்டிருந்தவர். அவருடைய பாதுகாப்பில் ஈஸ்வரனும் 4 – 5 தோழர்களும் தங்கிவிட்டார்கள்.

அந்த நேரத்தில்தான் தோழர் கொழும்பில போய் ஈபிடிபிய உருவாக்கி ஈபிடிபி சம்பந்தமாக ஒரு அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் ஈஸ்வரன் தங்களோட இருக்கிறார் என்று அந்தக் கமிட்டியில் ஈஸ்வரனின் பெயரும் வருகிறது. அப்போ ஈஸ்வரன் தலவாக்கலையில் இருக்கிறார். இந்த அறிக்கைகள் எல்லாம் பத்திரிகையில் வந்தவுடன் ஈஸ்வரன் பார்த்துட்டு மறுப்பறிக்கை விடுகிறார். தனக்கும் ஈபிடிபி க்கும் தொடர்பு இல்லை என்று. அப்பதான் அந்த சிக்கல் வருகிறது.

தேசம்: ஈபிடிபியின் உருவாக்கத்தில் உங்களுக்கு எந்தவிதமான பங்களிப்பும் இல்லை…

அசோக்: இல்லை இல்லை. அது அவங்கட சொந்த உருவாக்கம். அவர்களுடைய முயற்சி. என்னை இணயுமாறு கேட்டது அவ்வளவுதான். ஈஸ்வரன் சொன்னார் தான் முதலே மறுத்தது என்று. அவங்களுக்குள்ள நடந்த உரையாடல் எனக்கு தெரியாது.

தேசம்: இப்ப தோழர் கிட்டத்தட்ட உங்கட தள மாநாடு அதுக்குப்பிறகு மத்திய குழு, பின்தள மாநாடு எல்லாம் முடிந்து ஒரு ஸ்தம்பித நிலைக்கு வந்த தான் இலங்கையில் நிறைய அரசியல் மாற்றங்கள் நடக்குது. இந்தியா விடுதலை புலிகளின் தாக்குதலை முடுக்கிவிட்டு இந்திய ராணுவம் இலங்கைக்கு இறங்குது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுக்கு முதல்ல ஈழம் தேசிய ஜனநாயக முன்னணி என்று சொல்லி ஒரு கூட்டு உருவாக்கப்பட்டது தானே. அதுல புளொட், விடுதலைப் புலிகள், டெலோ, ஈபிஆர்எல்எஃப் போன்ற அமைப்புகள் இணைந்த ஒரு கூட்டு முண்ணனி உருவாகியதே…

அசோக்: அது வந்து 84 கடைசியில். ஈழ தேசிய ஜனநாயக முன்னணி – ENLF என்ற பெயரில் எல்லா இயக்கங்களையும் இணைத்து ஐக்கிய முண்ணனி ஒன்றை உருவாக்கும் நோக்கத்தோடுதான் தொடங்கப்பட்டது.

தேசம்: அதுல நீங்கள் ஈடுபடலையா?

அசோக்: நாங்கள் தளத்தில் தானே. பின் தளத்தில் புளொட் இந்த ஐக்கிய முண்ணனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் உருவாக்கத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தது தோழர் முகிலன் என்று சொல்லி இப்போது பரிசில் இருக்கிறார். ஈரோஸ் தோழர். அவர்தான் அந்த கமிட்டியில் ஒருங்கிணைக்கிற செயலாளரா இருந்தவர்.

அதற்கு முதல் என்ன நடந்தது என்று கேட்டால் ஒவ்வொரு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போ புளொட்டுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதேநேரம் புலிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. புளொட் சொன்னது தாங்கள் புளொட் என்ற அமைப்பு வரும்போது ரெலா (TELA – Tamil Eelam Lebaration Army – ஒவ்ரோய் தேவன் தலைமையில் இயங்கிய புளொட்டின் துணை இராணுவக்குழு) என்ற அமைப்பையும் உள்ள சேர்க்க வேண்டும் என்று சொல்லி. அவங்க சொல்லிட்டாங்க ரெலா வை சேர்க்க இயலாது அதை அமைப்பாக அங்கீகரிக்க இயலாது, ஐந்து முக்கிய அமைப்புகள் மாத்திரம்தான் அதுக்குள்ள வரலாமென்று, புளொட், எல்ரீரீஈ, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், அடுத்தது ரெலோ அமைப்பு. இந்த முரண்பாடுகளால் புளொட் ENLF இணைப்பில் சேரவில்லை.

தேசம்: இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்குப்பிறகு அதுக்கு முதல் உங்களை தனிப்பட்ட முறையில் கேட்கிறேன். நீங்கள் ஈபிடிபி கூட போகவில்லை. ஈ.என் டி எல் எஃப் கூட போகல. தீப்பொறியோட போகல. என்ன விஷயம் உங்களைத் தடுத்தது. நீங்கள் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு வரைக்கும் அரசியல் செயற்பாடுகளில் ஏதோ ஒரு வகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இந்த அமைப்புகளுடன் போகல. ஈபிடிபியோடோ, ஈஎன்டிஎல்எஃப் கூட போகாததற்கு ஒரு காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். சில நேரம் அவர்களின் தலைமையில் அரசியல் சித்தாந்தம். தீப்பொறியோடு ஏன் நீங்கள் போகல?

