எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சாலைப்பகுதித் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி மரணம்

வன்னியை விடுவிக்கும் நடவடிக்கையின் மிக முக்கிய இலக்கை அடைந்துள்ள படையினர் சாலைப்பகுதியில் நடத்திய தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதி உட்பட 4 பேரை நேற்று (பெப்:04) கொல்லப்பட்டதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது.  நேற்று பிற்பகல் 1.45 மணிமுதல் 2.00 மணிவரை தாக்குதல் நடத்திய 55 வது படைப்பிரிவினர் சாலைப் பகுதியில் அமைந்துள்ள கடற்புலிகளின் தளத்தை கைபற்றினர். இத் தாக்குதலில் கடற்புலிகளின் இரண்டாவது தளபதியான வினாயகம் கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்பு சாதனங்களை ஒட்டுக்கேட்ட போது எல்ரிரிஈயினருக்கு இவர்கள் இறந்த உடல்களை தேடமுடியாமல் படையினரின்  தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை பூநகரி கடற்புலிகளின் பொறுப்பாளர் காதர் எனும் பஹலவனும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என மேலும் கடற்புலிகளின் விசேட தளபதியான சின்னக்கன்னன் நேற்றுக் காலை 8.50 மணியளவில் நடந்த பிறிதொரு தாக்குதலில் இப்பகுதியில் வைத்து கொல்லப்பட்டுளார். இவர் கொல்லப்பட்ட பின் அவர்களின் சொந்தப்பானியில் லெப்டினன் கேனல் பதவி உயர்வும் வழங்கியுள்ளதாக படையினரின் மின்னனுயியல் போர்யுக்தி பிரிவினர் தெரிவித்தனர். இம்மோதல்களில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதும் ஊர்ஜீதம் செய்துள்ளனர்.

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் புலிகளின் கடல் மூழ்கிப்படகு

dayata_kirula.jpgதேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (பெப்:04) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் திறந்து வைத்தார்.

இலங்கையின் வரலாறு அதன் கௌரவம் பற்றிய அறிவு, மஹிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டில் ஏற்படுத்தியுள்ள அபிவிருத்தி மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டம் என்பன பற்றி மக்களுக்கு தெளிவு படுத்துவதாகும். கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறும் இதில் இராணுவத்தினால் அன்மைக்காலத்தில் வெற்றி கொண்ட ஆயுதங்கள் படைக்கலங்கள் என்பனவும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும்  சிரந்தி ராஜபக்கக்ஷ அவர்களும்  எல்ரிரிஈ யினரிடமிருந்து கைபற்றிய கடல் மூழ்கிப்படகை பார்வையிடுவதைப் படத்தில் காணலாம்

800 மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகை

wanni-civilans.jpgபுலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து  800 க்கு மேற்பட்டோர் இன்று (05) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பிரதேசங்களுக்கு வந்துள்ளரென பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புதுக்குடியிருப்பில் இருந்து இன்னும் ஆழமான யுத்த பகுதிக்குள் மக்கள் நகர்வு – ‘புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு மன்னிப்பு இல்லை’ கோதபாய : த ஜெயபாலன்

Makeshift Hospitalபுலிகளுடன் சரணடைவது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை அவர்கள் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் சரணடைய வேண்டும் என இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோதபாய ராஜபக்ச தெரிவித்து உள்ளார். புலிகளின் கீழ் நிலை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பிரதான சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள கோதபாய ராஜபக்ச புலிகளின் தலைமை உறுப்பினர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளார். பிபிசி உலகசேவைக்கு இணைத் தலைமைநாடுகளின் வேண்டுகோள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலர் இதனைத் தெரிவித்து உள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான இவரை குறிவைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல் தோல்வியடைந்தது தெரிந்ததே. மேலும் தற்போதைய இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதலும் தோல்வியடைந்தது. அடிபட்ட பாம்புகளின் சீற்றத்தில் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் தற்போது முடக்கி விடப்பட்டு உள்ளது. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவருடைய சகோதரர் கோதபாய ராஜபக்சவே முக்கிய முடிவுகளில் ஆளுமை செலுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இலங்கை அரசினால் பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்கள் காரணமாக கடந்த சில தினங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு இயங்கி வந்த ஒரே மருத்துவ நிலையமும் செயலிழந்து போய் உள்ளது. அங்கு கடமையாற்றிய 15 யுஎன் பணியாளர்களும் அவர்களது 81 குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனையை விட்டு வெளியேற் உள்ளதாக கொழும்பில் உள்ள யுஎன் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச அழுத்தங்கள் பலமுனைகளில் இருந்து வந்த போதும் புதுக்குடியிருப்பில் உள்ள 250000 மக்களது உயிர்களைப் பணயம் வைத்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தங்கள் இராணுவ நடவடிக்கையைத் தொடர்கின்றனர். உலகின் முக்கிய தலை நகரங்களில் எல்லாம் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பிய போதும் அவை கவனத்திற்கொள்ளபடுவதாக இல்லை.