அசோக்: எனக்கு இயல்பாகவே தனிப்பட்ட உறவுகள் எல்லோரிடனும் இருந்தது. ஆனால் அவர்களுடைய அரசியல் தொடர்பாக ஆளுமை தொடர்பாக சந்தேகம் இருந்தது. ஏனென்றால் எல்லா தோழர்கள் மத்தியிலும் தங்களுடைய தவறுகளை ஏற்றுக்கொண்டு சுய பரிசீலனை செய்கிற போக்கு எப்பவுமே இருந்ததில்லை. அது டக்ளஸ் தோழராக இருந்தால் என்ன, ராஜன் ஆக இருந்தால் என்ன, ரகுமான் ஜானாக இருந்தால் என்ன நான் உட்பட. இந்தப் பண்பு இருக்காதவரைக்கும் தலைமைத்துவத்துக்கான எந்த அடிப்படையும் அவங்களிடம் இருக்காது. முதல் சுய விமர்சனம், விமர்சனம் எங்களுக்கு அவசியம். அது இருந்தால்தான் தலைமைக்குரிய குணாம்சம் வழிகாட்டியாக இருக்க முடியும்.

எனக்கு தெரியும் எல்லார்கிட்டயும் தங்களுடைய அதிகாரத்துக்கான போட்டி இருந்ததேயொழிய மக்கள் விடுதலைக்கான அமைப்பை உருவாக்கும் நோக்கம் யாரிடமும் இல்லை என்று. ஒரு வரலாறு ஒன்று இதுக்குத்தானே எல்லோருக்கும். இப்ப டக்ளஸ் தோழருடன் எனக்கு நெருக்கம் இருக்கு. ஆனா டக்ளஸ் தோழரின் அமைப்பை நம்பி போகவில்லை. ஏனென்றால் அந்த நேரத்தில் அமைப்புக்கள் அதன் தலைமைகள் மக்கள் விடுதலைக்கான எந்த வொரு முற்போக்கான கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கொண்டு இயங்க தயாராக இருக்கல்ல. இந்த புதிதாக உருவாகும் அமைப்புக்களும் அதே நிலைதான். எந்த வித்தியாசமும் இல்லை.

எங்களுக்கு படிப்பினையும், அனுபவமும் இருக்குத்தானே, எல்லாம் ஒரு பவர் பொலிட்டிஸ். மீண்டும் மீண்டும் நான் தவறுவிட விரும்பவில்லை. அதுக்குள்ள நான் போக விரும்பல. நான் நூறு வீதம் நல்லவனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை எனக்கு. குறைந்தபட்சம் வாழ்க்கையில் ஒரு 50 வீதம் ஆவது நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி ஒரு 50 வீதம் மக்களுக்கு சேவை செய்கிற நோக்கமாக அமைப்பு இருந்திருந்தால் நான் போய் இருப்பேன். சில நேரம் என்னுடைய கணிப்பு பிழையாக இருக்கலாம். அதைவிட அவங்க நேர்மையான ஆட்களாக இருக்கலாம். ஆனால் என்னுடைய கணிப்பு அப்படித்தான் இருந்தது.

நாங்களும் வரலாற்று ரீதியாக ஒவ்வொரு ஆளையும் பார்த்துக்கொண்டு வாறம். எவ்வளவுதான் தனிப்பட்டவகையில் நல்ல மனிதர்களாக இருந்தாலும் அதிகார ஆசை தவறான திசைக்கு அவங்களை கொண்டு போய் விடுகிறது. இதே தவறை நான் தொடர்ந்து விட இயலாது. இதுவரை சந்தித்த கசப்பான அனுபவங்கள் தோல்விகள், வீழ்ச்சிகள் பற்றிய ஆய்வும், விமர்சனங்களும், என்னைப்பற்றிய சுயவிமர்சனங்களும் கட்டாயம் அவசியம். என்னை நானே குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காலம் அது. தொடர்ந்து தொடர்ந்து எங்களது கணிப்புக்கள் எதிர்பார்ப்புக்கள் தோல்விதானே கண்டது. மீண்டும் இதே தவறை நான் விட விரும்பவில்லை.

அந்த நேரத்தில எனக்கு அதிகார அரசியல் பற்றிய நிறைய அச்சம் இருந்தது. உண்மையில் பார்க்கப் போனால், அதிகாரம் கிடைக்க முன்னர் எல்லா மனிதர்களும் நல்லவங்களாத்தான் இருக்காங்க. முகுந்தனோ, ராஜனோ ஆரம்பத்தில் நல்லவங்கதான். அதிகாரம் கிடைக்கும்போது பிழையான மனிதர்களாக மாறிப் போறாங்க. இது தோழர் டக்ளசிக்கும் பொருந்தும். அதனால டக்ளஸ் தோழரோடு சேர்ந்து பின் முரண்பட நான் விரும்பவில்லை.

அடுத்தது என்னை நம்பி வந்த தோழர்களையும் திரும்பி அனுப்பி அவங்களுடைய பாதுகாப்பை, வாழ்க்கைக்கான பதிலை நான் தான் சொல்ல வேண்டும். அப்போ என்னோடு வந்த 10 – 15 தோழர்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவது தான் என்னுடைய கடமையாக இருந்தது. அந்த வெளியேறிய காலகட்டத்தில் தமிழ்நாட்டுத் தோழர்கள் நிழல் திருநாவுக்கரசு, செம்பியன், ஏழுமலை போன்றவங்க நிறைய உதவி செய்தாங்க. மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்போ நீங்கள் முதல்ல சந்ததியர் வெளியேறும் போதோ நீங்கள் வெளியேறாமைக்காண முக்கியமான காரணம் உங்களை நம்பி வந்த தோழர்களா?

அசோக்: அது முக்கியம் தானே. போராட்டம் இயக்கம் பற்றிய எல்லாம் தோழர்களுக்கு நம்பிக்கை கொடுத்தவன் என்ற அடிப்படையில் என்னை நம்பி இயக்கத்திற்கு வந்த தோழர்களை கைவிட்டு நான் எப்படி செல்லமுடியும். முகாமில் இருந்து ட்ரெய்னிங் எடுத்தவர்கள். அவங்க என்னோட வெளியேறி வந்துட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் தானே. அவங்களை காப்பற்ற வேண்டும். அவங்களுடைய பாதுகாப்புக்கான வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை கொடுக்க வேண்டும்.