கடந்த நான்கு நாட்களாக பெப்ப்ரவரியில் மட்டும் 85க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐசிஆர்சி மருத்துவப் பணியாளர்.
01 பெப் 13 பேர் கொல்லப்பட்டனர்
02 பெப் 9 பேர் கொல்லப்பட்டனர்
03 பெப் 52 பேர் கொல்லப்பட்டனர்
04 பெப் 12 பேர் கொல்லப்பட்டனர்
05 பெப் 7 பேர் கொல்லப்பட்டனர்

மருத்துவமனை மீதான தொடர்ச்சியான தாக்குதலை அடுத்து காயப்பட்டவர்கள் நோயாளர்கள் இன்னும் ஆழமான யுத்த பகுதிகள்  நோக்கி நகர நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதாக அல்ஜசீரா செய்தி தெரிவிக்கின்றது. கரையோரப் பிரதேசமான அங்கு குடிநிர் வசதிகளே இல்லையென ஐசிஆர்சி பெச்சாளர் சரசி விஜயரட்னே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் காயப்பட்டவர்களும் நோயாளிகயளும் மருத்துவப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதற்கு அல்லது யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்தமாறு அரச படைகளையும் புலிகளையும் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றும் உடையார்கட்டு மருத்துவமனை மீது பாரதுரமான தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள Office for the Coordination of Humanitarian Affairs (OCHA) உலக உணவுத் திட்டம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் போச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கிறது. நாளை உணவு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் சரணடைவது பற்றிய வேண்டுகோள் தொடர்பாக புலிகள் உத்தியோகபூர்வமாக எதனையும் குறிப்பிவில்லை. குறிப்பாக நோர்வேயும் அந்த வேண்டுகோளில் தன்னையும் இணைத்துக் கொண்டது புலிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவே உள்ளது. பேச்சு வாரத்தைகளின் போது நோர்வே விடுதலைப் புலிகளுக்கு சாதகமாகச் செயற்பட்டது என்று குற்றச்சாட்டப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்த யுத்தம் முற்றிலும் இந்தியாவின் அணுசரணையுடன் மேற்கொள்ளப்படுகிறது என்பது இந்தியாவின் நீண்ட மெளனத்தில் இருந்து தெரியவருகிறது. தமிழ்நாட்டை உசுப்பி இந்தாயவைப் பணிய வைக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. அமெரிக்காவில் பதவியேற்றுள்ள புதிய ஆட்சியாளர்களும் வழமையான கோரிக்கைகள் கண்டனங்களுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுடன் பிரித்தானியாவும் இணைந்து தனது கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட புலிகள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒதுக்கப்பட்டு உள்ளனர்.

எவ்வித அரசியல் செயற்பாடுகளையும் கொண்டிராத முற்றிலும் இராணுவ அமைப்பான புலிகள் சக இன மக்களுடன் நல்லுநவைக் கொண்டிராத சக தேசிய சர்வதேசிய விடுதலை அமைப்புகளுடன் உறவுகளைக் கொண்டிராத மக்களை நம்பாது ஆயுதங்களை மட்டுமே நம்பிய புலிகளை அந்த ஆயுதங்கள் இன்று காப்பாற்றவில்லை. 250 000 மக்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று தங்களைப் பணயம் வைத்து புலிகளைக் காக்கின்றனர்.