நான் மட்டும் தப்பிப் போய் வெளிநாட்டுக்கு வந்து வாழுறதில் அர்த்தம் இல்லை தானே. ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் போராட்டத்திற்கு வந்திட்டம். இந்த போராட்டத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் கடைசி வரைக்கும் போராட வேண்டும். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சரியான வழியில் கொண்டு போக வேண்டும் இல்லாதபட்சத்தில் கடைசி வரைக்கும் நம்பி வந்த தோழர்களுக்கான உயிர் பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதுதான் என் நோக்கமாக இருந்தது. என்னோடு வெளியேறிய தோழர்களுக்காக கடைசி வரைக்கும் நான் அவங்களோடு இருந்தேன். வெளி நாடு வருவதற்கான பல வாய்ப்புக்கள் எனக்கு வந்தன. நான் எப்பவோ வந்திருக்கலாம்.

தேசம்: அமைப்புக்குள்ள நீங்கள் உள்வாங்கின பெரும்பாலான ஆட்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிட்டீங்க. எப்படி தளத்திலிருந்து 17 பேர் வந்து இருக்கிறீங்க நான்கு மத்திய குழு உறுப்பினர்கள் மற்றது உங்கட கிராமங்களில் இயக்கத்துக்கு உள்வாங்கின பல தோழர்கள் இருந்திருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் பிறகு என்ன நடந்தது.

அசோக்: தளத்திலிருந்து வந்த அந்த தோழர்கள் ஓரளவு வளர்ந்தவர்கள் தங்கள் தங்களுக்கான வாழ்க்கையை அவங்களே தேடிக் கொண்டார்கள். எங்க கிராமத்து தோழர்களும் தனியாக சென்று பாதுகாப்பான ஒரு இடத்தில் வீடு எடுத்துதங்கி இருந்தாங்க. என்றாலும் எல்லோரும் பின் தளத்தில் மிகவும் கஷ்டம்தான் பட்டோம். தெரிந்தவர்கள், தமிழ்நாட்டு நண்பர்கள், முன்னர் வெளியேறி சுயமாக தங்கி இருந்த புளொட் தோழர்கள் என்றுபலரும் உதவி செய்தாங்க.

தேசம்: வந்த 17 தோழர்களில் தளத்துக்கு போகாமலே…

அசோக்: புலிகளின் கெடுபிடி இருந்த காலம் அது. தளத்துக்கு பல தோழர்கள் போகவில்லை. பிறகு குமரன் போனவர். அவர் விடுதலைப் புலிகளால் அரெஸ்ட் பண்ணப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். ஈஸ்வரன் தோழர் நாட்டுக்கு போனவர். மத்தவங்க எல்லாரும் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அடுத்தது நாங்கள் ராஜனிட்ட இருந்து வெளியேறின போது தோழர்களிடம் சொன்னம் நீங்கள் வெளியேற வேண்டாம் என்று. எங்களோடு வருவதை விட ராஜனோடு இருக்கிறது பாதுகாப்பு. உயிர் பாதுகாப்பு. நாங்கள் ராஜனுடன் முரண்பட்டு வெளியேறும்போது நீங்கள் வெளியேற வேண்டாம் என்று சொல்லி விட்டோம். நீங்கள் வந்தீர்கள் என்றால் எங்களால் பாதுகாப்பு தர முடியாது. அப்போ நீங்கள் அங்க இருந்து கொண்டு நாட்டுக்கு போவதற்கான முயற்சியை செய்யுங்கள். என்று. நாங்களும் அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம். சரி வரும்போது சொல்லுகிறோம் வாருங்கள் என்று.

அப்படி இருந்தும் ஒரு 10 -15 தோழர்கள் எங்களுடன் வந்து விட்டார்கள். ராஜனும் பாதுகாப்பாக நிறைய தோழர்களை அனுப்பி வைத்தார். ஈ.என்.டி.எல்.எஃப் உருவாகி இந்திய ராணுவம் வந்தபோது நாட்டுக்கு போயிட்டாங்க தானே. எங்களோடு வந்த தோழர்கள் அவ்வளவு பேரையும் மிகப் பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பினோம். சில தோழர்களை படிப்பித்தோம். தோழர் அர்ச்சுனா ஜெகநாதன் என்னோடு துணையாக இருந்தார். பிறகு ஊருக்கு போயிட்டாங்க. எல்லாரையும் அனுப்பிட்டுத்தான் கடைசியாக நான் வந்து கப்பல் ஏறுகிறேன்.

தேசம்: எத்தனையாம் ஆண்டு அது…

அசோக்: 92 நடுப்பகுதி…

தேசம்: இது எண்பத்தி ஆறு கடைசி பகுதி நடக்குது. பிறகு 87 இருந்து நான்கு ஆண்டுகள்…

அசோக்: ஏனென்றால் நிறைய தோழர்கள் உடனடியாக போக முடியாது தானே. அவங்களை வைத்து தோட்டம் ஒன்று போட்டு… அந்த வாழ்க்கை என்பது சரியான கஷ்டம். மிகவும் மோசமான மன உளச்சல் கொண்ட காலம் அது. பொருளாதார ரீதியாக சரியாக கஷ்டப்பட்டோம். அப்போ தோட்டம் போட்டு ஒரு கொப்பரேடீவ் மாதிரி கூட்டுறவு கூட்டுப்பண்ணை போட்டு அந்த கிராம மக்களோடு வாழ்ந்து அது வேறு ஒரு அனுபவம். காணி பாதர் ஒருவர் தந்தவர். பொருளாதார வசதிகளையும் அவரே தந்தவர். இப்படி கொஞ்ச நாள் கழிந்தது.

ரா ஜீவ் காந்தி படுகொலையோடு எங்களுக்கும் பொலிஸ் நெருக்கடி வந்துவிட்டது.

தேசம்: அதற்குப் பிற்பாடு எண்பத்தி ஆறு காலப்பகுதியில் நீங்கள் வெளியேறின பிற்பாடு அமைக்கப்பட்ட புளொட் அமைப்பு இருக்குதானே அதில் நீங்கள் சார்ந்த யாராவது இருந்தார்களா. அல்லது இப்பவும் இருக்கினமா யாரும் சொல்லக் கூடியவர்கள்…

அசோக்: அதுல ஆனந்தி என்றொரு தோழர் இருக்கிறார். ஆரம்ப காலதோழர். புளொட்டில் இப்பவும் இருக்கிறார். நல்லவர். தானும் தன் பாடும். சமீபத்தில் புளொட் தோழர் ஒருவரோடு பேசிய போது ஆனந்தி புளொட் வரலாறு எழுத தொடங்கி உள்ளதாக சொன்னார். புளொட்டில கடைசி வரை இருந்து புளொட்டை பயன்படுத்தி, எல்லா தவறுகளுக்கும் உடந்தையாக இருந்துபோட்டு தனிப்பட்டபிரச்சனையால் வெளியேறி இன்று புளொட்டைபற்றியும் புளொட்தோழர்களைப் பற்றியும்மிக மோசமாக எழுதும் ஆட்கள்பற்றியும் அவங்கட உண்மை முகம் வெளிவரும் என்றார்.

தேசம்: ஆனந்தி எதில் எழுதுகின்றார்?

அசோக் : அவர் இப்பதான் எழுத தொடங்கி உள்ளார் என நினைக்கிறன். எதில் வருமோ தெரியவில்லை. அவர் எழுதுவது நல்லது. புளொட்டின் உள்ளும் புறமும் அவருக்கு தெரியும்.

தேசம்: அது நீங்கள் அந்த நான்கு ஆண்டு காலப்பகுதியில் புளொட்டால எப்படியான பிரச்சினை வருது..

அசோக்: நாங்கள் வெளியேறி ENDLF உருவாக்கிய காலத்தில் ஒரு நாள் நானும் ஆதவன் தோழரும் வீதியால் போய்க் கொண்டிருக்கும் போது மாணிக்கதாசன் ஜீப்பில் வந்து வெருட்டி எங்களை ஃபுல்லா வளைச்சாச்சு சுடுவதற்கு தயார். 5 – 6 பேர் ஜீப்ல வந்தார்கள். எங்ககிட்ட ஒன்றுமே இல்லை. நாங்க சைக்கிள்ல போனாங்க. அப்போ சத்தம் போட ஊர் ஜனங்கள் எல்லாம் வந்து வந்துவிட்டாங்க. அவங்க எல்லாம் வந்து பிரச்சினைபட்டவுடன் இவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போய்விட்டது. அப்போ எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள் எங்கேயாவது நடமாடுவதை கண்டால் வெடி வைப்போம் என்று.

அப்போ எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. பிறகு நான் தோழர் கண்ணனுடன் இது பற்றி கதைக்க அவர் சொன்னார் நீங்கள் ஒருக்கா ஆபீஸ் வாங்க வாசுதேவா, ஆனந்தி ஆட்களோடும் இதுபற்றி கதைக்க வேண்டும் என்று ஒரு டேட் தந்தார். ஒரு பின்னேரம் வரச்சொல்லி. அப்போ நான், ஈஸ்வரன், ஆதவன், பாபுஜி நான்கு பேரும் கதைக்கிறதுக்கு போனோம். அங்க கண்ணன் இல்லை. அந்த நேரம் டெலிபோன் கம்யூனிகேஷன் இல்லைதானே. முதலில் சொன்னதை அதை நம்பித்தான் போனோம். ஆனா அங்க இல்லை. நாங்க திரும்பி வந்துட்டோம். காரில் ஏறப் போக மாணிக்கதாசன் என்ன செய்திருக்கிறார் என்றால் அங்க ஆபீசுக்கு முன்னால மல்லிகை கொடி படர்ந்து போயிருந்தது. அதுக்குள்ள போய் ஒளித்து இருந்திருக்கிறார். எங்களுக்கு தெரியாது.

காரில் ஏறும்போது பட பட படவென வெடி. முதல் வெடி எனக்கு விழுந்துட்டுது. நான் கீழ விழ மற்றவர்களும் விழுந்துட்டாங்க. இல்லாவிட்டால் எல்லோருக்கும் வெடி பட்டிருக்கும். எனக்கு ரெண்டு இடத்துல வெடி. தொடர்ந்து வெடி நடக்குது. நாங்க தற்பாதுகாப்புக்கு ஆயுதங்கள் கொண்டு போனாங்க. காருக்குள்ள இருந்தது. உடனே ஒரு தோழர் எடுத்து திருப்பி சுட்டார். சுட்டதும் அடங்கிப் போய்விட்டது. மாணிக்கதாசன் சுடுவதை விட்டுட்டார். நான் காயப்பட்டு விட்டேன். நான் ஆஸ்பத்திரிக்கு போயிட்டேன். எனக்கு பிறகுதான் தெரியும் நாங்கள் தற்காப்புக்கு திருப்பி சுட்டு ஒரு அப்பாவி தோழர் அவருக்கு வெடி. அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டுவர அவர் இறந்துவிட்டார். பாவம் அவர் வேற எங்கேயோ நின்றிருக்கிறார் துப்பாக்கி சன்னம் போய் அவரில பட்டிட்டு.

தேசம்: அவர் உங்கள் மீது தாக்குதல் நடத் தினவரா?

அசோக்: இல்லை இல்லை. அவர் அருமையான தோழர். மாணிக்கதாசன் தான் சுட்டது. அவருக்கு தெரியாது தானே. அவர் அங்காள நின்றபோது அவருக்கு வெடி பட்டுவிட்டது. அவர் காயப்பட்டிருந்தவர். அருமையான தோழர். அவர் பாவம்.