தற்போதைய யுத்தத்தில் சிக்குண்டுள்ள 250 000 மக்களில் கணிசமானவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் குடும்பங்கள் அவர்களது அலுவலகங்களில் பணியாற்றியவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இராணுவப் பயிற்சிக்கு உட்பட்டவர்கள். கடந்த இரு தசாப்தங்களாக தங்களது பூரண கட்டுப்பாட்டில் இருந்த மக்களை புலிகள் தங்களது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதும் அதனை அந்த மக்களால் மறுப்பதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்பதும் யதார்த்தம்.

அந்த வகையில் இலங்கை அரசு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெறாத வரையில் அவர்கள் ஒரு போதும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழையமாட்டார்கள் என்பது உறுதி. இதற்கிடையே யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த சிலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகிறார்கள் என்ற செய்திகள் வெளியெ கசிகின்றன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களதும் நிலை மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்களை ஒப்படைக்க வேண்டும். சரணடைய விரும்புபவர்கள் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளிடம் சரணடைவதற்கான வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இலங்கை இராணுவத்தை எந்தவொரு வன்னிக் குடிமகனும் குடிமகளும் நம்புவார்கள் என்று அரசோ சர்வதேச சமூகமோ எதிர்பார்க்க முடியாது.

மாற்றுக் கருத்து தளத்தில் செயற்பட்டவர்கள் மாற்றுக் கருத்து என்பது  புலியெதிர்ப்பு என்றளவில் செயற்படாமல் இலங்கை அரசு மீதான தங்களுடைய அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியம். இந்த வன்னி மக்கள் சந்திக்க உள்ள அவலத்தை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பெயருக்கு அறிக்கைவிட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றளவில் இல்லாமல் தொடர்ச்சியான அழுத்தங்களை நேரடியாகவும் சர்வதேச சமூகத்திற்கு ஊடாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புலி எப்ப காலியாகும் நாங்கள் எப்ப போய் குந்தலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டால் அது அவர்கள் வன்னி மக்களுக்கு இழைக்கும் பாரிய துரோகச் செயலாக அமையும்.

இன்றைக்கு தமிழ் மக்களுடைய போராட்டங்கள் யுத்தத்தை நிறுத்துவதையும் சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதையும் அரசியல் தீர்வு முன் வைக்கப்படுவதையும் மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும். மாறாக புலிகளின் நலன்கருதி மேற்கொள்ளப்படும் எவ்வித போராட்டமும் பயனற்றதாகவே அமையும். எங்கள் தலைவர் பிரபாகரன் புலிகளின் தடையை நீக்குங்கள் எங்களுக்கு தமிழீழம் வேண்டும் என்ற கோசங்கள் வன்னி மக்களுக்கு எவ்வகையிலும் உதவாது. யதார்தத்தைப் புரிந்து கொண்டு ஏற்படப் போகும் மனித அவலத்தை தடுத்து நிறுத்த போராடுவதே இன்றுள்ள முக்கிய கடமை.

பெயர் குறிப்பிட விரும்பாத ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார் ”நாங்கள் எங்களுடைய வரலாற்றுத் தவறுகளை எழுதப் போனால் புத்தகம் புத்தகமாக எழுதலாம். பாவம் மக்கள். ரொம்பவும் கஸ்டப்படுத்திவிட்டோம்” என்று. அவர் மேலும் கூறுகையில் ”இன்றைக்கு பணயம் வைக்கப்பட்டுள்ள 250 000 மக்களில் 5000 – 10 000 மக்களைப் பலிகொடுத்துத் தான் அரசியல் பேரம் பேச வேண்டி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முரளிதரன் ‘ஒரு நாள் போட்டியி’லும் உலகசாதனை

_murali.jpgஇலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவதியவர் என்ற உலக சாதனையை இன்று (05.02.2009) ஏற்படுத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான 4 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது கௌத்தம் கம்பீரின்  விக்கெட்டை கைப்பற்றிய முரளிதரன் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் அவர்களின் சாதனையான 502 விக்கெட்டுகள் என்கிற இலக்கைத் தாண்டி 503  விக்கெட்டுகள் பெற்று  புதிய உலக சாதனை சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இன்று தனது 328 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய போதே முரளிதரன் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

உலக அளவில் டெஸ்ட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள வீரர் என்கிற பெருமையும் முரளிதரனையே சாரும். 125 டெஸ்ட் போட்டிகளில் அவர் 769 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார்.

Top-Five Bowlers 

Player                  Team          Matches       Wkts 

M Muralitharan      SL                 328                   503 
Wasim Akram         Pak               356                   502 
Waqar Younis         Pak                262                   416 
C Vaas                      SL                  322                   401 
SM Pollock               SA                 302                   391 

வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். – அமீர் அலி

ameerali.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதியான வவுனியாவுக்கு வரும்பட்சத்தில் தேவையான நடவடிக்கையெடுக்கப்படும். இவர்களுக்கென இராமநாதன் சுதந்திரபுரம், அருணாச்சலம் விடுதலைபுரம் மற்றும் கதிர்காமர் எழுச்சிக்கிராமம் ஆகிய மீள் குடியேற்ற கிராமங்கள் உருவாக்கப்படவுள்ளது.  இக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 8000 வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலை, வீதி, குடிநீர் மற்றும் மின்சாரவசதி உட்பட சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.  தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி பேசுகையில் கூறியதாவது;

அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதுடன் மருத்துவ வசதியும் செய்து கொடுக்கப்படவுள்ளது. ஊடகங்கள் எண்ணிக்கையையே பார்க்கின்றது. அரசு தரமான தேவையை அம்மக்களுக்கு வழங்க காத்திருப்பதை மறந்துவிடுகின்றது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றது. நாம் மக்களுக்கு செய்யவேண்டியதை எந்தவித தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்றுவோம். இதற்கு தன்னார்வ மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவவேண்டும். சகல மனிதாபிமான சேவைகளையும் அரசு உறுதியாக செய்ய காத்திருக்கிறது என்றார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 40 பேர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

பொத்துவில் பிரதேச செயலகம் முன்பாக கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 40 பேர் மயக்கமடைந்த நிலையில், நேற்று புதன்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் பொத்துவில் காட்டுப் பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்றபோது கைது செய்யப்பட்ட 30 முஸ்லிம்கள் வழக்கு விசாரணை எதுவுமின்றி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தை திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பொத்துவில் பிரதேச செயலகத்தின் முன் ஆரம்பித்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு, பகலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை இவர்கள் தொடர்பாக அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உறவினர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கொழும்பில் அடையாள உண்ணாவிரதம்

வன்னியில் இன்னல்களை அனுபவித்துவரும் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றுக்கு சுதந்திர மாணவர் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சுதந்திர மாணவர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“யுத்த அபாயத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்! எமக்குத் தேவை சமாதானம் மட்டுமே! மக்களை மக்களாக நடத்துங்கள்!’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதம் இடம் பெறவுள்ளது. இந்த உண்ணாவிரதம் பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையவுள்ளது.

இலங்கைத் தமிழரை பாதுகாக்க முல்லைத்தீவுக்கு படகுப்பயணம் – தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கம் முடிவு

“இலங் கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி படகு மூலம் முல்லைத்தீவு செல்வோம்’ என தூத்துக்கடி சட்டத்தரணிகள் சங்கம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் சட்டத்தரணிகள், மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கைப் பிரச்சினை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது. தமிழகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரயில் மறியல் மற்றும் 7 ஆம் திகதி நடக்கும் கறுப்புக் கொடி பேரணியில் பங்கேற்பது. அதன் பிறகும் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாவிட்டால் எதிர்வரும் 9 ஆம் திகதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைத்தீவு நோக்கி செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவர் பிரபு கூறுகையில்; “இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகாயம் அடைந்துள்ள தமிழர்களை இந்தியா அழைத்து வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.