தேசம்: என்ன பெயர்?

அசோக்: அவரோட பெயர் மறந்துட்டேன். அமுதன் பெயர் என நினைக்கிறேன். பிறகு நான் ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலப் போக்கில் பிறகு என்னால் நடக்க முடியாமல் போய்விட்டது. கொஞ்ச காலத்தில் நான் படுத்த படுக்கையாகி விட்டேன். பிறகு திருப்பத்தூரில் சுவிடிஷ் மிசனரி ஹாஸ்பிடல் இருக்கு. அங்க போனேன்… அங்க சொன்னாங்க நீங்கள் பக்கத்திலே பிள்ளையார்பட்டியில் சித்த ஆயுள்வேத ஆஸ்பத்திரிக்கு போங்க என்று சொல்லி அவங்கதான் சிபாரிசு செய்கிறார்கள்.

அங்க போனதும் அது குன்றக்குடி அடிகளாருடைய நிர்வாகத்தின் கீழ் அந்த வைத்தியசாலை நடக்குது. . சுமார் ஒரு வருஷம் நான் அங்கே இருக்கிறேன். அதுக்குப் பிறகுதான் நான் நடக்க முயன்றேன். அந்த காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளாரின் மகள் மங்கையர்க்கரசி அக்கா குடும்பம்தான் என்னை பராமரித்தாங்க. அந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் கோவிந்தசாமி அவர்கள் என் மீது அக்கறை கொண்டு மிகவும் அன்பாக வைத்தியம் செய்தாங்க. எல்லாம் இலவசமாகவே செய்தார். இவை எல்லாம் மறக்க முடியாத உதவிகள்.

தேசம்: அப்பதான் உங்களுக்கு அவர்களுடன் தொடர்பு வருதா…

அசோக்: இல்லை முதலே தெரியும் இயக்கத்துக்கு நிறைய உதவி செய்து கொண்டிருந்தவர்கள்.

தேசம்: எப்படி அந்த உறவு வந்தது…

அசோக்: குன்றக்குடி அடிகளார் அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அக்கறை கொண்டு செயற்பட்டவர். குன்றக்குடி அடிகளாரை பொருத்தவரையில் அவர் ஒரு ஆன்மீகவாதி. அதே நேரம் பெரியாருடைய மேடைகளில் பெரியாருடைய கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்து துணிந்து பேசும் நபராக இருந்தார். ஒரு பக்கம் ஆன்மிகம். இன்னொரு பக்கம் மாக்சிசம். அவருடைய அறைக்க போனீங்க என்றால் கால் மாக்ஸ், லெனின் எல்லாம் இருப்பார்கள். மார்ச்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அவருடைய மகள்தான் மங்கையற்கரசு அக்கா. அவர் கணவனும் எஙகளுக்கு நிறைய உதவிகள் செய்தவர். அவர் ஒரு பேராசிரியர்.

தேசம்: குன்றக்குடி அடிகளார் ஒரு வீரசைவர் பரம்பரை அப்படியா?

அசோக்: வீர சைவர் ஆக இருக்க முடியாது. ஆதினம் தான். அவர்கள் சைவர்கள் தான். ஆனால் இந்த பிராமணிய கொள்கை இல்லை. ஆதிசைவர்கள் ஒரு முற்போக்கான வீரசைவர்கள். அதே மாதிரியான பண்புதான் இவர்களிடமும் இருந்தது. ஆரம்ப காலத்திலேயே தெரியும் அவரை.

தேசம்: உண்மையிலேயே தமிழ்நாட்டில் எத்தனையோ நூற்றுக்கணக்கானவர்கள் எங்களுடைய போராட்டம் சார்ந்தும் போராளிகளையும் பராமரித்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள்…

அசோக்: 83 கலவரத்திற்கு பிறகு தமிழ்நாட்டு மக்கள் நிலையில் நாங்கள் இருந்தால் நாங்கள் எந்த உதவியும் செய்ய மாட்டோம். அந்த மக்கள் விடுதலைப் புலிகளோ, புளொட்டோ என்று பார்க்காமல் உணர்வுபூர்வமாக உதவி செய்தவர்கள். போராளிகள் என்ற அடிப்படையில் மிக உதவிகள் செய்தவர்கள். தமிழ்நாட்டு அரச மட்டத்தில் இருப்பவர்களிடம் இருந்தும் நிறைய உதவிகள். அந்த உணர்வு பூர்வமான பங்களிப்பை உதவிகளை நாங்கள் மதிக்கவில்லை.

தேசம்: அந்த மண்ணை நாங்கள் தவறாக பயன்படுத்தி இருக்கிறோம்.

அசோக்: போராட்ட வரலாற்றை மீளாய்வு செய்தோம் என்றால் நிறையத் தவறுகள் எங்கள் இயக்கங்கள் பக்கத்தில் இருக்கு. அதற்கு வெறுமனே இயக்கம் என்று சொல்ல இயலாது தானே நாங்கள் தானே இயக்கம். முழுப்பேரும் அதைப் பொறுப்பெடுக்க வேண்டும். குற்றம் சாட்டி போட்டு போக இயலாது.

(குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் ஆனந்தி சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இயற்கை எய்தினார்.)

இயக்கங்களைவிட்டு வெளியேறியவர்கள் – பரந்தன் ராஜன் – தோழர் டக்ளஸ் இணைந்த புதிய இயக்கம் : பாகம் 27

களுதாவளையிலிருநது பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் (பகுதி 27 ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 27

தேசம்: பின்தள மாநாடு பற்றிய உரையாடல் போய்க்கொண்டிருக்கிறது. அப்ப நீங்கள் அறிக்கை ஒன்று விட்டிருக்கிறீர்கள். அதாவது கட்சியிலிருந்து உமா மகேஸ்வரனை கிட்டத்தட்ட வெளியேற்றி உள்ளீர்கள். அதைத் தொடர்ந்து என்ன நடக்குது? உமாமகேஸ்வரன் எப்படி அதற்கு ரியாக்ட் பண்ணுறார்?

அசோக்: ரியாக்சன் பயங்கரமாக இருந்தது. தெரியும்தானே அறிக்கைகள் எல்லாம் பத்திரிகைகளில் வந்துவிட்டது. முகுந்தனுக்கு பெரிய பிரச்சினையாக போய்விட்டது. மாநாட்டை குழப்புவதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அடுத்தது அவருடைய எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் நாங்கள் வெளியேறிவிட்டோம். வெளியேறி மெட்ராஸ் போய்விட்டோம். அங்க எங்களுக்கு பாதுகாப்பு டேவிட் ஐயா ஆட்கள்தான் செய்கிறார்கள்.

தேசம்: பாதுகாப்பு தாறத்துக்கு டேவிட் ஐயாட்ட என்ன இருக்கு…

அசோக்: அதுதான் வாரேன்.

எங்களிட்ட பொருளாதார ரீதியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் நாட்டிலிருந்து போன ஆட்கள் தானே. எங்களிட்ட பாதுகாப்புக்கான எதுவும் இல்லை. டேவிட் ஐயா, சரோஜினி, சண்முகலிங்கம், தங்கராஜா தோழர், ஜூலி, ஆட்களெல்லாம் ராஜனோடு உறவாக இருக்கிறார்கள். ராஜனோடு கதைக்கிறார்கள். இவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி. ராஜன் எங்களுக்கான பாதுகாப்பை வழங்க ஒத்துக் கொள்கிறார். அதற்கான முழு முயற்சியும் டேவிட் ஐயா, சண்முகலிங்கம், சரோஜினி ஆட்கள்தான் செய்தவர்கள்.

அப்போ ராஜனோடு கதைக்கிறோம், பின்தள மாநாடு நடத்துவது பற்றி. ராஜன் சொல்கிறார், நீங்கள் பின்தள மாநாடு நடத்துவதற்கான சகல பாதுகாப்பும் செய்து தரப்படும். நீங்கள் மாநாட்டில் சுயமாக முடிவு எடுத்தீர்கள் என்றால், அந்த அந்த முடிவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உங்களோடு சேர்ந்து வேலை செய்யத் தயாராக இருக்கிறோம், யோசிப்போம் என்று. அப்போ நாங்கள் பின்தள மாநாட்டுக்கான எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

இது தஞ்சாவூர்ல ஒரு கல்யாண மண்டபத்தில் நான் நினைக்கிறேன் ஓகஸ்ட் கடைசி பகுதியில் மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். அந்த நேரம் கேம்பிலிருந்து நிறைய தோழர்கள் வெளியேறிவிட்டார்கள். எங்களோடும் கொஞ்சத் தோழர்கள் வந்துவிட்டார்கள். அவங்களையும் ஒரு இடத்தில நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அதுக்கும் ராஜன் தான் பாதுகாப்பு தந்தது. அதுக்குப்பிறகு ராஜனோடு நிறைய தோழர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். வெளியேறி வந்த தோழர்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டதோழர்களோடு இந்த பின்தள மாநாடு நடக்கிறது.

மூன்று நாட்கள் நடாத்தி உத்தியோகபூர்வமாக நாங்கள் தான் புளொட் என்று டிக்லேர் பண்ணுறோம். இந்த மாநாட்டில் 15 பேர் கொண்ட பின் தளக் கமிட்டி தெரிவு செய்யப்படுகிறது.

முகுந்தனோடு சம்பந்தப்பட்ட ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுல சில கொலைகள் வெளிப்படையாக கதைக்கப்பட்டது. கேம்பிலிருந்த தோழர்கள் தானே. அப்போ அவங்களுக்கு என்ன என்ன கொலைகள் நடந்தது என்று தெரியும். அந்தக் கொலைகள் தொடர்பாக காக்கா, சந்ததியார் … இது தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்டு முகுந்தன், சங்கிலி கந்தசாமி, மாணிக்கதாசன், வாசுதேவா, கண்ணன் இவ்வளவு பேரையும் புளொட்டில் இருந்து வெளியேற்றுகிறோம் என்றும், தளக்கமிட்டியும் பின் தளக்கமிட்டியும் புதிய மத்திய குழுவை தெரிவு செய்யும் என்றும், நாங்கள்தான் புளொட் என்று உரிமை கோரி ஒரு அறிக்கை விட்டு, இதுதொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில நடத்துறோம்.

இந்த பத்திரிகை மாநாட்டில் கலந்து கொண்டது தீபநேசன், பிரசாத், கௌரிகாந்தன், ஈஸ்வரன், சண்முகலிங்கம், தங்க ராஜா, ஆதவன், ஜெயபாலன், துரைசிங்கம் , சத்தியன், கவாஸ்கர், எல்லாளன். அந்த பத்திரிகை மாநாட்டு அறிக்கை எல்லா பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது.

தேசம்: என்னத்துக்காக வெளியேறுகிறீர்கள் என்றும் குறிப்பிட்டு…

அசோக்: ஓம். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறைய கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் அந்த சந்திப்பு, அறிக்கை எல்லாம் வருகிறது. வந்து ஒரு வாரத்திற்குள் எங்கள் மீதான விசாரணையை ரோவும், கியூ பிரான்ஜூசும் தொடங்கிவிட்டது. கடும் நெருக்கடியை கொடுக்க தொடங்கிட்டாங்க. ஏன்னென்றால் முகுந்தன் சொல்லிட்டார் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் என்று சொல்லி. வங்கம் தந்த பாடம் நாங்கள்தான் வெளியிட்டோம் என்று சொல்லியும், நாங்கள் மாவோயிஸ்டுகள், சீனச்சார்பானவர்கள் என்று சொல்லியும் புளொட்டை திட்டமிட்டு உடைக்கிறோம் என்று சொல்லியும் இந்த உளவுத்துறைகளுக்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்போ கியூ பிரான்ஜூசும், ரோவும் எங்களை விசாரித்தது. அவங்க சொன்னவங்க நீங்கள் புளொட் என்று உரிமை கோர இயலாது. புளொட் என்டுறது முகுந்தன் தான். நாங்கள் உரிமை கோர முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

தேசம்: உளவுத்துறை வந்து பயப்பிடுத்துவது என்பது…

அசோக்: எங்களுக்கு என்ன செய்றது என்று தெரியல. ஸ்தம்பிதம் அடைந்து விட்டோம் . அதுக்குப் பிறகு தோழர்கள் உளவியல் ரீதியாக நிறைய பலவீனமடையத் தொடங்கி விட்டார்கள். நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கிட்டாங்க. அடுத்த கட்ட நகர்வை எப்படி தொடர்வது என்பது பற்றி நிறைய குழப்பங்கள்.

அடுத்தது ஒரு உறுதியற்ற தன்மை..

தேசம்: எதிர்பாக்கல நீங்கள்…

அசோக்: எதிர்பாக்கல. உறுதியற்ற தன்மை வந்தவுடன் என்ன செய்வதென்று தெரியல, ஸ்தம்பிதம் அடைந்திட்டம். அதுக்குப் பிறகு கொஞ்சநாள் பேசாம இருக்கிறோம்.

தேசம்: இந்த இடைப்பட்ட காலத்தில் ஜூனில் இருந்து ஜூலை வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் ஏதாவது உமாமகேஸ்வரன் தலைமையிலான அணியால் ஏதாவது…

அசோக்: ஓம் நிறைய பயமுறுத்தல்கள். வெளியில போக இயலாது. எனக்கெல்லாம் அனுபவம் இருக்கு. நானும் ஆதவன் தோழரும் வீடு பார்க்க வெளியில போகேக்க மாணிக்கதாசன் குரூப் ஆட்கள் வந்து நீங்கள் இங்கே வீடு பார்க்க இயலாது இது எங்க ஏரியா என்று சொன்னார்கள். எச்சரிக்கை செய்தாங்க. உண்மையில் நாங்க வீடுபார்த்த ஏரியாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே இல்லை.

ஒரு தடவை சென்னையில் தியேட்டர் ஒன்றுக்கு நான் போயிட்டு இருக்கும்போது மாணிக்கதாசன் கண்டிட்டார். அது அவங்க ஆபீசுக்கு பக்கத்தில் தான் அந்த தியேட்டர். அப்போ மாணிக்கதாசன் என்னோட பிரச்சினைப்பட்டு கொண்டிருந்த அந்த நேரம் தற்செயலாக அது ஆபிஸ் தெரு என்றதால் யோதிஸ்வரன் கண்ணன் வந்தவர். மாணிக்கதாசன் என்னோடு முரண்பட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டிட்டார். அதுல அவருக்கும் மாணிக்கதாசனுக்கும் பிரச்சனை. நீ தான் எல்லாத்துக்கும் பிரச்சனை; அவர்கள் வெளியேறினால் வெளியேறிப்போட்டு இருக்காங்க, ஏன் நீ அவங்களோட முரண்படுகிறாய் என்று. அப்படி எல்லாம் பிரச்சினை நடந்திருக்கு.

தேசம்: அந்தக் கட்டத்தில் யோகீஸ்வரன் உமாமகேஸ்வரனோடு தான் இருக்கிறார்?

அசோக்: உமாமகேஸ்வரனோடுயிருக்கிறார். அவர் கொஞ்சம் நியாயம் கொண்டவர். நாங்க வெளியேறிய பின் பல தடவை அவரை சந்தித்து கதைத்திருக்கிறன். இது பற்றி சென்ற உரையாடல்களில் கதைத்திருக்கிறன்.

தேசம்: நீங்கள் பெரும்பாலும் இதில் ஓரளவு முற்போக்கான ஆட்கள் அல்லது அரசியல் மாறுபட்ட சிந்தனை உடைய ஆட்கள் முழுமையாக வெளியேறிட்டீர்கள். அதுக்கு பிறகு புளொட்டில் இருக்கிறதெல்லாம் யார் இருந்தது உமாமகேஸ்வரனோடு?

அசோக்: புளொட்டில் இருந்த தோழர்களை நாங்கள் குறை சொல்ல முடியாது. பயத்தில்தான் இருந்தவர்கள் அவர்கள். வெளியேற முடியாது. அடுத்தது பல்வேறு நெருக்கடி, தோழர்கள் பாவங்கள்.

தேசம்: நான் குறிப்பாக கேட்பது முக்கியமான ஆட்கள்.

அசோக்: முக்கியமான ஆட்கள் அந்த ஐந்து பேரும் தான். முகுந்தன், சங்கிலி, மாணிக்கதாசன், வாசுதேவா அடுத்தது படைத்துறைச் செயலாளர் கண்ணன். வாசுதேவாவும் கண்ணன் மாதிரி அதிருப்தியோடுதான் இருந்தவர்.

தேசம்: அப்போ அதுக்குள்ளே இருந்த குறிப்பாக முகுந்தன்…

அசோக்: சங்கிலி கந்தசாமி, முகுந்தன், மாணிக்கதாசன் 3 பேரும்தான் பிரச்சனைக்குரிய ஆட்கள்.

தேசம்: சரியான துரதிருஷ்டம் என்னவென்றால் இவ்வளவு பேர் எதிர்த்தும் அதை செய்ய முடியாமல் போனது. அது உண்மையிலேயே முற்போக்குப் பாத்திரம் வகித்தவர்களுடைய ஒரு தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அசோக்: நான் புளொட் தோழர்களே எல்லாம் காணும்போது யோசிப்பேன். நாங்க எல்லாம் நிறைய ஃபைட் பண்ணி இருக்கலாம். புளொட்டின் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்களை குற்றஞ்சாட்டி போட்டு போக இயலாது. நாங்கள் ஒவ்வொரு ஆளும் பொறுப்பு கூறவேண்டிய அவசியம் இருக்கு. அதனால்தான் நான் இதைப்பற்றி கதைக்காமல் இருந்தேன். என் தொடர்பாக எனக்கே விமர்சனங்கள் இருந்தன.

தேசம்: முன்னணி தோழர்களுக்கு ஒரு முற்போக்குப் பாத்திரம் எடுக்க வேண்டிய தேவை இருக்குதானே. அவர்கள்தானே தலைமையை கொடுத்திருக்க வேண்டும்.

அசோக்: கட்டாயம்.

தேசம்: அப்போ நீங்கள் உமாமகேஸ்வரன் தலைமையிலான அந்த ஐந்து பேரையும் வெளியேற்றிய பிறகு நீங்கள் தான் புளொட் என்று அறிவித்த பிறகு உளவுத்துறை பயமுறுத்தலை விட்டவுடன் எல்லாம் ஈடாடிப்போச்சு.

அசோக்: அந்த நேரத்தில் மௌன நிலை தான், பேசாம இருந்த காலகட்டம். பிறகு தோழர் டக்லஸ் ஆட்கள் அந்த நேரம் ஈபிஆர்எல்எஃப் இலிருந்து உடைந்து அவங்க தனியாக போய் இருக்கிறார்கள். அவங்களோடு பல்வேறு முற்போக்கான சக்திகள் எல்லாரும் இருக்கிறார்கள். ஈரோஸ் இருந்து பிரிந்த சில தோழர்களும் இருக்கிறார்கள். பார்த்திபன் இதயச்சந்திரன் இருக்கிறார். என் எல் எப் ரீயில் இருந்து பிரிந்த தோழர் ஒருவரும் அவங்களோடு இருந்தாங்க.

தேசம்: இதயச்சந்திரன் லண்டனில் இருக்கிறார்…

அசோக்: ஓம். அப்போ நாங்கள் யோசித்தோம் என்ன என்று கேட்டால் எல்லா சக்திகளும் ஒரு ஜனநாயக உட்கட்சிப் போராட்டத்தை நடத்தி ஒதுங்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் இணைத்து நாங்கள் ஏன் ஜனநாயக பூர்வமான ஒரு அமைப்பை உருவாக்க முடியாது என்று. முதன்முதல் டக்லஸ் தோழருடன் போய்க் கதைக்கிறோம். அப்படி எல்லாருடனும் நாங்க கதைக்கிறோம். எல்லாரும் அப்படி ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான சாத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள்.

தேசம்: ரோ உங்களுக்கு ஒரு மிரட்டல் விடுத்த பிறகுதான் நீங்கள் இப்படியொரு முடிவுக்கு வாரீர்கள்.

அசோக்: ஓம். பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒருமைப்பாட்டுக்கு வாறம். ராஜனோடையும் கதைக்கிறம். ராஜனும் சம்மதிக்கிறார். அப்ப நாங்கள் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு கமிட்டியை போஃம் பண்ணி நாங்களும், தோழர் டக்ளஸின் பக்கத்தில் குறிப்பாக அற்புதன், அசோக் சந்திரகுமார், பிரேமானந்தா, இப்ராகிம் என்று சொல்லி பத்து பதினைந்து தோழர்கள் ஒரு கமிட்டி போஃம் பண்ணி ஒரு புதிய அமைப்புக்கான யாப்பை உருவாக்குவதற்கு கூடிக் கதைக்கிறோம். அந்தக் கமிட்டியில் ராஜனோ, டக்ளஸோ இல்லை. நாங்கள் கதைத்ததன் பிற்பாடு அவங்களோடயும் கதைக்கிறம் இதுதான் முடிவு. இதற்கு நீங்கள் கட்டுப்படுகிறீர்களா என்று. ராஜனும், டக்ளஸும் ஓகே பண்ணுறாங்க.

அதற்குப் பிறகு மிலிட்டரிகொமிசார், பொலிட்டிக்கல் கொமிசார் என்று ஒரு இடதுசாரி மக்கள் அமைப்புக்கான… இவ்வளவு கால எங்களுடைய தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளல் என்ற படிப்பினையில் 7-8 நாள் இருந்து யாப்பு மற்றும் அமைப்பு வடிவத்தை உருவாக்கின்றோம். அமைப்பு வடிவத்திற்கு பெயர் ஒன்றை வைக்க விரும்புகின்றோம். அதுல டக்ளஸ் தோழர் ஆட்கள் சொல்லிட்டாங்க நாங்க தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. அப்போ நாங்கள் சொன்னம் நீங்களே ஒரு பெயரை தேர்வு செய்யிங்கள் என்று.

தேசம்: டக்ளஸ் தோழர் அப்பவே அதை சொல்லிட்டார்.

அசோக்: ஈழம் என்று சொல்லித்தான் வரவேண்டும் தமிழீழம் என்ற வார்த்தை வருவதை விரும்பவில்லை என்று. நாங்கள் அதை ஒத்துக் கொண்டோம். அற்புதன் ஈஎன்டிஎல்எப் ENDLF என்ற பெயரை உருவாக்குறார். அப்போ ஈழ தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் நாங்கள் ஒன்றாக இணைவது என்று முடிவெடுத்து வேலை செய்கிறோம்.

தேசம்: அற்புதன் தான் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக அதுல ஒரு தொடரையும் எழுதினார். பின்னாட்களில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.